தாய்த் தமிழ் பேசும், நம் வீட்டுப் பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளி மாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் துஷாரா விஜயன்.
ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கதத்தை போக்கும் வகையில், தாய்த் தமிழ் மொழியில் பேசியும், நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்து, பெரு நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் நடிகை துஷாரா விஜயன். அசாத்தியமான இவரது திரைப் பயணம் பலரையும் வியக்க வைக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னியாபுரம் ஊரைச் சேர்ந்த இவர் ‘போதை ஏறி புத்தி மாறி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்திலும் மற்றும் ‘கண்ணம்மா’ என்னும் குறும் படத்திலும் நடித்தார்.
அதன் பிறகு கடந்த 6 வருடங்களாக திரையுலகில் சரியான வாய்ப்பு தேடி, வெகு பொறுமையுடன் காத்திருந்து, இப்போது கிடைத்திருக்கும் வாய்ப்பில் தன் திறமையை நிரூபித்து ஒரு நட்சத்திர நடிகையாக மாறியுள்ளார்.
தற்போது தமிழின் மிக முக்கியமான இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் ‘சர்பேட்டா பரம்பரை’ படத்தில் நாயகியாக நடிக்கிறார் துஷாரா விஜயன்.
இது குறித்து நடிகை துஷாரா விஜயன் பேசும்போது, “இயக்குநர் பா.ரஞ்சித், சமூக வலைத்தளத்தில் எனது புகைப்படத்தை பார்த்து விட்டு, என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “உனக்கு சரளமாக தமிழ் பேச வருமா..?” என்று கேட்டார்.
ஆடிசனுக்கு அழைத்தார். சென்றேன். அப்போது என்னிடம் சில விசயங்கள் செய்து காட்டும்படி கூறினார்கள். என்னால் முடிந்த அளவு வேகமாக கத்தும்படி கேட்டார்கள். நான் செய்து முடித்த அடுத்த நொடி, இயக்குநர் ரஞ்சித் ‘ஓகே… நீதான் இப்படத்தில் நடிக்கிறாய்’ என்று கூறினார். அதன் பிறகு படத்தின் உணர்பூர்வமான காட்சி ஒன்றை நடித்து காட்டும்படி கேட்டார்கள். அது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. கடைசியில் எனது திறமையும், மொழியறிவும் எனக்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்தது.
‘சர்பேட்டா பரம்பரை’ படத்தில் இடைவேளைக்கு பிறகே எனது காட்சிகள் வரும். ‘மாரியம்மாள்’ எனும் எனது கதாப்பாத்திரம், வாய்த் துடுக்கு மிகுந்த, தைரியமிக்க அழுத்தமான பெண் கதாப்பாத்திரம் ஆகும். நான் சரளமாக தமிழ் பேசினாலும் டப்பிங்கில் வட சென்னை மொழி வழக்கை, கையாள்வது கடினமாக இருந்தது.
படத்தின் படப்பிடிப்பின்போது ஒருமுறை இயக்குநர் வசந்தபாலன் அவர்கள் படப்பிடிப்பை பார்வையிட்டார். அப்போது என்னிடம் தன்னைச் சந்திக்க வரும்படி அழைத்தார். அதன் பின் அவரது படத்தில் நடிக்கும் என் கனவு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் படத்தில் அர்ஜீன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். நான் சுப்புலக்ஷ்மி எனும் மரியாம்மாளுக்கு நேரெதிர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன்.
உண்மையில் என்னைப் போன்ற தமிழ் பேசும் திறமையுள்ள நடிகர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைப்பது மனதிற்கு மிக பெரும் மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு சினிமா மீது தீவிரமான காதலும், நல்ல திறமையும் இருந்தால் உங்களுக்கான வாய்ப்பு உங்களை கண்டிப்பாக வந்தடையும், நீங்கள் கண்டிப்பாக கவனிக்கப்படாமல் போக மாட்டீர்கள்.
எந்த ஒரு படத்திலும் சவால் தரும் பாத்திரங்களை செய்யவே நான் விரும்புகிறேன். வெறும் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல், ஒரு நல்ல நடிகையாக பார்வதி திருவோது, நயன்தாரா போல மிளிரவே ஆசைப்படுகிறேன்…” என்றார்.