பிரபல இந்திப்பட இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் ர் நடித்திருக்கும் ‘பதான்’ பான் இண்டியா படமாக பல மொழிகளில் நாளை வெளியாகிறது.
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில், ( தமிழில் ‘அழையா மழை..’) ஷாருக்கான்-தீபிகா படுகோன் ஆகிய இருவரும் அணிந்திருந்த உடையின் நிறங்கள் சர்ச்சையானது.
தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையும், ஷாருக்கான் பச்சை, வெள்ளை ஆடையும் அணிந்திருந்தனர். இதில் தீபிகா உடை இந்து மதத்தை இழிவு செய்வதாகவும், ஷாருக்கான் உடை பாகிஸ்தான் நாட்டுக் கொடியைக் குறிப்பிடுவதாகவும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப்படத்தின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த திரையரங்குகள் மீது தாக்குதல், இந்தப்படத்துக்குத் தணிக்கைச் சான்று கொடுக்கக்கூடாது என்கிற முழக்கங்கள் என பதட்டம் நிலவியது.
‘படத்தை வெளியிடக்கூடாது’ என, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார். இதன்பிறகு சமூகவலைத்தளத்தில் இது தொடர்பான விவாதங்கள் அனல் பறந்தன.
இந்நிலையில் திடீரென எதிர்ப்புகள் நின்றுவிட்டன. பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என விஷ்வ இந்து பரிஷத் அறிவித்தது.
அதற்குக் காரணம் படத்தின் கதை.
மத்திய அரசு, காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குகிறது. அதனால் கோபமாகும் பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவதளபதி, இந்தியாவுக்கெதிராக ஒரு தீவிரவாதி மூலம் போர் தொடுக்கிறார். அதை ஷாருக்கானும் தீபிகா படுகோனும் இணைந்து முறியடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதனால் எதிர்ப்புகள் அடங்கிவிட்டன.