Friday, April 12, 2024

நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு படவுலகில் ‘ரக்சிதா’ என்ற பெயரில் 2012-ம் ஆண்டில் இருந்து சில படங்களில் நடித்து வந்தவர் நடிகை ‘கயல்’ ஆனந்தி.

2014-ம் ஆண்டு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருடைய பெயர் ஆனந்தியாக இருக்கவே அன்று முதல் ‘கயல்’ ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார்.

இதன் பின்பு ‘சண்டி வீரன்’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘ரூபாய்’, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் தற்போது ‘ஏஞ்சல்’, ‘ராவணக் கோட்டம்’, ‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஆனந்தி திடீரென்று திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என்ற செய்தி தற்போது திரையுலகத்தில் பரவி வருகிறது.

அவருடைய திருமணம் இன்று இரவு ஆந்திராவில், வாரங்கல் பகுதியில் இருக்கும் ஹண்டர் சாலையில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் நடிக்கவிருக்கிறதாம்.

நடிகை ஆனந்தியை மணக்கவிருக்கும் மணமகனின் பெயர் சாக்ரடீஸ் என்றும் இந்தத் திருமணம் ஒரு காதல் திருமணமாகும். மணமகன் சாக்ரட்டீஸ், இயக்குநர் மூடர் கூடம் நவீனின் மைத்துனர். அதாவது நவீன் மனைவியின் தம்பி.

மணமகன் சாக்ரடீஸ் தமிழ்ச் சினிமாவில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் நவீன் இயக்கத்தில் ஆனந்தி தற்போது நடித்து வரும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இப்போது அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அக்னிச் சிறகுகள்’ படத்திலும் சாக்ரடீஸ் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். சில வருடங்களாகவே ஆனந்தியும், சாக்ரடீஸும் காதலித்து வந்துள்ளனர். அந்தக் காதல் தற்போது கல்யாணத்தில் வந்து முடிந்திருக்கிறது.

நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- Advertisement -

Read more

Local News