நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகளை லீக் செய்த டிஜிட்டல் நிறுவனத்திற்கு அந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், இந்தப் படம் வெளியாவதற்கு முதல் நாளே படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆயின.
இதையடுத்து படத்தின் தயாரிப்புக் குழு காவல் துறையின் சைபர் கிரைமில் புகார் கொடுத்து அந்தக் காட்சிகளை இணையத்தில் இருந்து நீக்க வைத்தனர். கூடவே படத்தில் பங்கு கொண்ட பலரும் “இந்தக் காட்சிகளை யாரும் பார்வர்டு செய்ய வேண்டாம். படத்தினை தியேட்டரில் மட்டுமே பாருங்கள்…” என்று அன்பாக வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனாலும், தமிழகத்தில் இந்த வீடியோ கசிவு பரவலாகத் தென்பட்டது. அதன் பின்னர் இந்த வீடியோ எங்கேயிருந்து கசிந்தது என்பதைப் பற்றி தயாரிப்பாளர் தரப்பு ரகசியமாக விசாரித்ததில் படத்தைப் பிரதியெடுக்கக் கொடுக்கப்பட்டிருந்த டிஜிட்டல் நிறுவனத்தில் இருந்துதான் இந்தப் படம் லீக் ஆகியிருப்பது தெரிய வந்தது.
இதனால், அந்த டிஜிட்டல் நிறுவனத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு மாஸ்டர் படத்தை லீக் செய்த ஊழியர் அந்த நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இருந்தும், இப்போது படத்தின் இணை தயாரிப்பாளரான லலித்குமார் சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்திடம் 25 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.
இந்த நோட்டீஸூக்கு பதில் நோட்டீஸ், நீதிமன்றம், வழக்கு என்று இந்தப் பிரச்சினை பல இடங்களுக்குச் செல்லும் என்று தெரிகிறது..!