The post சினிமா வரலாறு-35-சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>அந்த படத்திலே ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட கண்ணதாசன் தீவிரமாக முயற்சி செய்தபோது இயக்குநர் ஏ.பீம்சிங் அவருக்கு உதவ முன் வந்தார். கண்ணதாசனின் பட நிறுவனத்துக்காக சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்க தான் ஒரு படத்தை இயக்கித் தருவதாக சொன்னார்.
அப்போது சிவாஜிகணேசன்- ஏ.பீம்சிங் இணைந்து பணியாற்றிய படங்களுக்கென்று ஒரு தனி மார்க்கெட் உருவாகி இருந்தது. அவர்கள் இருவரும் இணைந்த எல்லா படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்ததால், அவர்கள் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பீம்சிங்கும், சிவாஜியும் வலிய வந்து உதவி செய்கிறேனென்று சொன்னபோதிலும் அதை கண்ணதாசன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அதற்குக் காரணம் ‘விதி’ என்றுதான் சொல்ல வேண்டும்.
சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் அவர் கதாநாயகனாக நடிக்க ‘கவலை இல்லாத மனிதன்’ என்ற படத்தைத் தயாரித்தார். அதற்குப் பிறகு ஒரு நாள்கூட கவலை இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.
சந்திரபாபுவை வைத்துப் படமெடுப்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு வேலையல்ல. அவர் சரியான நேரத்திற்கு சூட்டிங்கிற்கு வர மாட்டார். அப்படியே வந்தாலும் எப்போது செட்டில் இருப்பார், எப்போது காணாமல் போவார் என்று தெரியாது. அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுப்பார். பேசிய பணத்தைவிட அதிகமாகப் பணம் கேட்பார்.
அது தவிர, அவரை வைத்துப் படமெடுத்தால் குறிப்பட்ட நேரத்தில் படத்தை வெளியிட முடியாது என்றெல்லாம் அவரை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள் எல்லோருமே அப்போது அவரைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தனர்.
சந்திரபாபு தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் தன்னிடம் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்று திடமாக நம்பினார் கண்ணதாசன்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் சந்திரபாபுவோடு முடிந்து போய்விட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் நடிகர்கள் திரையுலகில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
அதைப் போன்று நம்முடைய படத்துக்கு நிச்சயமாக அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்ற எண்ணத்தில் அந்த நடிகரை ஒப்பந்தம் செய்கிறவர்களும் இன்றுவரை இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
கே.சங்கர் இயக்க சந்திரபாபுவிற்கு ஜோடியாக எல்.விஜயலட்சுமி நடித்த அந்த படத்தில் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.ராஜம். ராஜ சுலோசனா என்று பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்தனர்.
சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஏவி.மெய்யப்ப செட்டியாரின் பிரகதி ஸ்டுடியோவிற்கு விண்ணப்பித்து பின்னர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட கண்ணதாசன் முதன் முதலில் நடித்த படமாக சிவாஜி கதாநாயகனாக அறிமுகமான ‘ பராசக்தி’ படம் அமைந்தது.
அந்தப் படத்திலே நீதி மன்றக் காட்சியில் கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களை சிவாஜி பேசியபோது நீதிபதியின் வேடத்திலே அந்தப் படத்திலே அமர்ந்திருந்தவர் கண்ணதாசன்தான்.
அவர் நடித்த இரண்டாவது படமாக ‘கவலை இல்லாத மனிதன்’ படம் அமைந்தது. அந்தப் படத்தின் முதல் காட்சியிலேயே கல்லூரிப் பட்டமளிப்பு விழாவிலே அவர் பேசிய காட்சி இடம் பெற்றது.
‘கவலை இல்லாத மனிதன்’ படத்தின் படப்படிப்பு நடைபெற்றபோது அந்தப் படத்திலே நடித்த எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா உட்பட எல்லா நட்சத்திரங்களும் காலை ஒன்பது மணிக்கு படப்பிடிப்புக்கு எட்டு மணிக்கே மேக்கப்பைப் போட்டுக் கொண்டு தயாராகி விடுவார்கள்.
ஆனால் சந்திரபாபுவைப் பொறுத்தவரை தினமும் காலை 10 மணிக்குதான் அவர் எழுந்திருப்பார். அதைத் தொடர்ந்து அவர் குளித்து தயாராகி படப்பிடிப்பு தளத்திற்கு வர எப்படியும் குறைந்தது 11 மணியாகிவிடும். அதற்குப் பிறகு மேக்கப் போட்டுக் கொண்டு 12 மணி அளவில் சூட்டிங்கிற்கு வருவார் அவர்.
ஏதோ ஒரு நாள் அவர் அப்படி 12 மணிக்கு படப்பிடிப்பிற்கு வந்தார் என்றால் மற்ற நட்சத்திரங்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். தினமும் அப்படி வருவதை அவர் வழக்கமாக வைத்துக் கொண்டதால் தயாரிப்பு நிர்வாகி வீரய்யாவை அழைத்த அவர்கள் “கவிஞரை சந்திரபாபுவிடம் பேசச் சொல்லுங்கள். நாங்களும் நடிகர்கள்தானே. அவருக்காக தினமும் நாங்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எப்படி..?” என்று அவரிடம் கேட்டனர். இந்தத் தகவல் சந்திரபாபுவிற்கும் போனது.
அவர்கள் எல்லோரும் அப்படி தங்களது குறையை வெளிப்படையாகத் தெரிவித்த பிறகாவது சந்திரபாபு நேரத்துக்கு படப்படிப்பிற்கு வரத் தொடங்கினாரா என்றால் இல்லை. வழக்கம்போல 12 மணிக்குத்தான் மேக்கப்புடன் செட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் அப்படி 12 மணிக்கு அவர் படப்படிப்பிற்கு வந்தவுடன் “பாலையா அண்ணனையும், ராதா அண்ணனையும்” வரச் சொல்லுங்கள் என்றார் இயக்குநர் கே.சங்கர்.
அவர்களை அழைத்து வர மேக்கப் அறைக்குச் சென்ற உதவி இயக்குநர் அவர்கள் அங்கே இல்லை என்ற விவரத்தை சொன்னவுடன் தயாரிப்பு நிர்வாகியான வீரய்யா அந்த ஸ்டுடியோ முழுவதும் அவர்களைத் தேடிப் பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் எங்கேயும் இல்லை.
சந்திரபாபுவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக அவர் செட்டுக்குள் நுழைந்தவுடன், அவர்கள் இருவரும் தங்களது காரில் ஏறி வீட்டுக்கு போய்விட்டனர்.
இந்த அதிர்ச்சி வைத்தியத்திற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்தார் சந்திரபாபு.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைகின்ற கட்டத்துக்கு வந்தபோது மீண்டும் தனது வழக்கமான பாணிக்கு திரும்பினார் சந்திரபாபு.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது காலை ஏழு மணி முதலே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டார் இயக்குநர் சங்கர்.
ஒன்பது மணி படப்பிடிப்பிற்கே ஒழுங்காக வராத சந்திரபாபுவிடம் காலை ஏழு மணிக்கே படப்பிடிப்பிற்கு வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டபோது அதற்கு லேசான மறுப்பைக்கூட சந்திபாபு தெரிவிக்கவில்லை.
ஆனால், அதற்குப் பதிலாக “ஏழு மணிக்கு வர வேண்டும் என்றால், முதலில் பேசிய சம்பளத்திற்கும் மேலாக இருபதாயிரம் ரூபாய் வேண்டும்..” என்றார்.
எப்படியாவது படத்தை முடித்தால் போதும் என்ற மன நிலைக்கு அப்போது வந்துவிட்டிருந்த கண்ணதாசன் எந்தவிதமான மறுப்பையும் சொல்லாமல் உடனடியாக இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.
அப்படிப் பணம் கொடுத்த பிறகும் படப்பிடிப்பு தினத்தன்று அவர் சீக்கிரம் வராமல் இருந்து விட்டார் என்றால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தில் ஒரு நாள் காலையில் எழுந்ததும் நேராக சந்திரபாபு வீட்டுக்கு போனார் கண்ணதாசன்.
உள்ளே அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பையன் சொன்னான். ஸ்டுடியோவிலோ எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, ராஜ சுலோசனா ஆகியோர் காலை ஆறு மணிக்கே மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தார்கள்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளியில் உடகார்ந்து கொண்டிருந்த கண்ணதாசன் பொறுமை இழந்து அங்கிருந்த பையனை அழைத்தார்.
“இப்போதாவது எழுந்து விட்டாரா என்று உள்ளே போய் பாரப்பா…?” என்றார்.
“அவர் எழுந்து பின்பக்கமாக அப்போதே போய்விட்டாரே” என்று அந்தப் பையன் சொன்ன பதில் அவரை நிலை குலைய வைத்தது.
அந்தப் பையன் சொன்னதைக் கேட்டதும் கண்ணதாசன் தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்தது.
அடுத்து கவிஞர் என்ன செய்தார் எனபதை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-35-சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-33 – ‘இசைக் குயில்’ எம்.எஸ்.சுப்புலட்சுமியை மூன்று முறை இயக்கிய இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>“எம்.எஸ்.சுப்புலட்சுமி என்னும் மாபெரும் இசையரசியோடு பணியாற்றக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு ‘சகுந்தலை’ திரைப்படம் தந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் எல்லிஸ். ஆர். டங்கன்தான், அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எம்.எஸ்.சுப்புலட்சுமி கண்ணீர்விட்டு அழவும் காரணமாக இருந்தார்.
ராஜ பிரதிநிதிகளும், மக்களும் புடை சூழ துஷ்யந்த மகராஜா கொலு மண்டபத்தில் அமர்ந்திருக்கும்போது அங்கே வரும் சகுந்தலை, ராஜாவைப் பார்த்து கோபத்திலே கொந்தளிக்க வேண்டிய ஒரு காட்சி ‘சகுந்தலை’ படத்துக்காகப் படமாக்கப்பட்டபோது அந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று மிகப் பொறுமையாக எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது மட்டுமின்றி நடித்தும் காட்டினார் டங்கன்.
அதற்குப் பிறகு பல முறை ஒத்திகை பார்த்துவிட்டே அந்தக் காட்சியைப் படமாக்கத்
தொடங்கினார் டங்கன். ஆனால் பல முறை படமாக்கியபோதும் அந்தக் காட்சிக்கு வேண்டிய கோபத்தை எம்.எஸ். அவர்கள் சரியாக வெளிக்காட்டவில்லை. அதைக் கண்டு முகம் சிவந்த டங்கன் கோபமாக செட்டைவிட்டு வெளியே போய்விட்டார்.
சிறிது நேரம் சென்ற பிறகு செட்டுக்குள் நுழைந்த அவர், “காலையிலிருந்து இந்தக் ஒரே காட்சியை எத்தனை முறை படமாக்குவது…? இதுதான் கடைசி டேக். இந்த டேக்கிலும் சரியாக நடிக்கவில்லை என்றால் நான் திரும்ப பொறுமையாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டேன். ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு போய்க் கொண்டே இருப்பேன்…” என்று பொதுவாக உரத்த குரலில் சத்தம் போட்டது மட்டுமின்றி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் அருகில் போய் “இவ்வளவு மோசமான நடிகையா இருப்பீங்க என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என்றார்.
அவர் அப்படி சொன்னதும் ஒரு பக்கம் அவமானம், இன்னொரு பக்கம் கோபம், மற்றொரு பக்கம் ஆத்திரம் என்று பல உணர்ச்சிகளுக்கு ஆளான சுப்புலட்சுமியின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகக் கொட்ட ஆரம்பித்தது.
அந்தக் கால கட்டத்தில் இசையுலகில் ராணியாக இருந்தார் எம்.எஸ். அது தவிர ‘சகுந்தலை’ படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அப்படியிருக்கும்போது அவரை இப்படி மனம் போனபடி டங்கன் திட்டியது சுப்புலட்சுமி அவர்களை மட்டுமின்றி அந்த செட்டில் இருந்த எல்லோரையுமே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
ஆனால் டங்கன் எதையும் பொருட்படுத்தவில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி அழத் தொடங்கிய அடுத்த நிமிடம் அவரை சமாதானப்படுத்துவதற்கு பதிலாக “லைட்ஸ்.. கேமிரா, ஆக்ஷன்” என்று அடுத்தடுத்து கட்டளைகளை பிறப்பித்தார்.
அதை அடுத்து அந்தக் காட்சியில் நடிக்க வந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு துஷ்யந்தனை விட டங்கன் பேரில் கோபம் அதிகமாக இருந்தது. அந்தக் கோபத்தில் ஆத்திரம் பொங்க துஷ்யந்தனை வறுத்து எடுத்துவிட்டார் அவர். படப்பிடிப்பு முடிந்ததும் தான் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக அந்தக் காட்சியில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமியை கட்டிப் பிடித்துப் பாராட்டினார் டங்கன்.
“எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் ஒரு மிகச் சிறந்த நடிகை. அப்படிப்பட்டவரை நான் மோசமான நடிகை என்று திட்டியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டு அழுதார். நான் அவரை ஆங்கிலத்தில்தான் திட்டினேன். அவருக்கு ஆங்கிலத்தில் மிகச் சில வார்த்தைகளே அப்போது தெரியும் என்றாலும் நான் கோபத்தின் உச்சியில் இருந்ததால் அவரது நடிப்ப்பைத்தான் நான் குறை கூறுகிறேன் என்று அவரால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது” என்று இந்த சம்பவம் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டங்கன்.
மேலும், “புகழ் பெற்ற நட்சத்திரங்களோடு பணியாற்றும்போது நாம் எதிர்பார்க்கின்ற உணர்ச்சிகளை அவர்களிடமிருந்து பெறுவதற்கு இது போன்ற சில உபாயங்களைக் கையாள வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடுகிறது” என்றும் அந்தக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார் டங்கன்.
1940-ம் ஆண்டின் மாபெரும் வெற்றிச் சித்திரமாக ‘சகுந்தலை’ அமைந்தது. அந்தப் படத்தில் ‘சகுந்தலை’ தனது மோதிரத்தை ஆற்றிலே தொலைக்கும் காட்சியை ஸ்லோ மோஷனில் படமாக்கியிருந்தார் டங்கன். அதுவரை ரசிகர்கள் அப்படி ஒரு காட்சியை திரைப்படத்தில் பார்த்தது இல்லை என்பதால் ரசிகர்களிடம் அந்தக் காட்சி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
‘சகுந்தலை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாநாயகியாக நடிக்க இசையின் மேன்மையைப் பற்றி சொல்லும ஒரு கதையைப் படமாக்க ஆசைப்பட்டார் எம்.எஸ். அவர்களின் கணவரான சதாசிவம். அதற்காக எந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அவர் கல்கி அவர்கள் உட்பட பல நண்பர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட போது மீரா கதையைத் தேர்வு செய்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
எம்.எஸ்.நடித்து மாபெரும் வெற்றிச் சித்திரமாக அமைந்த ‘சகுந்தலை’ படத்தின் இயக்குநரான எல்லிஸ் ஆர்.டங்கன் அவர்களையே ‘மீரா’ படத்தை இயக்குவதற்கும் சதாசிவமும், சுப்புலட்சுமியும் தேர்ந்தெடுத்தனர்.
பொலிவான முகத்தோற்றத்தைப் பெற்றிருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை ‘மீரா’ படத்தில் இன்னும் அழகாகத் திரையில் காட்ட புதுமையான முயற்சி ஒன்றை மேற்கொண்ட டங்கன், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தத்ரூபமான தோற்றத்துடன் அவரது மார்பளவு சிலை ஒன்றை உருவாக்கச் சொன்னார்.
அந்தச் சிலை தயாரானதும் அந்தச் சிலையை வித்தியாசமான பல கோணங்களில் லைட்டிங் செய்யச் சொல்லி தனது ஒளிப்பதிவாளரான ஜித்தன் பானர்ஜியிடம் சொன்ன டங்கன், எந்தெந்த ஒளியமைப்பில் அவர் மிகவும் அழகாக இருந்தாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டு பின்னர் அதே ஒளியமைப்பில் அவரைப் படமாக்கினார்.
‘மீரா’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி தெய்வீக அழகுடன் ஒளிர்ந்ததற்குக் அதுவே காரணம்.
‘மீரா’ படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் ராஜஸ்தான், துவாரகா போன்ற பல இடங்களில் நடைபெற்றது.
மீராவாக நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியபடி நடந்து வரும் காட்சி துவாரகாவில் படமாக்கப்ட்டபோது எம்.எஸ்.சுப்புலட்சுமியை பக்த மீராவாகவே பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரது காலில் பயபக்தியோடு விழுந்து வணங்கினர்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அந்த பாத்திரத்தில் நடித்தபோது பக்த மீராவாகவே மாறினார். அதன் விளைவாக துவாரகையில் உள்ள கண்ணன் கோவிலில் மீராவாக அடி எடுத்து வைத்த சுப்புலட்சுமியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதைத் தொடர்ந்து அங்கேயே மயங்கி சரிந்தார் அவர்.
தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது ‘மீரா’. பண்டிட் ஜவஹர்லால் நேரு, மவுண்ட்பேட்டன் பிரபு, ‘கவிக்குயில்’ சரோஜினி தேவி ஆகியோருக்காக ‘மீரா’வின் சிறப்புக் காட்சி ஒன்று, தலைநகர் தில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
எம.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெருமையை சர்வதேச அளவிலே எடுத்துச் சென்ற படமாக ‘மீரா’ படம் அமைந்தது. ‘மீரா’ படத்தின் இந்தி பதிப்பையும் சேர்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நடித்தது மொத்தம் ஐந்து படங்கள் மட்டுமே. அதில் மூன்று படங்களை இயக்குகின்ற வாய்ப்பைப் பெற்றவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.
‘மீரா’ படத்திலே ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களையும் நடிக்க வைத்திருந்தார் டங்கன்.1936-ம் ஆண்டில் ‘சதி லீலாவதி’ படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களை ஓர் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகப்படுத்திய எல்லிஸ் ஆர்.டங்கன் 1950-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கதாநயகனாக நடித்த ‘மந்திரிகுமாரி’ படத்தை இயக்கினார்.
‘மந்திரி குமாரி’ படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்திருந்த நிலையில் தனது மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக தனது மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்க தாய் நாடு திரும்பினார் டங்கன். ஆனால், எந்த மண வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள டங்கன் இந்தியாவை விட்டு கிளம்பினாரோ அந்த மண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. 1951-ம் ஆண்டு தனது மனைவி எலைனைப் பிரிந்தார் டங்கன்.
எல்லிஸ்.ஆர்.டங்கன் அமேரிக்கா திரும்பிய பிறகு ’மந்திரி குமாரி’ படத்தில் படமாக்கப்பட வேண்டியிருந்த மீதி காட்சிகளை இயக்கும் பொறுப்பை ஏற்று படத்தை முடித்தார் அப்படத்தின் தயாரிப்பாளரான மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம். அதனால், படத்தின் டைட்டிலில் டங்கனுடைய பெயருடன் சுந்தரம் அவர்களின் பெயரும் இடம் பெற்றது.
அதற்குப் பின்னர் பல டாக்குமெண்டரி படங்களை இயக்க இந்தியா வந்த எல்லிஸ்.ஆர்.டங்கன் இறுதியாக இந்தியா வந்தது 1993-ம் ஆண்டில். அப்போது தமிழ்த் திரையுலகம் சார்பில் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
கமல்ஹாசன், ஏவி.எம்.சரவணன், ‘மந்திரி குமாரி’ படத்தில் நடித்த ஜி.சகுந்தலா உட்பட எண்ணற்ற திரையுலக பிரமுகர்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அந்த விழாவிலே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய ‘மீரா’ படத்திலிருந்து ஒரு பாடலை அந்த நிகழ்ச்சியில் பாடினார். அப்போது அந்த அரங்கில் கண்ணில் ஈரம் கசியாமல் இருந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் என்று தமிழ்த் திரையுலகின் தூண்களாக இருந்த பல சாதனையாளர்களை அறிமுகம் செய்த எல்லிஸ் ஆர்.டங்கன் 2001-ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியன்று மறைந்தார்.
தமிழ்த் திரையுலக வரலாற்றை எப்போது யார் எழுதினாலும் டங்கன் அவர்களுடைய பெயர் இன்றி அது நிறைவடையாது.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-33 – ‘இசைக் குயில்’ எம்.எஸ்.சுப்புலட்சுமியை மூன்று முறை இயக்கிய இயக்குநர் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-27 இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..! appeared first on Touring Talkies.
]]>ஆனால், இளையராஜா செல்வராஜிற்கு எங்கே எப்படி அறிமுகமானார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை
கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் சகோதரர் மகன்தான் கதாசிரியர் ஆர்.செல்வராஜ்.1970-களில் கம்யுனிஸ்ட் கட்சியின் எல்லா பொதுக் கூட்டங்களிலும் பாவலர் வரதராஜனின் இசைக் கச்சேரி தவறாமல் இடம் பெறும். அந்த இசைக் குழுவில் பாவலரின் சகோதரர்களான பாஸ்கர், ராஜா, அமர்சிங் ஆகிய மூவரும் இடம் பெற்றிருந்தனர்.
மதுரையிலே அப்படிப்பட்ட கச்சேரிகள் நடக்கும்போதெல்லாம் மங்கம்மா சத்திரத்தில்தான் தங்குவார் பாவலர் வரதராஜன் . அப்போது மதுரையில் தங்கியிருந்த ஆர்.செல்வராஜ் முதன்முதலாக மங்கம்மா சத்திரத்தில்தான் ராஜாவை சந்தித்தார்.
அந்த சந்திப்பை, இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு செல்வராஜ்தான் ஒரு கருவியாக இருக்கப் போகிறார் என்பதால் காலம் ஏற்படுத்திய ஒரு சந்திப்பு என்றுதான் கொள்ளவேண்டும். இல்லையென்றால் முதல் சந்திப்பிலேயே அவர்கள் அந்த அளவிற்கு நெருக்கமாகி இருக்க வாய்ப்பில்லை.
தன் நண்பனான செல்வராஜிற்கு தனது சகோதரர்களான பாஸ்கர், அமர்சிங் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார் ராஜா. அதைத் தொடர்ந்து அந்தச் சகோதர்கள் எப்போது மதுரை வந்தாலும் தவறாது செல்வராஜை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
இதற்குப் பிறகு ஒரு கால கட்டத்தில் சென்னை நோக்கி நகர்ந்த ஆர்.செல்வராஜ் பலத்த போராட்டங்களுக்குப் பிறகு கதாசிரியர் பாலமுருகனிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
ஆர்.செல்வராஜைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு தன் 26-ம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் ராஜா சென்னைக்கு வந்தபோது அவரது இன்னொரு நெருங்கிய நண்பரான பாரதிராஜா சினிமாவில் சேர தீவிர முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இசையமைப்பாளராக வேண்டுமென்றால் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது என்று ராஜாவுக்கே தோன்றியதோ இல்லை யாராவது அறிவுறுத்தினார்களோ தெரியவில்லை.
அப்போது மைலாப்பூரில் இருந்த தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய இளையராஜா, கருவியையும், கிடார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார். பின்னர் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியில் கிளாசிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் வென்றார்.
சென்னையிலே பாரதிராஜாவின் நாடகம் தவிர மற்ற நாடகக் குழுக்களிலும் கிடார் வாசித்துக் கொண்டிருந்த ராஜாவிற்கு இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி அவர்களோடும், ஜி.கே.வெங்கடேஷ் அவர்களோடும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவை சுமந்து கொண்டிருக்கும் தனது தம்பியை எப்படியாவது இசையமைப்பாளராக ஆக்கிவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்த பாஸ்கர், தினமும் காலை முதல் மாலைவரை கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.
பாஸ்கரோடு இணைந்து இளையராஜாவிற்கு வாய்ப்பு தேடுகின்ற பணியில் அப்போது ஆர். செல்வராஜும் முழு மூச்சோடு செயல்பட்டார்.
பஞ்சு அருணாச்சலம் ஒரு நாள் ஆர்.செல்வராஜிடம் பேசிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைக்கக் கூடிய ஒரு திறமையான இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனது ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினார்.
அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தானே செல்வராஜ் காத்திருந்தார். ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். ராஜான்னு பேரு. சின்ன வயசுல இருந்தே ஹார்மோனியம் வாசிச்சுப் பழக்கப்பட்டவன். அவங்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சேர்ந்து நிறைய ஊர்கள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கான்.
இப்போ இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்டென்ட்டா இருக்கான். அவன் போட்ட பல டியூன்களை நான் கேட்டிருக்கேன். அற்புதமாக டியூன் போடுவான். அவனுக்குப் எப்படியாவது இசையமைப்பாளர் ஆகணும்கிறதுதான் லட்சியம். உங்களுக்கு ஓ.கே-ன்னா சொல்லுங்க நாளைக்கே நான் அவனைக் கூட்டிக்கிட்டு வர்றேன்…” என்றார் செல்வராஜ்.
பல ஊர்ல கச்சேரி பண்ணியிருக்கான். நாடகங்களுக்கு மியூஸிக் போட்டது மட்டுமில்லாமல், இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட உதவியாளராகவும் இருக்கான்னா நிச்சயமா ரசிகர்களின் பல்ஸ் தெரிஞ்சவனாகத்தான் இருப்பான் என்று மனதுக்குள்ளேயே ஒரு கணக்குப் போட்ட பஞ்சு அருணாச்சலம், “சரி நாளைக்கு அவனை கூட்டிகிட்டு வா…” என்றார்.
அன்று இரவு முழுவதும் செல்வராஜ் சொன்ன அந்த இசையமைப்பாளரைப் பற்றிய நினைவு பஞ்சு அருணாச்சலத்தை சுற்றிச் சுற்றி வந்தது. ஏற்கனவே தமிழிற்கு அவர் அழைத்து வந்திருந்த விஜய பாஸ்கர் என்ற கன்னட இசையமைப்பாளர் வெற்றி பெற்றிருந்ததால் தான் அடுத்து அறிமுகப்படுத்தப்போகும் இசையமைப்பாளரும் மிகப் பெரிய அளவிலே ஜெயிப்பார் என்ற நம்பிக்கையுடன் அன்று இரவு தூங்கினார் பஞ்சு.
மறுநாள் மாலையில் பஞ்சு அருணாச்சலம் தங்கியிருந்த கிளப் ஹவுசுக்கு ராஜாவை அழைத்து வந்த செல்வராஜ் “அண்ணே… இவர்தான் நான் சொன்ன ராஜா” என்று அறிமுகப்படுத்திவைத்தார். ஷர்ட்டை இன் பண்ணிக் கொண்டு ஒல்லியான தேகத்துடன் நின்ற ராஜாவைப் பார்த்ததும் பஞ்சு முதல் நாள் இரவு கண்ட கனவுக் கோட்டை முற்றிலுமாக தகர்ந்தது.
தழையத் தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்துப் பழகிய அவரது கண்களால் கவர்மென்ட் ஆபீஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என்று கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஹார்மோனியம், கிடார் என கையில் ஏதாவது ஒரு இசைக் கருவியை ராஜா எடுத்து வந்திருந்தால்கூட அவர் மீது பஞ்சு அருணாச்சலத்திற்கு லேசான நம்பிக்கை பிறந்திருக்கும். ஆனால், ராஜா அதையும் செய்யவில்லை..
செல்வராஜ் நம்மை இப்படி கவுத்து விட்டாரே என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தாலும் தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராஜாவை உடகாரச் சொன்னார் பஞ்சு அருணாச்சலம்.
லேசான ஒரு சிரிப்புடன் ராஜா அமைதியாக உட்கார “செல்வராஜ் அடிக்கடி உன்னைப் பற்றி சொல்லிக்கிட்டே இருப்பாரு. தமிழ்ல ஒரு நல்ல இசையமைப்பாளரைக் கொண்டு வரணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை” என்று பஞ்சு அருணாச்சலம் சொன்னவுடன் அதுவரை பேசாமல் இருந்த ராஜா “சினிமாவுக்கு இசையமைக்கணும் என்கிற ஆசையுடன்தான் நான் சென்னைக்கே வந்தேன். பல மாதங்களாக அதுக்காக முயற்சிபண்ணிட்டிருக்கேன். பாவலர்கூட பல வருஷம் இருந்ததாலே ஓரளவுக்கு இசையைப் பற்றி தெரியும். நிறையப் பாட்டுக்கு டியூன் எல்லாம்கூட போட்டு வெச்சிருக்கேன்…” என்றார்.
“அப்படீன்னா சரி… அந்த ட்யூனை எல்லாம் நான் கேட்டுடறேன். அப்புறம் என்ன செய்யலாம்னு ஒரு முடிவு எடுப்போம். இரண்டு நாள் கழித்து வாங்க. வரும்போது மற்ற வாத்தியக் கருவிகளை வாசிக்கறவங்களையும் கூட்டிக்கிட்டு வந்திடுங்க…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.
“இவனே ரொம்ப நல்லா பாடுவான். பாடிக் காட்ட சொல்லவா…?” என்று பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்டார் ஆர்.செல்வராஜ். ‘சரி’ என்பதற்கு அடையாளமாக பஞ்சு அருணாச்சலம் தலையை ஆட்ட தான் அமர்ந்திருந்த டேபிள் மீது தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார் ராஜா.
தமிழ்த் திரையுலகில் தனது அரங்கேற்றம் நடைபெறுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தமிழ் சினிமா உலகை தனது இசைத் திறனால் இன்றுவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்ற அந்த இசை வேந்தனுக்கு அன்று தெரியாது.
‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே…’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’, ஆகிய இரண்டு பாடல்களின் மெட்டுக்களை ராஜா பாடிக் காட்டியவுடனேயே ராஜா எப்படிப்பட்ட திறமைசாலி என்று பஞ்சு அருணாச்சலத்திற்கு புரிந்துவிட்டது.
ராஜா பாடிய பாடல்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த பஞ்சு அருணாச்சலம் ராஜாவிடம் பாடல்கள் நன்றாக இருக்கிறது என்றும் சொல்லவில்லை.. நன்றாக இல்லை என்றும் சொல்லவில்லை.
ராஜாவைப் பொறுத்தவரை இது அவருக்கு புது அனுபவமில்லை. பல பட நிறுவனங்களில் இதைவிட மோசமானஅனுபவங்களை அவர் சந்தித்திருக்கிறார் என்பதால் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார் அவர்.
அதற்குப் பிறகு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றியும், அதற்குப் பிறகும் எப்படிப்பட்ட போராட்டங்களை எல்லாம் முதல் படத்தில் இளையராஜா சந்திக்க வேண்டி இருந்தது என்பது குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்..!
The post சினிமா வரலாறு-27 இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-25 – நடிகை பானுமதியின் காதல் கதை appeared first on Touring Talkies.
]]>எழுத்தாளர், பாடகி, இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, என்று தமிழ், தெலுங்கு சினிமாக்களின் பல தளங்களில் வெற்றிகரமாகத் திகழ்ந்த பானுமதி ‘நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை’ என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.
படங்களில் நடிக்கும்போது காட்சிக்காகக்கூட பானுமதியைத் தொட்டுப் பேச அவரது கதாநாயகர்கள் தயங்குவார்களாம். பல கதாநாயகர்கள், ‘இந்தக் காட்சியில் இந்த வசனத்தைப் பேசும்போது உங்களது கையைத் தொடுவேன்’ என்று அவரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டுதான் அவரது கையைத் தொடுவார்களாம்.
‘தவறு’ என்று மனதுக்குப் பட்டுவிட்டால் அதைத் தட்டிக் கேட்கத் தயங்காத கண்ணியமிக்க ஒரு நடிகையாகத் திகழ்ந்தவர் பானுமதி .
எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்க பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயங்கிய காலக்கட்டத்தில் ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என்று உரிமையோடு அவரை அழைத்த ஒரே நடிகை பானுமதி மட்டுமே. எம்.ஜி.ஆரிடம் எந்த அளவு பானுமதிக்கு உரிமை இருந்தது என்பதை விளக்க அவருடன் ஒரு திரைப்படத்தில் பானுமதி நடித்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வாள் சண்டை போட்டு நம்பியாரிடம் இருந்து பானுமதியை எம்.ஜி.ஆர்., மீட்பது போல ஒரு காட்சி அன்று படமாக்கப்பட்டது. அந்தச் சண்டை நடக்கும்போது பானுமதி அடிக்கடி தனது பயத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்தக் காட்சி ஒரு முறை அல்ல.. இரு முறை அல்ல. பல முறை படமாக்கப்பட்டும் சரியாக அமையவில்லை.
இதனால் பயந்த மாதிரி திரும்பத் திரும்ப நடித்த பானுமதி சற்றுக் கோபத்துடன் எம்.ஜி.ஆரை அழைத்தார். “மிஸ்டர் ராமச்சந்திரன் அந்த வாளை என்னிடம் கொடுங்கள். நானே சண்டை போட்டு என்னை மீட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இப்படி பேசக் கூடிய துணிச்சல் யாருக்கு வரும்…?
இப்படி படப்பிடிப்பு தளங்களில் இரும்பாக இருந்த பானுமதி காதல் வசப்பட்டபோது அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகளிலோ, சினிமாவிலோகூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பானுமதியின் காதல் கதை, ஒரு அழுத்தமான காதல் கதை.
பானுமதியின் தந்தையான பொம்மராஜூ வெங்கட சுப்பையாவை ஒரு இசைப் பிரியர் என்று சொல்வதைவிட இசைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னுடைய மகளான பானுமதியின் குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருந்த அவர் சிறுவயது முதலே பானுமதிக்கு கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக் கொடுத்தார்.
அவருடைய நெருங்கிய நண்பரான இயக்குநர் பி.புல்லையா அவர்களின் இயக்கத்தில் உருவான ‘வர விக்ரயம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க பானுமதியை அவர் அனுமதித்ததற்குக்கூட முக்கியமான காரணம் அவரது இசை ஆர்வம்தான்.
தன் மகள் ஒரு பாட்டுக் கச்சேரியில் பாடினால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள்தான் அவரது பாட்டைக் கேட்க முடியும். ஆனால், சினிமாவில் பாடினால் லட்சக்கணக்கானவர் ஒரே நேரத்தில் தனது மகளின் குரலைக் கேட்க முடியுமே என்ற எண்ணத்தில்தான் பானுமதியை படத்தில் நடிக்க வைத்தார் அவரது தந்தை.
இருப்பினும் பானுமதியுடன் படத்தில் நடிக்கின்ற ஆண் நடிகர்கள் அவரைத் தொட்டுப் பேசுவது போலவோ, நெருக்கமாக நின்று நடிப்பது போலவோ எந்தக் காட்சிகளும் இருக்கக் கூடாது என்பது உட்பட அவர் விதித்த பல நிபந்தனைகளுக்கு படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்ட பிறகே அந்தப் படத்தில் பானுமதி நடிக்க அவர் தனது ஒப்புதலைத் தந்தார்.
அத்தனை நிபந்தனைகள் விதித்தாலும் அந்த சினிமாதான் தனது மகளைத் தன்னிடமிருந்து ஒரு காலக்கட்டத்தில் பிரிக்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது.
பானுமதி நடித்த முதல் படமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த பானுமதி 1943-ம் ஆண்டில் ‘கிருஷ்ண பிரேமா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.
அந்தப் படத்தை ‘கிருஷ்ண பிரேமா’ என்று சொல்வதற்குப் பதில் ‘ராமகிருஷ்ண பிரேமம்’ என்று சொல்லலாம் என்று பானுமதி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதற்குக் காரணம் இருக்கிறது.
தனது காதல் கணவரான ராமகிருஷ்ணாவை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் முதன்முதலாக சந்தித்தார் பானுமதி.
முதல் சந்திப்பிலேயே பானுமதியின் கவனத்தை ஈர்த்தார் ராமகிருஷ்ணா. படப்பிடிப்பு தளத்தில் ஓடி, ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்த சுறுசுறுப்பான, அழகான வாலிபன் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்ட அவர் படப்பிடிப்பு இடைவேளைகளில் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கினார்.
அந்தப் படத்தைவிட பானுமதிக்கு ராமகிருஷ்ணா மேல் இருந்த காதல் வேகமாக வளர்ந்தது. இதில் மிகப் பெரிய வேடிக்கை என்வென்றால் படத்தின் நாயகியான பானுமதி தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி அந்த ராமகிருஷ்ணாவுக்குக் கொஞ்சம்கூட தெரியாது.
அப்போது பானுமதி பருவ வயதிலிருந்ததால் அவரது தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். இனியும் தனது காதலைப் பற்றி வீட்டில் சொல்லாமல் இருப்பது சரியல்ல என்று எண்ணிய பானுமதி தனது மூத்த சகோதரியிடம் தான் ராமகிருஷ்ணா என்ற உதவி இயக்குநரைக் காதலிக்கின்ற விவரத்தைக் கூறினார்.
பானுமதியின் காதல் விவகாரம் தெரிந்ததும் எல்லா அப்பாக்களையும் போல பானுமதியின் அப்பாவான வெங்கட சுப்பையாவும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது என்றார். சினிமாவில் பணிபுரியும் ஒருவருக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுப்பதில் அவருக்கு ஒரு சதவிகிதம்கூட உடன்பாடில்லை.
ஆனால் பானுமதி தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றதால் வேறு வழியின்றி திருமணம் பற்றி பேச ராமகிருஷ்ணாவை தனது வீட்டுக்கு அழைத்தார் பானுமதியின் தந்தை.
அளவில்லாத நடிப்புத் திறனும், அழகும் கொண்ட பானுமதி என்ற கதாநாயகி தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் உதவி இயக்குநரான ராமகிருஷ்ணவுக்கு அப்போதுதான் தெரிந்தது.
பானுமதி எப்படிப்பட்ட பண்பான நடிகை என்பதை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அவர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே அவர் தன்னைக் காதலிக்கிறார் என்பது தெரிந்ததும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பானுமதியை மனைவியாக ஏற்றுக் கொள்ள அவர் பெரிதும் விரும்பினார் என்றாலும் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தார்.
“நான் அடிப்படையில் ஒரு ஏழை. அப்படிப்பட்ட நான் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகியான பானுமதியை திருமணம் செய்து கொண்ட பிறகு நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் என்னுடைய சில நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
முதலில் என்னுடைய நிபந்தனைகள் என்னென்ன என்பதை உங்களுக்குச் சொல்கிறேன் . அவை எல்லாம் உங்களுக்கு ஒத்து வருமா என்று பாருங்கள்..” என்று சொல்லிவிட்டு தனது நிபந்தனைகளைப் பட்டியலிடத் தொடங்கினார் அவர்.
அவரது முதல் நிபந்தனையே இடி மாதிரி வேங்கட சுப்பையாவின் தலையில் இறங்கியது.
“என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகு உங்களது பெண் கச்சேரிகளில் பாடவோ, சினிமாவில் நடிக்கவோ கூடாது. இவை எல்லாவற்றிற்கும் அறவே முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டும்..” என்று அவர் சொன்னவுடன் பானுமதியின் தந்தையான வெங்கட சுப்பையாவிற்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. பல்லைக் கடித்தார். பின்னர் அந்த அறையை விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.
அவரது உறவினர்களில் சிலர் வெங்கடசுப்பையாவை சமாதானப்படுத்தினர். “சினிமாவில் பானுமதி நடிப்பதைத்தான் அவர் விரும்ப மாட்டார். ஆனால், பானுமதி கச்சேரிகளில் பாடக் கூடாது என்ற முடிவில் அவர் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே பாடுவதற்கு மட்டும் அவரிடம் அனுமதி கேட்டு வாங்கிக் கொள்ளலாம் வாருங்கள்..” என்று கூறி அவரை மீண்டும் வீட்டுக்குள் அவர்கள் அழைத்து வந்தார்கள்.
“நீங்கள் சொன்னபடி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடச் சொல்கிறேன் . அவர் மிகப் பெரிய பாடகியாக வர வேண்டும் என்பது எனது வாழ்நாள் லட்சியம் என்பதால் குறைந்தபட்சம் அவர் பாட்டுக் கச்சேரி நடத்துவதற்காகவது நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ராமகிருஷ்ணாவை வேண்டிக் கேட்டுக் கொண்டார் பானுமதியின் தந்தை.
அதற்கு ராமகிருஷ்ணா என்ன பதில் சொன்னார்…?
பதில் அடுத்தப் பதிவில்..!!!
The post சினிமா வரலாறு-25 – நடிகை பானுமதியின் காதல் கதை appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-19 – ஒரு ரூபாய் சம்பளத்துக்கு நடிக்க தயாராக இருந்த கதாநாயகர்..! appeared first on Touring Talkies.
]]>மிகுந்த கடவுள் பக்தி உள்ளவராக விளங்கிய ஏவி. மெய்யப்ப செட்டியார் அவர்களின் இஷ்ட தெய்வம் முருகர்.
அதனால்தான் அவரது பிள்ளைகளுக்குக்கூட பழனியப்பன், முருகன், குமரன், சரவணன், பாலசுப்ரமணியன் என்று முருகக் கடவுளின் பெயர்களையே வைத்தார்.
முருகக் கடவுளின் திருவிளையாடல்களை ‘ஸ்ரீவள்ளி’ என்ற பெயரிலே தயாரிக்க முடிவு செய்த ஏவி.எம். அவர்கள் அந்தப் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் முருகக் கடவுளின் கோவில்கள் பலவற்றிற்கு சென்று முருகப் பெருமானிடம் வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.
“ஸ்ரீவள்ளி திரைப்படம் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னையும் அறியாமல் நான் சில தவறுகள் செய்யலாம். அதற்காக என்னை மன்னித்துக் கொள் முருகா..” என்று முருகனிடம் மனமார வேண்டிக் கொண்டு வந்த பிறகே… அப்படத்தைத் தொடங்கினார் அவர்.
வள்ளியாக நடிக்க குமாரி ருக்மணியை ஒப்பந்தம் செய்துவிட்டு முருகர் வேடத்தில் நடிக்க நல்ல குரல் வளம் மிகக் நடிகரை ஏவி.எம். தேடிக் கொண்டிருந்தபோது அவரைத் தேடி வந்தார் டி.ஆர்.மகாலிங்கம்.
“நீங்கள் வள்ளி படம் எடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் படத்தில் நடிக்க எனக்கு நீங்கள் சான்ஸ் கொடுக்க வேண்டும்” என்று கேட்ட மகாலிங்கம் அதோடு நிறுத்தவில்லை, எந்தத் தயாரிப்பாளரையும் கவரக் கூடிய வார்த்தையை அடுத்ததாகச் சொன்னார். “நீங்கள் சம்பளமாக ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும்” என்பதுதான் அடுத்து அவர் சொன்ன அந்த வார்த்தை.
அவர் கேட்ட சம்பளத்தைப் போல மூவாயிரம் மடங்கு சம்பளம் தர ஒப்புக் கொண்ட ஏவி.எம்., அவர்கள் கூடவே ஒரு நிபந்தனையை விதித்தார். ‘ஸ்ரீவள்ளி’ படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.
வள்ளியாக நடித்த ருக்மணியின் ஒப்பந்தத்திலும் அப்படி ஒரு நிபந்தனையைப் போட்ட ஏவி.எம்., கூடுதலாக இன்னொரு நிபந்தனையையும் குமாரி ருக்மணியின் ஒப்பந்தத்தில் சேர்த்தார். மூன்று திரைப்படங்கள் தொடர்ந்து ஏவி.எம். நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டாவது நிபந்தனை.
ஆனால், அந்த நிபந்தனையை ஏவி.எம்., அவர்களே ரத்து செய்கின்ற சூழ்நிலை ‘ஸ்ரீவள்ளி’ திரைப்படம் முடிவடைகின்ற கட்டத்திலே உருவானது.
‘ஸ்ரீவள்ளி’ படத்திலே டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மணி ஆகிய இருவருக்கும் அடுத்து முக்கிய பாத்திரத்தில் நடித்தது ஒரு யானை. படம் முழுவதும் டி.ஆர்.மகாலிங்கத்திற்கும், குமாரி ருக்மணிக்கும் யானையோடு பல காட்சிகள் இருந்ததால் அந்த யானையோடு தினமும் அவர்களை பழக வைத்தார் ஏவி.எம்.
அப்போது டி.ஆர்.மகாலிங்கம் மைலாப்பூர் மாட விதியில் ஒரு வீட்டின் மாடியில் முப்பது ரூபாய் வாடகையில் குடியிருந்தார். காலையில் வீட்டிலேயே டிபன் எல்லாம் சாப்பிட்டுவிட்டு ஸ்டுடியோவிற்கு வர தயாராக இருப்பார் அவர். ஏவி.எம்.மின் ஆஸ்டின் கார் மாம்பலத்துக்கு சென்று முதலில் குமாரி ருக்மணியை ஏற்றிக் கொண்டு, அதன் பின்னர் மகாலிங்கத்தை அழைத்துக் கொண்டு ஸ்டுடியோ வந்து சேரும்.
ஸ்டுடியோவில் நுழைந்தவுடன் அவர்கள் இருவரும் வாசலில் கட்டிப் போடப்பட்டிருக்கும் யானைக்கு வெல்லமும், தேங்காயும் கொடுத்து அந்த யானையுடன் சிறிது நேரம் பழகிவிட்டுத்தான் ஸ்டுடியோவிற்குள்ளே வருவார்கள்.
இப்படி யானையோடு அவர்கள் தினமும் பழகியதில் அந்த யானை அவர்களோடு மிகவும் நெருக்கமாகிவிட்டது. குமாரி ருக்மணி “நில்” என்றால் நிற்கும். “உட்கார்” என்றார் உட்காரும்.
இப்படி, அந்த யானையோடு குமரி ருக்மணிக்கும் டி.ஆர்.மகாலிங்கத்துக்கும் இருந்த நெருக்கம் ‘ஸ்ரீவள்ளி’ படத்தின் படப்பிடிப்பில் மிகவும் உதவியாக இருந்தது.
யானை தனது துதிக்கையால் ருக்மணியைத் தூக்கி, முருகர் மடியில் வீசுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது அந்த யானை மிகவும் லாவகமாக ருக்மணிக்கு கொஞ்சம்கூட வலி ஏற்படாத அளவில் பூ போல அவரைத் தூக்கி வீசியது. அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது அந்த யானை மட்டும் கொஞ்சம் அழுத்திப் பிடித்திருந்தால் ருக்மணியின் இடுப்பு எலும்பு ஒன்றுகூட தப்பியிருக்காது.
“எந்த ஒரு படத்தையும் உருவாக்குவதற்கு முன்னர் அந்தப் படத்திற்கு முழு ஒத்திகை பார்ப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்தப் படம் தரமான படமாக இருக்கும்” என்று இப்போது கமல்ஹாசன் பல பேட்டிகளில் சொல்லி வருகிறார் அல்லவா… அதை 1945-ம் ஆண்டிலேயே செயல்படுத்தியவர் ஏவி.மெய்யப்ப செட்டியார்.
“அப்போது அந்தப் படத்தை எடுப்பதைத் தவிர வேறு வேலை எங்களுக்குக் கிடையாது என்பதால் எங்கள் முழு கவனமும் ஸ்ரீவள்ளி படத்தை உருவாக்குவதில்தான் இருந்தது. காலையில் எனது பங்குதாரரான சுப்பையாவையும், உதவி இயக்குநரான ஏ.டி.கிருஷ்ணசாமியையும் அழைத்துக் கொண்டு ஸ்டுடியோவிற்கு வந்து விடுவேன்.
நானோ, கிருஷ்ணசாமியோ அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் இல்லை என்பதால் பல முறை ரிகர்சல் பார்ப்போம். ‘மகாலிங்கம் நீ வசனத்தை இப்படி சொல்’, ‘ருக்மணி நீ இப்படி நடி’ என்று பல முறை அவர்களை நடிக்கச் சொல்லி ரிகர்சல் பார்த்து எங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே டேக் எடுப்போம்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ஏவி.எம்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் முழு படத்தையும் போட்டுப் பார்த்தார் ஏவி எம். கதாநாயகி ருக்மணி பத்னெட்டு வயதில் பருவத்தின் வாசலில் இருந்ததாலும் அவருக்கு ஜோடியாக நடித்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு அப்போது இருபத்தோரு வயதுதான் என்பதாலும் அவர்களது ஜோடிப் பொருத்தம் மிகவும் அழகாக அமைந்திருந்தது. நிச்சயம் அந்த ஜோடியைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் திரும்பத் திரும்ப படத்திற்கு வருவார்கள் என்று ஏவி. எம். எண்ணினார்.
இருப்பினும், ஒரு விஷயம் அந்த படத்தின் வெற்றியைக் குலைக்கும் என்று அவருக்குத் தோன்றியது. டி.ஆர்.மகாலிங்கத்தின் கணீர்க் குரலுக்கு எதிரில் குமரி ருக்மணியின் குரல் மிகவும் பலவீனமாக இருந்தது. அது மட்டுமின்றி அவரது குரலில் இனிமையும் இல்லை. ஆகவே அவரது குரலை மாற்றினால் மட்டுமே படம் வெற்றியடையும் என்ற முடிவுக்கு வந்தார் ஏவி.எம்.
அப்பொழுது வெளியாகியிருந்த ‘சபாபதி’ என்ற படத்தில் அப்போதைய பின்னணிப் பாடகியான பி.ஏ.பெரியநாயகி மிகவும் அருமையாகப் பாடியிருந்தார். ஆகவே, அவரைப் பாட வைத்து அந்தக் குரலை, ருக்மணியின் குரலுக்கு பதிலாக பதிவு செய்வது என்று முடிவெடுத்தார் அவர்.
முடிவெடுப்பது சுலபமாக இருந்தது. ஆனால் செயல்படுத்துவதில் சில சங்கடங்கள் முளைத்தன.
“என் குரலை மற்ற நான் சம்மதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி விட்டார்” குமாரி ருக்மணி. இப்போது செட்டியாருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் குமாரி ருக்மணி ஏன் அப்படி பிடிவாதமாக இருக்கிறார் என்பதைப் பற்றிய ரகசியம் அவருக்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து மூன்று ஏவி.எம். தயாரிப்புகளில் நடிக்க வேண்டும் என்று குமாரி ருக்மணியுடன் ஏவி.எம். ஒப்பந்தம் போட்டிருந்தார் அல்லவா. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய அந்த சிக்கலான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த ருக்மணி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏவி.எம். சம்மதித்தால் தனது குரலை மாற்ற தான் ஒப்பதல் தருவதாக தெரிவித்தார்.
‘ஸ்ரீவள்ளி’ படத்தை எடுத்தவரை ருக்மணியும் பார்த்திருந்தார். ஆகவே, நிச்சயம் அந்தப் படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது அப்படி அந்தப் படம் வெற்றி பெறும்போது தான் ஏவி.எம்.முடன் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் இருந்தால் தன் விருப்பப்படி படங்களை ஒப்புக் கொள்ள முடியாதே என்பதால்தான் அப்படி ஒரு நிபந்தனையை ஏவி.எம்.மிடம் விதித்தார் ருக்மணி.
இந்த நிபந்தனையை விதிக்கும்போது குமாரி ருக்மணிக்கு வயது பதினெட்டு. அதுதான் அவருக்கு முதல் படம். அந்த கால கட்டத்திலேயே நடிகைகள் எவ்வளவு தெளிவாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
அவர் இப்படி ஒரு நிபந்தனையை விதித்தவுடன் ஏவி.எம். அது பற்றி யோசித்துப் பார்த்தார். ‘ஸ்ரீவள்ளி’ படம் வெற்றி பெறவில்லையென்றால் குமாரி ருக்மணியுடன் எத்தனை படங்களுக்கு ஒப்பந்தம் போட்டாலும் என்ன பயன் இருக்கப் போகிறது.
படம் ஓடினால்தானே அந்த ஒப்பந்தத்தால் பயன் இருக்கும். ஆகவே அந்த ஒப்பந்தத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை ஓட வைப்பதற்குத்தான் வழி காண வேண்டும் என்று முடிவெடுத்த அவர், உடனடியாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தனது ஒப்புதலைத் தெரிவித்தார்.
அதற்குப் பிறகு பெரியநாயகியின் குரலில் பாடலைப் பதிவு செய்து வெளியிடப்பட்ட ‘ஸ்ரீவள்ளி’ திரைப்படம் அதுவரை ஏவி.எம். எடுத்த எந்தப் படமும் பெறாத வெற்றியைப் பெற்றது.
இரண்டு லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம், இருபது லட்சம் ரூபாய் லாபத்தை ஈட்டித் தந்தது.
மதுரை சென்டரல் தியேட்டரில் மட்டும் 55 வரங்கள் ஒடி சாதனை புரிந்தது அந்தப் படம்.
The post சினிமா வரலாறு-19 – ஒரு ரூபாய் சம்பளத்துக்கு நடிக்க தயாராக இருந்த கதாநாயகர்..! appeared first on Touring Talkies.
]]>