The post கஜோல் நடிப்பில் ஹிந்தி படத்தை இயக்குகிறார் நடிகை ரேவதி appeared first on Touring Talkies.
]]>ரேவதி, ஏற்கெனவே ’மித்ரு மை ஃபிரெண்ட்’, ’பிர் மிலேங்கே’, ’கேரளா கஃபே’ படங்களை இயக்கியுள்ளார். இப்போது நான்காவது படமாக இந்த ’சலாம் வெங்கி’ என்ற இந்திப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தை பிளிவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சுராஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால், வர்ஷா குக்ரேஜா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை கஜோல் நடிக்கிறார். நம்ப முடியாத ஒரு உண்மைக் கதையை மையக் கருவாகக் கொண்டு இந்தப் படம் உருவாகப் போவதாக இயக்குநர் ரேவதி தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இந்தத் தகவலை நடிகை கஜோல் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், “நாங்கள் இன்று சொல்லப்பட வேண்டிய கதை, தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை, கொண்டாட வேண்டிய வாழ்க்கை ஆகியவற்றைக் கொண்ட பயணத்தை தொடங்கி இருக்கிறோம். ’சலாம் வெங்கி’யின் நம்ப முடியாத உண்மைக் கதையை உங்களிடம் பகிரக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் ரேவதி கூறும்போது, “இந்தப் படத்தில் சுஜாதா என்ற தாயின் பயணம் இருக்கிறது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பயணம் அது. இந்த கேரக்டருக்கு கஜோல்தான் என்று முதலிலேயே முடிவு செய்துவிட்டோம்.
அவரது அழகான கண்களும், அழகானப் புன்னகையும் எதையும் சாத்தியம் என நம்ப வைக்கும் ஆற்றல் கொண்டவை. அவருடன் இணைந்து பணிபுரிவதில் ஆவலாக இருக்கிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.
The post கஜோல் நடிப்பில் ஹிந்தி படத்தை இயக்குகிறார் நடிகை ரேவதி appeared first on Touring Talkies.
]]>The post ‘மண் வாசனை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை டி.ராஜேந்தரால் இழந்த நளினி..! appeared first on Touring Talkies.
]]>இத்திரைப்படத்தில்தான் நடிகை ரேவதி நாயகியாக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
“இத்திரைப்படத்தில் நாயகியாக நடிகை நளினி நடித்திருக்க வேண்டிய சூழலை இயக்குநர் டி.ராஜேந்தர் தடுத்துவிட்டார்…” என்கிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
இது குறித்து தனது ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் தளத்தில் இருந்து வெளிவரும் ‘எனக்குள் ஒருவன்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார்.
அவர் பேசும்போது, “1983-ம் ஆண்டில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் எனது தயாரிப்பில் உருவான முதல் படமான ‘மண் வாசனை’ படத்தில் நடிப்பதற்காக நாயகியைத் தேடி நான் அலைந்து கொண்டிருந்தேன்.
அப்போதுதான் டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம் தயாராகிக் கொண்டிருந்தது. அத்திரைப்படத்தில் நாயகியாக நடித்த நளினிக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் அனுராதா என்னும் பின்னணி கலைஞர்.
அவரிடம் ஒரு நாள் நான் பேசிக் கொண்டிருக்கும்போது புது நாயகியைத் தேடி நான் அலைவதைப் பற்றி அவரிடம் சொன்னேன். அப்போது அவர், “நான் இப்போது ‘உயிருள்ளவரை உஷா’ என்ற படத்திற்கு டப்பிங் செய்து கொண்டிருக்கிறேன். இதில் நளினி என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். நல்லா நடிச்சிருக்கார். நீங்க போய் பாருங்க.. உங்களுக்குப் பிடிக்கும்..” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டபோதே நமக்கு ஒரு நாயகி கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷத்திற்கே போய்விட்டேன். மறுநாளே அந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஏ.பி.நாகராஜனின் டப்பிங் தியேட்டருக்கு நளினியின் நடிப்பைப் பார்ப்பதற்காக சென்றேன்.
ஆனால், அங்கே இருந்த படத்தின் இயக்குநரான டி.ராஜேந்தர் என்னை உள்ளே அனுமதிக்கவே இல்லை. தான் அறிமுகப்படுத்தும் நாயகியை வேறு யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்தார்.
டி.ராஜேந்தரின் பிடிவாதத்தால் என்னால் அப்போது நளினியை பார்க்க முடியவில்லை. ‘உயிருள்ளவரை உஷா’ படம் வெளியான பின்புதான் பார்த்தேன். முன்பேயே நளினியின் நடிப்பைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தால், ஒருவேளை அவரே ‘மண் வாசனை’யில் நடித்திருப்பார். இந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்தது இயக்குநர் டி.ராஜேந்தர்தான்..” என்று சொல்லியிருக்கிறார்.
The post ‘மண் வாசனை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை டி.ராஜேந்தரால் இழந்த நளினி..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..! appeared first on Touring Talkies.
]]>இந்த வாரம் அவர் பேசும்போது மேலும் சில சுவையான விஷயங்களை ரசிகர்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பாரதிராஜா பேசும்போது, “மண் வாசனை’ படத்தின் துவக்கத்தில் பாண்டியனை ஏற்கத் தயங்கிய தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், வசனகர்த்தா கலைமணி, மற்றும் எனது உதவி இயக்குநர்கள் அனைவரும் பின்பு ஒரு கட்டத்தில் பாண்டியனின் நடிப்பைப் பார்த்துவிட்டு ‘இவரைத் தவிர வேறு யாரும் கச்சிதமா இந்தக் கேரக்டருக்கு பொருந்தியிருக்க மாட்டார்கள்’ என்று பாராட்டினார்கள். ஆனால், என்னுடைய தேர்வில் அவர்களுக்கு இருந்த சந்தேகம்தான் எனக்குப் பெரும் வருத்தமாக இருந்தது.
அந்தப் படத்தின் துவக்கத்தில் எனது அம்மா, அப்பா இருவரையும் வயற்காட்டில் வேலை செய்து கொண்டிருப்பதுபோல காட்டியிருந்தேன். எனது மண்.. எனது ஊர்.. எனது கலாச்சாரம்.. எனது மொழி.. என் பண்பாடு.. என்று எனக்குள் விதைக்கப்பட்டிருந்த கதைகளை நான் வெளிப்படுத்தும் வாய்ப்பு என் தாய், தந்தையால்தான் எனக்குக் கிடைத்தது. அவர்களை ஒரு காட்சியில் உலகத்திற்குக் காட்ட நினைத்து அதில் நான் பெருமிதமடைந்தேன்.
படத்தில் ‘முத்துப் பேச்சி’யாக நடித்த ரேவதி பரத நாட்டிய டான்ஸர். மிக அழகாக முக பாவனைகளைக் காட்டுவார். ஆனால் ‘வெட்கப்படு’ என்று நான் சொன்னபோது அதனை அவரால் தன் முகத்தில் கொண்டு வர முடியவில்லை. இதற்காக என்ன செய்தோம் என்றால், ரேவதியின் இடுப்பில் மெல்லிசாக ஒரு குச்சியால் வருடியபோது அவர் சற்று நாணி கோணினார். ‘ஓகே.. இதுதான் வெட்கம்..’ என்று சொல்லி எடுத்து முடித்தேன். இதுபோல அந்தப் படத்தில் எண்ணற்ற அனுபவங்கள் எனக்குக் கிடைத்தது.
அந்தப் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வினு சக்கரவர்த்தி ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். என்னை முதன்முதலில் பார்க்க வந்தபோது கதை சொல்லத்தான் வந்தார். அவர் சொல்லிய கதை ‘வண்டிச்சக்கரம்.’ பின்னர் அந்தக் கதை படமாக வந்து நன்றாக ஓடியது.
இந்தப் படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு யாரை போடலாம் என்று எனக்கு யோசனை வந்தபோது பட்டென்று நினைவுக்கு வந்தது வினு சக்கரவர்த்தியின் முகம். உடனேயே அவரை வரவழைத்து நடிக்க வைத்தேன். மறக்க முடியாத ஒரு கேரக்டரை செய்தார் அவர்.
இதேபோல்தான் காந்திமதி. அவங்க என்னுடைய நாடகத்தில் நடித்த நடிகை. கடைசியாக நான் மயிலாப்பூர் நாடக சபாவில் போட்டிருந்த நாடகத்தில்கூட அவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்களெல்லாம் கை தட்டல்களை வாங்கின. அப்படியொரு வசனங்களை.. அந்த மண்ணின் மனம் கமிழ.. மதுரை வட்டார வழக்கோடு எழுதியிருந்தார் என் நண்பன் கலைமணி.
இந்தப் படத்தில் விஜயன் இடம் பெற்ற ஒரு காட்சி வரும். தன்னுடைய மாட்டை கொன்றுவிட்டு.. தானும் செத்துப் போகும் காட்சி. அப்போதைய காலக்கட்டத்தில் ரவுண்ட் டிராலி வசதியெல்லாம் இல்லை. அதனால் எனது ஒளிப்பதிவாளரான கண்ணன் தனது தோளில் கேமிராவை வைத்துக் கொள்ள.. அவரையும் ஒருவர் சுமந்து கொண்டு சுற்றிச் சுற்றி வந்து அந்த ஷாட்டை ஒரு விடியற்காலையில் எடுத்தோம். இன்றைக்கும் அந்தப் படத்தைப் பார்க்கும்போது அற்புதமான ஒரு காட்சியாக அது தெரியும்.
‘ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையே’ என்ற ஒரு பாடலும் இந்தப் படத்தில் இருக்கிறது. உண்மையில் இந்தப் பாடல் இந்தப் படத்துக்காகப் போடப்படவில்லை. அது வேறொரு ராணுவம் சம்பந்தப்பட்ட என்னுடைய கதைக்காகப் போடப்பட்ட பாடல். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டதால் அந்தப் பாடல் அப்படியே இருந்தது. அந்தப் பாட்டை இதில் பயன்படுத்த நினைத்தேன்.
அந்தப் பாட்டில் இடையிடையே துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சப்தம்.. பரபரப்பாக ஓடும் இசை என்பதெல்லாம் இருக்கும். ‘இதை வைச்சு நீ எப்படிய்யா இந்தப் படத்துல காட்சியமைப்ப..?’ என்று இளையராஜா என்னிடம் கேட்டான். ‘நீ இருக்குற மியூஸிக்லேயே என்னென்னமோ பண்றீல்ல.. அது மாதிரிதான். நான் செஞ்சு காட்டுறேன்..’ என்று சொல்லி அந்தப் பாடல் காட்சியை பிரமாதமாக எடுத்தேன். இன்றைக்கும் அந்தப் பாடல் காட்சியைப் பார்க்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும்..” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.
The post ‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..! appeared first on Touring Talkies.
]]>The post ‘மண்வாசனை’ படத்திற்காக பாண்டியன் தேர்வானது எப்படி? – சொல்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா..! appeared first on Touring Talkies.
]]>‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில்தான் நடிகை ரேவதியும், நடிகர் பாண்டியனும் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானார்கள்.
அதோடு இந்தப் படம்தான் மக்கள் தொடர்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகருமான சித்ரா லட்சுமணன் தயாரித்த முதல் படமாகும்.
இந்தப் படத்தில் நாயகி ரேவதி, நாயகன் பாண்டியன் ஆகியோரை தேர்வு செய்தவிதம் பற்றி தன்னுடைய யுடியூப் சேனலில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசியுள்ளார்.
அது இங்கே :
‘அலைகள் ஓய்வதில்லை’யின் தெலுங்குப் பதிப்பை முடித்துவிட்டு அப்படியே ஹிந்திக்குப் போய்விட்டேன். அங்கே ஒரு படத்தை இயக்கி வந்த நிலையில் அடுத்து தமிழில் ஒரு சொந்தப் படம் எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் எனது நீண்ட நாள் நண்பரும், என் படங்களுக்கெல்லாம் மக்கள் தொடர்பாளராகவும் இருந்த சித்ரா லட்சுமணன் ‘எனக்கு ஒரு படம் செய்து கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். சரி.. அடுத்தப் படத்தை அவருக்கே செய்து கொடுப்போம் என்று சொல்லி தீர்மானித்தேன்.
சித்ரா லட்சுமணனின் ‘காயத்ரி பிலிம்ஸ்’ சார்பா இந்தப் படம் தயாரானது. படத்தின் கதை, திரைக்கதை எல்லாம் ரெடியாயிருச்சு. இதற்கு முன்னதாகவே ரேவதியை நான் ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி பார்த்து வைத்திருந்தேன். ரேவதியின் கண்களில் ஒரு ஸ்பார்க் தெரிந்தது. அந்தப் பெண்ணை எந்தக் கேரக்டரிலும் நடிக்க வைக்கலாம் என்பது எனக்குத் தெரிந்தது.
இந்த நேரத்தில் எனது தயாரிப்பில் வேறொரு இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தைத் துவக்கினேன். அதுதான் ‘மெல்லப் பேசுங்கள்’ திரைப்படம். அதை இயக்கியவர்கள் சந்தானபாரதியும், பி.வாசுவும். அப்போது அவர்கள் மீது எனக்கு ஒரு தனி பிரியம் இருந்தது. அதனால் அவர்கள் இயக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.
அவர்களும் ஒரு ஹீரோயினைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நான் ரேவதியை அவர்களிடத்தில் சொன்னேன். ஆனால் ரேவதியை ‘வேண்டாம்’ என்றார்கள். ‘ரேவதி குள்ளமா இருக்கு ஸார். நாங்க எதிர்பார்த்த கேரக்டருக்கு அது ஷூட் ஆகாது’ என்றார்கள். சரி.. வேற ஆள் தேடுவோம் என்று தேடிக் கொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில் என் மகன் மனோஜ் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நீச்சல் பயிற்சிக்கு அடிக்கடி செல்வான். அப்படி போய்வரும்போது ‘ஹோட்டல்ல ஒரு பொண்ணைப் பார்த்தேன்பா.. பிரமாதம்…’ என்றான். ‘அது யார்ரா அப்படியொரு பிரமாதமான பொண்ணு?’ன்னு தேடிப் பிடிச்சுப் பார்த்தால்.. அதுதான் பானுப்பிரியா.
பாரதியும், வாசுவும் பானுப்பிரியா தங்களுக்கு ஓகே என்று சொன்னார்கள். அதனால் ‘மெல்லப் பேசுங்கள்’ படத்தில் பானுப்பிரியா அறிமுகமானார். ரேவதி என்னுடைய ‘மண் வாசனை’ படத்திற்கு நாயகியாகத் தேர்வானார்.
ஹீரோயின் கிடைச்சாச்சு. ஹீரோ கிடைக்கலை. நானும் மும்பைல ஹிந்தி ஷூட்டிங்ல இருந்தேன். அதை முடிச்சிட்டு வந்து ஹீரோவைத் தேடலாம்ன்னு இருந்தேன். அதுக்கு முன்னாடி தேனி பக்கத்துல போடில ஷூட்டிங்குன்னு எல்லாத்தையும் பிக்ஸ் பண்ணியாச்சு.
நானும் ஹிந்தி ஷூட்டிங்கை முடிச்சிட்டு சென்னைக்கு வந்து ஹீரோ தேடினேன். ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ், அப்புறம் மத்த இரண்டு மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்ன்னு நிறைய பேரை வரவழைச்சு பார்த்தேன். ஒண்ணும் சூட்டாகலை. சரி.. மதுரைப் பக்கம் போவோம். நம்ம கதைக் களமே மதுரைதானே.. அங்க யாரையாவது பிடிச்சிருவோம்ன்னு சொல்லிட்டு நானும், சித்ரா லட்சுமணனும் மதுரைக்குக் கிளம்பினோம்.
எங்களுக்கு முன்னாடியே பட யூனிட்டை கிளப்பி போடிக்கு அனுப்பி வைச்சிட்டோம். இன்னும் ஹீரோ மட்டும்தான் பாக்கி. கிடைத்தால் அப்படியே தூக்கிட்டுப் போயிரலாம்ன்னு நினைச்சோம்.
மதுரைக்குப் போனவுடனே மீனாட்சியம்மன் கோவிலுக்கு நானும் சித்ராவும் போனோம். தரிசனம் முடிஞ்சு வெளில வரும்போது நிறைய பேர் என்னை அடையாளம் கண்டுக்கிட்டு வந்து ஆட்டோகிராப் கேட்டாங்க. அப்ப கார்ல உக்காந்திருந்தேன். அப்போதான் பாண்டியன் வந்து என்கிட்ட ஆட்டோகிராப் கேட்டான். அப்போ அவனோட பின்னாடி லைட் அடிச்சு அப்படியொரு அழகா தெரிஞ்சான். அதோட மதுரைக்கார பாஷைய அழகாவும் பேசினான்..
எனக்குள்ள பட்டுன்னு ஏதோ ஒண்ணு பட்டுச்சு. ‘கார்ல ஏறுடா’ன்னு சொல்லி அவனை ஏத்திக்கிட்டேன். சித்ரா பதறிட்டான். ‘இவனை எதுக்கு கார்ல ஏத்துறீங்க?’ன்னு கேட்டான். ‘விடு.. பார்த்துக்குவோம்’ன்னுட்டு நேரா ஒரு நல்ல சாப்பாட்டு கடைக்கு போனோம். நல்லா சாப்பிட்டோம். அவனையும் சாப்பிட வைச்சோம்.
அப்ப நான் மதுரைல தமிழ்நாடு ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ஹோட்டல் ரூமுக்கு பாண்டியனை கூட்டிட்டுப் போனேன். ‘சினிமால நடிக்கிறியா?’ன்னு கேட்டேன். ‘சினிமாவா..?’ ‘நடிப்பா?’ன்னான் பாண்டியன். ‘சினிமால்லாம் பார்த்திருக்கியா?’ன்னு கேட்டேன். ‘அப்பப்போ.. நைட் ஷோ போவேன்’ணான்.
‘சரி’ன்னு சொல்லி அவனுக்கு சில டெஸ்ட் வைச்சேன். மாறு கண் இருக்குமோன்னு நினைச்சு செக் செஞ்சேன். அது இல்ல.. அப்புறமா கோபமா பார்க்குற மாதிரி ஒரு லுக் விடச் சொன்னேன். உடனே செஞ்சான். ‘இது போதும்டா.. நீதான் என் படத்துக்கு ஹீரோ. நாளைக்கு போடிக்கு வந்து சேரு..’ன்னு சொல்லிட்டு நானும், சித்ராவும் அன்னிக்கே போடிக்கு கிளம்பிட்டோம்.
மறுநாள் பாண்டியன் சொன்ன மாதிரியே ஷூட்டிங்குக்கு வந்து சேர்ந்தான். முதல் நாளே முதல் காட்சியே வயக்காட்டுல பரண் மேல படுத்திருக்குற பாண்டியன், ரேவதியையும், அவ பிரெண்டையும் விரட்டுற மாதிரி சீன் வைச்சேன். நான் வியூ பைண்டர்ல பாக்குறேன்.. அந்த விரட்டுறதையும், மதுரை வசனத்தையும் கச்சிதமா பேசினான்.. எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. இவன்தான் நான் எதிர்பார்த்த ஆளுன்னு முடிவு பண்ணிட்டேன்.
2, 3 நாள் ஆச்சு.. ஒரு நாள் ராத்திரி நான் தங்கியிருந்த வீட்டுக்கு வசனகர்த்தா கலைமணி, சித்ரா லட்சுமணன், என் அஸிஸ்டெண்ட் மனோஜ்குமார்ன்னு ஏழெட்டு பேர் வந்தாங்க.. ‘என்னப்பா.. இந்த நேரத்துல..?’ என்று கேட்டேன்.
பூனைக்கு யார் மணி கட்டுறதுன்னு தெரியலை.. அதுனால கலைமணி மெதுவா சொன்னான்.. ‘இந்தப் பையனை வைச்சுத்தான் நீங்க படம் எடுக்கப் போறீங்களா?’ என்று கேட்டார்கள். எனக்குப் புரிஞ்சு போச்சு.. இவங்களுக்கெல்லாம் பாண்டியனை பிடிக்கலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
‘சரிப்பா.. ஷூட்டிங்கை நிறுத்திடறேன்.. நீங்க போய் ஜெமினி கணேசன் மாதிரி ஒரு ஆளை கூட்டிட்டு வாங்க. அப்புறமா ஷூட்டிங்கை நடத்திக்கலாம்’ன்னு சொல்லி ‘பேக்கப்’ சொல்லிட்டேன். உடனேயே சித்ரா பயந்துட்டான். ‘ஐயோ.. எனக்கும், இதுக்கும் சம்பந்தமில்லை ஸார்.. இவங்க கூப்பிட்டாங்க வந்தேன்’ணான்..
அப்புறம் ஒரு வாரம் எடுத்தவரைக்கும் ரஷ் போட்டு பார்த்தப்ப.. பாண்டியன் பிரமாதமா தெரிஞ்சான். அப்புறம்தான் அவங்களும் அதை ஒத்துக்கிட்டாங்க..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
The post ‘மண்வாசனை’ படத்திற்காக பாண்டியன் தேர்வானது எப்படி? – சொல்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா..! appeared first on Touring Talkies.
]]>