பழைய வண்ணார்பேட்டை படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வந்த மோகன்ஜி, தொடர்ந்து திரவுபதி, ருத்ரதாண்டவம், பகாசுரன் ஆகிய படங்களை இயக்கினார்.
இவற்றில், திரவுபதி, ருத்ரதாண்டவம் ஆகியவற்றை, ‘ ஜாதி ரீதியானவை’ என்று சிலர் விமர்சிக்கவும் செய்தனர். அடுத்து வெளியான, ‘ருத்ரதாண்டவம்’ படம், செல்போன் மூலமாக ஏற்படும் ஆபத்தைச் சொன்னது. இதற்கும் சிலர் சாதி முத்திரை குத்தினர். இதற்கு மோகன் ஜி, கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில் பகத்பாசில், அதிகார வெறியராக நடித்தார். தனது அதிகாரத்தை நிலைநாட்ட தனது கட்சியைச் சேர்ந்தவர்கள், தனது சாதியைச் சேர்ந்தவர்களையே கொல்லும் அவரது கதாபாத்திரம் அதிரவைத்தது.
ஆனால் அவர் நடித்த காட்சிக்கு, சாதி ரீதியான பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு சிலர் சமூகவலைதளத்தில் பரப்பினர்.
இந்நிலையில் பகத்பாசில் தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் பட புகைப்படத்தை வைத்தார். இது சர்ச்சையாகவே, அந்த படத்தை நீக்கினார்.
இந்நிலையில் வாரமிருமுறை இதழில், ‘மோகன் ஜி, பஹத் பாஸிலை சந்தித்து கதை சொன்னார். அதிலும் மாமன்னன் ரத்தினவேல் போன்ற கதாபாத்திரத்தில் பகத்பாசில் நடிக்க வேண்டும் என்றார். இதையடுத்தே தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்த மாமன்னன் டிபி படத்தை பகத்பாசில் நீக்கினார்’ என்று செய்தி வெளியானது.
இதையடுத்து ஆத்திரமடைந்த மோகன் ஜி, ‘மானங்கெட்ட மண்ணாங்கட்டி ரிப்போர்ட்டரே, இந்த செய்தி உண்மையில்லை என்று எழுதி இருப்பதை ஏன் புகைப்படத்தில் போடவில்லை. நீங்கள் ஜாதி வெறியுடன் படங்களுக்கு மார்க் போடுவீர்கள் என்று தெரியும், இப்போது ஜாதி வெறியோடு செய்திகளையும் போடுகிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால், நிச்சயமா பஹத் பாஸிலுடன் ஒரு படத்தை எடுத்து அதை செய்தியாக இந்த பத்திரிகையில் வரவைப்போம்’ என்று ஆவேசமாக கூறியுள்ளார்.