எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ்த் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக ‘டைம் லூப்’ எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ‘ஜாங்கோ’ தயாராகி வருகிறது
தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் ‘டிக்டாக்’ புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கார்த்திக் கே.தில்லை, படத் தொகுப்பு – சான் லோகேஷ், இசை – ஜிப்ரான். இந்த படத்தை அறிமுக இயக்குநரான மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார்.
தேனியைச் சேர்ந்த மனோ கார்த்திகேயன், இயக்குநர் இமயம் பாரதிராஜாவால், தான் சினிமாவுக்கு ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார்.
இயக்குநர் அறிவழகன் இயக்கிய ‘ஈரம்’ மற்றும் ‘வல்லினம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும், ராம்குமார் இயக்கிய ‘முண்டாசுப்பட்டி’யில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் மனோ கார்த்திகேயன்.

இதை தவிர்த்து சில குறும் படங்களையும், ஆவண படங்களையும் மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.
இந்த ‘ஜாங்கோ’ படம் பற்றிப் பேசிய இயக்குநர் மனோ கார்த்திகேயன், “ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய படம்தான் ஜாங்கோ. தமிழ் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் ‘டைம் லூப்’ அடிப்படையிலான முதல் திரைப்படமாக இந்த ‘ஜாங்கோ’ இருக்கும். குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும், மீண்டும் நிகழும், மேலும் அவை வித்தியாசமான திரைக்கதையுடன் சுவாரசியமான முறையில் காட்டப்படும்…” என்றார்.

இந்தப் படத்திற்காக ஹரிசரண் பாடிய ‘அனலே அனலே’ என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு, வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை இதயா எழுதியுள்ளார்.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த நடிகர், நடிகைகள்.. தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.