இயக்குநர் சுந்தர்.சி. இயக்கியிருக்கும் ‘அரண்மனை-3’ படத்தின் பாடல் வீடியோ பத்து லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது.
தமிழில் பேய் படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம்தான் #அரண்மனை திரைப்படம்.
நகைச்சுவை படங்களுக்கு, பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி.யின் இயக்கத்தில் #அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்த ‘அரண்மனை-3’ ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.
இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர் சி மூவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல்முறையாக இயக்குநர் சுந்தர் சி- யும், இந்தியாவின் முக்கிய சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன்-ம் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இந்த ‘அரண்மனை-3’ படம் முதல் இரண்டு பாகங்களைவிட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களை குழந்தைகள் கொண்டாடிய நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது.
படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது.
பர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு பிறகு நேற்று ஒரு பாடலின் வீடியோ காட்சி வெளியானது. ஆர்யா-ராஷிகண்ணா நடித்திருந்த இந்த பாடல் வீடியோ காட்சி நேற்று வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியாவின் டிரெண்டிங் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது.
24 மணி நேரத்திற்குள்ளாக இந்த வீடியோ பத்து லட்சம் பார்வைகளைக் கடந்து வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் படத்தை இணைய ஓடிடி தளத்தில் வாங்குவதில் போட்டிகள் இருந்தாலும்.. தியேட்டரில்தான் இதனை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் சுந்தர்.சி.
இந்நிலையில் திரைத்துறையில் இருந்து இந்தப் படத்தை பார்த்த சில முக்கியஸ்தர்கள் “இப்படம் குடும்பத்தோடு திரையங்கில் கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம், இதனை திரைக்கு கோண்டு வாருங்கள்…” என்று சுந்தர்.சி.யிடம் கேட்டுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து இந்த ‘அரண்மனை-3’ படத்தை திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி.
படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.