The post விஷம் குடித்த சந்திரபாபு! காப்பாற்றிய பிரபல நடிகர்! appeared first on Touring Talkies.
]]>திரைப்படங்களில் நடிக்க விரும்பி சென்னை வந்த அவர், பல ஸ்டுடியோக்களின் படிகளில் ஏறி இறங்கி வாய்ப்பு தருமாறு கேட்டார். ஆனால் எங்கும் இவரை பொருட்படுத்தவே இல்லை.
இந்த வரிசையில் அப்போது பிரபலமாக இருந்த ஜெமினி ஸ்டுடியோவுக்குச் சென்று வாய்ப்பு கேட்டார். அங்கும் கைவிரித்துவிட்டார்கள்.
உடனே , தன் பையில் வைத்திருந்த விச பாட்டிலை எடுத்த குடித்துவிட்டார். மயங்கி விழுந்துவிட்டார்.
அப்போது அங்கு கிளார்க்காக பணியில் இருந்த ஜெமினி கணேசன்தான், சந்திபாபுவை தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.
சிகிச்சை அளிக்கப்பட்டு தேறிய சந்திரபாபுவுக்கு ஜெமினி நிறுவனத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்.
மேற்கண்ட சம்பத்தை முழுமையாக அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
The post விஷம் குடித்த சந்திரபாபு! காப்பாற்றிய பிரபல நடிகர்! appeared first on Touring Talkies.
]]>The post முதலிரவில் மனைவியை துரத்தியடித்த சந்திரபாபு! appeared first on Touring Talkies.
]]>பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த ஏழு நாட்கள் கதையே, சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்ததுதான் என்றும் சொல்வார்கள்.
அதாவது, முதலிரவு அன்று, மணப்பெண் தனது காதலனைப் பற்றி கூற… மணமகன் அதிர்ச்சி அடையாமல், அந்த காதலனுடன் மனைவியை சேர்த்துவைக்க முயல்வதுதான் கதை.
“இப்படித்தான் நிஜ வாழ்க்கையில் செய்தார் சந்திரபாபு..” என்று நெகிழ்பவர்கள் உண்டு.
ஆனால் நிஜத்தில் நடந்தது வேறு.
இது குறித்து, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பத்திரிகையாளரும் திரைப்பட இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பேசியதில் இருந்து..
“ 1958 ஆம் ஆண்டு சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார். பெங்களூருக்கு மனைவியை அழைத்து கொண்டு சந்திரபாபு தேனிலவுக்கு சென்றார். ஏற்கெனவே தனக்கு இருந்த காதல்கள் குறித்து சந்திரபாபு கூறினார். மனைவியிடமும் மனம் திறந்து பேசுமாறு கூறினார்.
கணவர் இவ்வளவு வெளிப்படையாக பேசும்போது, நாம் எதையும் மறைக்கக்கூடாது என நினைத்த மனைவிய, தனக்கு இருந்த காதல் பற்றி கூறினார்.
இதை எதிர்பார்க்காத சந்திரபாபு, ஆத்திரமாக, முதலிரவு அன்றே மனைவியை வெளியில் தள்ளி கதவைப் பூட்டிக்கொண்டார்.
சந்திரபாபு மற்றும் அவரது மனைவிக்கு காட் பாதராக இருந்தவர், கே.சுப்ரமணியன். அவர் இருவரையும் சமாதானப்படுத்தினார். ஆனால் சந்திரபாபு, ‘சேர்ந்து வாழச் சொன்னால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்றார். ஆகவே தம்பதி, முதலிரவோடு பிரிந்தனர்.
அந்த பெண்மணி பிறகு லண்டன் சென்று படித்தார்.
இந்த விசயத்தை, கே.சுப்ரமணியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயக்குநர் பழமுதிர் சோமநாதன் பதிவு செய்து உள்ளார்” என சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
இது போன்ற மேலும் பல சுவாரஸ்ய தகவல்களுக்கு touring talkies யு டியுப் சேனல் பாருங்கள்..
The post முதலிரவில் மனைவியை துரத்தியடித்த சந்திரபாபு! appeared first on Touring Talkies.
]]>The post டார்ச்சர் சந்திரபாபு! appeared first on Touring Talkies.
]]>கண்ணதாசன் தயாரித்து கே. சங்கர் இயக்கிய கவலை இல்லாத மனிதன் படத்தில் நடந்த சம்பவத்தை, அப்பபடத்தின் உதவி இயக்குனரும் நடிகருமான ரா. சங்கரன் கூறினார்.
“அந்த படத்தின் நாயகன், மறைந்த நடிகர் சந்திரபாபு. அவர், மிகச்சிறந்த நடிகர், பாடகர் என பன்முகம் கொண்டவர். கலகலப்பாக பழகக் கூடியவர். அதே நேரம் சில சமயங்களில் அவரது நடவடிக்கை பிறரை பாதித்து விடும்.
படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. இதனால் பலமுறை படப்பிடிப்பு பாதித்துவிட்ட சூழல்.
அப்படி நடந்த ஒரு சமயத்தில், கண்ணதாசன் “நானே போய் அழைத்துவருகிறேன்” என்று சந்திரபாபு வீட்டிற்கே போய்விட்டார்.
இவர் வருவதை அறிந்த சந்திரபாபு பின்வாசல் வழியாக வெளியே சென்றுவிட்டார். இது தெரியாத கண்ணதாசன் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு திரும்பினார்.
கடும் கோபத்துடன் படப்பிடிப்பு தளத்துக்கு கண்ணதாசன் வர.. அங்கே நடித்துக்கொண்டு இருந்தார் சந்திரபாபு.
கண்ணதாசனுக்கு சிரிப்பதா அழுவதா என தெரியாத நிலை” என்று அந்த சம்பவத்தை விவரித்தார் ரா.சங்கரன்.
The post டார்ச்சர் சந்திரபாபு! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>பின்னர் படப்பிடிப்பு ஒழுங்காக நடைபெறுகிறதா என்று தெரிந்து கொள்ள ஸ்டுடியோவிற்கு அவர் தொடர்பு கொண்டபோது சந்திரபாபுவிற்காகத்தான் எல்லோரும் காத்திருப்பதாகவும் அவர் இன்னமும் வரவில்லை என்றும் அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன், சிறிது நேரம் கவிஞருக்கு பேச்சே வரவில்லை.
சந்திரபாபு படப்பிடிப்பிற்கு வராததைவிட அவர் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் பின் வாசல் வழியாக வெளியேறியது அவர் மனதை மிகவும் பாதித்தது.
தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அவமானமாக அந்த சம்பவத்தைக் கருதினார் கண்ணதாசன். படம் என்ன ஆகுமோ என்ற பயமும் கடன்காரர்களுக்கு என்ன பதிலைச் சொல்வது என்ற கவலையும் அவரை சூழ்ந்து கொண்டது.
அங்கிருந்து ஸ்டுடியோவிற்குப் போன அவர் தனது துயரத்தை எல்லாம் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதார். சந்திரபாபுவிற்காக அவர் வீட்டில் காத்திருந்ததைப் பற்றியும் அவரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் சந்திரபாபு பின் வாசல் வழியாக சென்றதைப் பற்றியும் ‘எனது சுய சரிதம்’ என்ற புத்தகத்தில் அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.
“எந்த வீட்டிலும் போய் நாற்காலியில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு வந்தது கிடையாது. மந்திரிகளில் முதன் மந்திரியாக இருந்த என் நண்பர் கருணாநிதியின் விட்டுக்கு மட்டும்தான் போவேன். இன்ன நேரத்தில் சந்திப்பதென்று நேரத்தை முன் கூட்டியே முடிவு செய்து கொண்டுதான் போவேன்.
சந்திரபாபு வீட்டில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்த பிறகு சினிமா நடிகர்களைப் பற்றி எனக்கு ஒரு கெட்ட அபிப்ராயமே ஏற்பட்டது. அளப்பரிய திறமை இருந்தாலும் ஆணவம் ஒரு மனிதனை அழித்துவிடும்.
சந்திரபாபு அளப்பரிய திறமையுடையவர் என்று சொல்ல முடியாது ஆனால் அவருக்கு எல்லையில்லா ஆணவம் இருந்தது. ஆணவத்தால் அழிந்து போனவர்கள் பல பேரை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஆணவத்தால் தொழிலை அலட்சியப்படுத்தியவர்கள் பல பேர் இன்று சோற்றுக்கு அலைகிறார்கள்.
சுமார் இருபத்தி ஐந்தாண்டு காலமாக இந்த பட உலகில் சிலரை வளமாகவும் நிரந்தரமாகவும் ஆண்டவன் வைத்திருக்கிறான்.
தம்பி விஸ்வநாதன், மாமா கே.வி.மகாதேவன், டி.எம்.சவுந்திரராஜன், பி.சுசீலா, நான் ஆகியோர் எங்கள் தொழிலில் காட்டுகின்ற ஆர்வம், பயம், பணிவு ஆகியவைகள்தான் கால் நூற்றாண்டு காலமாக எங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு பாட்டிற்கு இசையமைக்கும்போது தயாரிப்பாளருக்கோ, இயக்குநருக்கோ ஒரு மெட்டு பிடிக்கவில்லை என்றால் தம்பி விஸ்வநாதன் பத்து மெட்டுக்கள் போடுவான். டைரக்டர்களுக்கு பிடித்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும், மீண்டும் போட்டுக் கொண்டே இருப்பான்.
மாமா மகாதேவனும் அதே மாதிரிதான். நானும் மற்றவர்களுக்கு திருப்தி ஏற்படுகின்றவரை மாற்றி மாற்றி எழுதிக் கொண்டே இருப்பேன். சுசிலாவும், சவுந்திரராஜனும் பாட்டு நன்றாக அமையும்வரை அலுப்படையாமல் பாடல்கள் பாடுவார்கள்.
எங்களது வெற்றியின் ரகசியம் எங்கள் திறமையில் மட்டும் இல்லை. தொழிலில் உள்ள பொறுப்பு, பயம், ஒவ்வொரு பாட்டும் ரசிக்கப்பட வேண்டும் என்ற ஆசை. இந்தத் தொழில் நம்மை கைவிட்டு விடக்கூடாது என்ற கவலை ஆகிய எல்லாமே அதற்குக் காரணம்.
இவற்றை எல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம் தொழிலை தெய்வமாக மதித்து பொறுப்பாகச் செய்கின்ற எவனையும் இந்தத் தொழில் கைவிடாது. ஆணவம் பிடித்து மற்றவர்களை அலட்சியப்படுத்தினால் ஒரு நாளைக்கு அவர்களுடைய படிக்கட்டிலேயே ஏறி ஐம்பது ரூபாய் யாசகம் கேட்க வேண்டி வரும்.
பண விஷயத்தில் நான் பிடிவாதம் பிடித்தது இல்லை, பேரம் பேசியதில்லை, ரேட்டை திடீர். திடீரென்று உயர்த்தியதில்லை. கஷ்டப்பட்டு ஒருவர் படம் எடுத்தால் அவர் கொடுப்பதை வாங்கிக் கொள்வேன்.வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் அவர்களாகவே நான் கேட்பதை கொடுத்துவிடுவார்கள்.
அவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் நான் இலவசமாகக்கூட ஒத்துழைப்பேன். அதனால்தான் எனக்குக் கஷ்டம் வரும்போது எல்லோருமே உதவி செய்கிறார்கள்.
ஆணவக்காரர்கள் மட்டுமே தொழிலின்றி அலைகிறார்கள், அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர் என்பதைச் சொல்ல வேண்டியது எனது கடமையாகிறது” என்று அந்த நூலிலே குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்
தனது வாழ்நாளில் கவிஞர் யாரையும் அந்த அளவு கடுமையாக விமர்சித்ததே இல்லை. ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திலே ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’ பாடல் உட்பட மிகச் சிறந்த பாடல்கள் பெற்றிருந்தன. ஆனால், அந்தப் பாடல்களாலும் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
முன்பின் தொடர்பில்லாத குழப்பமான கதை, கதாநாயகனாக நடித்த சந்திரபாபுவின் அலட்சியப் போக்கு ஆகிய எல்லாமாகச் சேர்ந்து அந்தப் படத்தை மிகப் பெரிய தோல்விப் படமாக ஆக்கியது. அந்தப் படம் வெளியானபோது ஐந்து லட்சத்து தொண்ணூறு ரூபாய் கடனாளியாகி இருந்தார் கண்ணதாசன்.
அப்போது கண்ணதாசனின் பட நிறுவனத்தில் பதினோரு கார்கள் இருந்தன. அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற கார்கள் அனைத்தையும் அந்த கார்களின் மீது யார் யார் கடன் கொடுத்திருந்தார்களோ அவர்களது வீட்டில் கொண்டுபோய் விடச் சொன்னார் கண்ணதாசன்.
அடுத்து கம்பெனி இருந்த அலுவலகத்தை காலி செய்தார். அங்கிருந்த சாமான்கள அனைத்தையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டிலே போட சொன்னார்.
அந்தப் படத்திற்குப் பிறகு பாடல்கள் எழுதி அவர் சம்பாதித்த பணம் முழுவதும் கடன்காரர்களுக்கு வட்டித் தொகை செலுத்தவே சரியாக இருந்தது.
சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சேலம் டவுனில் டாக்டர் செரியன் என்று ஒரு பல் டாக்டர் இருந்தார். அந்த டாக்டருக்கு கைரேகை பார்த்து பலன் சொல்வது என்றால் மிகவும் இஷ்டம்.
அவருடன் ஒரு முறை கண்ணதாசன் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணதாசனின் கையைப் பார்த்துவிட்டு “இந்தக் கை லட்சம் லட்சமாக சம்பாதிக்கும். ஆனால் பணம் வருவதற்கு முன்பே கடன் வந்து விடும். ஐம்பது வயதிற்கு மேல் ஐம்பத்தி ஆறாவது வயதிற்குள் நீ சந்நியாசியாகவோ ஏகாந்தத்தை நாடுகிறவனாகவோ ஆகி விடுவாய்’ என்று அவரிடம் கூறினாராம்.
‘கவலை இல்லாத மனிதன்’ பட தோல்விக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலையைப் பார்த்தவுடன் கண்ணதாசனுக்கு அவர் நினைவுதான் வந்தது
‘கவலை இல்லாத மனிதன்’ என்று படத்திற்கு பெயர் வைத்ததினாலேயே கடவுள் என்னைத் தண்டித்து விட்டார். மனிதன் எப்படி கவலை இல்லாமல் இருக்க முடியும் என்று கடவுள் என்னிடம் சவால் விட்டதாகவே நான் உணர்ந்தேன் என்று ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தை எடுத்த அனுபவம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் கண்ணதாசன்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-35-சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>அந்த படத்திலே ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட கண்ணதாசன் தீவிரமாக முயற்சி செய்தபோது இயக்குநர் ஏ.பீம்சிங் அவருக்கு உதவ முன் வந்தார். கண்ணதாசனின் பட நிறுவனத்துக்காக சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்க தான் ஒரு படத்தை இயக்கித் தருவதாக சொன்னார்.
அப்போது சிவாஜிகணேசன்- ஏ.பீம்சிங் இணைந்து பணியாற்றிய படங்களுக்கென்று ஒரு தனி மார்க்கெட் உருவாகி இருந்தது. அவர்கள் இருவரும் இணைந்த எல்லா படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்ததால், அவர்கள் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பீம்சிங்கும், சிவாஜியும் வலிய வந்து உதவி செய்கிறேனென்று சொன்னபோதிலும் அதை கண்ணதாசன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அதற்குக் காரணம் ‘விதி’ என்றுதான் சொல்ல வேண்டும்.
சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் அவர் கதாநாயகனாக நடிக்க ‘கவலை இல்லாத மனிதன்’ என்ற படத்தைத் தயாரித்தார். அதற்குப் பிறகு ஒரு நாள்கூட கவலை இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.
சந்திரபாபுவை வைத்துப் படமெடுப்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு வேலையல்ல. அவர் சரியான நேரத்திற்கு சூட்டிங்கிற்கு வர மாட்டார். அப்படியே வந்தாலும் எப்போது செட்டில் இருப்பார், எப்போது காணாமல் போவார் என்று தெரியாது. அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுப்பார். பேசிய பணத்தைவிட அதிகமாகப் பணம் கேட்பார்.
அது தவிர, அவரை வைத்துப் படமெடுத்தால் குறிப்பட்ட நேரத்தில் படத்தை வெளியிட முடியாது என்றெல்லாம் அவரை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள் எல்லோருமே அப்போது அவரைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தனர்.
சந்திரபாபு தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் தன்னிடம் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்று திடமாக நம்பினார் கண்ணதாசன்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் சந்திரபாபுவோடு முடிந்து போய்விட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் நடிகர்கள் திரையுலகில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
அதைப் போன்று நம்முடைய படத்துக்கு நிச்சயமாக அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்ற எண்ணத்தில் அந்த நடிகரை ஒப்பந்தம் செய்கிறவர்களும் இன்றுவரை இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
கே.சங்கர் இயக்க சந்திரபாபுவிற்கு ஜோடியாக எல்.விஜயலட்சுமி நடித்த அந்த படத்தில் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.ராஜம். ராஜ சுலோசனா என்று பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்தனர்.
சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஏவி.மெய்யப்ப செட்டியாரின் பிரகதி ஸ்டுடியோவிற்கு விண்ணப்பித்து பின்னர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட கண்ணதாசன் முதன் முதலில் நடித்த படமாக சிவாஜி கதாநாயகனாக அறிமுகமான ‘ பராசக்தி’ படம் அமைந்தது.
அந்தப் படத்திலே நீதி மன்றக் காட்சியில் கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களை சிவாஜி பேசியபோது நீதிபதியின் வேடத்திலே அந்தப் படத்திலே அமர்ந்திருந்தவர் கண்ணதாசன்தான்.
அவர் நடித்த இரண்டாவது படமாக ‘கவலை இல்லாத மனிதன்’ படம் அமைந்தது. அந்தப் படத்தின் முதல் காட்சியிலேயே கல்லூரிப் பட்டமளிப்பு விழாவிலே அவர் பேசிய காட்சி இடம் பெற்றது.
‘கவலை இல்லாத மனிதன்’ படத்தின் படப்படிப்பு நடைபெற்றபோது அந்தப் படத்திலே நடித்த எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா உட்பட எல்லா நட்சத்திரங்களும் காலை ஒன்பது மணிக்கு படப்பிடிப்புக்கு எட்டு மணிக்கே மேக்கப்பைப் போட்டுக் கொண்டு தயாராகி விடுவார்கள்.
ஆனால் சந்திரபாபுவைப் பொறுத்தவரை தினமும் காலை 10 மணிக்குதான் அவர் எழுந்திருப்பார். அதைத் தொடர்ந்து அவர் குளித்து தயாராகி படப்பிடிப்பு தளத்திற்கு வர எப்படியும் குறைந்தது 11 மணியாகிவிடும். அதற்குப் பிறகு மேக்கப் போட்டுக் கொண்டு 12 மணி அளவில் சூட்டிங்கிற்கு வருவார் அவர்.
ஏதோ ஒரு நாள் அவர் அப்படி 12 மணிக்கு படப்பிடிப்பிற்கு வந்தார் என்றால் மற்ற நட்சத்திரங்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். தினமும் அப்படி வருவதை அவர் வழக்கமாக வைத்துக் கொண்டதால் தயாரிப்பு நிர்வாகி வீரய்யாவை அழைத்த அவர்கள் “கவிஞரை சந்திரபாபுவிடம் பேசச் சொல்லுங்கள். நாங்களும் நடிகர்கள்தானே. அவருக்காக தினமும் நாங்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எப்படி..?” என்று அவரிடம் கேட்டனர். இந்தத் தகவல் சந்திரபாபுவிற்கும் போனது.
அவர்கள் எல்லோரும் அப்படி தங்களது குறையை வெளிப்படையாகத் தெரிவித்த பிறகாவது சந்திரபாபு நேரத்துக்கு படப்படிப்பிற்கு வரத் தொடங்கினாரா என்றால் இல்லை. வழக்கம்போல 12 மணிக்குத்தான் மேக்கப்புடன் செட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் அப்படி 12 மணிக்கு அவர் படப்படிப்பிற்கு வந்தவுடன் “பாலையா அண்ணனையும், ராதா அண்ணனையும்” வரச் சொல்லுங்கள் என்றார் இயக்குநர் கே.சங்கர்.
அவர்களை அழைத்து வர மேக்கப் அறைக்குச் சென்ற உதவி இயக்குநர் அவர்கள் அங்கே இல்லை என்ற விவரத்தை சொன்னவுடன் தயாரிப்பு நிர்வாகியான வீரய்யா அந்த ஸ்டுடியோ முழுவதும் அவர்களைத் தேடிப் பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் எங்கேயும் இல்லை.
சந்திரபாபுவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக அவர் செட்டுக்குள் நுழைந்தவுடன், அவர்கள் இருவரும் தங்களது காரில் ஏறி வீட்டுக்கு போய்விட்டனர்.
இந்த அதிர்ச்சி வைத்தியத்திற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்தார் சந்திரபாபு.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைகின்ற கட்டத்துக்கு வந்தபோது மீண்டும் தனது வழக்கமான பாணிக்கு திரும்பினார் சந்திரபாபு.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது காலை ஏழு மணி முதலே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டார் இயக்குநர் சங்கர்.
ஒன்பது மணி படப்பிடிப்பிற்கே ஒழுங்காக வராத சந்திரபாபுவிடம் காலை ஏழு மணிக்கே படப்பிடிப்பிற்கு வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டபோது அதற்கு லேசான மறுப்பைக்கூட சந்திபாபு தெரிவிக்கவில்லை.
ஆனால், அதற்குப் பதிலாக “ஏழு மணிக்கு வர வேண்டும் என்றால், முதலில் பேசிய சம்பளத்திற்கும் மேலாக இருபதாயிரம் ரூபாய் வேண்டும்..” என்றார்.
எப்படியாவது படத்தை முடித்தால் போதும் என்ற மன நிலைக்கு அப்போது வந்துவிட்டிருந்த கண்ணதாசன் எந்தவிதமான மறுப்பையும் சொல்லாமல் உடனடியாக இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.
அப்படிப் பணம் கொடுத்த பிறகும் படப்பிடிப்பு தினத்தன்று அவர் சீக்கிரம் வராமல் இருந்து விட்டார் என்றால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தில் ஒரு நாள் காலையில் எழுந்ததும் நேராக சந்திரபாபு வீட்டுக்கு போனார் கண்ணதாசன்.
உள்ளே அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பையன் சொன்னான். ஸ்டுடியோவிலோ எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, ராஜ சுலோசனா ஆகியோர் காலை ஆறு மணிக்கே மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தார்கள்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளியில் உடகார்ந்து கொண்டிருந்த கண்ணதாசன் பொறுமை இழந்து அங்கிருந்த பையனை அழைத்தார்.
“இப்போதாவது எழுந்து விட்டாரா என்று உள்ளே போய் பாரப்பா…?” என்றார்.
“அவர் எழுந்து பின்பக்கமாக அப்போதே போய்விட்டாரே” என்று அந்தப் பையன் சொன்ன பதில் அவரை நிலை குலைய வைத்தது.
அந்தப் பையன் சொன்னதைக் கேட்டதும் கண்ணதாசன் தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்தது.
அடுத்து கவிஞர் என்ன செய்தார் எனபதை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-35-சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>