நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தாயை பிரிந்து வந்த ரகு, பொம்மி ஆகிய 2 குட்டி யானைகளை பாகன் தம்பதிகளான பொம்மன்-பெள்ளி ஆகியோர் பராமரித்து வளர்த்து வந்தனர்.
இதையறிந்த கார்த்தகி கொன்சால்வேஸ் என்ற இயக்குனர் குட்டி யானைகளை வளர்த்த விதத்தை 2 ஆண்டுகளாக வனப்பகுதியில் தங்கி ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் ஆவணபடமாக எடுத்தார். இது ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி ஆகியோர், முதுமலைக்கு வந்து, பாகன் தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு லட்ச ரூபாய் பரிசளித்தார்.
இந்த நிலையில் ஆவணப்படம் எடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு பாகன் தம்பதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.அதில், “ வயதான காலத்தில் எங்களுக்கு நடக்க கூட முடியாத நிலையிலும் கஷ்டத்தை பொறுத்து கொண்டு, காட்டில் இரவு பகல் பாராமல் நடித்தோம். படம் முடிந்ததும் எங்களுக்கு வீடு, பணம், நிலம், பேரக் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் எதுவுமே தரவில்லை. இயக்குனரை தொடர்பு கொண்டு கேட்டால், ‘கொஞ்சம் பிசியாக இருக்கிறேன். உங்கள் வங்கி கணக்கில் பணம் போட்டு விட்டேன்’ என்கிறார். ஆனால் போடவில்லை” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது காரணமாக பட தயாரிப்பாளர், இயக்குனருக்கு ரூ.7 கோடி கிடைத்ததாக தெரிகிறது.