பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது.
முன்னதில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார். ஜாலியான, சிறுபிள்ளைத்தனமாக கதாபாத்திரம். ரசிக்கவைத்தார்.
இரண்டாம் பாகத்தில் விக்ரம், முக்கியத்துவம் பெறுகிறார். முதிர்ச்சியான, அசரடிக்கும் நடிப்பு. இந்த பாகத்தில் இவர்தான் ஹீரோ.
ஆதித்தகரிகாலனாகவே வாழ்ந்திருக்கிறார். இவரது காதலியாக – நந்தினி கதாபாத்திரத்தில் வரும் – ஐஸ்வர்யா ராயும் அபார நடிப்பு.
கல்கியின் பொ.செ. நாவலில், ஆதித்த கரிகாலன் – நந்தினி காதல் போகிற போக்கில் சொல்லப்பட்டு இருக்கும்.
ஆனால் இதில் ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையிலான பதின்பருவக் காதலை, அழகான காட்சிகளாக்கி படத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
தன்னால் நந்தினி நாட்டைவிட்டே வெளியேற்றப்படுவது.. பிறகு அவள் தடுத்தும் பாண்டியன் தலையை கொய்தது.. ஆகிய சம்பவங்களால் விரக்தியில் புலம்பும் ஆதித்த கரிகாலனை அப்படியே கண்முன் நிறுத்தி இருக்கிறார் விக்ரம்.
நந்தினியின் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் விக்ரம் கண்களில் ஒளிரும் அந்த உணர்வை காதல் என்பதா, விரக்தி என்பதா, அதிர்ச்சி என்பதா… அபாரம்!
அதே போல ஐஸ்வர்யாராயுடன் (நந்தினியுடன் ) உணர்ச்சிகரமான நீண்ட உரையாடலை நிகழ்த்தும் அந்தக் காட்சி, விக்ரம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்று உணர வைக்கிறது.
அதற்கு முன்பாக, குதிரையில் அமர்ந்தபடி சிற்றரசர்களிடம் ஆதங்கமும், கோபமும், கேலியுமாக அவர் பேசுவது.. அற்புதம்.
கத்தியால் குத்தப்பட்டு ஆதித்தகரிகாலன் உயிரற்று விழுந்து கிடக்கிறான்.. அப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது விக்ரமின் நடிப்பு!