80,90களில் கவர்ச்சியில் கொடிகட்டி பறந்த சில்க் ஸ்மிதா, மறைந்துவிட்டாலும் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை, நடன கலைஞர் புலியூர் சரோஜா பகிர்ந்து இருக்கிறார்.
“சில்க், திரையில் கவர்ச்சி காட்டக்கூடிய நடிகை என்றாலும் அவருடைய குணம் முற்றிலும் மாறுபட்டது. யாருடனும் சகஜமாக பேசாத நடிகை இவர். கவர்ச்சி நடிகையாக லட்சக்கணக்கில் அப்போது அவர் சம்பாதித்தாலும் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.
ஒரு படத்தில் நம்பியார் வில்லனாக நடித்தார். அதில் நம்பியாரும், சில்க் ஸ்மிதாவும் நடனம் ஆடுவது போல் பாடல் காட்சி இருந்தது. ஆனால் சில்க், ‘வயதான அவருடன் ஆட விருப்பம் இல்லை. இவரை எல்லாம் இப்போது யார் நடிப்பதற்கு வர சொன்னார்கள்’ என்று அவர் முன்பாகவே பேசிவிட்டார்.
நம்பியார் கோபப்படாமல் பெருந்தன்மையாக சிரித்துவிட்டு பரவாயில்லை என்று சொன்னார்.
ஆனால் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. உடனே சில்க்கிடம், ‘முதலில் நம்பியாரிடம் மன்னிப்பு கேள். அடுத்து அவருடன் ஆடு. இல்லாவிட்டால் இனி உன்னுடன் நான் வேலை செய்ய மாட்டேன்ட என்று கோபமாக கூறினேன்.
அதன் பிறகு நம்பியாரிடம் மன்னிப்பு கேட்ட சில்க், நடனமும் ஆடினார்” என கூறியிருக்கிறார் புலியூர் சரோஜா.