எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் 1971ல் வெளியாகி தமிழ்நாடு முழுதும் வெற்றிகரமாக ஓடியது. மதுரை அலங்காரில் 100 நாளைக் கடந்தது.
அந்த நினைவலைகளை, திரையரங்கு உரிமையாளர், லயன் ராம்குமார் பகிர்ந்துள்ளார்.
“ ‘ரிக்ஷாக்காரன் படத்தின் வெற்றி விழாவிற்கு 1971 செப்டம்பர் 22ம் தேதி, எங்கள் அலங்கார் திரையரங்கிற்கு வந்தார். அப்போது அவர், சிறுசேமிப்புத் துறை தலைவராக இருந்தார். தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜாராமும் அவருடன் வந்திருந்தார்.
படம் தொடங்குதற்கு முன் திரை முன்பாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி ரசிகர்களிடம் பேசினார். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களது வீட்டுக்கு வந்தார். நாங்கள் சாப்பிடும்படி வற்புறுத்தினோம். அவர், “ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்கள்” என்றார். அவர், காபி, டீ சாப்பிட மாட்டார். எனவே பால் மட்டும் போதும் என்றார்.
அன்போடு நாங்கள், வெள்ளி டம்ளரில் அவருக்குப் பால் கொடுத்தோம். அவர் குடிக்க மறுத்துவிட்டார். “எவர்சில்வர் டம்ளரில் கொடுத்தால் போதுமே!” என்றார். அவரது எளிமை எங்களுக்கு புரிந்தது. அவ்வாறே எவர்சில்வர் டம்ளரில் கொடுத்தோம். அதன் பிறகுதான் குடித்தார்” என்று கூறியிருக்கிறார் லயன் ராம்குமார்.