திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கில் ‘பிரம்மாண்ட நாயகன்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
சீனிவாசப் பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆகவும் மற்றும் ஸ்ரீனிவாசன் வேதவன், மகா விஷ்ணு ஆகிய 3 வேடங்களில் நடிகர் ஆரியன் ஷாம் நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்காக முழுமையாக விரதம் இருந்து இந்த திருப்பதி பாலாஜி வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஆரியன் ஷாம்.
இந்தப் படத்தில் மகாலட்சுமியாக அதிதியும், ஸ்ரீபத்மாவதி தேவியாக சந்தியா ஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவை எஸ்.ஆனந்த்பாபு கவனித்திருக்கிறார். இசையை திவாகர் சுப்பிரமணியம் பக்தி ஊட்டும் வகையில் அமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், போதேந்திர போன்ற இந்தியாவின் தலை சிறந்த மகான்களைப் பற்றி பல நாடகங்களை நடத்திய ‘கலைமாமணி’ திருமதி. ஞானம் பாலசுப்பிரமணியம் (பம்பாய் ஞானம்) இயக்கியிருக்கிறார்.
இதில் பெருமாளாக நடித்திருக்கும் ஆர்யன் ஷாம் மிக விரைவில் வெளிவரவிருக்கும் ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் வழங்கும் ‘அந்த நாள்’ படத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியன் வங்கியின் நிறுவனரான மறைந்த கிருஷ்ணசாமியின் கொள்ளுப் பேரன் ஆவார்.