நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு மண்டல பகுதியில் நடந்து வந்தது. அங்குள்ள செங்குளம் கால்வாயின் குறுக்கே மரப்பாலம் அமைத்து, அதன் கரைகளை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. படப்பிடிப்பினரின் அத்துமீறிய செயல்களால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக வனவிலங்கு ஆர்வலர்களும் உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு பலமுறை மனு அளித்தனர்.அத்துடன், “கால்வாயின் குறுக்கே சட்டவிரோதமாக பாலம் அமைத்துள்ளதாகவும், அதை அகற்றி, கால்வாய் கரையை சீரமைக்குமாறு படக்குழுவிடம் முதலில் கூறிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், உயர் அதிகாரியின் அழுத்தத்தை காரணம் காட்டி, வாய்மூடி பார்வையாளர்களாக மாறிவிட்டனர்.
அனுமதியின்றி புலிகள் காப்பகத்திற்கு அருகே மெகா செட் அமைத்ததோடு, வெடிகுண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை படக்குழு படமாக்குகின்றனர்.
இதுபோன்ற ஒரு காட்சி சமீபத்தில் சமூவலைத்தளத்தில் வைரலாகியும், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் லைட்டுகள் போன்றவற்றால் தொந்தரவு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்தது. அதைத்தொடர்ந்து பட குழுவினருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், படக்குழுவினர் எந்தவித அனுமதியும் இல்லாமல் மத்தளம் பாறை பகுதியில் சூட்டிங் நடத்தி இருக்கின்றனர். இது குறித்து மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அதிரடியாக படப்பிடிப்புக்கு பேக்கப் சொல்லி இருக்கிறார்.
அதையொட்டி ஷூட்டிங் இப்போது இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக தள்ளி போய் இருக்கிறது.