The post சினிமா வரலாறு-34 இரண்டு கதாநாயகர்களை வில்லனாக மாற்றிய கதாசிரியர் appeared first on Touring Talkies.
]]>1980-களின் துவக்கத்தில் தமிழ் சினிமா துறையில் சூழ்நிலை சரியாக இல்லாததாலும் தாங்கள் தயாரித்த சில திரைப்படங்கள் வெற்றியடையாததாலும் சிறிது காலம் படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஏவி.எம். அதிபரான மெய்யப்ப செட்டியார் ஒரு காலக்கட்டத்தில் மீண்டும் படம் தயாரிக்க திட்ட மிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அறிவித்த இரண்டு படங்களிலும் கதாநாயகன் கமல்ஹாசன். ஒரு படத்தை இயக்க கே.பாலசந்தரையும், இன்னொரு படத்தை இயக்க பாரதிராஜாவையும் அவர்கள் ஒப்பந்தம் செய்து இருந்தார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ அந்த இரு படங்களையுமே அவர்களால் திட்டமிட்டபடி தொடங்க முடியவில்லை.
அந்த சமயத்தில் ரஜினிகாந்த பஞ்சு அருணாச்சலத்துக்குக் கொடுத்திருந்த கால்ஷீட்டை ஏவி.எம். நிறுவனத்துக்காக விட்டுக் கொடுக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டார் ஏவி.எம்.சரவணன். சரவணன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த பஞ்சு அருணாச்சலம் மறு பேச்சின்றி அதற்கு ஒப்புக் கொண்டார். அப்படி உருவான படம்தான் ‘முரட்டுக் காளை.’
அந்தப் படத்தில் ஜெய்சங்கரை வில்லனாக நடிக்க வைக்க யோசனை கூறியவர் பஞ்சு அருணாச்சலம்தான். இருப்பினும் அதை ஜெய்சங்கரிடம் நேராகத் தெரிவிப்பதில் அவருக்குத் தயக்கம் இருந்தது.
பஞ்சு அருணாச்சலத்தின் வளர்ச்சியில் ஜெய்சங்கருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதால் “கதாநாயகனான என்னை வில்லனாக நடிக்கச் சொல்லி நீயே கேட்கலாமா..?” என்று ஜெய்சங்கர் தன்னிடம் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் காரணமாக அவருக்குள் எழுந்த தயக்கம் அது.
அதை அவர் ஏவி.எம்.சரவணன் அவர்களிடம் தெரிவித்தபோது “அதனால் என்ன… நானே ஜெய்சங்கரிடம் பேசுகிறேன்…” என்று சொன்ன அவர் உடனடியாக ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு “உங்களை சந்திக்க வேண்டுமே ஜெய்” என்றார். “நான் ஏவி.எம். அருகேதான் இருக்கிறேன். இன்னும் பத்து நிமிடத்தில் நானே அங்கு வருகிறேன்…” என்று சொன்ன ஜெய்சங்கர் சொன்னபடி வந்தார்.
” நாங்கள் ரஜினிகாந்தை வைத்து அடுத்து எடுக்கவிருக்கும் ‘முரட்டுக் காளை’படத்தில் வித்தியாசமான ஒரு வில்லன் பாத்திரம் இருக்கிறது. அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான், பஞ்சு, முத்துராமன் ஆகிய அனைவரும் நினைக்கிறோம்…”என்று சரவணன் அவர்கள் சொன்ன அடுத்த நிமிடமே, “நான் நடிக்கிறேன்…” என்று கூறிவிட்டார் ஜெய்சங்கர்.
“நீங்கள் நன்கு யோசித்து உங்கள் முடிவை சொன்னால் போதும்” என்று சரவணன் சொன்னபோது, “இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இங்கு இருக்கும் நீங்கள், பஞ்சு, முத்துராமன் ஆகிய மூவருமே என்னுடைய நலனில் அக்கறை கொண்டவர்கள். எனக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய விஷயத்தை செய்யச் சொல்லி நீங்கள் யாராவது சொல்வீர்களா..? அதனால்தான் யோசிக்காமல் நான் சரி என்று ஒப்புக் கொண்டேன்…” என்று ஜெய்சங்கர் சொன்னபோது நண்பர்கள் மேல் ஜெய்சங்கர் வைத்திருக்கும் நம்பிக்கையை பார்த்து அந்த மூவருமே அசந்து போனார்கள்.
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கரை ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக் காளை’யில் வில்லனாக அறிமுகப்படுத்தியது போல ஏவி.எம். நிறுவனத்துக்காக ரஜினி நடித்த இன்னொரு படமான ‘போக்கிரி ராஜா’ படத்தில் வில்லனாக முத்துராமனை அறிமுகப்படுத்தலாம் என்ற யோசனையையும் எம்.சரவணன் அவர்களுக்கு சொன்னவர் பஞ்சு அருணாச்சலம்தான்.
“நல்ல யோசனை” என்று அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்ட சரவணன் அவர்கள் “முத்துராமனைப் பார்த்து பேசி அவரை ஒப்புக் கொள்ள வைக்கும் பொறுப்பு உங்களுடையது” என்று அந்தப் பொறுப்பை பஞ்சு அருணாச்சலத்திடமே ஒப்படைத்தார்.
அப்போது கதாநாயகனாக நடிக்கின்ற வாய்ப்புகள் முத்துராமன் அவர்களுக்கு குறைந்திருந்த நேரம். குணச்சித்திர வேடங்களுக்கு மாறியிருந்தார் என்றால் அப்போதே பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் என்ன காரணத்தாலோ அப்படி எந்த வாய்ப்பையும் ஏற்காமல் திரையுலகைவிட்டு ஒதுங்கி இருந்தார் அவர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரை சந்தித்த பஞ்சு அருணாச்சலம் ‘போக்கிரி ராஜா’ என்ற பெயரில் ரஜினிகாந்த இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஒன்றை ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கின்ற விவரத்தை அவருக்கு எடுத்துக் கூறி அதில் வில்லன் வேடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்படி ஒரு வில்லன் பாத்திரத்தில் நடிப்பது பற்றி பேசத்தான் பஞ்சு அருணாச்சலம் தன்னை சந்திக்க வருகிறார் என்று முத்துராமனுக்கு தெரியாது என்பதால் பஞ்சு அருணாச்சலம் கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மிகப் பெரிய குழப்பத்திற்கு ஆளானார் அவர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு ‘பஞ்சு, நீங்க வீடு தேடி வந்து என்னைக் கூப்பிட்டதில் மகிழ்ச்சி. ஆனா, சினிமா, நாடகம் என்று இத்தனை வருஷம் தொடர்ந்து நடித்துவிட்டேன். இப்ப வசதி வாய்ப்போடு செட்டிலாகி நிம்மதியா ரெஸ்ட் எடுத்துட்டிருக்கேன்.
இவ்வளவு நாள் நல்ல நல்ல பாத்திரங்களில் நடிச்சிட்டு இப்ப கடைசியில் வில்லனா நடிச்சு ஹீரோகிட்ட எதுக்கு அடி வாங்கணும்னுதான் நான் யோசிக்கிறேன்…” என்றார் முத்துராமன்.
“நீங்க ஏன் வில்லன்னா அப்படி நினைக்கறீங்க. நெகட்டிவாக இருந்தாலும் அது ஒரு நல்ல கேரக்டர். அதனால் யோசனை செய்யாமல் இந்தப் படத்தில நடிங்க. இது காமெடி கலந்த வில்லன் பாத்திரம். நீங்க நடித்தால் நிச்சயம் அந்த கேரக்டர் வெற்றி பெறுவது மட்டுமில்லை. உங்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.
இன்னொன்றையும் சொல்றேன் கேட்டுக்கங்க. இந்தப் படம் நிச்சயமாக மிகப் பெரிய வெற்றியை அடையும். அதுக்கு அப்புறம் பத்து சினிமா கம்பெனி கார்கள் தினமும் உங்க வீட்டு வாசல்ல கியூவில் நிற்கும். அதனால், எனக்காக நீங்கள் இந்தப் படத்தில் நடியுங்கள்.எல்லாம் சரியாக வரும்…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.
முத்துராமன் அந்தப் பாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டவுடன் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையிலும் பல மாற்றங்களை செய்தார் பஞ்சு. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தப்படத்தின் படப்படிப்பு முடிவடையும் முன்னரே ஒரு படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்றிருந்த முத்துராமன் இறந்துவிட்டதால் அவருடைய பாத்திரம் அந்தப் படத்திலே சிறப்பாக அமையவில்லை.
‘போக்கிரி ராஜா’வைத் தொடர்ந்து ஏவி.எம். நிறுவனத்துக்காக பஞ்சு அருணாச்சலம் பணியாற்றிய ரஜினிகாந்த் படமாக ‘பாயும் புலி’ அமைந்தது. தனது தங்கையைக் கொன்றவனை கதாநாயகன் பழி வாங்குகின்ற அந்தக் கதையில் கராத்தே கலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம்.
அந்தப் படத்தில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது பற்றி விவாதம் வந்தபோது ஜெய்சங்கர், முத்துராமன் ஆகிய இரு கதாநாயகர்களை வில்லனாக ஆக்க யோசனை தந்த பஞ்சு அருணாச்சலம் ‘பாயும் புலி’ படத்தில் வில்லனாக நடிக்க ஒரு இயக்குநரின் பெயரை பரிந்துரைத்தார். அந்த இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர்.
எம்.சரவணன் அவர்களின் நெருங்கிய நண்பரான ஏ.சி.திருலோகச்சந்தர் நிச்சயமாக அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தெரிந்திருந்தபோதிலும் “வில்லனாக நடிக்கிறீர்களா..?” என்று அவரைக் கேட்டார் சரவணன்.
“என்னை விட்டுவிடுங்கள். நான் இயக்குநராகவே இருந்து விடுகிறேன்..” என்று சொல்லி அந்த வாய்ப்பை ஏற்க அவர் மறுத்துவிட்டார் அவர். அடுத்து அந்தப் பாத்திரத்திலே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கராத்தே மணி.
முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட அவர் சில நாட்களுக்குப் பிறகு “கராத்தே மாஸ்டரான நான் நடிப்பிற்காக தோற்றால்கூட மாணவர்கள் மக்தியில் என்னுடைய இமேஜ் பாதிக்கப்படும்” என்று கூறி அந்த படத்திலிருந்து விலகி விட்டார்.
அதை அடுத்து ‘முரட்டுக் காளை’ படத்தில் வில்லனாக நடித்த ஜெய்சங்கரையே அந்த பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று எல்லோரும் முடிவு செய்ய ஜெய்சங்கருக்கு அழைப்பு சென்றது.
“என்ன கராத்தே மணி வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாரா…?” என்றபடியே ஏவி.எம். நிறுவனத்துக்குள் காலடி எடுத்து வைத்தார் ஜெய்சங்கர்.
பின்னர் நடந்தது எல்லாவற்றையும் அவருக்கு விளக்கமாகக் கூறி “வில்லன் பாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டவுடன் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து சரவணன் அவர்களிடம் நீட்டினார் அவர்.
அந்தக் காகிதத்தில் “கராத்தே மணியால் ஏவி.எம். நிறுவனத்துக்கு ஏதோ சிக்கல். அதனால் அந்த பாத்திரத்தில் நடிக்கத்தான் என்னை அழைத்திருக்கிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ளப் போகிறேன்…” என்று எழுதி வைத்திருந்தார் அவர்.
“அன்று காலைவரை அந்தப் பாத்திரத்துக்காக அவரை அழைக்கப் போகிறோம் என்று எங்களுக்கே தெரியாது. ஆனால், அவர் எப்படி எல்லாவற்றையும் சரியாக கணித்து எழுதியிருந்தார் என்று எங்கள் எல்லோருக்குமே ஆச்சர்யம்” என்று அந்த நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-34 இரண்டு கதாநாயகர்களை வில்லனாக மாற்றிய கதாசிரியர் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-33 – ‘இசைக் குயில்’ எம்.எஸ்.சுப்புலட்சுமியை மூன்று முறை இயக்கிய இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>“எம்.எஸ்.சுப்புலட்சுமி என்னும் மாபெரும் இசையரசியோடு பணியாற்றக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு ‘சகுந்தலை’ திரைப்படம் தந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் எல்லிஸ். ஆர். டங்கன்தான், அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எம்.எஸ்.சுப்புலட்சுமி கண்ணீர்விட்டு அழவும் காரணமாக இருந்தார்.
ராஜ பிரதிநிதிகளும், மக்களும் புடை சூழ துஷ்யந்த மகராஜா கொலு மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது அங்கே வரும் சகுந்தலை, ராஜாவைப் பார்த்து கோபத்திலே கொந்தளிக்க வேண்டிய ஒரு காட்சி ‘சகுந்தலை’ படத்துக்காகப் படமாக்கப்பட்டபோது அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று மிகப் பொறுமையாக எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது மட்டுமின்றி நடித்தும் காட்டினார் டங்கன்.
அதற்குப் பிறகு பல முறை ஒத்திகை பார்த்துவிட்டே அந்தக் காட்சியைப் படமாக்கத்
தொடங்கினார் டங்கன். ஆனால் பல முறை படமாக்கியபோதும் அந்தக் காட்சிக்கு வேண்டிய கோபத்தை எம்.எஸ். அவர்கள் சரியாக வெளிக்காட்டவில்லை. அதைக் கண்டு முகம் சிவந்த டங்கன் கோபமாக செட்டைவிட்டு வெளியே போய்விட்டார்.
சிறிது நேரம் சென்ற பிறகு செட்டுக்குள் நுழைந்த அவர், “காலையிலிருந்து இந்தக் ஒரே காட்சியை எத்தனை முறை படமாக்குவது…? இதுதான் கடைசி டேக். இந்த டேக்கிலும் சரியாக நடிக்கவில்லை என்றால் நான் திரும்ப பொறுமையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டேன். ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு போய்க் கொண்டே இருப்பேன்…” என்று பொதுவாக உரத்த குரலில் சத்தம் போட்டது மட்டுமின்றி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அருகில் போய் “இவ்வளவு மோசமான நடிகையா இருப்பீங்க என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
அவர் அப்படி சொன்னதும் ஒரு பக்கம் அவமானம், இன்னொரு பக்கம் கோபம், மற்றொரு பக்கம் ஆத்திரம் என்று பல உணர்ச்சிகளுக்கு ஆளான சுப்புலட்சுமியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது.
அந்தக் கால கட்டத்தில் இசையுலகில் ராணியாக இருந்தார் எம்.எஸ். அது தவிர ‘சகுந்தலை’ படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அப்படியிருக்கும்போது அவரை இப்படி மனம் போனபடி டங்கன் திட்டியது சுப்புலட்சுமி அவர்களை மட்டுமின்றி அந்த செட்டில் இருந்த எல்லோரையுமே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
ஆனால் டங்கன் எதையும் பொருட்படுத்தவில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி அழத் தொடங்கிய அடுத்த நிமிடம் அவரை சமாதானப்படுத்துவதற்கு பதிலாக “லைட்ஸ்.. கேமிரா, ஆக்ஷன்” என்று அடுத்தடுத்து கட்டளைகளை பிறப்பித்தார்.
அதை அடுத்து அந்தக் காட்சியில் நடிக்க வந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு துஷ்யந்தனை விட டங்கன் பேரில் கோபம் அதிகமாக இருந்தது. அந்தக் கோபத்தில் ஆத்திரம் பொங்க துஷ்யந்தனை வறுத்து எடுத்துவிட்டார் அவர். படப்பிடிப்பு முடிந்ததும் தான் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக அந்தக் காட்சியில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமியை கட்டிப் பிடித்துப் பாராட்டினார் டங்கன்.
“எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் ஒரு மிகச் சிறந்த நடிகை. அப்படிப்பட்டவரை நான் மோசமான நடிகை என்று திட்டியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டு அழுதார். நான் அவரை ஆங்கிலத்தில்தான் திட்டினேன். அவருக்கு ஆங்கிலத்தில் மிகச் சில வார்த்தைகளே அப்போது தெரியும் என்றாலும் நான் கோபத்தின் உச்சியில் இருந்ததால் அவரது நடிப்ப்பைத்தான் நான் குறை கூறுகிறேன் என்று அவரால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது” என்று இந்த சம்பவம் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டங்கன்.
மேலும், “புகழ் பெற்ற நட்சத்திரங்களோடு பணியாற்றும்போது நாம் எதிர்பார்க்கின்ற உணர்ச்சிகளை அவர்களிடமிருந்து பெறுவதற்கு இது போன்ற சில உபாயங்களைக் கையாள வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடுகிறது” என்றும் அந்தக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார் டங்கன்.
1940-ம் ஆண்டின் மாபெரும் வெற்றிச் சித்திரமாக ‘சகுந்தலை’ அமைந்தது. அந்தப் படத்தில் ‘சகுந்தலை’ தனது மோதிரத்தை ஆற்றிலே தொலைக்கும் காட்சியை ஸ்லோ மோஷனில் படமாக்கியிருந்தார் டங்கன். அதுவரை ரசிகர்கள் அப்படி ஒரு காட்சியை திரைப்படத்தில் பார்த்தது இல்லை என்பதால் ரசிகர்களிடம் அந்தக் காட்சி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
‘சகுந்தலை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாநாயகியாக நடிக்க இசையின் மேன்மையைப் பற்றி சொல்லும ஒரு கதையைப் படமாக்க ஆசைப்பட்டார் எம்.எஸ். அவர்களின் கணவரான சதாசிவம். அதற்காக எந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அவர் கல்கி அவர்கள் உட்பட பல நண்பர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட போது மீரா கதையைத் தேர்வு செய்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
எம்.எஸ்.நடித்து மாபெரும் வெற்றிச் சித்திரமாக அமைந்த ‘சகுந்தலை’ படத்தின் இயக்குநரான எல்லிஸ் ஆர்.டங்கன் அவர்களையே ‘மீரா’ படத்தை இயக்குவதற்கும் சதாசிவமும், சுப்புலட்சுமியும் தேர்ந்தெடுத்தனர்.
பொலிவான முகத்தோற்றத்தைப் பெற்றிருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை ‘மீரா’ படத்தில் இன்னும் அழகாகத் திரையில் காட்ட புதுமையான முயற்சி ஒன்றை மேற்கொண்ட டங்கன், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தத்ரூபமான தோற்றத்துடன் அவரது மார்பளவு சிலை ஒன்றை உருவாக்கச் சொன்னார்.
அந்தச் சிலை தயாரானதும் அந்தச் சிலையை வித்தியாசமான பல கோணங்களில் லைட்டிங் செய்யச் சொல்லி தனது ஒளிப்பதிவாளரான ஜித்தன் பானர்ஜியிடம் சொன்ன டங்கன், எந்தெந்த ஒளியமைப்பில் அவர் மிகவும் அழகாக இருந்தாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டு பின்னர் அதே ஒளியமைப்பில் அவரைப் படமாக்கினார்.
‘மீரா’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி தெய்வீக அழகுடன் ஒளிர்ந்ததற்குக் அதுவே காரணம்.
‘மீரா’ படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் ராஜஸ்தான், துவாரகா போன்ற பல இடங்களில் நடைபெற்றது.
மீராவாக நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியபடி நடந்து வரும் காட்சி துவாரகாவில் படமாக்கப்ட்டபோது எம்.எஸ்.சுப்புலட்சுமியை பக்த மீராவாகவே பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரது காலில் பயபக்தியோடு விழுந்து வணங்கினர்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அந்த பாத்திரத்தில் நடித்தபோது பக்த மீராவாகவே மாறினார். அதன் விளைவாக துவாரகையில் உள்ள கண்ணன் கோவிலில் மீராவாக அடி எடுத்து வைத்த சுப்புலட்சுமியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதைத் தொடர்ந்து அங்கேயே மயங்கி சரிந்தார் அவர்.
தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது ‘மீரா’. பண்டிட் ஜவஹர்லால் நேரு, மவுண்ட்பேட்டன் பிரபு, ‘கவிக்குயில்’ சரோஜினி தேவி ஆகியோருக்காக ‘மீரா’வின் சிறப்புக் காட்சி ஒன்று, தலைநகர் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
எம.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெருமையை சர்வதேச அளவிலே எடுத்துச் சென்ற படமாக ‘மீரா’ படம் அமைந்தது. ‘மீரா’ படத்தின் இந்தி பதிப்பையும் சேர்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நடித்தது மொத்தம் ஐந்து படங்கள் மட்டுமே. அதில் மூன்று படங்களை இயக்குகின்ற வாய்ப்பைப் பெற்றவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.
‘மீரா’ படத்திலே ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களையும் நடிக்க வைத்திருந்தார் டங்கன்.1936-ம் ஆண்டில் ‘சதி லீலாவதி’ படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களை ஓர் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகப்படுத்திய எல்லிஸ் ஆர்.டங்கன் 1950-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கதாநயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தை இயக்கினார்.
‘மந்திரி குமாரி’ படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்திருந்த நிலையில் தனது மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக தனது மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்க தாய் நாடு திரும்பினார் டங்கன். ஆனால், எந்த மண வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள டங்கன் இந்தியாவை விட்டு கிளம்பினாரோ அந்த மண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. 1951-ம் ஆண்டு தனது மனைவி எலைனைப் பிரிந்தார் டங்கன்.
எல்லிஸ்.ஆர்.டங்கன் அமேரிக்கா திரும்பிய பிறகு ’மந்திரி குமாரி’ படத்தில் படமாக்கப்பட வேண்டியிருந்த மீதி காட்சிகளை இயக்கும் பொறுப்பை ஏற்று படத்தை முடித்தார் அப்படத்தின் தயாரிப்பாளரான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம். அதனால், படத்தின் டைட்டிலில் டங்கனுடைய பெயருடன் சுந்தரம் அவர்களின் பெயரும் இடம் பெற்றது.
அதற்குப் பின்னர் பல டாக்குமெண்டரி படங்களை இயக்க இந்தியா வந்த எல்லிஸ்.ஆர்.டங்கன் இறுதியாக இந்தியா வந்தது 1993-ம் ஆண்டில். அப்போது தமிழ்த் திரையுலகம் சார்பில் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
கமல்ஹாசன், ஏவி.எம்.சரவணன், ‘மந்திரி குமாரி’ படத்தில் நடித்த ஜி.சகுந்தலா உட்பட எண்ணற்ற திரையுலக பிரமுகர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அந்த விழாவிலே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய ‘மீரா’ படத்திலிருந்து ஒரு பாடலை அந்த நிகழ்ச்சியில் பாடினார். அப்போது அந்த அரங்கில் கண்ணில் ஈரம் கசியாமல் இருந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் என்று தமிழ்த் திரையுலகின் தூண்களாக இருந்த பல சாதனையாளர்களை அறிமுகம் செய்த எல்லிஸ் ஆர்.டங்கன் 2001-ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று மறைந்தார்.
தமிழ்த் திரையுலக வரலாற்றை எப்போது யார் எழுதினாலும் டங்கன் அவர்களுடைய பெயர் இன்றி அது நிறைவடையாது.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-33 – ‘இசைக் குயில்’ எம்.எஸ்.சுப்புலட்சுமியை மூன்று முறை இயக்கிய இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-32 எம்.ஜி.ஆரையும், எம்.ஜி.சக்ரபாணியையும் அறிமுகம் செய்த இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>அப்படிப்பட்ட அவர் எப்படிப்பட்ட தமிழ் இலக்கியவாதிகளுடன் பணியாற்றி இருக்கிறார் எனபதைப் பார்க்கும்போது பிரம்மிப்பு ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், சுத்தானந்த யோகியார், கல்கி, இளங்கோவன், கலைஞர் கருணாநிதி என்று அவர் பணியாற்றிய இலக்கியவாதிகளின் பட்டியல் மிகவும் நீளமானது.
1935-ம் ஆண்டு முதல் 1950-வரை இந்தியாவில் தங்கிய எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கிய தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 13.
அமெரிக்காவில் ஓகையா மாநிலத்தில் அமைந்துள்ள பார்டன் என்ற சிற்றூரில் பிறந்தவர் டங்கன். சிறுவயது முதலே புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்த அவர் தனது பள்ளிப் படிப்பு முடிவடைந்தவுடன் தெற்கு கலிபோர்னியாவில் அமைந்திருந்த பல்கலைக்கழகத்தில் திரைப்படத் துறைக்கான படிப்பில் ஒளிப்பதிவுப் பிரிவில் சேர்ந்தார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் மானக்லால் தாண்டன் என்ற இந்திய மாணவர் திரைப்படத் துறை சம்பந்தமாக படித்துக் கொண்டிருந்தார். மானக்லால் தாண்டன் அப்போது பம்பாயில் இருந்த மிகப் பெரிய செல்வந்தரின் பிள்ளை. திரைப்படம் சம்பந்தமாக படித்துவிட்டு வரப் போகும் தனது மகனுக்காக பம்பாயில் மிகப் பெரிய ஸ்டுடியோ ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்தார் அவரது தந்தை.
தனது சொந்த ஸ்டுடியோவில் படத் தயாரிப்புகளைத் தொடங்குவதற்காக இந்தியா சென்றபோது தனது நண்பர்களான எல்லிஸ்.ஆர்.டங்கனையும், மைக்கேல் ஒமலேவையும் தன்னுடன் இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார் தாண்டன்.
அவரது அழைப்பை ஏற்று 1935-ம் ஆண்டு இந்தியாவிற்கு புறப்பட்டார் டங்கன். ஆறு மாதங்கள் இந்தியாவில் தங்குவதற்காக அன்று அவர் மேற்கொண்ட அந்தப் பயணம் பதினைந்து வருடங்கள் அவரை இந்தியாவில் தங்க வைக்கப் போகிறது என்று அப்போது டங்கனுக்குத் தெரியாது.
சில காரணங்களால் திட்டமிட்டபடி படத் தயாரிப்பு பணிகளை மானக்லால் தாண்டனால் தொடங்க முடியவில்லை. அந்த சந்தர்ப்பத்தில்தான் கே.பி.சுந்தராம்பாள் நந்தனாராக நடித்த ‘பக்த நந்தனார்’ திரைப்படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அவருக்கு வழங்கினார் அசன் தாஸ் என்னும் தயாரிப்பாளர்.
அதுதான் கே.பி.சுந்தராம்பாள் நடித்த முதல் திரைப்படம். அந்தத் திரைப்படத்தில் மானக்லால் தாண்டனோடு இனிந்து பணியாற்றிய டங்கன் அந்த படத்தின் சில காட்சிகளை ஒளிப்பதிவு செய்தது மட்டுமின்றி இயக்கவும் செய்தார். எல்லிஸ் ஆர்.டங்கன் பணியாற்றிய முதல் படமாக ‘பக்த நந்தனார்’ அமைந்தது.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எல்லிஸ்.ஆர்.டங்கனும் ஒமேலேயும் அமெரிக்காவிற்குத் திரும்பினார்கள். படப்பிடிப்பு முடிந்து ‘பக்த நந்தனார்’ படம் வெளியீட்டுக்கு தயாரானபோது அந்தப் படத்தின் பிரீமியர் கட்சி பம்பாயில் நடைபெற்றது.
அந்தக் காட்சிக்கு வரும்படி தனது நண்பரான எல்லிஸ் ஆர்.டங்கனுக்கு மானக்லால் தாண்டன் விடுத்திருந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு மீண்டும் இந்தியா வந்தார் டங்கன்.
‘பக்த நந்தனார்’ படத்தைத் தொடர்ந்து பல திரைப்பட நிறுவனங்களில் இருந்து மானக்லால் தாண்டனுக்கு அழைப்புகள் வந்தன. அதில் ஒரு அழைப்புதான் ‘சதி லீலாவதி’ படத்தை இயக்க அவருக்கு வந்த வாய்ப்பு. தனக்கு வந்த பல வாய்ப்புகளில் ‘தலித் குசும்’ என்ற இந்திப் படத்தை இயக்கும் வாய்ப்பை அப்போது தாண்டன் ஏற்றுக் கொண்டிருந்ததால் அவரால் ‘சதி லீலாவதி’ படத்தை இயக்க முடியவில்லை.
ஆகவே தனது நண்பரான எல்லிஸ் ஆர்.டங்கனை தயாரிப்பாளர் மருதாசலம் செட்டியாருக்கு பரிந்துரை செய்தார் தாண்டன். அப்போது டங்கனுக்கு சுத்தமாக ஒரு தமிழ் வார்த்தை கூட தெரியாது. ஆகவே, அந்த 27 வயது இளைஞனை நம்பி படத்தை இயக்கும் வாய்ப்பை எப்படித் தருவது என்று மருதாசலம் செட்டியார் யோசித்தபோது என்ன சொன்னால் மருதாசலம் செட்டியாரை வீழ்த்த முடியுமோ அதைச் சொன்னார் தாண்டன்.
டங்கன் அமெரிக்காவில் திரைப்படக் கலை பற்றி படித்தவர் என்று தாண்டன் சொன்னதும் மறு பேச்சின்றி அவரை இயக்குநராக ஏற்றுக் கொண்டார் மருதாசலம் செட்டியார்.
தமிழ் சினிமா உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை ‘சதி லீலாவதி’ படத்தின் மூலம் எல்லிஸ் ஆர்.டங்கனுக்குக் கிடைத்தது. அந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். மட்டுமின்றி என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா போன்ற பல கலைஞர்களும் அறிமுகமானார்கள்.
முதல் படத்திலேயே தனது வித்தியாசமான கேமிரா கோணங்களால் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார் டங்கன். ஒரே இடத்தில் கேமிராவை நிலையாக நிறுத்தி வைத்துப் படம் எடுக்காமல் காட்சிகளைப் படமாக்க முதன்முதலாக டிராலியை அந்தப் படத்திலே பயன்படுத்தியிருந்தார் டங்கன். அதனால் நீண்ட காலத்திற்கு டிராலி மூவ்மெண்டுகளை ‘டங்கன் டிராலி’ என்ற பெயரிலே பல ஒளிப்பதிவாளர்கள் அழைத்து வந்தனர்.
‘சதி லீலாவதி’ படத்தில் நடிக்க எம்ஜி.சக்ரபாணியும் முயற்சி செய்தார் என்றாலும் சரியான பாத்திரம் அமையாததால் அவரை அந்தப் படத்தில் டங்கன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன் பின்னர் தான் இயக்கிய ‘இரு சகோதரர்கள்’ என்ற திரைப்படத்தில் எம்.ஜி.சக்ரபாணியை அறிமுகம் செய்தார் அவர்.
எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய ஐந்தாவது படமாக எம்.கே.தியாகராஜ பாகவதரும், எம்.ஆர்.சந்தானலட்சுமியும் ஜோடியாக நடித்த ‘அம்பிகாபதி’ திரைப்படம் அமைந்தது. ‘அம்பிகாபதி’ படத்தின் கதையைக் கேட்ட டங்கனுக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துப் போனது. அந்த ‘அம்பிகாபதி’ படத்திற்கு வசனம் எழுதியவர் தமிழ்த் திரை உலகின் வசனப் போக்கை மாற்றியமைத்த பிரபல எழுத்தாளரான இளங்கோவன்.
தமிழ்த் திரைப்படங்களில் ‘நாதா’, ‘ஸ்வாமி’ என்று பேசிக் கொண்டிருந்த கதாபாத்திரங்கள் இயல்பாக பேசத் தொடங்கியது இவரது வருகைக்குப் பிறகுதான் நிகழ்ந்தது.
‘அம்பிகாபதி’, ‘ரோமியோ ஜுலியட்’டைப் போன்ற ஒரு காதல் கதை என்பதால் அந்தத் திரைப்படத்தை இயக்குவதற்கு ரோமியோ ஜூலியட்டை முன் மாதிரியாக வைத்துக் கொண்ட டங்கன் ரோமியோ ஜுலியட்டிலிருந்து சில காட்சிகளை இளங்கோவனிடம் கொடுத்து தமிழில் மொழி பெயர்த்துத் தரச் சொல்லி அந்தப் படத்திலே பயன்படுத்திக் கொண்டார்.
அம்பிகாபதி படுக்கையறைக்கு அமராவதியை தூக்கிச் செல்வது போல பல நெருக்கமான காட்சிகளை அந்தப் படத்துக்காக படமாக்கி இருந்தார் டங்கன். அதற்கு முன்பு தமிழ்ப் படங்களில் அத்தனை நெருக்கமான காதல் காட்சிகள் இடம் பெற்றதில்லை. ஆகவே அப்ப்டிப்பட்ட காட்சிகள் மூலம் டங்கன் அமெரிக்க கலாச்சாரத்தை தமிழ்ப் படங்களில் புகுத்துவதாகக்கூட அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.
‘சதி லீலாவதி’ படத்தில் தான் அறிமுகப்படுத்திய டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரை ‘அம்பிகாபதி’ படத்தில் பயன்படுத்திக் கொண்டார் டங்கன். தியாகராஜா பாகவதரின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்த ‘அம்பிகாபதி’ ஒரு வருடம் ஒடி மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
‘அம்பிகாபதி’ படத்தைத் தொடர்ந்து இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘சகுந்தலை’ படத்தை இயக்கினார் டங்கன். அந்த வாய்ப்பை இவருக்கு வழங்கியவர் ‘தமிழ்த் திரையுலகின் பிதாமகன்’ என்று எல்லோராலும் போற்றப்படும் பிரபல இயக்குநரான கே.சுப்ரமணியம் அவர்கள்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் அவரது கணவரான சதாசிவமும் இணைந்து ‘சந்திரபிரபா சினிடோன்’ என்ற பெயரில் ஒரு திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினர்.
அந்த நிறுவனத்தின் சார்பில் ‘சகுந்தலை’ படத்தை இயக்குவதற்காக இயக்குநர் கே.சுப்ரமணியத்தை சதாசிவம் அணுகியபோது ஏற்கனவே பல பட வேலைகள் இருப்பதால் அந்த படத்தை ஒப்புக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் கே.சுப்ரமணியம்.
அருடைய அந்த பதிலால் மிகுந்த ஏமாற்றமடைந்த சதாசிவம் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சுப்ரமணியம் அவர்களை சந்தித்து ‘சகுந்தலை’ படத்தை இயக்கப் பொருத்தமான ஒரு இயக்குநரை பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்ள சுப்ரமணியம் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களின் பெயரை சொன்னார்.
இப்படி கே.சுப்ரமணியம் அவர்கள் பரிந்துரைத்த டங்கன் ‘சகுந்தலை’ படப்பிடிப்பில் “நீங்கள் எல்லாம் ஒரு நடிகையா..? நடிக்கத் தெரியவில்லை என்றால் ஏன் நடிக்க வருகிறீர்கள்?” என்றெல்லாம் மனம் போனபடி எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பார்த்துப் பேச… இடைவிடாமல் கண்ணீர் விட்டு அழுதார் அந்தக் கலையரசி.
அதற்குப் பிறகும் டங்கன் இயக்கத்திலே தொடர்ந்து நடிக்க அவர் எவ்வாறு ஒப்புக் கொண்டார் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-32 எம்.ஜி.ஆரையும், எம்.ஜி.சக்ரபாணியையும் அறிமுகம் செய்த இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..! appeared first on Touring Talkies.
]]>அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல உதவி இயக்குநர்கள் அவரிடமிருந்து விலகி தனியாக படத்தை இயக்கி வந்த சூழ்நிலையில் என்னிடம் ஒரு நாள், “என்னுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறாயா..?” என்று கேட்டார் பாரதிராஜா.
அப்போது நான் ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே ஒரு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தேன். அது தவிர ஏராளமான படங்களுக்கு பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதற்காக பல இளைஞர்கள் கியூவில் காத்துக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் அவரே என்னை உதவி இயக்குநராக சேரும்படி அழைக்கிறார் என்றால் அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று முடிவு செய்து உடனடியாக அவருடன் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் அடையாளம் தந்த ஒரு படமாக அமைந்தது. கார்த்திக், ராதா, தியாகராஜன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமான அந்த படத்தில்தான் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பாளர் ஆக அறிமுகமானார்.
நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படமும் இதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான்.
இந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் கதாநாயகியாக ராதா தேர்வானதும் கதாநாயகனாக நடிப்பதற்கும் அந்தப் படத்திலே மிக முக்கிய வேடமாக அமைந்திருந்த கதாநாயகி மேரியின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கும் நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் அப்போது பாலிடார் என்ற இசைக் கம்பெனியின் சென்னைப் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆகவே இளையராஜா, கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர் ஆகியோரோடு அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது.
ஒரு நாள் பாஸ்கரோடு அவர் பாரதிராஜாவைப் பார்க்கப் போனபோது அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. “என்ன அவரையே பார்த்துக்கிட்டிருக்கே. அவரை படத்தில நடிக்க வைக்கப் போறியா..?” என்று இளையராஜாவின் அண்ணனும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான பாஸ்கர் கேட்க “அதைத்தான் யோசிக்கிறேன். மேரியின் அண்ணனாக இவரை நடிக்க வைத்தால் எப்படியிருக்கும்…?” என்றார் பாரதிராஜா. அப்படி சொன்னதையே செய்தார் பாரதிராஜா. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தியாகராஜனே தேர்வானார்.
அடுத்து கதாநாயகனுக்கான வேட்டை தொடங்கியது. பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரை என்று பல இடங்களில் தேடியும் அந்தக் கதைக்கேற்ற நாயகன் கிடைக்கவில்லை.
படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்தார் பாரதிராஜா.
அதையடுத்த இரண்டு நாட்களில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்தப் பள்ளிக்கு என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த பையனைக் காட்டினார் அவர். என்ன காரணத்தாலோ… என் மனதுக்கு அந்தப் பையன் ‘அலைகள் ஓய்வதில்லை’யின் விச்சுவின் பாத்திரத்திற்கு சரியாக இருப்பான் எனத் தோன்றவில்லை.
அதை நான் இயக்குநரிடம் சொன்னபோது, “ஷூட்டிங் எல்லாம் நிச்சயமாகி விட்டது. பரவாயில்லை விடு. இவனே இருக்கட்டும்…” என்றார்.
“இவ்வளவு நாள் பொறுத்துவிட்டோம். இன்று ஒரு நாள் மீண்டும் தேடிப் பார்ப்போம். பையன் சரியாக அமையவில்லை என்றால்… நாளை இவனையே கதாநாயகனாக முடிவு செய்துகொண்டு படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம்…” என்றேன் நான்.
ஒரு வருடம் ஓடிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் முழுக்க, முழுக்க புதுமுகங்களை நடிக்க வைத்து சாதனை புரிந்த பாரதிராஜா பெருந்தன்மையோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டார். அதுதான் அவரிடமுள்ள தனிக் குணம். சாதாரணமாக எல்லா இயக்குநர்களிடமும் பார்க்க முடியாத பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரர் அவர்.
மீண்டும் கதாநாயகன் வேட்டை தொடங்கியது. இந்த முறை எங்களுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தின் தயாரிப்பாளரான ஆர்.சி.பிரகாஷும் சேர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடி அலைந்து விட்டு மாலையில் எழும்பூரில் அமைந்துள்ள ஹாசன் மெமோரியல் பள்ளியின் வாசலுக்கு சென்ற நாங்கள் மூவரும் வகுப்புகள் விட்டு வெளியே வரும் மாணவர்களில் யாராவது தேறுவார்களா என்று பார்த்தோம். ஆனால், அதிலும் யாரும் தேறவில்லை.
பின்னர் காபி சாப்பிடுவதற்காக மூவரும் அட்லாண்டிக் ஹோட்டலுக்குப் போனபோது காரை ஓட்டியவர் பாரதிராஜா. அவர் அப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தார். அட்லாண்டிக் ஓட்டல் அருகே போனபோது சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஒரு பையன் மீது காரை மோதி விட்டார் பாரதிராஜா.
போயஸ் தோட்டத்தில் தன் வீட்டுக்கு அருகே தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருப்பதாக ஆர்.சி.பிரகாஷ் கூறவே அந்தப் பையனுக்கு முதலுதவி செய்வதற்காக அந்த டாக்டரின் இல்லத்துக்கு சென்றோம்.
அந்த டாக்டரின் வீடு கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ளது. சிகிச்சை முடிந்து அந்த பையனை அட்லாண்டிக் ஹோட்டல் அருகே இறக்குவதற்காக நாங்கள் காரில் சென்றபோது கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள நடிகர் முத்துராமனின் வீட்டுக்கு பக்கத்தில் நண்பர்களுடன் பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தார் பின்னாளில் ‘கார்த்திக்’ என்ற பெயரில் அறிமுகமான ‘முரளி’.
கார் அந்தப் பக்கம் சென்ற கண நேரத்தில் அவரைப் பார்த்த பாரதிராஜாவின் கண்களுக்கு… அந்த முரளிக்கு உள்ளே இருந்த நடிகன் எப்படித்தான் தெரிந்தானோ..? காரை கொஞ்சம் பின்னால் ஓட்டச் சொன்னார் “யார் அந்தப் பையன்?” என்று என்னிடம் கேட்டார்.
முத்துராமன் எனது நெருங்கிய நண்பர் என்பதால் முரளியை ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆகவே, “அது நடிகர் முத்துராமனின் மகன்” என்று அவருக்கு சொன்னேன். பின்னர் அந்த பையனை அழைக்கச் சொன்னார். நான் முரளியை அழைத்துப் பேசிக் கொண்டிருக்க… அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த முரளியின் முக பாவங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு “அப்பா வீட்டில் இருக்கிறாரா…?” என்று பாரதிராஜா முரளியிடம் கேட்டபோதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் முரளிதான் என்று எனக்குப் புரிந்துவிட்டது.
அப்பா சினிமாவிற்குப் போயிருப்பதாக முரளி சொன்னவுடன் ஆர்.சி.பிரகாஷ் வீட்டு டெலிபோன் நம்பரை எழுதி முரளியிடம் கொடுத்து முத்துராமன் வந்தவுடன் அந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
ஆர்.சி.பிரகாஷ் வீடு, கஸ்தூரி ரங்கன் சாலைக்கு மிக அருகில் போயஸ் தோட்டத்தில் அமைந்திருந்ததால் அவரது வீட்டில் முத்துராமனின் டெலிபோன் அழைப்பிற்காக காத்திருந்தோம். “மிகவும் வித்தியாசமான முகம். அது மட்டும் இல்லாமல் பையன் துருதுருவென்று இருக்கிறான். ‘அலைகள் ஓய்வதில்லை’ கதையின் நாயகன் விச்சுவிற்கு இவன் மிக பொருத்தமாக இருப்பான்…” என்றார் பாரதிராஜா.
இரவு பத்து மணியளவில் முத்துராமனிடமிருந்து போன் வந்தது. உடனேயே எங்களை வரச் சொன்னார். அவரது வீட்டுக்கு நாங்கள் சென்றவுடன் வழக்கம்போல உற்சாகமாக எங்களை வரவேற்றார் முத்துராமன். “முரளியை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்று அவரிடம் பாரதிராஜா சொன்னபோது முதலில் அவரால் அதை நம்பவே முடியவில்லை. “இவனையா” என்று திரும்பத் திரும்பக் கேட்டார் என்றாலும் பாரதிராஜா தனது மகனைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.
பின்னர் முரளியின் பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டையும் பாரதிராஜாவோடு பகிர்ந்து கொண்ட முத்துராமனும் அவரது மனைவியும் “பையனை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டோம். இனி அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு” என்று சொல்ல “இனி அவனைப் பற்றிய கவலையை நீங்கள் விட்டு விடுங்கள். அவனை ஹீரோவாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார் பாரதிராஜா.
படத்தில் நடிப்பதற்கு முரளி தனது தந்தையிடம் விதித்த ஒரே நிபந்தனை அவர் படப்பிடிப்பைப் பார்க்க வரக்கூடாது என்பது மட்டுமே. அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டார் முத்துராமன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தனது மனைவியுடன் நாகர்கோவிலுக்கு வந்த அவர் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு வரவேயில்லை. ஹோட்டலிலேயே ஒரு நாள் மகனுடன் தங்கிவிட்டு சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்.
கதாநாயகனாக முரளி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள் காலையில் படப்பிடிப்பு ஏற்பாடுகளுக்காக பாரதிராஜா புறப்பட்டுவிட அதற்கு அடுத்த நாள் காலையில் நானும், முரளியும் விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டோம்.
நாகர்கோவிலுக்கு சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முட்டம் என்னும் கடற்கரை கிராமத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
பாரதிராஜாவால் ‘கார்த்திக்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருந்த முரளியை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் விச்சுவாக கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தார் பாரதிராஜா.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-28 – முதல் படத்தில் இளையாராஜா சந்தித்த எதிர்ப்புகள் appeared first on Touring Talkies.
]]>ராஜா எழுந்ததைப் பார்த்தவுடன் “எங்கே கிளம்பிட்டே..? நீ பாடிய பாடல்களை இன்னொரு தரம் பாடு” என்றார் பஞ்சு அருணாச்சலம். ராஜா மீண்டும் பாடியவுடன் செல்வராஜைப் பார்த்து அவர் லேசாக சிரிக்க… தான் எந்த நோக்கத்திற்காக ராஜாவை அழைத்துக் கொண்டு வந்தோமோ, அது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை செல்வராஜிற்கு பிறந்தது.
அதன் பிறகு “பாட்டெல்லாம் நல்லா இருக்கு. நான் சொல்லி அனுப்புறேன்…” என்று சொல்லி ராஜாவை அனுப்பி வைத்தார் பஞ்சு அருணாச்சலம்.
அந்த அறையைவிட்டு வெளியே வந்தபோது ராஜாவிற்கு பெரிதாக நம்பிக்கை பிறக்கவில்லை என்பதை அவரது முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்ட செல்வராஜ் “நிச்சயம் நீ மியுசிக் டைரக்டர் ஆகி விடுவ. பஞ்சு சாருக்கு உன் பாடல்கள் எல்லாம் ரொம்ப படிச்சுப் போச்சி என்பதை அவர் முகத்தைப் பார்த்தே நான் தெரிஞ்சிகிட்டேன். நீ கிளம்பு. நான் சீக்கிரமே நல்ல செய்தியோடு வருகிறேன்…” என்று சொல்லி ராஜாவை வழியனுப்பி வைத்தார்.
இசையமைப்பாளருக்கான பரீட்சையில் ராஜா முதல் வகுப்பில் தேறிவிட்டார் என்பதை உணர்ந்திருந்தபோதிலும் பஞ்சு அருணாச்சலம் வாயால் அதைக் கேட்க விரும்பிய செல்வராஜ், “எப்படி சார் இருக்கு பாட்டு…?’ என்று அவரிடம் கேட்டார்.
“ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்த அளவுக்கு திறமை உள்ளவனா இருப்பான்னு நீ சொன்னபோது நான் நினைக்கலே. இவன் ரொம்பப் பெரிய மியுசிக் டைரக்டரா வர்றதுக்கான எல்லா சான்சும் இருக்கு…” என்றார் பஞ்சு.
இளையராஜா பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகமானபோது ‘மயங்குகிறாள் ஒரு மாது’. ‘துணிவே துணை’ ஆகிய படங்களுக்கும், வேறு சில படங்களுக்கும் அவர் கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் செய்த மிகப் புத்திசாலித்தனமான காரியம் என்னவென்றால், அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த எந்தப் படத்திலும் ராஜாவை பயன்படுத்திக் கொள்ளாததுதான்.
தான் பாடிக் காட்டிய பாடல்களை எல்லாம் கேட்டுவிட்டு மிகவும் பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டிய பஞ்சு அருணாச்சலம் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் தன்னை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று இளையராஜா வருத்தத்தில் ஆழ்ந்திருந்தபோது இளையராஜாவை அறிமுகப்படுத்த சரியான ஒரு கதைக்காக, இரவு பகலாக யோசித்துக் கொண்டிருந்தார் பஞ்சு அருணாச்சலம்.
‘இளையராஜா தன்னிடம் வாசித்துக் காட்டிய அருமையான மெட்டுக்களை பயன்படுத்திக் கொள்கின்ற மாதிரி இசை சார்ந்த படமாக அது இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த பஞ்சுவின் மனதிற்குள் மின்னல் வெட்டியதுபோல விஜய பாஸ்கர் பிலிம்சுக்காக ஆர்.செல்வராஜ் சொன்ன மருத்துவச்சி கதை நினைவுக்கு வந்தது.
அந்தக் கதையில் இளையராஜா பாடிக் காட்டிய கிராமிய இசைப் பாடல்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் இளையராஜாவை தனக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர் ஆர்.செல்வராஜின் கதையிலேயே இளையராஜாவை அறிமுகப்படுத்துவது என்று முடிவெடுத்தார் பஞ்சு
இளையராஜா பாடிக் காட்டிய ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடல் வரிகளில் இடம் பெற்றிருந்த ‘அன்னக்கிளி’ என்ற பெயரே அந்தப் படத்தின் பெயரானது. அடுத்து திரையிலே என்ன பெயரில் இளையராஜாவை அறிமுகம் செய்வது என்று பஞ்சு அருணாச்சலம் யோசித்தபோது ‘ராஜா சகோதரர்கள்’, ‘பாவலர் பிரதர்ஸ்’ என்று போடலாம் என்றெல்லாம் பலரும் யோசனை கூறினார்கள்.
ஆனால், அந்தப் பெயர் மிகவும் பழைய பேராக இருக்கிறது என்று சொன்ன பஞ்சு அருணாச்சலம் இளையராஜா என்று காலத்திற்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு அழகான பெயரை அவருக்கு சூட்டினார்.
அதற்குள் தனது சகோதரர் கே.என்.சுப்பு தயாரிக்க இருக்கின்ற புதிய படத்தில் பஞ்சு அருணாச்சலம் புதிதாக ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீ போல் சினிமா உலகில் பரவியது.
அப்போது பஞ்சு அருணாச்சலம் அவர்களின் படங்களில் அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கரின் உதவியாளரான குருபாதம் இளையராஜாவை பஞ்சு அருணாச்சலம் அறிமுகப்படுத்தப் போகும் செய்தி கேட்டு அதிர்ந்து போனார்.
‘அன்னக்கிளி’ படத்தின் தயாரிப்பாளரான சுப்புவை சந்தித்த அவர் ‘பஞ்சு சார் – விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆன கூட்டணி சார். அதனாலதான் அவங்க இரண்டு பெரும் இணைந்து பணியாற்றிய ‘உறவு சொல்ல ஒருவன்’, ‘எங்கம்மா சபதம்’, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ன்னு எல்லா படமும் ஹிட்டாச்சின்னா அதுக்குக் காரணம் ஜாதகப்படி அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப் போவதுதான். அப்படியிருக்கும்போது அதை ஏன் மாத்துறீங்க..? எதுக்கு தேவையில்லாத விஷப் பரீட்சை…?” என்று சுப்புவிடம் கேட்டார்.
அவர் சொன்னதைக் கேட்டு சுப்பு லேசாக குழப்பமடைய அதைக் கண்ட குருபாதம் அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று “சார்..! இந்த ராஜா ஜி.கே.வெங்கடேஷ்கிட்டே கிடார் வாசிக்கிறவர். ஏற்கனவே ‘அன் லக்கி மியூசிக் டைரக்டர்’ என்று பெயர் எடுத்தவர். அவரை மியூசிக் டைரக்டராக வச்சி பூஜை போட்ட பல படங்கள் பூஜையோடு நின்னு போயிருக்கு…” என்றெல்லாம் சொல்லி சுப்புவை பலமாகக் குழப்பினார்.
அவர் சொன்னதைக் கேட்டவுடன் பயந்த சுப்பு நேராக பஞ்சு அருணாச்சலத்தை சந்திக்கப் போனார். “எதுக்கு நமக்கு ரிஸ்க்..? உங்களோட பல படங்களில் பணியாற்றி இருக்கும் விஜய பாஸ்கரையே இந்த படத்துக்கும் போடுங்க. இல்லே.. அவரை மாத்தலாம்னு நினைச்சீங்கன்னா விஸ்வநாதன் சாரை போடுவோம்.. .அவருக்குன்னு ஒரு தனி மார்க்கெட் இருக்கிறதினால நம்ம படத்திற்கு அவர் மியுசிக் போட்டா.. அது படத்துக்கே ஒரு மெரிட்டா இருக்கும்…” என்றார்.
அவர் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த பஞ்சு அருணாச்சலம் “அன்னக்கிளி’ படத்துக்கு இளையராஜாதான் மியூசிக்!’ என்று ஒரேயடியாக அடித்து சொன்னார்.
“படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக போட வேண்டுமா என்று ஒரு முறைக்கு, இரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்” என்று பஞ்சு அருணாச்சலத்திற்கு யோசனை கூறினாரே.. அந்த சுப்புதான் ‘அன்னக்கிளி’ படத்திற்கு தயாரிப்பாளர்.
இருந்தாலும் அவரிடமே இளையராஜாதான் படத்துக்கு இசை என்று தீர்மானமாக பஞ்சு அருணாச்சலத்தால் சொல்ல முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அந்தப் படத்தின் ஆணி வேராக அவர் இருந்ததுதான்.
அந்த முதல் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் படம் முடியும் வரை பல போராட்டங்களை சந்தித்தார் இளையராஜா.
பூஜைக்கான தேதி குறிக்கப்பட்டவுடன் பாடல்களை எழுத கண்ணதாசனை அழைப்பது என்று முடிவானது. இளையராஜாவிற்கு ஆனந்தம் என்றால் அப்படி ஒரு ஆனந்தம். தான் இசையமைக்கப் போகும் முதல் படத்திலேயே அந்த மாபெரும் கவிஞர் பாட்டெழுதப் போகும் பூரிப்பில் இளையராஜா இருந்தபோதுதான் கவிஞர் கண்ணதாசன் சிங்கப்பூர் செல்லவிருக்கின்ற செய்தி அவருக்குக் கிடைத்தது.
“எப்போது திரும்பி வருவார்..?” என்று கேட்டபோது “படத்தின் பூஜை முடிந்த பிறகுதான் திரும்பி வருவார்” என்று பதில் வந்தது. கண்ணதாசன் இல்லாததால் படத்தின் பூஜையே தள்ளிப்போய்விடுமோ என்று இளையராஜா பயந்தபோது “பூஜையை நிறுத்தவேண்டாம். நானே பாட்டு எழுதி விடுகிறேன்..’ என்ற பஞ்சு அருணாச்சலம் ஒரே நாளில் பாடல்களை எழுதித் தந்தார்.
‘அன்னக்கிளி’ படத்தின் தொடக்க விழா ஏவி.எம்.ஸ்டுடியோ ரிக்கார்டிங் தியேட்டரில் நடைபெற்றது.
தனது சகோதர்கள் பாஸ்கர், அமர்சிங் என்கிற கங்கை அமரன் ஆகியோரோடு காலையிலேயே திருவேற்காடு கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு ஸ்டுடியோவுக்கு வந்தார் இளையராஜா.
பூஜை முடிந்து, ரிகர்சல் தொடங்கியது. ஆர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, ‘ரெடி, ஒன், டூ, த்ரி’ என்று இளையராஜா சொன்ன அடுத்த நொடி மின்சாரம் ‘கட்’ ஆக எல்லா விளக்குகளும் அணைந்து ஸ்டுடியோவில் இருள் சூழ்ந்தது.
இளையராஜாவிற்கும், அவரது சகோதர்களுக்கும் அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி.
அந்த நேரம் பார்த்து டோலக் வாசிக்க வந்திருந்த பாபுராஜ் என்பவர் `நல்ல சகுனம்தான்’ என்று சொல்ல அப்படியே நொறுங்கிப் போன இளையராஜா யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக நடந்து போய் பாடகர்கள் பாடுவதற்காக உள்ள அறைக்கு சென்று உட்கார்ந்தார்.
அந்த நேரத்தில் இளையராஜாவை வாழ்த்துவதற்காக வந்தார் இயக்குநர் பி.மாதவன். ஜி.கே.வெங்கடேஷிடம் பணியாற்றிய காலத்திலேயே ராஜாவை நன்கு அறிந்த இயக்குநர் அவர்.
பாடல் பதிவு தொடங்கிய நேரத்தில் கரண்ட் போனதால் இளையராஜா மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருக்கும் விஷயம் அவருக்கு சொல்லப்பட்டதும் ராஜா இருந்த அறைக்கு வந்த அவர் “உனக்காக மாங்காடு அம்மன் கோவிலுக்குப் போய் வேண்டிக் கொண்டு பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். இந்தா பிரசாதம்…” என்றபடி இளையராஜாவின் கையில் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு “நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்ணு நினைத்தேன். ஆனால் பஞ்சு முந்திக் கொண்டு விட்டார். இந்த கரண்ட் போன விஷயத்தை எல்லாம் நினைச்சிக்கிட்டு மனதைத் தளர விடாதே. நிச்சயம் நீ பெரிய ஆளாக வருவாய்…” என்றார்.
“அவர் பேசியதை நான் அவர் பேசிய பேச்சாகவே அன்றைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அந்த மாங்காடு அம்மனே அவர் மூலம் ஆறுதல் கூறியதாகத்தான் எடுத்துக் கொண்டேன் ” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் இளையராஜா.
பி.மாதவன் அவர்களின் பேச்சால் இளையராஜா ஆறுதல் அடைந்த அந்த நேரத்தில் போன மின்சாரம் திரும்ப வந்தது.
அதைத் தொடர்ந்து எஸ்.ஜானகி ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடலைப் பாடி முடித்தார். அவர் பாடி முடித்தவுடன் அந்தப் பாடல் ஒளிப்பதிவுக் கூடத்தில் இருந்த எல்லோருமே ராஜாவின் திறமையைப் பாராட்டி கை தட்டினார்கள்.
இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு பதிவான அந்த ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடல் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
‘அன்னக்கிளி’ படம் திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் அந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் ஹம்மிங்கை கேட்ட உடனேயே ரசிகர்கள் பலமாக கை தட்ட தொடங்கினர்.
நாற்பது வருடங்களுக்கு முன்னாலே பஞ்சு அருணாச்சலம் தொடங்கி வைத்த இளையராஜா என்னும் அந்த இசை ஊற்று வற்றாத ஜீவ நதியாக மாறி இன்றும் இசை ரசிகர்களின் காதுகளில் தேனைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-28 – முதல் படத்தில் இளையாராஜா சந்தித்த எதிர்ப்புகள் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-27 இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..! appeared first on Touring Talkies.
]]>ஆனால், இளையராஜா செல்வராஜிற்கு எங்கே எப்படி அறிமுகமானார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை
கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் சகோதரர் மகன்தான் கதாசிரியர் ஆர்.செல்வராஜ்.1970-களில் கம்யுனிஸ்ட் கட்சியின் எல்லா பொதுக் கூட்டங்களிலும் பாவலர் வரதராஜனின் இசைக் கச்சேரி தவறாமல் இடம் பெறும். அந்த இசைக் குழுவில் பாவலரின் சகோதரர்களான பாஸ்கர், ராஜா, அமர்சிங் ஆகிய மூவரும் இடம் பெற்றிருந்தனர்.
மதுரையிலே அப்படிப்பட்ட கச்சேரிகள் நடக்கும்போதெல்லாம் மங்கம்மா சத்திரத்தில்தான் தங்குவார் பாவலர் வரதராஜன் . அப்போது மதுரையில் தங்கியிருந்த ஆர்.செல்வராஜ் முதன்முதலாக மங்கம்மா சத்திரத்தில்தான் ராஜாவை சந்தித்தார்.
அந்த சந்திப்பை, இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு செல்வராஜ்தான் ஒரு கருவியாக இருக்கப் போகிறார் என்பதால் காலம் ஏற்படுத்திய ஒரு சந்திப்பு என்றுதான் கொள்ளவேண்டும். இல்லையென்றால் முதல் சந்திப்பிலேயே அவர்கள் அந்த அளவிற்கு நெருக்கமாகி இருக்க வாய்ப்பில்லை.
தன் நண்பனான செல்வராஜிற்கு தனது சகோதரர்களான பாஸ்கர், அமர்சிங் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார் ராஜா. அதைத் தொடர்ந்து அந்தச் சகோதர்கள் எப்போது மதுரை வந்தாலும் தவறாது செல்வராஜை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
இதற்குப் பிறகு ஒரு கால கட்டத்தில் சென்னை நோக்கி நகர்ந்த ஆர்.செல்வராஜ் பலத்த போராட்டங்களுக்குப் பிறகு கதாசிரியர் பாலமுருகனிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
ஆர்.செல்வராஜைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு தன் 26-ம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் ராஜா சென்னைக்கு வந்தபோது அவரது இன்னொரு நெருங்கிய நண்பரான பாரதிராஜா சினிமாவில் சேர தீவிர முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இசையமைப்பாளராக வேண்டுமென்றால் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது என்று ராஜாவுக்கே தோன்றியதோ இல்லை யாராவது அறிவுறுத்தினார்களோ தெரியவில்லை.
அப்போது மைலாப்பூரில் இருந்த தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய இளையராஜா, கருவியையும், கிடார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார். பின்னர் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியில் கிளாசிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் வென்றார்.
சென்னையிலே பாரதிராஜாவின் நாடகம் தவிர மற்ற நாடகக் குழுக்களிலும் கிடார் வாசித்துக் கொண்டிருந்த ராஜாவிற்கு இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி அவர்களோடும், ஜி.கே.வெங்கடேஷ் அவர்களோடும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவை சுமந்து கொண்டிருக்கும் தனது தம்பியை எப்படியாவது இசையமைப்பாளராக ஆக்கிவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்த பாஸ்கர், தினமும் காலை முதல் மாலைவரை கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.
பாஸ்கரோடு இணைந்து இளையராஜாவிற்கு வாய்ப்பு தேடுகின்ற பணியில் அப்போது ஆர். செல்வராஜும் முழு மூச்சோடு செயல்பட்டார்.
பஞ்சு அருணாச்சலம் ஒரு நாள் ஆர்.செல்வராஜிடம் பேசிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைக்கக் கூடிய ஒரு திறமையான இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனது ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினார்.
அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தானே செல்வராஜ் காத்திருந்தார். ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். ராஜான்னு பேரு. சின்ன வயசுல இருந்தே ஹார்மோனியம் வாசிச்சுப் பழக்கப்பட்டவன். அவங்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சேர்ந்து நிறைய ஊர்கள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கான்.
இப்போ இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்டென்ட்டா இருக்கான். அவன் போட்ட பல டியூன்களை நான் கேட்டிருக்கேன். அற்புதமாக டியூன் போடுவான். அவனுக்குப் எப்படியாவது இசையமைப்பாளர் ஆகணும்கிறதுதான் லட்சியம். உங்களுக்கு ஓ.கே-ன்னா சொல்லுங்க நாளைக்கே நான் அவனைக் கூட்டிக்கிட்டு வர்றேன்…” என்றார் செல்வராஜ்.
பல ஊர்ல கச்சேரி பண்ணியிருக்கான். நாடகங்களுக்கு மியூஸிக் போட்டது மட்டுமில்லாமல், இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட உதவியாளராகவும் இருக்கான்னா நிச்சயமா ரசிகர்களின் பல்ஸ் தெரிஞ்சவனாகத்தான் இருப்பான் என்று மனதுக்குள்ளேயே ஒரு கணக்குப் போட்ட பஞ்சு அருணாச்சலம், “சரி நாளைக்கு அவனை கூட்டிகிட்டு வா…” என்றார்.
அன்று இரவு முழுவதும் செல்வராஜ் சொன்ன அந்த இசையமைப்பாளரைப் பற்றிய நினைவு பஞ்சு அருணாச்சலத்தை சுற்றிச் சுற்றி வந்தது. ஏற்கனவே தமிழிற்கு அவர் அழைத்து வந்திருந்த விஜய பாஸ்கர் என்ற கன்னட இசையமைப்பாளர் வெற்றி பெற்றிருந்ததால் தான் அடுத்து அறிமுகப்படுத்தப்போகும் இசையமைப்பாளரும் மிகப் பெரிய அளவிலே ஜெயிப்பார் என்ற நம்பிக்கையுடன் அன்று இரவு தூங்கினார் பஞ்சு.
மறுநாள் மாலையில் பஞ்சு அருணாச்சலம் தங்கியிருந்த கிளப் ஹவுசுக்கு ராஜாவை அழைத்து வந்த செல்வராஜ் “அண்ணே… இவர்தான் நான் சொன்ன ராஜா” என்று அறிமுகப்படுத்திவைத்தார். ஷர்ட்டை இன் பண்ணிக் கொண்டு ஒல்லியான தேகத்துடன் நின்ற ராஜாவைப் பார்த்ததும் பஞ்சு முதல் நாள் இரவு கண்ட கனவுக் கோட்டை முற்றிலுமாக தகர்ந்தது.
தழையத் தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்துப் பழகிய அவரது கண்களால் கவர்மென்ட் ஆபீஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என்று கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஹார்மோனியம், கிடார் என கையில் ஏதாவது ஒரு இசைக் கருவியை ராஜா எடுத்து வந்திருந்தால்கூட அவர் மீது பஞ்சு அருணாச்சலத்திற்கு லேசான நம்பிக்கை பிறந்திருக்கும். ஆனால், ராஜா அதையும் செய்யவில்லை..
செல்வராஜ் நம்மை இப்படி கவுத்து விட்டாரே என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தாலும் தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராஜாவை உடகாரச் சொன்னார் பஞ்சு அருணாச்சலம்.
லேசான ஒரு சிரிப்புடன் ராஜா அமைதியாக உட்கார “செல்வராஜ் அடிக்கடி உன்னைப் பற்றி சொல்லிக்கிட்டே இருப்பாரு. தமிழ்ல ஒரு நல்ல இசையமைப்பாளரைக் கொண்டு வரணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை” என்று பஞ்சு அருணாச்சலம் சொன்னவுடன் அதுவரை பேசாமல் இருந்த ராஜா “சினிமாவுக்கு இசையமைக்கணும் என்கிற ஆசையுடன்தான் நான் சென்னைக்கே வந்தேன். பல மாதங்களாக அதுக்காக முயற்சிபண்ணிட்டிருக்கேன். பாவலர்கூட பல வருஷம் இருந்ததாலே ஓரளவுக்கு இசையைப் பற்றி தெரியும். நிறையப் பாட்டுக்கு டியூன் எல்லாம்கூட போட்டு வெச்சிருக்கேன்…” என்றார்.
“அப்படீன்னா சரி… அந்த ட்யூனை எல்லாம் நான் கேட்டுடறேன். அப்புறம் என்ன செய்யலாம்னு ஒரு முடிவு எடுப்போம். இரண்டு நாள் கழித்து வாங்க. வரும்போது மற்ற வாத்தியக் கருவிகளை வாசிக்கறவங்களையும் கூட்டிக்கிட்டு வந்திடுங்க…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.
“இவனே ரொம்ப நல்லா பாடுவான். பாடிக் காட்ட சொல்லவா…?” என்று பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்டார் ஆர்.செல்வராஜ். ‘சரி’ என்பதற்கு அடையாளமாக பஞ்சு அருணாச்சலம் தலையை ஆட்ட தான் அமர்ந்திருந்த டேபிள் மீது தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார் ராஜா.
தமிழ்த் திரையுலகில் தனது அரங்கேற்றம் நடைபெறுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தமிழ் சினிமா உலகை தனது இசைத் திறனால் இன்றுவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்ற அந்த இசை வேந்தனுக்கு அன்று தெரியாது.
‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே…’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’, ஆகிய இரண்டு பாடல்களின் மெட்டுக்களை ராஜா பாடிக் காட்டியவுடனேயே ராஜா எப்படிப்பட்ட திறமைசாலி என்று பஞ்சு அருணாச்சலத்திற்கு புரிந்துவிட்டது.
ராஜா பாடிய பாடல்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த பஞ்சு அருணாச்சலம் ராஜாவிடம் பாடல்கள் நன்றாக இருக்கிறது என்றும் சொல்லவில்லை.. நன்றாக இல்லை என்றும் சொல்லவில்லை.
ராஜாவைப் பொறுத்தவரை இது அவருக்கு புது அனுபவமில்லை. பல பட நிறுவனங்களில் இதைவிட மோசமானஅனுபவங்களை அவர் சந்தித்திருக்கிறார் என்பதால் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார் அவர்.
அதற்குப் பிறகு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றியும், அதற்குப் பிறகும் எப்படிப்பட்ட போராட்டங்களை எல்லாம் முதல் படத்தில் இளையராஜா சந்திக்க வேண்டி இருந்தது என்பது குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்..!
The post சினிமா வரலாறு-27 இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-26 காதலருக்காக வசதியான வாழ்க்கையைத் துறந்த பானுமதி appeared first on Touring Talkies.
]]>அதனால்தான், “உங்கள் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் திருமணத்திற்குப் பிறகு அவர் கச்சேரிகளில் பாடவோ, சினிமாவில் நடிக்கவோ கூடாது” என்று ராமகிருஷ்ணா நிபந்தனை விதித்தபோது பொங்கி எழுந்தார் அவர்.
சினிமாவில் நடிக்கக் கூடாது என்பதில் வேண்டுமானால் அவர் உறுதியாக இருப்பாரே தவிர பாட்டுக் கச்சேரி நடத்த அவர் தடை சொல்ல மாட்டார் என்று தனது உறவினர்கள் சொன்னதும் கோபம் தணிந்த அவர் “பானுமதி கச்சேரிகளில் பாட மட்டுமாவது அனுமதியுங்கள்” என்று ராமகிருஷ்ணாவிடம் கேட்டுக் கொண்டார்.
அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்தது மட்டுமின்றி எந்த தந்தையாக இருந்தாலும் ஆத்திரம் அடையக் கூடிய தனது இன்னொரு நிபந்தனையையும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார் ராமகிருஷ்ணா.
“எனக்கு மனைவியாக வருகின்றவர் எனக்கு ஒரு குடிசை இருந்தால் அதில் தங்கி என்னுடன் குடித்தனம் நடத்துகிறவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த குடிசையும் எனக்கு இல்லாத நிலை ஏற்பட்டால் ஒரு மரத்தடியில்கூட என்னுடன் தங்க அவர் தயாராக இருக்க வேண்டும். உங்கள் மகளுக்கும், உங்களுக்கும் இதெல்லாம் உடன்பாடு என்றால் எனக்கு சொல்லியனுப்புங்கள். அதற்குப் பிறகு திருமணம் பற்றி பேசலாம்” என்று சொல்லிவிட்டு பானுமதியின் வீட்டைவிட்டு வெளியேறினார் அவர்.
அவர் அப்படி சொல்லிவிட்டுப் போனவுடன் “இவன் போனா போகட்டும் விடும்மா. இவனைவிட நல்லா படிச்ச லட்சணமான மாப்பிள்ளைங்க நூறு பேரை நாளைக்கே நம்ம வீட்டு வாசல்ல கியூவிலே நிற்க வைக்கிறேன்” என்றார் பானுமதியின் தந்தை.
ராமகிருஷ்ணா அப்படி சொல்லிவிட்டுச் சென்றதில் அவருக்கு உள்ளூர மிகுந்த மகிழ்ச்சி. ஆனால், அவர் சொன்னது எதையும் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை பானுமதி.
ராமகிருஷ்ணா போன திசையையே ஒருவித பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ராமகிருஷ்ணா சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரது காதில் தேனாகப் பாய்ந்தது. அவர் பேசப் பேச அவர் மீது பானுமதிக்கு இருந்த காதல் இன்னும் அதிகமானது. தனக்கு ஏற்ற கணவர் இவர்தான் என்றும் தனது வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது அவரோடுதான் என்றும் மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டார் அவர். அதை காதலின் சக்தி என்றுதான் சொல்லவேண்டும்
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் தனது தந்தையின் தீவிரமான எதிர்ப்புக்கு நடுவே ராமகிருஷ்ணாவை கை பிடித்தார் பானுமதி. பானுமதியின் தந்தையும், அவரது உறவினர்களும் அந்தத் திருமணம் நடந்த இடத்தின் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.
“எனது கணவர் சொன்னது மாதிரி குடிசை இல்லை என்றாலும் ஒரு கொட்டகையில்தான் எங்களது இல்லற வாழ்க்கை ஆரம்பித்தது. அவர் ஏழையாக இருந்தபோதிலும் அந்த வாழ்க்கையை நான் ரசித்து வாழ்ந்தேன். இயல்பாகவே திரைப்படங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அவ்வளவாக இல்லை என்பதால் நடிக்க முடியாமல் போனது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தினமும் என் கணவர் விரும்பும் சாப்பாட்டை சமைப்பேன். பின்னர் வீட்டை அழகாக சுத்தப்படுத்திவிட்டு அவரது வருகைக்காகக் காத்திருப்பேன். சில நேரங்களில் நானும் அவரும் சேர்ந்து சினிமாவுக்கு போவோம்…” என்று தனது காதல் திருமண வாழ்க்கையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் பானுமதி.
இப்படி தனது வாழ்க்கையை பானுமதி ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் சினிமாவில் அவர் நடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பிரபல ஸ்டுடியோ அதிபரான நாகிரெட்டி அவர்களின் மூத்த சகோதரரான பி.என்.ரெட்டி.
எந்தவிதமான சபலத்துக்கும் இடம் கொடுக்காமல் திரைப்படங்களில் நடிக்க தனக்கு ஆர்வமில்லை என்று திட்டவட்டமாக அவருக்குப் பதில் சொன்னார் பானுமதி. அவர் அப்படிச் சொன்னபோதும் பி.என்.ரெட்டி அவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து மூன்று மாதங்கள் தினமும் பானுமதிக்கு போன் செய்தார் அவர்.
அவருடைய தொல்லையைப் பொறுத்துக் கொள்ள முடியாத பானுமதி, “தயவு செய்து எங்களது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை சிதைத்து விடாதீர்கள்” என்று அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.
அவர் அப்படி கேட்டுக் கொண்ட பிறகும் பி.என்.ரெட்டி தொடர்ந்து பானுமதியை விரட்டினார் என்றால் அதற்குக் காரணம் இருக்கிறது.
பி.என்.ரெட்டி அப்போது படமாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த படத்தின் பெயர் சொர்க்க சீமா. அந்தப் படத்தின் முக்கியமான பாத்திரம் ஒரு நாடக நடிகையின் பாத்திரம். தெரு நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சுப்புலட்சுமி என்ற அந்த நாடக நடிகையின் அழகையும், நடிப்புத் திறனையும் பார்த்து வியந்து போகும் மூர்த்தி என்னும் பதிப்பாளர் நல்ல நாடகக் குழு ஒன்றில் சேர்ந்தால் அவர் மிகப் பெரிய நடிகையாக வருவார் என்று கூறுவது மட்டுமின்றி ஒரு நாடகக் குழுவையும் அவருக்கு பரிந்துரைக்கிறார்.
அவர் சொற்படி சென்னைக்கு செல்லும் சுப்புலட்சுமி மிகப் பெரிய நடிகையாக உருவெடுக்க அவளது அழகில் மயங்கும் மூர்த்தி தனது குடும்பத்தைத் துறந்துவிட்டு அவளே கதி என்று விழுந்து கிடக்கத் தொடங்குகிறார்.
அந்த நாடக நடிகை சுப்புலட்சுமியின் பாத்திரத்தில் நடிக்கக் கூடிய சரியான நடிகைகள் யாருமே அப்போது இல்லை. ஆகவே பானுமதி நடித்தால் மட்டுமே அந்தப் பாத்திரம் உயிர் பெறும் என்று முடிவெடுத்த பி.என்.ரெட்டி… பானுமதி அந்தப் படத்தில் நடிக்க தொடர்ந்து மறுத்ததால் அவரை நடிக்க வைக்க இன்னொரு குறுக்கு வழியைக் கையாண்டார்.
பானுமதியின் கணவரான ராமகிருஷ்ணனுக்கு போன் செய்த அவர் எடுத்த எடுப்பில் “நீ ஏதாவது தாழ்வு மனப்பான்மையில் தடுமாறிக் கொண்டிருக்கிறாயா…?” என்று அவரிடம் கேட்டதும் அடுத்த முனையில் இருப்பவர் எதைப் பற்றி பேசுகிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் ராமகிருஷ்ணா தடுமாறினார்.
அவர் தடுமாறுகிறார் என்பது தெரிந்ததும், “நான் பி.என்.ரெட்டி பேசுகிறேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், “ஒரு நல்ல நடிகையின் அற்புதமான நடிப்புத் திறனை நீ ஏன் இப்படி நாசப்படுத்திக் கொண்டிருக்கிறாய்…?” என்று ராமகிருஷ்ணனிடம் சற்றுக் கோபமாகவே கேட்டார்.
“உன்னுடைய மனைவி பிரபலமான ஒரு நடிகையாவதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் நீ அவரை நடிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறாய். இப்போது சொல்கிறேன் கேட்டுக் கொள். பானுமதியின் அற்புதமான நடிப்ப்புத் திறனை இப்படி வீணடிப்பதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் பி.என் ரெட்டி.
அவர் அப்படிப் பேசியவுடன் மிகப் பெரிய மனக் குழப்பத்துக்கு ஆளானார் ராமகிருஷ்ணா. தாழ்வு மனப்பான்மை காரணமாகத்தான் பானுமதி நடிக்கக் கூடாது என்று சொல்கிறேனா என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்ட அவர் வீட்டுக்கு போனவுடன், “சினிமாவில் திரும்பவும் நடிக்கணும்னு நீ ஆசைப்படுகிறாயா..?” என்று பானுமதியைப் பார்த்து கேட்டார்.
“எனக்கு அப்படி எந்த விருப்பமும் இல்லை. ஆனால், நீங்கள் நடிக்கச் சொன்னால் நடிப்பேன். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைச் செய்வதில்தான் எனக்கு மகிழ்ச்சி…” என்றார் பானுமதி.
அவர் அப்படி சொன்னவுடன் மீண்டும் படங்களில் நடிப்பது பற்றி கலந்து பேசிய ராமகிருஷ்ணாவும், பானுமதியும் பி.என்.ரெட்டியின் ‘சொர்க்க சீமா’ படத்தில் மட்டும் பானுமதி நடிப்பது என்று முடிவு செய்தார்கள்.
”நான் நடித்த முதல் படம் ‘சொர்க்க சீமா’தான். அந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் நான் நடிக்கக் கற்றுக் கொண்டேன்” என்று ‘சொர்க்க சீமா’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி குறிப்பட்டுள்ளார் பானுமதி.
‘சொர்க்க சீமா’ மாபெரும் வெற்றியைப் பெற்றதால் அளவில்லாத வாய்ப்புகள் பானுமதியைத் தேடி வந்தன. அது மட்டுமின்றி அவர் என்ன சம்பளம் கேட்டாலும் தரத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தார்கள்.
தனது மகன் பரணியின் எதிர்காலத்துக்காக தொடர்ந்து படங்களில் நடிப்பது என்ற முடிவை பானுமதியும், ராமகிருஷ்ணாவும் எடுத்ததின் காரணமாக பல பட வாய்ப்புகளை ஒப்புக் கொண்டார் பானுமதி.
தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி மட்டும் தொடர்ந்து போராடாமல் இருந்திருந்தால், பானுமதி என்ற இணையில்லாத நடிகையை தமிழ்த் திரையுலகம் அறிந்து கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய் இருந்திருக்கும்.
The post சினிமா வரலாறு-26 காதலருக்காக வசதியான வாழ்க்கையைத் துறந்த பானுமதி appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-24 – முதல் படத்தில் சிவாஜி சந்தித்த எதிர்ப்புகள்..! appeared first on Touring Talkies.
]]>அவர் ஒரு நாணயமான விநியோகஸ்தர் என்பதால் அவருடன் இணைந்து படம் தயாரிக்க முன் வந்த மெய்யப்ப செட்டியார் ‘பராசக்தி’ நாடகத்தைப் படமாக்கலாம் என்று முடிவு செய்து அந்த நாடகத்தின் உரிமைகளை வாங்கினார்.
‘பராசக்தி’, ‘நூர்ஜகான்’ ஆகிய நாடகங்கள் பெருமாள் முதலியாரின் சொந்த ஊரான வேலூரில் நடைபெற்றபோது அந்த நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசனின் அபாரமான நடிப்புத் திறனில் மனதைப் பறி கொடுத்திருந்த பெருமாள் முதலியார் எப்படியாவது சிவாஜி கணேசனை அந்தப் படத்திலே நடிக்க வைத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனால் மெய்யப்ப செட்டியாரோ கே.ஆர்.ராமசாமியை கதாநாயகனாகப் போட்டு அந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.
சிவாஜி நடிக்கும் நாடகத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் ஒரு முறை பார்த்தார் என்றால் நிச்சயம் தனது மனதை மாற்றிக் கொள்வார் என்று திடமாக நம்பிய பெருமாள் முதலியார் சிவாஜி நடித்த ‘பராசக்தி’ நாடகத்தைப் பார்க்க மெய்யப்ப செட்டியாரை திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், அந்த நாடகத்தில் சிவாஜியின் நடிப்பைப் பார்த்த பிறகும்… செட்டியார் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
“டிராமாவில் நடிப்பது என்பது வேறு. சினிமாவில் நடிப்பது என்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. அப்படியிருக்கும்போது முதன் முறையாக மெயின் ரோலில் அந்தப் பையனை நடிக்க வைத்துவிட்டு அந்தப் படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வது? இந்தப் படம் நீங்கள் என்னோடு சேர்ந்து எடுக்கின்ற முதல் படம். ஆகவே ரிஸ்க் எடுக்க வேண்டாம்…” என்றார் ஏவி.எம்.
பெருமாள் முதலியாரின் மன உறுதிதான் அந்த சமயத்தில் சிவாஜியின் விதியை மாற்றி எழுதியது.
அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளரான ஏவி.எம்., அவர்கள் அவ்வளவு எதிர்த்த நிலையிலும் அந்த பாத்திரத்திற்கு சிவாஜி கணேசனைத்தான் போட வேண்டும் என்ற முடிவிலிருந்து ஒரு அங்குலம்கூட பின்னோக்கிப் போக பெருமாள் முதலியார் தயாராக இல்லை.
எவ்வளவோ முயன்றும் அவர் மனதை மாற்ற முடியாததால்தான் வேறு வழியின்றி சிவாஜியை அந்தப் படத்தில் நாயகனாக நடிக்க வைக்க அரை மனதோடு ஒப்புக் கொண்டார் மெய்யப்ப செட்டியார்.
‘பராசக்தி’ படத்திற்கு வசனம் எழுத அந்த நாடகத்தை எழுதிய பாலசுந்தரம்தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நாடகம் வேறு, சினிமா வேறு என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லி, சினிமாவுக்கு எப்படி வசனம் எழுத வேண்டும் என்று ‘பராசக்தி’ படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருந்த கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும் சொன்ன ஆலோசனைகள் எதையும் பாலசுந்தரம் ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அவரை மாற்றி விட்டு வசனம் எழுத திருவாரூர் தங்கராஜை அவர்கள் ஒப்பந்தம் செய்தனர். பின்னர் சில காரணங்களால் அவரும் மாற்றப்பட… அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்தவர்தான் கலைஞர் மு.கருணாநிதி.
அடுத்தபடியாக சிவாஜி சினிமாவுக்கு எந்த அளவு பொருத்தமாக இருப்பார் என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக அவருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.
முதலில் ‘சக்சஸ்’ என்ற வார்த்தையை சொல்லச் சொல்லி சிவாஜியின் திரையுலக வாழ்க்கையை தொடங்கி வைத்த இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும், அடுத்து இன்னொரு காட்சியையும் அவரை வைத்துப் படமாக்கினார்கள்.
டெஸ்ட்டுக்காக எடுக்கப்பட்ட அந்த காட்சிகளை போட்டுப் பார்த்தபோது அப்போது ஏவி. எம்.மில் சவுண்ட் இஞ்சினியராக இருந்த ஜீவா என்பவர் சிவாஜியை தொடர்ந்து நடிக்க வைக்க தனது முழு எதிர்ப்பையும் தெரிவித்தார்.
சிவாஜி ஒல்லியாக இருப்பதும் அவரது பல்வரிசை சரியாக இல்லாததும் சிறு குறைகளாகத் தென்பட்டாலும், அவருடைய நடிப்புத் திறனுக்கு முன்னால் இதெல்லாம் மிகச் சிறிய குறைகள் என்றே கிருஷ்ணன் – பஞ்சு ஆகிய இருவரும் எண்ணினார்கள்.
பெருமாள் முதலியாருக்கோ சிவாஜியின் நடிப்பு பூரண திருப்தியைத் தந்தது. டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய இருவரும் சிவாஜிக்கு முழு ஆதரவாக இருப்பதைத் தெரிந்து கொண்ட ஏவி. மெய்யப்ப செட்டியார் “முதலில் ஒரு ஐயாயிரம் அடி எடுத்துப் பார்ப்போம். அதற்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம்…” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையில் எப்படிப்பட்ட ஒரு அதிர்வலைகளை சிவாஜி உருவாக்கினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால், அந்தப் படம் முடிவடைவதற்குள் அவர் சந்தித்த எதிர்ப்புகள் இருக்கிறதே அவை சொல்லில் அடங்காது.
முதல் கட்டமாக ஆயிரம் அடிவரை எடுத்துவிட்டு படத்தைப் போட்டுப் பார்த்தபோது படத் தயாரிப்பாளரான பெருமாள் முதலியாரின் மாமனாரே, சிவாஜிக்கு வில்லனாக உருவெடுத்தார். “சிவாஜி கணேசனை மாற்றிவிட்டு வேறு ஒரு நடிகரைப் போட்டு எடுத்தால்தான் படம் படமாக இருக்கும். அதனால், வேறு யோசனையே வேண்டாம். அவரை மாற்றியே ஆக வேண்டும்” என்று அவர் ஒற்றைக் காலில் நின்றார்.
அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு சிவாஜியை மாற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில் கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய இருவரும் அறிஞர் அண்ணாவிடம் அந்த விஷயத்தை சொல்லி சிவாஜி தொடர்ந்து அந்த படத்தில் நீடிக்க அவருடைய உதவியைக் கேட்டனர்.
அத்தனை இடைஞ்சல்களுக்கும் மத்தியில் பராசக்தி வளர்ந்தது. ஏறக்குறைய எட்டாயிரம் அடி வளர்ந்தவுடன் மீண்டும் எல்லோரும் படத்தைப் போட்டுப் பார்த்தார்கள்.
“வசனத்துக்காகப் படமா இல்லை… படத்துக்காக வசனமா?” என்று கேள்வி கேட்ட இயக்குநர் எம்.வி.ராமன் “மறு யோசனையில்லாமல் ஹிரோவை மாத்தியே ஆக வேண்டும்” என்றார். அப்போது மெய்யப்ப செட்டியாரிடம் உதவி இயக்குனராக இருந்த அந்த ராமன்தான் பின்னர் ‘கொஞ்சும் சலங்கை’ என்ற பிரம்மாண்டமான வண்ணப் படத்தை இயக்கிய இயக்குநர்.
“இந்தப் படத்தில் கண்ணை மூடிக் கொண்டு வசனங்களைக் கேட்டு ரசிக்கலாம். ஆனால் படத்தையோ, இந்த புதுமுகங்களையோ கண்ணால் பார்க்க முடியவில்லை” என்றார் ஏவி. மெய்யப்ப செட்டியார்.
அப்போது ஏவி.எம்.மில் பணியாற்றியவர்களில் சிவாஜியை மாற்றிவிட்டு வேறு கதாநாயகனைப் போட்டு எடுத்தால்தான் ‘பராசக்தி’ படம் மக்கள் மத்தியில் எடுபடும் என்று யோசனை சொல்லாதவர்கள் மிகச் சிலரே. ஆனால், அத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் பெருமாள் முதலியார் மட்டும் அசையாமல் சிவாஜி கணேசன்தான் ‘பராசக்தி’ படத்தின் நாயகன் என்று துணிந்து நின்றார்.
“என்னை மாற்றும்படி பெருமாள் முதலியாரிடம் பலரும் வற்புறுத்தினார்கள். ஆனால் என்னை வாழ வைத்த தெய்வமான அவர் அந்த விமர்சனங்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. என்ன ஆனாலும் சரி. கணேசனை வைத்துத்தான் படத்தை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்.
அவரது மன உறுதியும் அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான் என்னை நடிகனாக்கியது. எனக்கு வாழ்வு கொடுத்த தெய்வம் அவர்” என்று தனது சுய சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி.
சிவாஜியின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, ‘எனது வாழ்க்கை அனுபவங்கள்’ என்ற நூலை எழுதிய ஏவி.மெய்யப்ப செட்டியார் சிவாஜி அந்தப் படத்தில் நடிப்பதற்கு தான் தடையாக இருந்த விஷயங்களை எல்லாம் மொத்தமாக தவிர்த்துவிட்டு “நான் பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த ‘பராசக்தி’ படத்தில்தான் சிவாஜி அறிமுகமானார்” என்று ஒற்றை வரியில் அந்த சம்பவத்தைப் பற்றி எழுதி விட்டுப் போயிருக்கலாம்.
ஆனால், சிவாஜி விஷயத்தில் தனது கணக்கு தப்புக் கணக்காகிவிட்டது என்று அந்த நூலில் மிகவும் நேர்மையாக பதிவு செய்திருந்தார் அவர். ஏவி.எம். திரையுலகில் இன்றுவரை ஒரு சகாப்தமாக மதிக்கப்படுவதற்குக் காரணம் அவருடைய அந்த நேர்மைதான்.
பலரது எதிர்ப்புகளையும் மீறி பத்தாயிரம் அடி வரை எடுத்து விட்டு படத்தைப் போட்டு பார்த்தபோது மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி மீது முதல்முறையாக நம்பிக்கை ஏற்பட்டது.
சிவாஜி கணேசன் நடிப்பில் முன்னேற்றம் இருப்பது தெரிந்ததும், நாம் வேண்டாம் என்று சொல்லியும் அவரைப் போட்டார்களே என்று அலட்சியமாக இருந்து விடாமல் ஆரம்பத்தில் எந்தெந்த காட்சிகளில் சிவாஜி நம்பிக்கையில்லாமல் நடித்திருந்தாரோ அந்தக் காட்சிகளை எல்லாம் மீண்டும் படமாக்கச் சொன்னார் ஏவி.எம்.
அப்படி படமாக்கப் பட்ட காட்சிகளின் நீளம் எவ்வளவு என்று தெரிந்தால் யாரும் ஆச்சர்யம் அடையாமல் இருக்க முடியாது. ஏறக்குறைய ஏழாயிரம் அடி காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டன. ஏவி.எம். ஸ்டுடியோவின் எல்லா அரங்குகளிலும் ‘பராசக்தி’ படத்துக்காக போடப்பட்ட செட்டுகளை எல்லாம் திரும்பவும் போட்டு பதினைந்து நாட்கள் தொடர்ந்து சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார்கள்.
அதைத் தொடர்ந்து 1952 தீபாவளியன்று வெளியான ‘பராசக்தி’ வசூலில் புதியதொரு சாதனையைப் படைத்தது என்றால்.., அதிலே நாயகனாக நடித்த சிவாஜி உலகம் போற்றுகின்ற ஒரு நடிகராக உயர்ந்தார்.
The post சினிமா வரலாறு-24 – முதல் படத்தில் சிவாஜி சந்தித்த எதிர்ப்புகள்..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-23 எம்.ஜி.ஆருக்கும், கே.ஏ.தங்கவேலுவிற்கும் இருந்த ஒற்றுமைகள்..! appeared first on Touring Talkies.
]]>எம்.ஜி.ஆர்., பிறந்த அதே 1917-ம் ஆண்டில், அவர் பிறந்த அதே ஜனவரி மாதத்தில் பிறந்தவர்தான் கே.ஏ.தங்கவேலு. எம்.ஜி.ஆர்., பிறந்தது ஜனவரி 17-ம் தேதி. கே.ஏ.தங்கவேலு பிறந்தது ஜனவரி 15-ம் தேதி. அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு இரண்டு நாட்கள் மூத்தவர் அவர்.
எம்.ஜி.ஆர்., அறிமுகமான ‘சதிலீலாவதி’ படத்தில்தான் தங்கவேலுவும் அறிமுகமானார்.
எம்.ஜி.ஆருக்கு திரைப்பட வாய்ப்பை பெற்றுத் தந்த எம்.கே.ராதாதான், தங்கவேலுவிற்கும் சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தார்.
அவர்கள் இருவருக்குமிடையே மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் ‘சதிலீலாவதி’ படத்திற்குப் பிறகு எம். ஜி. ஆருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், தங்கவேலுவிற்கு அடுத்த சினிமா வாய்ப்பு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகே கிடைத்தது.
‘சதி லீலாவதி’ படத்திற்குப் பிறகு தங்கவேலு நடித்த படமாக ‘சிங்காரி’ என்ற படம் அமைந்தது. இந்த ‘சிங்காரி’ ஏற்கனவே நாடகமாக நடிக்கப்பட்ட கதை. நாடகத்தில் தான் ஏற்ற வேடத்தையே திரைப்படத்திலும் ஏற்றார் தங்கவேலு.
தங்கவேலுவின் பெயருடன் ‘டணால்’ என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது இந்த ‘சிங்காரி’ படத்தில்தான். அந்த படத்தில் பல இடங்களில் ‘டணால்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார் அவர். ‘சிங்காரி’ படத்திற்குப் பிறகு பல திரைப்படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்த தங்கவேலுவுக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்த படம் ‘பணம்’.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த இரண்டாவது படம் அது. அந்த படத்திலே சிவாஜிகணேசனுடன் நடிக்கத் தொடங்கிய தங்கவேலுவின் திரையுலகப் பயணம், சிவாஜியோடு மட்டும் இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது .
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான் தங்கவேலுவிற்கு ‘பணம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியவர். தங்கவேலுவின் திறமை மீது அவருக்கு அப்படி ஒரு அபார நம்பிக்கை இருந்தது. ‘பணம்’ படத்திலே நடிக்க ஒப்பந்தமானபோது தங்கவேலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது.
அந்தப் படத்திலே நடிப்பதற்காக ஆயிரம் ரூபாயை தங்கவேலுவிற்கு முன் பணமாகக் கொடுத்தார் கலைவாணர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போன தங்கவேலு ‘பணம்’ படத்திலே நடிப்பதற்கு தன்னை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் படத்தில் நடிக்க சம்பளமாக ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் சொன்னபோது தங்கவேலுவின் பெரியப்பா மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக தங்கவேலுவைப் பார்த்து உரத்த குரலில் சத்தம் போட ஆரம்பித்தார்.
கலைவாணர் வீட்டிலிருந்து அவருக்குத் தெரியாமல் அந்த பணத்தை தங்கவேலு எடுத்துக் கொண்டு வந்து விட்டதாக அவரது பெரியப்பா எண்ணியதே அதற்குக் காரணம்.
அவர் அப்படி சந்தேகப்பட்டதிலும் தவறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில். அப்போது தங்கவேலு நாடகங்களில் நடிக்க ஒரு மாதத்திற்கு வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் வெறும் 10 ரூபாய்தான். அப்படி இருக்கும்போது படத்தில் நடிக்க அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்று சொன்னால் என்றால் யார் நம்புவார்கள்..?
“ஏன்தான் உன் புத்தி இப்படிப் போகுதோ தெரியவில்லையே. அவர் வீட்டிலேயே உனக்கு சோறு போட்டு அவரோட புள்ளை மாதிரி இல்லே கலைவாணர் உன்னை வளர்த்தார். அன்னமிட்ட வீட்டிலேயே கன்னம் இடலாமா..? அவர் வீட்டிலேயே இப்படி பணத்தைத் திருடி விட்டு வந்திருக்கிறாயே..?” என்று சொல்லியபடி கலைவாணரை அடிக்க ஆரம்பித்த அவர் தங்கவேலு சொன்ன எந்த விளக்கத்தையும் கேட்கத் தயாராக இல்லை.
வேறு வழியின்றி தனது பெரியப்பாவை நேராக கலைவாணர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் தங்கவேலு. அங்கு போன பிறகு “ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டான். இனிமேல் அப்படி எல்லாம் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர் சொல்ல… கலைவாணருக்கு ஒன்றுமே புரியவில்லை.
அதற்குப் பிறகு தங்கவேலு நடந்த சம்பவத்தைப் பற்றி கலைவாணருக்கு விளக்கமாகச் சொல்ல “இதுக்காகவா தம்பியை தேவையில்லாம போட்டு அடிச்சிட்டீங்க…” என்று சொன்ன கலைவாணர் “அந்தப் பணம் என்னுடைய படத்தில் நடிப்பதற்காக நான் கொடுத்த முன் பணம்தான்…” என்று சொன்னவுடன்தான் அவரது பெரியப்பா சமாதானம் அடைந்தாராம்.
“என்னுடைய வாழ்க்கை கலைவாணர் எனக்கு போட்ட பிச்சை. ஆரம்பத்தில் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்தது மட்டுமின்றி… தொடர்ந்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கலைவாணர்தான்” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் தங்கவேலு.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று தங்கவேலு இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம்.
காமெடி நடிகர்களால் கதாநாயகனாகவும் நடிக்க முடியும் என்று நாகேஷ், தொடங்கி கவுண்டமணி, விவேக், சந்தானம், கருணாஸ், என்று பல பேர் இன்று நிரூபித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பெருமை தங்கவேலுவையே சேரும்.
சாதாரணமாக பெரிய, பெரிய கதாநாயகர்களே ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு பயப்பட்ட பானுமதியுடன் ‘ரம்பையின் காதல்’ படத்தில் நாயகனாக நடித்தார் தங்கவேலு.
தங்கவேலுவுடன் படங்களில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஜோடியான எம்.சரோஜாவுடன் தங்கவேலு நடித்த படங்களில் மறக்க முடியாத படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான ‘கல்யாணப் பரிசு.’
அந்தப் படத்திலே ‘தான்தான் எழுத்தாளர் பகீரதன்’ என்று தனது மனைவியான சரோஜாவிடம் பொய் சொல்லிவிட்டு ஒரு பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு தங்கவேலு வீடு திரும்பும் காட்சியை திரையில் பார்க்கும் எவராலும் சிரிப்பை அடக்க முடியாது.
திரையில் ஐந்து நிமிடங்கள் ஓடிய அந்தக் காட்சியை ஒரே டேக்கில் தங்கவேலுவும் சரோஜாவும் நடித்தபோது தனது சிரிப்பை அடக்க முடியாமல் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக் கொண்டாராம் இயக்குநர் ஸ்ரீதர். செட்டில் இருந்த பலரும் சிரிப்பை அடக்க முடியாமல் அந்த செட்டைவிட்டே ஓடிய சம்பவம் எல்லாம் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது நடந்திருக்கிறது.
‘கல்யாணப் பரிசு’ தங்கேலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம் அந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்பது மட்டுமல்ல. அந்தப் படத்தின் நூறாவது நாள் விழா மதுரையில் நடைபெற்ற போதுதான் மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றத்தில் எம்.சரோஜாவை திருமணம் செய்து கொண்டார் அவர்.
தமிழ்த் திரையுலகில் சரித்திர கால பாத்திரங்கள், புராண பாத்திரங்கள் என்று எல்லா பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக் கூடிய நாயகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் என மிகச் சிலரே. இந்த கதாநாயகர்களைப் போல எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடியவராக இருந்த ஒரே நகைச்சுவை நடிகர் தங்கவேலு.
நேரிலே பேசும்போதும், சரி படங்களில் நடிக்கும்போதும், அறச் சொற்களை பயன்படுத்துவதை அறவே தவிர்த்த கலைஞர் தங்கவேலு. அதுபோன்று தன் வாழ்நாள் முழுவதும் தனக்கென சில கொள்கைகளை வைத்துக் கொண்டு அதிலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கை நடத்தியவர் அவர்.
தமிழ் தவிர பிற மொழிப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்பதை இறுதி மூச்சுவரை கடைப்பிடித்தார் அவர்.
புரட்சித் தலைவர் அவர்களுடன் நடிக்கக் கூடிய வாய்ப்பு எண்ணற்ற கலைஞர்களுக்கு கிடைத்திருக்கலாம். ஆனால், அவரோடு சேர்ந்து நூற்றாண்டைக் கொண்டாடுகின்ற அரிய வாய்ப்பு, தங்கவேலு அவர்களுக்கு மட்டுமே அமைந்த ஒரு பெருமை.
The post சினிமா வரலாறு-23 எம்.ஜி.ஆருக்கும், கே.ஏ.தங்கவேலுவிற்கும் இருந்த ஒற்றுமைகள்..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-20 பெண் இனத்துக்கு பெருமை சேர்த்த தங்கத் தலைவி..! appeared first on Touring Talkies.
]]>அரசியல் வானில் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய, 24 மணி நேரமும் தமிழக மக்களின் முன்னேற்றம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த, ஒரு ஆட்சியாளருக்கு எப்படிப்பட்ட ஒரு ஆளுமை இருக்க வேண்டும் என்று இந்த உலகத்துக்கு எடுத்துச் சொன்ன ஒரு தன்னிகரில்லாத அரசியல் தலைவிதான் தமிழக மக்கள் அம்மா என்று உள்ளன்போடு போற்றும் ஜெயலலிதா அவர்கள்.
ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் அரசியலில் காலடி எடுத்து வைத்து, தனது அயராத உழைப்பால் ஆறுமுறை தமிழக முதல்வராக முடி சூட்டிக் கொண்ட ஒப்பற்ற தலைவியான ஜெயலலிதா அவர்களை அவர் நடிகையாக இருந்த காலத்திலிருந்து நான் நன்கு அறிவேன்.
அப்போது நான் பத்திரிகையாளனாக இருந்தேன். அது தவிர, ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே சொந்தமாக பத்திரிகை ஒன்றும் நடத்திக் கொண்டிருந்தேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக .அவர் நடித்த வெற்றிப் படங்களான ‘சூர்யகாந்தி’, ‘அன்பைத் தேடி’, ‘அவன்தான் மனிதன்’, ’பாக்தாத் பேரழகி’ உட்பட பல திரைப்படங்களுக்கு நான்தான் பத்திரிகைத் தொடர்பாளர்.
தமிழ்த் திரையுலகில் மிகுந்த செல்வாக்குமிக்க நடிகையாக அவர் இருந்த அந்த காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
படப்பிடிப்புத் தளத்திலே மற்ற நடிகைகளைப் போல படப்பிடிப்புக்கு நடுவே அவர் அரட்டையடித்து பேசி நான் பார்த்ததே இல்லை. தனது காட்சியில் நடித்து முடித்துவிட்டு வந்து அமர்ந்தால் என்றால் அடுத்த நிமிடமே தான் கையோடு கொண்டு வந்திருந்த ஆங்கிலப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிடுவார் அவர்.
அதே போன்று அவரைப் பேட்டி காண வருகின்ற பத்திரிகையாளர்களை ஒரு ராஜா மாதிரி நடத்துவார் அவர். அந்தப் பத்திரிகையாளர் மிகப் பெரிய பத்திரிகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி.. சிறிய பத்திரிகையாளராக இருந்தாலும் சரி.. அவரது உபசரிப்பு இருக்கிறதே அது மாறவே மாறாது.
அவரை பேட்டி காண வருவதாக நீங்கள் சொன்ன நேரத்துக்கு பத்து நிமிடத்துக்கு முன்னாலேயே உங்களுக்காக ஒரு நாற்காலி அவர் அருகே போடப்பட்டிருக்கும். அதே மாதிரி நீங்கள் அவர் அருகில் அமர்ந்து பேசத் தொடங்கிய பத்தாவது நிமிடம் காபியோ, குளிர் பானமோ உங்களைத் தேடி வரும்.
பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவராக விளங்கிய அவர் 1973-ம் ஆண்டு தனது பிறந்த நாள் விழாவை சவேரா ஓட்டலில் கொண்டாடியபோது அந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட சுதேசமித்திரன் ராமமூர்த்தி, திரையுலகம் துரைராஜ், மதிஒளி சண்முகம், பிலிமாலயா வல்லபன், தினத்தந்தி அதிவீர பாண்டியன் மற்றும் நான் உட்பட பல பத்திரிகையாளர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்தது மட்டுமின்றி, அழகான ஒரு பார்க்கர் பேனாவையும் பரிசளித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னாலே ஒரு முக்கியமான சம்பவம் இருக்கிறது.
‘கங்கா கவுரி’ என்ற பெயரிலே பி.ஆர்.பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கிய படத்தில் ஜெயலலிதா அவர்கள்தான் நாயகி. ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் பிரீமியர் ஸ்டுடியோவில் நடைபெற்றபோது அந்தப் படத்தைப் பற்றி பத்தரிகைகளில் எழுதுவதற்காக சில பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார் பந்துலு. அவரது அழைப்பை ஏற்று நாங்கள் மைசூர் சென்றிருந்தோம்.
பகல் பத்து மணியளவில் ‘கங்கா கவுரி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பிரிமியர் ஸ்டுடியோவிற்கு சென்ற நாங்கள் படப்பிடிப்பில் ஜெமினி கணேசன் அவர்களையும் ஜெயலலிதா அவர்களையும் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும்போது வெறித்தனமாக கூச்சல் போட்டுக் கொண்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்தப் படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதா அவர்களை சூழ்ந்து கொண்டுவிட்டார்கள்.
ஒரு பத்திரிகைப் பேட்டியில் ‘நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்’ என்று ஜெயலிதா அவர்கள் கொடுத்திருந்த பேட்டியை மாற்றி ‘நான் கன்னடத்தைச் சேந்தவர்’ என்று சொல்லும்படி வற்புறுத்தி உரக்க கூச்சல் போட்ட அவர்கள் கையில் கத்தி உட்பட பல ஆயதங்கள் இருந்ததைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு முன்னாலே ஒரு அரண் போல நின்று கொண்டோம்.
நேரம் ஆக ஆக எந்த அசம்பாவிதம் வேண்டுமானாலும் நடக்க்கலாம் என்ற அந்த சூழ்நிலையில் கன்னட பட இயக்குநரான ரவி என்பவரும், ஜெமினி கணேசனும், இன்னும் சிலரும் “பிரச்னை மிகவும் பெரியதாகிவிடும் போலிருக்கிறது. அதனால் போனால் போகிறது… ஒரு முறை அவர்கள் சொலவது போல சொல்லி விடுங்களேன்” என்கிறார்கள். “எனக்கு என்ன நடந்தாலும் சரி இவர்களுக்குப் பயந்து உண்மைக்கு புறம்பான ஒன்றை சொல்ல மாட்டேன்…” என்று துணிச்சலோடு அவர்களை எதிர்த்து ஜெயலலிதா அவர்கள் நின்றபோது பதினாறு கரம் கொண்ட அந்த பராசக்தியை நேரில் பார்த்தது போல இருந்தது எங்களுக்கு.
எவ்வளவு போராடினாலும் அவர் அசைந்து கொடுக்க மாட்டார் எனபது தெரிந்ததும் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்று விட்டனர். அதற்குப் பின்னர் அப்படி ஒரு விபரீதமான சூழ்நிலையில் அங்கே தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எம்.ஜி.ஆர்., அவர்கள் கூறிய அறிவுரையைக் கேட்டு ஜெயலலிதா அவர்கள் சென்னை திருப்பினார்.
தனது 25-வது பிறந்த நாள் விழாவினை ‘கங்கா கவுரி’ படப்பிடிப்பில் அவருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என்று அவருக்கு முன்னாலே அரண் போல இருந்து காப்பற்றிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற விழாவாக மாற்றிய அவர் எங்களுக்கு நன்றி தெரிவித்து ஆளுயர மாலையை அணிவித்தது மட்டுமின்றி பார்க்கர் பேனா ஒன்றையும் பரிசளித்தார்.
அரசிலில் அவர் அடியெடுத்து வைத்த பிறகு ‘இரும்பு நிகர் பெண்மணி’ என்று பத்திரிகைகள் அவரைப் பாராட்டும்போதெல்லாம் இந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வரும்.
அநீதிகளை இரும்பு மனம் கொண்டு எதிர்க்கின்ற அவரது குணம் அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு அவரிடம் வந்ததல்ல. இயல்பாகவே அவரிடம் குடி கொண்டிருந்த குணம் அது.
அதே போன்று பத்திரிகைகளில் தன்னைப் பற்றி தவறாக ஒரு சிறு செய்தி வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டார் அவர். அது மட்டுமின்றி அந்த செய்தியினை அலட்சியப்படுத்தாமல் உடனே அதற்கு பதில் தருவதையும் வழக்கமாக வைத்திருந்தார் அவர்.
1980-ம் ஆண்டு ஒரு ஆங்கிலப் பத்திரிகை நிருபர் ஜெயலலிதா சினிமா உலகில் தனது இடத்தை மீட்பதற்காக போராடுகிறார் என்ற அர்த்தம் தொனிக்கும்படியாக ஒரு கட்டுரையை எழுதிவிட்டார்.
உடனே அந்தப் பத்திரிகையாளருக்கு தன கைப்பட கடிதம் எழுதிய அவர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு ‘பில்லா’ படத்தி;ல் ஜோடியாக நடிக்கின்ற வாய்ப்புகூட முதலில் தன்னைத்தான் தேடி வந்தது என்றும் தனிப்பட்ட சில காரணங்களால் தான் அந்த வாய்ப்பை நிராகரித்த பின்னரே அந்த வாய்ப்பு ஸ்ரீபிரியாவிற்கு கிடைத்தது என்பதையும் குறிப்பிட்டுவிட்டு இதிலிருந்தே பட வாய்ப்பு தேடி அலையும் நிலையில் நான் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்…” நறுக்குத் தெறித்ததுபோல அந்தக் கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார்.
நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக ஏதாவது எழுதினால்தான் எப்போதும் அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும். தினமும் காலை எழுந்தவுடன் இந்த நடிகை போர்ன்விடாதான் குடிப்பார் என்றோ இந்த நடிகர் தினமும் காலையில் சாமியை கும்பிடாமல் வெளியே கிளம்ப மாட்டார் என்றோ செய்தி வெளியிட்டால் அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் அதை மனதில் வைத்துக்கொண்டு ‘தஞ்சை குஞ்சிதபாதம்’ என்ற சினிமா பத்திரிகை நிருபர், “ஜெயலலிதா செவ்வாய்கிழமை அன்று விரதம் அனுஷ்டிப்பார்..” என்றும் “செவ்வாய்கிழமைகளில் அவர் மதியம் சாப்பிடவேமாட்டார்…” என்றும் ஒரு பத்திரிகையில் துண்டுச் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அந்தச் செய்தி வெளியான அடுத்த வாரம் அந்த நிருபரை சந்தித்தபோது, “ஏன் இப்படி எல்லாம் தவறான தகவல்களை எழுதுகிறீர்கள்..? நான் செவ்வாய்கிழமைகளில் ஏதாவது ஒரு வெளிப்புறப் படப்பிடிப்பில் வழக்கம்போல உணவு அருந்துவதைப் பார்க்கும் ரசிகர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? விரதம் இருப்பதாக சொல்லிவிட்டு சாப்பிடுவதாக தவறாக நினைக்க மாட்டாரா…? ஆகவே, எனக்கு ஆதரவாக ஏதாவது செய்தி வெளியிடுவதாக இருந்தால்கூட என்னிடம் கேட்காமல் வெளியிடாதீர்கள்…” என்று கூறினார்.
தன்னைப் பற்றி ஒரு சிறிய செய்திகூட தவறாக வந்துவிடக்கூடாது என்பதில் அவர் எந்த அளவு எச்சரிக்கையாக இருந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.
போயஸ் தோட்டத்தில் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு ‘வேதா இல்லம்’ என்று தனது அன்னையின் பெயரை சூட்டிய அவர் அந்த வீட்டிற்கு குடி புகுந்தபோது எல்லா சினிமா பத்திரிகையாளர்களையும் அழைத்தது மட்டுமின்றி அவர்கள் விருந்து சாப்பிட்டபோது கூடவே இருந்து எல்லோரரயும் கனிவாக உபசரித்தார்.
எந்த விளம்பரமும் இன்றி பத்திரிகையாளர்கள் பலருக்கு எண்ணற்ற உதவிகளை செய்திருக்கும் அவர் மறந்தும் அதைப் பற்றி எப்போதும் வெளியிலே தெரிவித்ததே இல்லை.
நடிகை என்ற அந்தஸ்திலிருந்து அரசியலில் அடியெடுத்து வைத்து தமிழ் நாட்டின் தனிப் பெரும் சக்தியாக உருவாகி கோடான கோடி மக்கள் ‘அம்மா’ என்று அழைக்கின்ற நிலைக்கு வந்த பின்பும், இந்த தனிப்பட்ட குணங்கள் தன்னிடமிருந்து விலகாமல் பார்த்துக் கொண்ட தங்க மகளாக அவர் இருந்தார்.
‘எந்த சந்தர்ப்பத்தில் இரும்பாக இருக்க வேண்டும்’; ‘எந்த சந்தர்ப்பத்தில் கரும்பாக இருக்க வேண்டும்’ என்பதை பூரணமாக உணர்ந்திருந்தது மட்டுமின்றி அப்படியே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ஈடு இணையற்ற தலைவியாக அவர் விளங்கியதால்தான் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு இன்று மொத்த இந்தியாவும் கண்ணீர் விடுகிறது.
இந்திய அரசியல் இன்னும் பல பெண் முதலமைச்சர்களை சந்திக்கலாம். ஆனால் ஆட்சித் திறனில் ஜெயலலிதாவிற்கு நிகரான ஒரு தலைவியை மீண்டும் சந்திக்குமா என்பது பதில் இல்லாத ஒரு கேள்விதான்.
The post சினிமா வரலாறு-20 பெண் இனத்துக்கு பெருமை சேர்த்த தங்கத் தலைவி..! appeared first on Touring Talkies.
]]>