நடிகர் விக்ரம் – இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. சுதந்திர காலகட்டத்தில் கேஜிஎப் பகுதியில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் இருவேறு கெட்டப்புகளில் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். முன்னதாக படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு மாஸ் காட்டியது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிந்திய மாநிலங்கள், மும்பை, வெளிநாடுகளில் படத்தின் பிரமோஷன்கள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 2ம் தேதி படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் நாயகிகளாக நடித்துள்ள மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி உள்ளிட்டவர்கள் படம் குறித்தும் இயக்குனர் பா ரஞ்சித் குறித்தும் தங்களது மகிழ்ச்சிகளை பேட்டி மூலம் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒரு நாள் திடீரென எருமை மாடு ஒன்றை அழைத்து வந்து தமக்கு பா ரஞ்சித் காட்டியதாகவும், அது குறித்து தாம் உற்சாகப்பட்டதாகவும் கூறிய மாளவிகா, தொடர்ந்து எருமை மாடு மீது ஏறும்படி பா ரஞ்சித் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தாம் மிகவும் அதிர்ச்சியுடன் இயக்குனரை பார்த்ததாகவும், அவர் உண்மையாகவே இந்த விஷயத்தை கூறியதால், தன்னை எருமை மாடுமீது ஏற்றி சூட்டிங்கை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.