The post சினிமா வரலாறு-49-தனது போட்டியாளரையே தனது உதவியாளராக ஆக்கிக் கொண்ட இயக்குநர் ஸ்ரீதர் appeared first on Touring Talkies.
]]>எண்பதுகளில் தமிழ் சினிமாவை பாரதிராஜாவின் சீடர்களான கே.பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார் ஆகியோர் ஆண்டதுபோல, அறுபதுகளில் ஸ்ரீதரின் உதவியாளர்களான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்த் திரையுலகத்தில் உலகில் கொடி கட்டிப் பறந்தனர்.
ஸ்ரீதரின் முக்கியமான உதவியாளராகப் பணியாற்றிய இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதலில் ஸ்ரீதருக்கு போட்டியாளராக இருந்து பின்னர் அவரிடமே உதவியாளராகச் சேர்ந்தவர்.
‘மதுரை தேவி கான வினோத சபா’ என்ற பெயரிலே நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திக் கொண்டிருந்த நாடகக் குழுவில் தனது ஏழாவது வயதில் இணைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை, வசனம், பாட்டு, நடிப்பு என்று எல்லா பிரிவுகளிலும் அங்கே தேர்ச்சி பெற்றார்.
நாடக உலகில் வருமானம் மிகவும் சொற்பமாக இருந்ததால் திரைத்துறையில் சேர்ந்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஒரு கட்டத்தில் முடிவெடுத்த கோபாலகிருஷ்ணன் நாடகத் துறையில் பெற்றிருந்த அனுபவத்தின் துணையோடு தனது பத்தொன்பதாவது வயதில் நாடக சபாவிலிருந்து விலகி பாடலாசிரியர் உடுமலை நாராயணகவியிடம் உதவியாளாராகச் சேர்ந்தார்.
பின்னாளில் மிகப் பெரிய இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்த கோபாலகிருஷ்ணன் தமிழ்த் திரையுலகில் முதலில் பாடலாசிரியராகத்தான் அறிமுகமானார். அதற்கு, அவருக்கு பேருதவியாக இருந்தது உடுமலை நாராயணகவியிடம் அவர் பெற்ற பயிற்சியே.
அந்த சந்தர்ப்பத்தில் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்த சுந்தரம் பிள்ளை ரெக்கார்டிஸ்ட் கோவிந்தசாமி, கேமிராமேன் ராமசாமி, ஜி,உமாபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சேர்ந்து ‘சரவணபவா யுனிட்டி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி படம் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்கள் கதை கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்த கோபாலகிருஷ்ணன் தான் நாடகமாக எழுதி வெற்றி பெற்றிருந்த ‘தம்பி’ என்ற கதையை அவர்களுக்குச் சொன்னார். அவர்களுக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது.
அன்றிரவு தன்னுடைய அறைக்கு வந்து படுத்த கொபாலகிருஷ்ணனுக்குத் தூக்கமே வரவில்லை. கதாசிரியராக சினிமாவில் வலம் வருவது போலவும் அதைத் தொடர்ந்து இயக்குநர் ஆவதற்கு வாய்ப்புகள் தன்னைத் தேடி வருவது போலவும் வந்த வண்ணக் கனவுகளுக்கு நடுவே சிறிது நேரமே கண்ணயர்ந்தார் அவர்.
தன்னுடைய கதையில் யார், யார் நடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பரபரப்போடு அடுத்த நாள் காலையில் அந்த நிறுவனத்திற்கு சென்றபோதுதான் ‘தம்பி’ கதையைத் தவிர இன்னொரு கதையையும் அவர்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள விவரம் கோபாலகிருஷ்ணனுக்குத் தெரிய வந்தது.
அவர்கள் படமாக்குவதற்காகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த இன்னொரு கதை ஸ்ரீதர் எழுதியது. அந்த பட நிறுவனத்தினர் தங்களது படத்திலே கதாநாயகனாக நடிக்க சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆகவே தாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள இரண்டு கதைகளில் எந்தக் கதை அவருக்குப் பிடிக்கிறதோ அதுவே முதலில் படமாக்கப்படும் என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் சொன்னார் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான சுந்தரம் பிள்ளை.
சிவாஜி கணேசன் எந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறாரோ என்று கோபாலகிருஷ்ணன் குழப்பத்தோடு இருந்தபோது அந்த பட நிறுவனத்தினர் தேர்ந்தெடுத்திருந்த இன்னொரு கதையை எழுதியவரான ஸ்ரீதரும், கோபாலகிருஷ்ணனைப் போலவே பெரும் தவிப்பில் இருந்தார்.
‘புதுமை இயக்குநர்’ என்றும் ‘இயக்குநர் திலகம்’ என்றும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டு ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக இருந்த அந்த இரு இயக்குனர்களுக்குமிடையே அன்று நடந்த அந்தப் போட்டியில் இறுதியாக ஸ்ரீதரே வென்றார்.
ஸ்ரீதருடைய ‘எதிர்பாராதது’ கதை சிவாஜி கணேசனுக்கு பிடித்திருந்ததால் அவரது கதையையே முதலில் படமாக்குவது என்று சரவணபவா யுனிட்டி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் முடிவெடுத்தனர்.
“சிவாஜிக்கு என்னுடைய கதை பிடித்திருந்ததின் காரணமாக என்னுடைய கதை தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அவ்வளவுதானே தவிர எனக்கு எந்த வகையிலும் கோபாலகிருஷ்ணன் குறைந்தவர் அல்ல” என்று தன்னுடைய போட்டியாளரான கோபாலகிருஷ்ணன் பற்றி ஸ்ரீதர் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது அன்றைய கலைஞர்கள் எந்த அளவு விசாலமான மனதுடன் இருந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தன்னுடன் யார் போட்டி போட்டாரோ அந்த ஸ்ரீதர்தான் தனக்காக சினிமா உலகின் கதவுகளைத் திறக்கப் போகிறவர் என்று அப்போது கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்குத் தெரியாது.
ஸ்ரீதரின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கோபாலகிருஷ்ணன் சொன்ன ‘தம்பி’ கதையும் அந்தத் தயாரிப்பாளர்களுக்குப் பிடித்திருந்த காரணத்தினால் கோபாலகிருஷ்ணனை மிகவும் மரியாதையாக அந்த நிறுவனத்தினர் நடத்தினர். அதனால் அடிக்கடி அந்த நிறுவனத்துக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.
அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அவரைச் சந்தித்து அவரோடு பழகும் வாய்ப்பினைப் பெற்ற ஸ்ரீதர் “அவரைப் பார்த்ததும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வந்தது” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த நிறுவனத்தில் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியபோது “எனக்குப் பாடலும் எழுத வரும்” என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சொல்ல உடனே ‘எதிர்பாராதது’ படத்தின் சில காட்சிகளைப் பற்றி எடுத்துச் சொல்லி அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டு வரும்படி அவரிடம் சொன்னார் ஸ்ரீதர்.
அதைத் தொடர்ந்து அவர் சொன்ன ஒரு காட்சிக்கு “காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்” என்று தொடங்கும் பாடலை எழுதித் தந்தார் கோபாலகிருஷ்ணன். ஸ்ரீதருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதால் அந்தப் படத்தின் இயக்குநரான சி.எச்.நாராயணமூர்த்தியிடம் அந்தப் பாடலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார் அவர்.
சி.என்.பாண்டுரங்கனின் இசையில், ஏ.எம்.ராஜா-ஜிக்கி குரலில் பதிவான அந்தப் பாடலே கே. எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய முதல் பாடலாக அமைந்தது.
‘எதிர்பாராதது’ மிகச் சிறந்த வெற்றிப் படமாக அமையவே ஸ்ரீதருக்கு திரையுலகில் வரவேற்பு பெருகியது.
அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்திதான் பின்னர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். ஸ்ரீதரும், அவரும் ஒத்தக் கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்ததால் ‘எதிர்பாராதது’ படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாகினர்.
கிருஷ்ணமூர்த்திக்கு ‘பில்லியப்பா’ என்ற மதுரையைச் சேர்ந்த மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் நண்பராக இருந்தார். கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து படம் தயாரிக்க ஆசைப்பட்ட அவர் ஸ்ரீதர், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் ஆலோசனையின் பேரில் ’பரிவர்த்தனா’ என்ற தெலுங்குப் படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதற்காக வாங்கினார்.
இது மாதிரி மொழி மாற்றப் படங்களுக்கு வசனம் எழுதுவதில் அனுபவமுள்ள பலர் அப்போது இருந்தபோதிலும் அவர்களை எல்லாம் தவிர்த்துவிட்டு ஸ்ரீதரை அந்தப் படத்திற்கு வசனம் எழுதச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி . அப்போது ஸ்ரீதர் ஏற்கனவே சில நேரடித் தமிழ்ப் படங்களுக்கு கதை வசனம் எழுத ஒப்புக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள முதலில் தயங்கினார்.
“நண்பர் பில்லியப்பாவின் படம் என்பதால் நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லவே வேறு வழியின்றி அப்படத்திற்கு பணியாற்ற ஒப்புக் கொண்டார் ஸ்ரீதர்.
வசனங்களை சரி பார்த்து பின்னணி பேசும் கலைஞர்களுக்கு பயிற்சியளிக்க ஒரு திறமையான உதவியாளர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று ஸ்ரீதர் எண்ணியபோது அவர் நினைவுக்கு வந்த முதல் நபர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான்.
திறமையாளர்களை மனம் விட்டுப் பாராட்ட எப்போதுமே தயங்காத இயக்குனரான ஸ்ரீதர் “டப்பிங் படத்துக்கு எப்படி வசனம் எழுத வேண்டும் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தவரே கோபாலகிருஷ்ணன்தான்” என்று அவரது திறமையைப் பாராட்டியுள்ளார்.
‘லட்சாதிபதி’ என்ற பெயரில் வெளியான அந்த மொழி மாற்றப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் படம் எடுக்க விரும்பிய பல தயாரிப்பாளர்கள், தமிழ்ப் படங்களுக்கு வசனம் எழுத ஸ்ரீதரைத் தேடி வரத் தொடங்கினார்கள்.
அந்த வாய்ப்புகளை ஒப்புக் கொண்ட ஸ்ரீதர் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்களுக்கு வசனங்களை சொல்லித் தர கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீதரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு எப்படிப் பேச வேண்டும் என்று சொல்லித் தருவதில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கை தேர்ந்தவர் என்பதால் அவர் வசனம் பேச கற்றுத் தந்த பாணி எஸ்.வி.ரங்காராவ், சாவித்திரி போன்ற கலைஞர்களை மிகவும் கவர்ந்தது.
இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலி தேவி ஆகியோர் தமிழ்ப் படங்களில் நல்ல தமிழ் பேசி நடித்ததற்குக் காரணமே கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான்.
ஸ்ரீதரிடம் தொடர்ந்து பல படங்களில் பணியாற்றிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவரோடு இணைந்து பணியாற்றிய கடைசி படமாக ‘உத்தம புத்திரன்’ அமைந்தது.
“அந்தப் படத்தில்தான் ஸ்ரீதர் யார் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது…” என்று குறிப்பிட்டிருக்கிறார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-49-தனது போட்டியாளரையே தனது உதவியாளராக ஆக்கிக் கொண்ட இயக்குநர் ஸ்ரீதர் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-35-சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>அந்த படத்திலே ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட கண்ணதாசன் தீவிரமாக முயற்சி செய்தபோது இயக்குநர் ஏ.பீம்சிங் அவருக்கு உதவ முன் வந்தார். கண்ணதாசனின் பட நிறுவனத்துக்காக சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்க தான் ஒரு படத்தை இயக்கித் தருவதாக சொன்னார்.
அப்போது சிவாஜிகணேசன்- ஏ.பீம்சிங் இணைந்து பணியாற்றிய படங்களுக்கென்று ஒரு தனி மார்க்கெட் உருவாகி இருந்தது. அவர்கள் இருவரும் இணைந்த எல்லா படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்ததால், அவர்கள் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பு இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பீம்சிங்கும், சிவாஜியும் வலிய வந்து உதவி செய்கிறேனென்று சொன்னபோதிலும் அதை கண்ணதாசன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அதற்குக் காரணம் ‘விதி’ என்றுதான் சொல்ல வேண்டும்.
சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைக் கதாநாயகனாகத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் அவர் கதாநாயகனாக நடிக்க ‘கவலை இல்லாத மனிதன்’ என்ற படத்தைத் தயாரித்தார். அதற்குப் பிறகு ஒரு நாள்கூட கவலை இல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை.
சந்திரபாபுவை வைத்துப் படமெடுப்பது என்பது அவ்வளவு எளிதான ஒரு வேலையல்ல. அவர் சரியான நேரத்திற்கு சூட்டிங்கிற்கு வர மாட்டார். அப்படியே வந்தாலும் எப்போது செட்டில் இருப்பார், எப்போது காணாமல் போவார் என்று தெரியாது. அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுப்பார். பேசிய பணத்தைவிட அதிகமாகப் பணம் கேட்பார்.
அது தவிர, அவரை வைத்துப் படமெடுத்தால் குறிப்பட்ட நேரத்தில் படத்தை வெளியிட முடியாது என்றெல்லாம் அவரை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்கள் எல்லோருமே அப்போது அவரைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தனர்.
சந்திரபாபு தன்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் தன்னிடம் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார் என்று திடமாக நம்பினார் கண்ணதாசன்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் சந்திரபாபுவோடு முடிந்து போய்விட்ட ஒன்றல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும் நடிகர்கள் திரையுலகில் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
அதைப் போன்று நம்முடைய படத்துக்கு நிச்சயமாக அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்ற எண்ணத்தில் அந்த நடிகரை ஒப்பந்தம் செய்கிறவர்களும் இன்றுவரை இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
கே.சங்கர் இயக்க சந்திரபாபுவிற்கு ஜோடியாக எல்.விஜயலட்சுமி நடித்த அந்த படத்தில் எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.என்.ராஜம். ராஜ சுலோசனா என்று பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்தனர்.
சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஏவி.மெய்யப்ப செட்டியாரின் பிரகதி ஸ்டுடியோவிற்கு விண்ணப்பித்து பின்னர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட கண்ணதாசன் முதன் முதலில் நடித்த படமாக சிவாஜி கதாநாயகனாக அறிமுகமான ‘ பராசக்தி’ படம் அமைந்தது.
அந்தப் படத்திலே நீதி மன்றக் காட்சியில் கலைஞர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களை சிவாஜி பேசியபோது நீதிபதியின் வேடத்திலே அந்தப் படத்திலே அமர்ந்திருந்தவர் கண்ணதாசன்தான்.
அவர் நடித்த இரண்டாவது படமாக ‘கவலை இல்லாத மனிதன்’ படம் அமைந்தது. அந்தப் படத்தின் முதல் காட்சியிலேயே கல்லூரிப் பட்டமளிப்பு விழாவிலே அவர் பேசிய காட்சி இடம் பெற்றது.
‘கவலை இல்லாத மனிதன்’ படத்தின் படப்படிப்பு நடைபெற்றபோது அந்தப் படத்திலே நடித்த எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா உட்பட எல்லா நட்சத்திரங்களும் காலை ஒன்பது மணிக்கு படப்பிடிப்புக்கு எட்டு மணிக்கே மேக்கப்பைப் போட்டுக் கொண்டு தயாராகி விடுவார்கள்.
ஆனால் சந்திரபாபுவைப் பொறுத்தவரை தினமும் காலை 10 மணிக்குதான் அவர் எழுந்திருப்பார். அதைத் தொடர்ந்து அவர் குளித்து தயாராகி படப்பிடிப்பு தளத்திற்கு வர எப்படியும் குறைந்தது 11 மணியாகிவிடும். அதற்குப் பிறகு மேக்கப் போட்டுக் கொண்டு 12 மணி அளவில் சூட்டிங்கிற்கு வருவார் அவர்.
ஏதோ ஒரு நாள் அவர் அப்படி 12 மணிக்கு படப்பிடிப்பிற்கு வந்தார் என்றால் மற்ற நட்சத்திரங்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். தினமும் அப்படி வருவதை அவர் வழக்கமாக வைத்துக் கொண்டதால் தயாரிப்பு நிர்வாகி வீரய்யாவை அழைத்த அவர்கள் “கவிஞரை சந்திரபாபுவிடம் பேசச் சொல்லுங்கள். நாங்களும் நடிகர்கள்தானே. அவருக்காக தினமும் நாங்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எப்படி..?” என்று அவரிடம் கேட்டனர். இந்தத் தகவல் சந்திரபாபுவிற்கும் போனது.
அவர்கள் எல்லோரும் அப்படி தங்களது குறையை வெளிப்படையாகத் தெரிவித்த பிறகாவது சந்திரபாபு நேரத்துக்கு படப்படிப்பிற்கு வரத் தொடங்கினாரா என்றால் இல்லை. வழக்கம்போல 12 மணிக்குத்தான் மேக்கப்புடன் செட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் அப்படி 12 மணிக்கு அவர் படப்படிப்பிற்கு வந்தவுடன் “பாலையா அண்ணனையும், ராதா அண்ணனையும்” வரச் சொல்லுங்கள் என்றார் இயக்குநர் கே.சங்கர்.
அவர்களை அழைத்து வர மேக்கப் அறைக்குச் சென்ற உதவி இயக்குநர் அவர்கள் அங்கே இல்லை என்ற விவரத்தை சொன்னவுடன் தயாரிப்பு நிர்வாகியான வீரய்யா அந்த ஸ்டுடியோ முழுவதும் அவர்களைத் தேடிப் பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் எங்கேயும் இல்லை.
சந்திரபாபுவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக அவர் செட்டுக்குள் நுழைந்தவுடன், அவர்கள் இருவரும் தங்களது காரில் ஏறி வீட்டுக்கு போய்விட்டனர்.
இந்த அதிர்ச்சி வைத்தியத்திற்குப் பிறகு கொஞ்ச நாட்கள் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்தார் சந்திரபாபு.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைகின்ற கட்டத்துக்கு வந்தபோது மீண்டும் தனது வழக்கமான பாணிக்கு திரும்பினார் சந்திரபாபு.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது காலை ஏழு மணி முதலே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டார் இயக்குநர் சங்கர்.
ஒன்பது மணி படப்பிடிப்பிற்கே ஒழுங்காக வராத சந்திரபாபுவிடம் காலை ஏழு மணிக்கே படப்பிடிப்பிற்கு வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டபோது அதற்கு லேசான மறுப்பைக்கூட சந்திபாபு தெரிவிக்கவில்லை.
ஆனால், அதற்குப் பதிலாக “ஏழு மணிக்கு வர வேண்டும் என்றால், முதலில் பேசிய சம்பளத்திற்கும் மேலாக இருபதாயிரம் ரூபாய் வேண்டும்..” என்றார்.
எப்படியாவது படத்தை முடித்தால் போதும் என்ற மன நிலைக்கு அப்போது வந்துவிட்டிருந்த கண்ணதாசன் எந்தவிதமான மறுப்பையும் சொல்லாமல் உடனடியாக இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.
அப்படிப் பணம் கொடுத்த பிறகும் படப்பிடிப்பு தினத்தன்று அவர் சீக்கிரம் வராமல் இருந்து விட்டார் என்றால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமே என்ற அச்சத்தில் ஒரு நாள் காலையில் எழுந்ததும் நேராக சந்திரபாபு வீட்டுக்கு போனார் கண்ணதாசன்.
உள்ளே அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பையன் சொன்னான். ஸ்டுடியோவிலோ எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, ராஜ சுலோசனா ஆகியோர் காலை ஆறு மணிக்கே மேக்கப் போட்டுக் கொண்டு படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தார்கள்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளியில் உடகார்ந்து கொண்டிருந்த கண்ணதாசன் பொறுமை இழந்து அங்கிருந்த பையனை அழைத்தார்.
“இப்போதாவது எழுந்து விட்டாரா என்று உள்ளே போய் பாரப்பா…?” என்றார்.
“அவர் எழுந்து பின்பக்கமாக அப்போதே போய்விட்டாரே” என்று அந்தப் பையன் சொன்ன பதில் அவரை நிலை குலைய வைத்தது.
அந்தப் பையன் சொன்னதைக் கேட்டதும் கண்ணதாசன் தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்தது.
அடுத்து கவிஞர் என்ன செய்தார் எனபதை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-35-சிவாஜியை விட்டுவிட்டு சந்திரபாபுவைத் தேர்ந்தெடுத்த கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>The post “பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்.. appeared first on Touring Talkies.
]]>இந்த வாரம் அவர் பேசியபோது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த அனுபவம் பற்றிப் பேசியிருக்கிறார்.
“மண்வாசனை’ திரைப்படத்தை முடித்து வெளியிட்டபோது அது நான் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னையில் அத்திரைப்படம் 250 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை படைத்தது.
இந்த நேரத்தில் எனக்கு மும்பையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்த ராஜேந்திர குமார் என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.
அவர் சென்னைக்கு வந்தபோது சோழா ஓட்டலில் தங்கியிருந்தார். நானும் அங்கே சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர் தனக்காக ஹிந்தியில் ஒரு திரைப்படத்தை இயக்கித் தரும்படி கேட்டார். ஏற்கெனவே ‘16 வயதினிலே’ படத்தை ஹிந்தியில் இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு என்றாலும், ஹிந்தியில் அத்திரைப்படம் சரியாகப் போகவில்லை என்ற வருத்தமும் இருந்தது.
சரி.. இ்ப்போது ஒரு வாய்ப்பு வருகிறது.. பயன்படுத்திப் பார்ப்போம் என்று நினைத்து அதற்கு ஒத்துக் கொண்டேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தையே ஹிந்தியில் படமாக்க எண்ணினேன். இந்தப் படத்தில் தனது மகன் குமார் கவுரவ்வை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென ராஜேந்திரகுமார் கேட்டுக் கொண்டார்.
அப்போதே.. அங்கேயே.. ஒரு பெரிய தொகையை.. அதுவரையிலும் நான் யாரிடமும் வாங்காத.. நினைத்துக் கூடப் பார்க்காத தொகையை எனக்குச் சம்பளமாகக் கொடுத்தார். அதுவே எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இந்தப் படத்தை நான் ஒத்துக் கொண்டேன். படத்திற்கு ‘லவ்வர்ஸ்’ என்று பெயர் வைத்தேன். நாயகியாக பத்மினி கோலாப்பூரியை ஒப்பந்தம் செய்தோம். தமிழில் தியாகராஜன் செய்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் டேனி செய்தார். சில்க் ஸ்மிதா செய்த கதாபாத்திரத்தில் நடிகை கஜோலின் அம்மாவான தனுஜா நடித்தார்.
அப்போது பத்மினி பல படங்களில் நடித்து உச்சத்தில் இருந்த நேரம். அவருடைய கால்ஷீட் கிடைப்பதே கஷ்டமான சூழலாக இருந்தது. அந்தம்மாவின் கால்ஷீட்டுக்கு ஏற்றவாறு மற்றவர்களின் கால்ஷீட்டை பெற்று அதற்கேற்றவாறு ஷூட்டிங் ஷெட்யூலை ஏற்பாடு செய்தோம்.
ஷூட்டிங் முதல் கட்டமாக கோவாவிலும், மும்பையிலும் நடப்பதாக திட்டமிட்டிருந்தோம். அப்போதெல்லாம் அதிகமாக விமானங்கள் இல்லாததால் சென்னையில் இருந்து கோவாவுக்கு செல்வதற்கே சிரமமமாக இருந்தது. சென்னையில் இருந்து முதலில் பெங்களூருக்கு சென்று.. பின்பு அங்கேயிருந்து கோவாவுக்கு வேறொரு விமானத்தில் செல்ல வேண்டும்.
பலவித பிரச்சினைகள் இருந்ததால் பெங்களூரில் இருந்து காரிலேயே கோவாவுக்கு பயணமானோம். அங்கே நல்ல லொகோஷன்களில் பாடல் காட்சியை படமாக்கினோம். எனக்கு முழுமையான திருப்தியை அது தரவில்லை. மேற்கொண்டு பல காட்சிகளை எனது முட்டம் கடற்கரைக்கு வந்து எடுத்தோம்.
ராஜேந்திர குமார் பல நேரங்களில் நிறைய திருத்தங்கள் சொல்வார். அவர்தான் தயாரிப்பாளர். அவருடைய மகன்தான் ஹீரோ என்பதால் நானும் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு சரியென்று பட்டால் செய்வேன்.
முட்டத்திலும் அப்படித்தான் ஒரு நாள் அதிகாலை சூரிய உதயத்தின்போது சில காட்சிகளை வைத்திருந்தேன். அப்போது ராஜேந்திர குமார் என்னருகில் வந்து சில திருத்தங்களைச் சொன்னார். அப்படி செய்யணும்.. இப்படி செய்யணும் என்று ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
எனக்கு முட்டம் பகுதி இன்னொரு வீடு மாதிரி. அங்கேயிருந்தவர்களெல்லாம் என்னுடைய உறவினர்களை போல. அனைவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். அவர்களெல்லாம் அன்றைக்கு ஷூட்டிங் பார்க்க வந்து நின்று கொண்டிருந்தார்கள்.
ராஜேந்திரகுமார் என்னிடத்தில் பேசப் பேச.. அவர் ஏதோ என்னிடத்தில் சண்டை போடுவதாக நினைத்து வேகமாக எங்களை வந்து சூழ்ந்து கொண்டார்கள். ‘என்ன விஷயம்.. என்ன சொல்றாரு இவரு.. என்ன பிரச்சினை ஸார்..?’ என்று அவரை மிரட்ட ஆரம்பித்தார்கள்.
நானும் பதறிப் போய்.. ‘ஐயா.. இவர்தான் தயாரிப்பாளர்.. ச்சும்மா சாதாரணமா பேசிக்கிட்டிருக்கோம்.. பிரச்சினை ஒண்ணும் இல்ல..’ என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.
அந்தப் படத்திற்கான பேட்ச் ஒர்க்கை மும்பையில் முடித்தேன். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ஆர்.டி.பர்மன். வயதான நிலையிலும் ஒரு சுறுசுறுப்பான இளைஞரை போல அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வலம் வந்து கொண்டிருந்தார். திடீரென்று அப்படியே நடந்து போய் ஒரு சுவற்றில் ஏறி ரவுண்ட் அடித்து இறங்குவார். அப்படியொரு இளைஞராகத் திகழ்ந்தவர் ஆர்.டி.பர்மன். இந்தப் படத்திற்கு ஹிந்தியில் அழகான பாடல்களைப் போட்டுக் கொடுத்திருந்தார்.
இந்தப் படம் வெளியானபோது என்ன காரணம்ன்னு தெரியலை.. ஏதோ ஒண்ணு.. ஓஹோ என்று போகவில்லையென்றாலும், சுமாரான வெற்றியைத்தான் பெற்றது…” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.
The post “பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்.. appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-28 – முதல் படத்தில் இளையாராஜா சந்தித்த எதிர்ப்புகள் appeared first on Touring Talkies.
]]>ராஜா எழுந்ததைப் பார்த்தவுடன் “எங்கே கிளம்பிட்டே..? நீ பாடிய பாடல்களை இன்னொரு தரம் பாடு” என்றார் பஞ்சு அருணாச்சலம். ராஜா மீண்டும் பாடியவுடன் செல்வராஜைப் பார்த்து அவர் லேசாக சிரிக்க… தான் எந்த நோக்கத்திற்காக ராஜாவை அழைத்துக் கொண்டு வந்தோமோ, அது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை செல்வராஜிற்கு பிறந்தது.
அதன் பிறகு “பாட்டெல்லாம் நல்லா இருக்கு. நான் சொல்லி அனுப்புறேன்…” என்று சொல்லி ராஜாவை அனுப்பி வைத்தார் பஞ்சு அருணாச்சலம்.
அந்த அறையைவிட்டு வெளியே வந்தபோது ராஜாவிற்கு பெரிதாக நம்பிக்கை பிறக்கவில்லை என்பதை அவரது முகத்தைப் பார்த்து தெரிந்து கொண்ட செல்வராஜ் “நிச்சயம் நீ மியுசிக் டைரக்டர் ஆகி விடுவ. பஞ்சு சாருக்கு உன் பாடல்கள் எல்லாம் ரொம்ப படிச்சுப் போச்சி என்பதை அவர் முகத்தைப் பார்த்தே நான் தெரிஞ்சிகிட்டேன். நீ கிளம்பு. நான் சீக்கிரமே நல்ல செய்தியோடு வருகிறேன்…” என்று சொல்லி ராஜாவை வழியனுப்பி வைத்தார்.
இசையமைப்பாளருக்கான பரீட்சையில் ராஜா முதல் வகுப்பில் தேறிவிட்டார் என்பதை உணர்ந்திருந்தபோதிலும் பஞ்சு அருணாச்சலம் வாயால் அதைக் கேட்க விரும்பிய செல்வராஜ், “எப்படி சார் இருக்கு பாட்டு…?’ என்று அவரிடம் கேட்டார்.
“ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்த அளவுக்கு திறமை உள்ளவனா இருப்பான்னு நீ சொன்னபோது நான் நினைக்கலே. இவன் ரொம்பப் பெரிய மியுசிக் டைரக்டரா வர்றதுக்கான எல்லா சான்சும் இருக்கு…” என்றார் பஞ்சு.
இளையராஜா பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகமானபோது ‘மயங்குகிறாள் ஒரு மாது’. ‘துணிவே துணை’ ஆகிய படங்களுக்கும், வேறு சில படங்களுக்கும் அவர் கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் செய்த மிகப் புத்திசாலித்தனமான காரியம் என்னவென்றால், அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த எந்தப் படத்திலும் ராஜாவை பயன்படுத்திக் கொள்ளாததுதான்.
தான் பாடிக் காட்டிய பாடல்களை எல்லாம் கேட்டுவிட்டு மிகவும் பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டிய பஞ்சு அருணாச்சலம் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் தன்னை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று இளையராஜா வருத்தத்தில் ஆழ்ந்திருந்தபோது இளையராஜாவை அறிமுகப்படுத்த சரியான ஒரு கதைக்காக, இரவு பகலாக யோசித்துக் கொண்டிருந்தார் பஞ்சு அருணாச்சலம்.
‘இளையராஜா தன்னிடம் வாசித்துக் காட்டிய அருமையான மெட்டுக்களை பயன்படுத்திக் கொள்கின்ற மாதிரி இசை சார்ந்த படமாக அது இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த பஞ்சுவின் மனதிற்குள் மின்னல் வெட்டியதுபோல விஜய பாஸ்கர் பிலிம்சுக்காக ஆர்.செல்வராஜ் சொன்ன மருத்துவச்சி கதை நினைவுக்கு வந்தது.
அந்தக் கதையில் இளையராஜா பாடிக் காட்டிய கிராமிய இசைப் பாடல்களை இணைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருந்ததால் இளையராஜாவை தனக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர் ஆர்.செல்வராஜின் கதையிலேயே இளையராஜாவை அறிமுகப்படுத்துவது என்று முடிவெடுத்தார் பஞ்சு
இளையராஜா பாடிக் காட்டிய ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடல் வரிகளில் இடம் பெற்றிருந்த ‘அன்னக்கிளி’ என்ற பெயரே அந்தப் படத்தின் பெயரானது. அடுத்து திரையிலே என்ன பெயரில் இளையராஜாவை அறிமுகம் செய்வது என்று பஞ்சு அருணாச்சலம் யோசித்தபோது ‘ராஜா சகோதரர்கள்’, ‘பாவலர் பிரதர்ஸ்’ என்று போடலாம் என்றெல்லாம் பலரும் யோசனை கூறினார்கள்.
ஆனால், அந்தப் பெயர் மிகவும் பழைய பேராக இருக்கிறது என்று சொன்ன பஞ்சு அருணாச்சலம் இளையராஜா என்று காலத்திற்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு அழகான பெயரை அவருக்கு சூட்டினார்.
அதற்குள் தனது சகோதரர் கே.என்.சுப்பு தயாரிக்க இருக்கின்ற புதிய படத்தில் பஞ்சு அருணாச்சலம் புதிதாக ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீ போல் சினிமா உலகில் பரவியது.
அப்போது பஞ்சு அருணாச்சலம் அவர்களின் படங்களில் அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கரின் உதவியாளரான குருபாதம் இளையராஜாவை பஞ்சு அருணாச்சலம் அறிமுகப்படுத்தப் போகும் செய்தி கேட்டு அதிர்ந்து போனார்.
‘அன்னக்கிளி’ படத்தின் தயாரிப்பாளரான சுப்புவை சந்தித்த அவர் ‘பஞ்சு சார் – விஜயபாஸ்கர் கூட்டணி ஹிட் ஆன கூட்டணி சார். அதனாலதான் அவங்க இரண்டு பெரும் இணைந்து பணியாற்றிய ‘உறவு சொல்ல ஒருவன்’, ‘எங்கம்மா சபதம்’, ‘மயங்குகிறாள் ஒரு மாது’ன்னு எல்லா படமும் ஹிட்டாச்சின்னா அதுக்குக் காரணம் ஜாதகப்படி அவர் ஸ்டாரும், இவர் ஸ்டாரும் நன்றாக ஒத்துப் போவதுதான். அப்படியிருக்கும்போது அதை ஏன் மாத்துறீங்க..? எதுக்கு தேவையில்லாத விஷப் பரீட்சை…?” என்று சுப்புவிடம் கேட்டார்.
அவர் சொன்னதைக் கேட்டு சுப்பு லேசாக குழப்பமடைய அதைக் கண்ட குருபாதம் அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று “சார்..! இந்த ராஜா ஜி.கே.வெங்கடேஷ்கிட்டே கிடார் வாசிக்கிறவர். ஏற்கனவே ‘அன் லக்கி மியூசிக் டைரக்டர்’ என்று பெயர் எடுத்தவர். அவரை மியூசிக் டைரக்டராக வச்சி பூஜை போட்ட பல படங்கள் பூஜையோடு நின்னு போயிருக்கு…” என்றெல்லாம் சொல்லி சுப்புவை பலமாகக் குழப்பினார்.
அவர் சொன்னதைக் கேட்டவுடன் பயந்த சுப்பு நேராக பஞ்சு அருணாச்சலத்தை சந்திக்கப் போனார். “எதுக்கு நமக்கு ரிஸ்க்..? உங்களோட பல படங்களில் பணியாற்றி இருக்கும் விஜய பாஸ்கரையே இந்த படத்துக்கும் போடுங்க. இல்லே.. அவரை மாத்தலாம்னு நினைச்சீங்கன்னா விஸ்வநாதன் சாரை போடுவோம்.. .அவருக்குன்னு ஒரு தனி மார்க்கெட் இருக்கிறதினால நம்ம படத்திற்கு அவர் மியுசிக் போட்டா.. அது படத்துக்கே ஒரு மெரிட்டா இருக்கும்…” என்றார்.
அவர் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாக இருந்த பஞ்சு அருணாச்சலம் “அன்னக்கிளி’ படத்துக்கு இளையராஜாதான் மியூசிக்!’ என்று ஒரேயடியாக அடித்து சொன்னார்.
“படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக போட வேண்டுமா என்று ஒரு முறைக்கு, இரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்” என்று பஞ்சு அருணாச்சலத்திற்கு யோசனை கூறினாரே.. அந்த சுப்புதான் ‘அன்னக்கிளி’ படத்திற்கு தயாரிப்பாளர்.
இருந்தாலும் அவரிடமே இளையராஜாதான் படத்துக்கு இசை என்று தீர்மானமாக பஞ்சு அருணாச்சலத்தால் சொல்ல முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அந்தப் படத்தின் ஆணி வேராக அவர் இருந்ததுதான்.
அந்த முதல் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப் படம் முடியும் வரை பல போராட்டங்களை சந்தித்தார் இளையராஜா.
பூஜைக்கான தேதி குறிக்கப்பட்டவுடன் பாடல்களை எழுத கண்ணதாசனை அழைப்பது என்று முடிவானது. இளையராஜாவிற்கு ஆனந்தம் என்றால் அப்படி ஒரு ஆனந்தம். தான் இசையமைக்கப் போகும் முதல் படத்திலேயே அந்த மாபெரும் கவிஞர் பாட்டெழுதப் போகும் பூரிப்பில் இளையராஜா இருந்தபோதுதான் கவிஞர் கண்ணதாசன் சிங்கப்பூர் செல்லவிருக்கின்ற செய்தி அவருக்குக் கிடைத்தது.
“எப்போது திரும்பி வருவார்..?” என்று கேட்டபோது “படத்தின் பூஜை முடிந்த பிறகுதான் திரும்பி வருவார்” என்று பதில் வந்தது. கண்ணதாசன் இல்லாததால் படத்தின் பூஜையே தள்ளிப்போய்விடுமோ என்று இளையராஜா பயந்தபோது “பூஜையை நிறுத்தவேண்டாம். நானே பாட்டு எழுதி விடுகிறேன்..’ என்ற பஞ்சு அருணாச்சலம் ஒரே நாளில் பாடல்களை எழுதித் தந்தார்.
‘அன்னக்கிளி’ படத்தின் தொடக்க விழா ஏவி.எம்.ஸ்டுடியோ ரிக்கார்டிங் தியேட்டரில் நடைபெற்றது.
தனது சகோதர்கள் பாஸ்கர், அமர்சிங் என்கிற கங்கை அமரன் ஆகியோரோடு காலையிலேயே திருவேற்காடு கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு ஸ்டுடியோவுக்கு வந்தார் இளையராஜா.
பூஜை முடிந்து, ரிகர்சல் தொடங்கியது. ஆர்க்கெஸ்ட்ராவெல்லாம் அமர்ந்து, ‘ரெடி, ஒன், டூ, த்ரி’ என்று இளையராஜா சொன்ன அடுத்த நொடி மின்சாரம் ‘கட்’ ஆக எல்லா விளக்குகளும் அணைந்து ஸ்டுடியோவில் இருள் சூழ்ந்தது.
இளையராஜாவிற்கும், அவரது சகோதர்களுக்கும் அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி.
அந்த நேரம் பார்த்து டோலக் வாசிக்க வந்திருந்த பாபுராஜ் என்பவர் `நல்ல சகுனம்தான்’ என்று சொல்ல அப்படியே நொறுங்கிப் போன இளையராஜா யாரிடமும் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக நடந்து போய் பாடகர்கள் பாடுவதற்காக உள்ள அறைக்கு சென்று உட்கார்ந்தார்.
அந்த நேரத்தில் இளையராஜாவை வாழ்த்துவதற்காக வந்தார் இயக்குநர் பி.மாதவன். ஜி.கே.வெங்கடேஷிடம் பணியாற்றிய காலத்திலேயே ராஜாவை நன்கு அறிந்த இயக்குநர் அவர்.
பாடல் பதிவு தொடங்கிய நேரத்தில் கரண்ட் போனதால் இளையராஜா மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருக்கும் விஷயம் அவருக்கு சொல்லப்பட்டதும் ராஜா இருந்த அறைக்கு வந்த அவர் “உனக்காக மாங்காடு அம்மன் கோவிலுக்குப் போய் வேண்டிக் கொண்டு பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். இந்தா பிரசாதம்…” என்றபடி இளையராஜாவின் கையில் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு “நான்தான் உனக்கு சான்ஸ் கொடுக்கணும்ணு நினைத்தேன். ஆனால் பஞ்சு முந்திக் கொண்டு விட்டார். இந்த கரண்ட் போன விஷயத்தை எல்லாம் நினைச்சிக்கிட்டு மனதைத் தளர விடாதே. நிச்சயம் நீ பெரிய ஆளாக வருவாய்…” என்றார்.
“அவர் பேசியதை நான் அவர் பேசிய பேச்சாகவே அன்றைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அந்த மாங்காடு அம்மனே அவர் மூலம் ஆறுதல் கூறியதாகத்தான் எடுத்துக் கொண்டேன் ” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் இளையராஜா.
பி.மாதவன் அவர்களின் பேச்சால் இளையராஜா ஆறுதல் அடைந்த அந்த நேரத்தில் போன மின்சாரம் திரும்ப வந்தது.
அதைத் தொடர்ந்து எஸ்.ஜானகி ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடலைப் பாடி முடித்தார். அவர் பாடி முடித்தவுடன் அந்தப் பாடல் ஒளிப்பதிவுக் கூடத்தில் இருந்த எல்லோருமே ராஜாவின் திறமையைப் பாராட்டி கை தட்டினார்கள்.
இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு பதிவான அந்த ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என்ற பாடல் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெற்றது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
‘அன்னக்கிளி’ படம் திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் அந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் ஹம்மிங்கை கேட்ட உடனேயே ரசிகர்கள் பலமாக கை தட்ட தொடங்கினர்.
நாற்பது வருடங்களுக்கு முன்னாலே பஞ்சு அருணாச்சலம் தொடங்கி வைத்த இளையராஜா என்னும் அந்த இசை ஊற்று வற்றாத ஜீவ நதியாக மாறி இன்றும் இசை ரசிகர்களின் காதுகளில் தேனைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-28 – முதல் படத்தில் இளையாராஜா சந்தித்த எதிர்ப்புகள் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-19 – ஒரு ரூபாய் சம்பளத்துக்கு நடிக்க தயாராக இருந்த கதாநாயகர்..! appeared first on Touring Talkies.
]]>மிகுந்த கடவுள் பக்தி உள்ளவராக விளங்கிய ஏவி. மெய்யப்ப செட்டியார் அவர்களின் இஷ்ட தெய்வம் முருகர்.
அதனால்தான் அவரது பிள்ளைகளுக்குக்கூட பழனியப்பன், முருகன், குமரன், சரவணன், பாலசுப்ரமணியன் என்று முருகக் கடவுளின் பெயர்களையே வைத்தார்.
முருகக் கடவுளின் திருவிளையாடல்களை ‘ஸ்ரீவள்ளி’ என்ற பெயரிலே தயாரிக்க முடிவு செய்த ஏவி.எம். அவர்கள் அந்தப் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் முருகக் கடவுளின் கோவில்கள் பலவற்றிற்கு சென்று முருகப் பெருமானிடம் வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.
“ஸ்ரீவள்ளி திரைப்படம் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னையும் அறியாமல் நான் சில தவறுகள் செய்யலாம். அதற்காக என்னை மன்னித்துக் கொள் முருகா..” என்று முருகனிடம் மனமார வேண்டிக் கொண்டு வந்த பிறகே… அப்படத்தைத் தொடங்கினார் அவர்.
வள்ளியாக நடிக்க குமாரி ருக்மணியை ஒப்பந்தம் செய்துவிட்டு முருகர் வேடத்தில் நடிக்க நல்ல குரல் வளம் மிகக் நடிகரை ஏவி.எம். தேடிக் கொண்டிருந்தபோது அவரைத் தேடி வந்தார் டி.ஆர்.மகாலிங்கம்.
“நீங்கள் வள்ளி படம் எடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் படத்தில் நடிக்க எனக்கு நீங்கள் சான்ஸ் கொடுக்க வேண்டும்” என்று கேட்ட மகாலிங்கம் அதோடு நிறுத்தவில்லை, எந்தத் தயாரிப்பாளரையும் கவரக் கூடிய வார்த்தையை அடுத்ததாகச் சொன்னார். “நீங்கள் சம்பளமாக ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும்” என்பதுதான் அடுத்து அவர் சொன்ன அந்த வார்த்தை.
அவர் கேட்ட சம்பளத்தைப் போல மூவாயிரம் மடங்கு சம்பளம் தர ஒப்புக் கொண்ட ஏவி.எம்., அவர்கள் கூடவே ஒரு நிபந்தனையை விதித்தார். ‘ஸ்ரீவள்ளி’ படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.
வள்ளியாக நடித்த ருக்மணியின் ஒப்பந்தத்திலும் அப்படி ஒரு நிபந்தனையைப் போட்ட ஏவி.எம்., கூடுதலாக இன்னொரு நிபந்தனையையும் குமாரி ருக்மணியின் ஒப்பந்தத்தில் சேர்த்தார். மூன்று திரைப்படங்கள் தொடர்ந்து ஏவி.எம். நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டாவது நிபந்தனை.
ஆனால், அந்த நிபந்தனையை ஏவி.எம்., அவர்களே ரத்து செய்கின்ற சூழ்நிலை ‘ஸ்ரீவள்ளி’ திரைப்படம் முடிவடைகின்ற கட்டத்திலே உருவானது.
‘ஸ்ரீவள்ளி’ படத்திலே டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மணி ஆகிய இருவருக்கும் அடுத்து முக்கிய பாத்திரத்தில் நடித்தது ஒரு யானை. படம் முழுவதும் டி.ஆர்.மகாலிங்கத்திற்கும், குமாரி ருக்மணிக்கும் யானையோடு பல காட்சிகள் இருந்ததால் அந்த யானையோடு தினமும் அவர்களை பழக வைத்தார் ஏவி.எம்.
அப்போது டி.ஆர்.மகாலிங்கம் மைலாப்பூர் மாட விதியில் ஒரு வீட்டின் மாடியில் முப்பது ரூபாய் வாடகையில் குடியிருந்தார். காலையில் வீட்டிலேயே டிபன் எல்லாம் சாப்பிட்டுவிட்டு ஸ்டுடியோவிற்கு வர தயாராக இருப்பார் அவர். ஏவி.எம்.மின் ஆஸ்டின் கார் மாம்பலத்துக்கு சென்று முதலில் குமாரி ருக்மணியை ஏற்றிக் கொண்டு, அதன் பின்னர் மகாலிங்கத்தை அழைத்துக் கொண்டு ஸ்டுடியோ வந்து சேரும்.
ஸ்டுடியோவில் நுழைந்தவுடன் அவர்கள் இருவரும் வாசலில் கட்டிப் போடப்பட்டிருக்கும் யானைக்கு வெல்லமும், தேங்காயும் கொடுத்து அந்த யானையுடன் சிறிது நேரம் பழகிவிட்டுத்தான் ஸ்டுடியோவிற்குள்ளே வருவார்கள்.
இப்படி யானையோடு அவர்கள் தினமும் பழகியதில் அந்த யானை அவர்களோடு மிகவும் நெருக்கமாகிவிட்டது. குமாரி ருக்மணி “நில்” என்றால் நிற்கும். “உட்கார்” என்றார் உட்காரும்.
இப்படி, அந்த யானையோடு குமரி ருக்மணிக்கும் டி.ஆர்.மகாலிங்கத்துக்கும் இருந்த நெருக்கம் ‘ஸ்ரீவள்ளி’ படத்தின் படப்பிடிப்பில் மிகவும் உதவியாக இருந்தது.
யானை தனது துதிக்கையால் ருக்மணியைத் தூக்கி, முருகர் மடியில் வீசுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது அந்த யானை மிகவும் லாவகமாக ருக்மணிக்கு கொஞ்சம்கூட வலி ஏற்படாத அளவில் பூ போல அவரைத் தூக்கி வீசியது. அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது அந்த யானை மட்டும் கொஞ்சம் அழுத்திப் பிடித்திருந்தால் ருக்மணியின் இடுப்பு எலும்பு ஒன்றுகூட தப்பியிருக்காது.
“எந்த ஒரு படத்தையும் உருவாக்குவதற்கு முன்னர் அந்தப் படத்திற்கு முழு ஒத்திகை பார்ப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்தப் படம் தரமான படமாக இருக்கும்” என்று இப்போது கமல்ஹாசன் பல பேட்டிகளில் சொல்லி வருகிறார் அல்லவா… அதை 1945-ம் ஆண்டிலேயே செயல்படுத்தியவர் ஏவி.மெய்யப்ப செட்டியார்.
“அப்போது அந்தப் படத்தை எடுப்பதைத் தவிர வேறு வேலை எங்களுக்குக் கிடையாது என்பதால் எங்கள் முழு கவனமும் ஸ்ரீவள்ளி படத்தை உருவாக்குவதில்தான் இருந்தது. காலையில் எனது பங்குதாரரான சுப்பையாவையும், உதவி இயக்குநரான ஏ.டி.கிருஷ்ணசாமியையும் அழைத்துக் கொண்டு ஸ்டுடியோவிற்கு வந்து விடுவேன்.
நானோ, கிருஷ்ணசாமியோ அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் இல்லை என்பதால் பல முறை ரிகர்சல் பார்ப்போம். ‘மகாலிங்கம் நீ வசனத்தை இப்படி சொல்’, ‘ருக்மணி நீ இப்படி நடி’ என்று பல முறை அவர்களை நடிக்கச் சொல்லி ரிகர்சல் பார்த்து எங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே டேக் எடுப்போம்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ஏவி.எம்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் முழு படத்தையும் போட்டுப் பார்த்தார் ஏவி எம். கதாநாயகி ருக்மணி பத்னெட்டு வயதில் பருவத்தின் வாசலில் இருந்ததாலும் அவருக்கு ஜோடியாக நடித்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு அப்போது இருபத்தோரு வயதுதான் என்பதாலும் அவர்களது ஜோடிப் பொருத்தம் மிகவும் அழகாக அமைந்திருந்தது. நிச்சயம் அந்த ஜோடியைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் திரும்பத் திரும்ப படத்திற்கு வருவார்கள் என்று ஏவி. எம். எண்ணினார்.
இருப்பினும், ஒரு விஷயம் அந்த படத்தின் வெற்றியைக் குலைக்கும் என்று அவருக்குத் தோன்றியது. டி.ஆர்.மகாலிங்கத்தின் கணீர்க் குரலுக்கு எதிரில் குமரி ருக்மணியின் குரல் மிகவும் பலவீனமாக இருந்தது. அது மட்டுமின்றி அவரது குரலில் இனிமையும் இல்லை. ஆகவே அவரது குரலை மாற்றினால் மட்டுமே படம் வெற்றியடையும் என்ற முடிவுக்கு வந்தார் ஏவி.எம்.
அப்பொழுது வெளியாகியிருந்த ‘சபாபதி’ என்ற படத்தில் அப்போதைய பின்னணிப் பாடகியான பி.ஏ.பெரியநாயகி மிகவும் அருமையாகப் பாடியிருந்தார். ஆகவே, அவரைப் பாட வைத்து அந்தக் குரலை, ருக்மணியின் குரலுக்கு பதிலாக பதிவு செய்வது என்று முடிவெடுத்தார் அவர்.
முடிவெடுப்பது சுலபமாக இருந்தது. ஆனால் செயல்படுத்துவதில் சில சங்கடங்கள் முளைத்தன.
“என் குரலை மற்ற நான் சம்மதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி விட்டார்” குமாரி ருக்மணி. இப்போது செட்டியாருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் குமாரி ருக்மணி ஏன் அப்படி பிடிவாதமாக இருக்கிறார் என்பதைப் பற்றிய ரகசியம் அவருக்குத் தெரிய வந்தது.
தொடர்ந்து மூன்று ஏவி.எம். தயாரிப்புகளில் நடிக்க வேண்டும் என்று குமாரி ருக்மணியுடன் ஏவி.எம். ஒப்பந்தம் போட்டிருந்தார் அல்லவா. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய அந்த சிக்கலான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த ருக்மணி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏவி.எம். சம்மதித்தால் தனது குரலை மாற்ற தான் ஒப்பதல் தருவதாக தெரிவித்தார்.
‘ஸ்ரீவள்ளி’ படத்தை எடுத்தவரை ருக்மணியும் பார்த்திருந்தார். ஆகவே, நிச்சயம் அந்தப் படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது அப்படி அந்தப் படம் வெற்றி பெறும்போது தான் ஏவி.எம்.முடன் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் இருந்தால் தன் விருப்பப்படி படங்களை ஒப்புக் கொள்ள முடியாதே என்பதால்தான் அப்படி ஒரு நிபந்தனையை ஏவி.எம்.மிடம் விதித்தார் ருக்மணி.
இந்த நிபந்தனையை விதிக்கும்போது குமாரி ருக்மணிக்கு வயது பதினெட்டு. அதுதான் அவருக்கு முதல் படம். அந்த கால கட்டத்திலேயே நடிகைகள் எவ்வளவு தெளிவாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
அவர் இப்படி ஒரு நிபந்தனையை விதித்தவுடன் ஏவி.எம். அது பற்றி யோசித்துப் பார்த்தார். ‘ஸ்ரீவள்ளி’ படம் வெற்றி பெறவில்லையென்றால் குமாரி ருக்மணியுடன் எத்தனை படங்களுக்கு ஒப்பந்தம் போட்டாலும் என்ன பயன் இருக்கப் போகிறது.
படம் ஓடினால்தானே அந்த ஒப்பந்தத்தால் பயன் இருக்கும். ஆகவே அந்த ஒப்பந்தத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை ஓட வைப்பதற்குத்தான் வழி காண வேண்டும் என்று முடிவெடுத்த அவர், உடனடியாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தனது ஒப்புதலைத் தெரிவித்தார்.
அதற்குப் பிறகு பெரியநாயகியின் குரலில் பாடலைப் பதிவு செய்து வெளியிடப்பட்ட ‘ஸ்ரீவள்ளி’ திரைப்படம் அதுவரை ஏவி.எம். எடுத்த எந்தப் படமும் பெறாத வெற்றியைப் பெற்றது.
இரண்டு லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம், இருபது லட்சம் ரூபாய் லாபத்தை ஈட்டித் தந்தது.
மதுரை சென்டரல் தியேட்டரில் மட்டும் 55 வரங்கள் ஒடி சாதனை புரிந்தது அந்தப் படம்.
The post சினிமா வரலாறு-19 – ஒரு ரூபாய் சம்பளத்துக்கு நடிக்க தயாராக இருந்த கதாநாயகர்..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-16 – சரோஜாதேவியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த சின்ன அண்ணாமலை appeared first on Touring Talkies.
]]>சின்ன அண்ணாமலை என்ற பெயரைச் சொன்னவுடன் பலருக்கும் அவர் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்ததுதான் நினைவுக்கு வரும்.
சின்ன அண்ணாமலை பன்முகத் திறமை கொண்ட மிகச் சிறந்த ஒரு திறமைசாலி. எழுத்தாளர், கதாசிரியர், மேடைப் பேச்சாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல துறைகளில் பெயர் பெற்று விளங்கிய அவர் கலையுலகில் பலரோடு நெருக்கமான தொடர்பில் இருந்தவர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியை தமிழிலே அறிமுகம் செய்தவர் இவர்தான் என்பது பலர் அறிந்திராத ஒரு செய்தி.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்த `சக்ரவர்த்தி திருமகள்’ என்ற திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அவர் அந்தப் படப்பிடிப்பின்போதுதான் எம். ஜி. ஆரோடு நெருங்கிப் பழகத் தொடங்கினார்.
சின்ன அண்ணாமலைக்கும் அரசியல் ஈடுபாடு உண்டென்பதால் ‘சக்ரவர்த்தி திருமகள்’ படப்பிடிப்பின் இடைவேளையில் சலிக்காமல் அவரோடு அரசியல் விவாதம் செய்வாராம் எம்.ஜி.ஆர்.
நாட்கள் செல்லச் செல்ல படப்பிடிப்பு தளத்தில் இருவரும் ஒன்றாகவே உணவு அருந்துகின்ற அளவுக்கு அவர்கள் நட்பு வளர்ந்தது. சின்ன அண்ணாமலை நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர் என்பதால், தன்னுடன் பழகுகின்ற எவரையும் மிக எளிதில் கவர்ந்துவிடக் கூடிய ஆற்றல் அவருக்கு இருந்தது.
எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகப் பழகவும், அவரோடு மனம் விட்டுப் பேசவும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற அவர் ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம், “நீங்கள் ஏன் ராஜா ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?” என்று கேட்டார்.
அப்போது சமூகப் படங்களில் நடிப்பதில் எம்.ஜி.ஆருக்கு ஒரு தயக்கம் இருந்தது. அது மட்டுமின்றி அவர் நடித்த சில சமூகப் படங்கள் மிகப் பெரிய தோல்விப் படங்களாக அமைந்தன. ஆகவே, சமூகப் படங்களில் நடிப்பது பற்றி சின்ன அண்ணாமலை கேட்டபோது “சந்தர்ப்பம் வந்தால், பார்க்கலாம்” என்று சொல்லி பேச்சை வேறு திசைக்கு மாற்றினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். சொல்லவில்லை என்றாலும் எதனால் அவர் சமூகப் படங்களைத தவிர்க்கிறார் என்பது சின்ன அண்ணாமலைக்குத் தெளிவாக தெரிந்து இருந்தது.
சமூகக் கதைக்கு ஏற்ற முகம் தனக்கு இல்லை என்றும் அதனால் கிராப் வைத்தால் பார்க்க நன்றாக இருக்காது என்றும் எண்ணிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை இல்லை என்றால் தனது படம் ஓடாது என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் சமூகக் கதையில் நடிக்க பயப்படுகிறார் என்பது சின்ன அண்ணாமலைக்கு தெளிவாகப் புரிந்தது.
இதெல்லாம் தெளிவாக தெரிந்திருந்தும் “நான் ஒரு சமூகக் கதை எடுக்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள்தான் அதில் நடிக்க வேண்டும்” என்று ஒரு நாள் எம்.ஜி.ஆரிடம் என்று கேட்டார் சின்ன அண்ணாமலை.
சிறிது நேரம் யோசித்த எம்.ஜி.ஆர். “உங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்” என்று அவரிடம் சொன்னார்.
அப்போது தேவ் ஆனந்த் நடித்த ‘பாக்கெட் மார்’ என்ற இந்திப் படத்தின் தமிழ் உரிமையை வாங்கி வைத்திருந்த சின்ன அண்ணாமலை, அந்த படத்தை எம்.ஜி.ஆருக்கு திரையிட்டுக் காட்டினார். அந்தப் படத்தின் கதை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதன் தமிழ்ப் பதிப்பில் நடிக்க தனது ஒப்புதலை அவர் தெரிவித்தார்.
மறுநாள் தனது பங்குதாரரான வி.அருணாசலம் செட்டியாருடன் சியாமளா ஸ்டூடியோவிற்கு சென்ற சின்ன அண்ணாமலை, மேக்கப் அறையில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்து தனது பங்குதாரரை அறிமுகம் செய்துவிட்டு தானும் அவரும் ‘சாவித்திரி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு கம்பெனி துவங்கி இருப்பதாகவும் அதில்தான் எம்.ஜி.ஆர். நடிக்க இருக்கும் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் சொன்னார்.
அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., சின்ன அண்ணாமலையோடு அவருக்கு இருந்த நட்பு காரணமாக மிகக் குறைந்த சம்பளத்தில் அப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார்.
அதே நேரத்தில் அடுத்த ஆறு மாதத்திற்கு தனது கால்ஷீட்டுகளை எல்லாம் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டதாகச் சொன்ன அவர் சின்ன அண்ணாமலையின் படத்தை முடிக்க ஒரு குறுக்கு வழியையும் சொன்னார்.
“எல்லா தயாரிப்பளர்களுக்கும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரைதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். அதனால், தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை நமது படத்தின் சூட்டிங்கை நடத்திக் கொள்ளலாம்” என்று சொன்ன அவர் தன்னுடைய கால்ஷீட்டுக்கு ஒத்து வருகிற மாதிரி ஒரு நடிகையை கதாநாயகியாகப் போடும்படி அவர்களுக்கு ஆலோசனை கூறினார்.
“கதாநாயகி புதுமுகமாக இருந்தால் இன்னும் நல்லது. நம் வசதி போல் சூட்டிங்கை திட்டமிட்டுக் கொள்ளலாம்” என்றும் ஆலோசனை கூறினார் எம்.ஜி.ஆர்.
அந்தக் காலகட்டத்தில் பி.ஆர்.பந்துலுவின் ‘பத்மினி பிக்சர்ஸ்’ தயாரித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தின் கதையை வித்வான் மா.லட்சுமணனுடன் இணைந்து எழுதியிருந்த சின்ன அண்ணாமலை அந்தப் படத்தின் திரைப்பட தயாரிப்புப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் சென்னை கடற்கரையில் சின்ன அண்ணாமலை தனிமையாக உட்கார்ந்து கொண்டிருந்தபோது அங்கு இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் வந்தார். அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்திருந்தார். சின்ன அண்ணாமலையை பத்மா சுப்ரமணியம் நன்கு அறிவார் என்பதால் அவர் அருகிலே அமர்ந்து பேசத் தொடங்கினார் அவர்.
பேச்சின் இடையே தான் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடிக்கும் `தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்படத்துக்கு கதை எழுதியிருப்பதையும், அதில் வேலை செய்து வருவதையும் சின்ன அண்ணாமலை சொன்னவுடன் தன்னுடன் வந்திருந்த பெண்ணை சின்ன அண்ணாமலைக்கு அறிமுகம் செய்து வைத்தார் பத்மா சுப்ரமணியம்.
“இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய் மொழி கன்னடம். ஒன்றிரண்டு கன்னடப் படத்தில் நடித்திருந்தாலும் தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்படுகிறாள். ஏதாவது ஒரு தமிழ்ப் படத்தில் இவருக்கு `சான்ஸ்’ கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று பத்மா கேட்டுக் கொள்ள ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் ‘அழகு மோகினி’, ‘யவ்வன மோகினி’ என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாக இவரைப் போடலாம். எதற்கும் நான் பந்துலு அவர்களிடம் அது பற்றி பேசிவிட்டு சொல்கிறேன்” என்றார் சின்ன அண்ணாமலை.
பத்மா சிபாரிசு செய்த பெண், மாநிறமாக இருந்த போதிலும் அவர் முகம் கேமிராவுக்கு சரியாக இருக்கும் என்று சின்ன அண்ணாமலைக்கு தோன்றியது. மறுநாள் பந்துலுவிடம் அப்பெண்ணைப பற்றி சொல்லி நடனமணிகளில் ஒருத்தியாக நடிக்கும் வாய்ப்பை அந்தப் பெண்ணிற்கு வாங்கித் தந்தார் அவர்.
‘அழகு மோகினி’, ‘யவ்வன மோகினி’ நடன சூட்டிங் ரேவதி ஸ்டூடியோவில் நடந்தது. படத்தின் டைரக்டர் பந்துலு, நடிகர் திலகம் சிவாஜி நடிக்கும் வேறு காட்சிகளை அப்போது படம் பிடித்துக் கொண்டிருந்ததால், அந்த நடனக் காட்சியை டைரக்ட் செய்யும் பொறுப்பை ப.நீலகண்டனிடம் ஒப்படைத்திருந்தார் .
பத்மா சிபாரிசு செய்த அந்தப் பெண், மேக்கப் போட்டு அலங்காரம் எல்லாம் செய்து கொண்டு வந்து காமிரா முன் வந்து நின்றதும் காமிரா மூலம் அந்தப் பெண்ணின் உருவத்தைப் பார்த்த நீலகண்டன், சின்ன அண்ணாமலையைத் தனியாகக் கூப்பிட்டார். “கேமிரா வழியாகப் பார்க்கும்போது இந்தப் பெண் ரொம்பவும் அழகாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. அதனால், கொஞ்சமும் யோசிக்காமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார்.
பின்னர் படமாக்கப்பட்ட அந்த நடனக் காட்சியை தியேட்டரில் போட்டுப் பார்த்த போது வைத்த கண் வாங்காமல் எல்லோரும் அந்த நடிகையையே பார்த்தனர். அந்த அளவுக்கு அந்தப் பெண் மிகவும் அழகாக திரையில் காட்சி அளித்தார்.
அந்தப் பெண்தான் கோடான கோடி தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு காலக்கட்டத்தில் தங்களது தூக்கத்தைத் தொலைக்கக் காரணமாக அமைந்த கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி..!
`தங்கமலை ரகசியம்’ படத்தில் நடனம் ஆடியதற்கு சரோஜாதேவிக்கு அப்போது பந்துலு கொடுத்த சம்பளம் 250 ரூபாய். பின்னர் அதே பந்துலு பின்னர் சரோஜாதேவிக்கு லட்சக்கணக்கில் சம்பளத்தைக் கொட்டிக் கொடுத்தார் என்பது சினிமா வரலாறு.
டைரக்டர் நீலகண்டன் சொல்லியபடி மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தார் சின்ன அண்ணாமலை. சம்பளம் எவ்வளவு தெரியுமா…? முதல் படத்திற்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு. இரண்டாவது படத்திற்கு ரூபாய் ஏழாயிரம். மூன்றாவது படத்திற்கு ரூபாய் பத்தாயிரம்.
எம்.ஜி.ஆர். அவர்களிடம் தான் ஒப்பந்தம் செய்து வைத்துள்ள சரோஜாதேவியை கதாநாயகியாகப் போடலாமா என்று சின்ன அண்ணாமலை கேட்டபோது “எதற்கும் முதலில் ஒரு `டெஸ்ட்’ எடுங்கள்.. பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்” என்றார் எம்.ஜி.ஆர்.
சிட்டாடல் ஸ்டூடியோவில் சரோஜாதேவிக்கு `டெஸ்ட்’ எடுக்கப்பட்டது. அந்த டெஸ்ட்டில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் யார் தெரியுமா…? கதாசிரியர் மா.லட்சுமணன். சரியாகச் சொல்வதென்றால் தமிழில் சரோஜாதேவியின் முதல் திரைக் கதாநாயகன் மா.லட்சுமணன்தான்.
`டெஸ்டை’ எம்.ஜி.ஆர். பார்த்தார். அவருக்கு சரோஜாதேவியின் தோற்றம் பிடித்திருந்தது. அப்போது அவருடன் படம் பார்த்த சிலர் சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு காலைத் தாங்கித் தாங்கி நடந்து சென்றதை அவரிடம் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை “அதுவும் ஒரு மாதிரி `செக்ஸி’யாகத்தான் இருக்கிறது” என்று சொன்ன அவர் “இந்தப் பெண்ணையே கதாநாயகியாகப் போட்டுவிடுங்கள்” என்று சின்ன அண்ணாமலையிடம் சொன்னார்.
அந்தப் படத்தை இயக்குகின்ற பொறுப்பை தனது நண்பரும் சரோஜாதேவியின் எதிர்காலத்தைப் பற்றி மிகச் சரியாக கணித்தவருமான ப.நீலகண்டனிடம் ஒப்படைத்தார் சின்ன அண்ணாமலை. அவருடைய இன்னொரு நண்பரான ஏ.எல்.சீனிவாசன் அந்தப் படத்தின் ‘நெகடிவ்’ உரிமையை வாங்கிக் கொள்ள முன் வந்தார்.
படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்தபோது “லட்சக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போன்று நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயரும் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். ஏராளமாக பணம் செலவு செய்து `போஸ்டர்’ ஒட்டுகிறோம். பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு ஒரு பலன் கிடைக்கும்” என்று சொன்ன எம்.ஜி.ஆர் “அப்படிப்பட்ட ஒரு நல்ல பெயரைப் யார் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு 500 ரூபாய் பரிசு” என்று அறிவித்தார்.
அவர் இப்படி சொன்னவுடன் படக் குழுவைச் சேர்ந்த எல்லோரும் எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்யத் தொடங்கினார்கள். பல பெயர்களைச் சொன்னார்கள். அந்த பெயர்களில் இருந்து கதாசிரியர் மா.லட்சுமணன் சொன்ன ‘திருடாதே’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்த எம்.ஜி.ஆர் கதாசிரியர் மா.லட்சுமணனுக்கு 500 ரூபாயை பரிசாகக் கொடுத்தார்.
‘திருடாதே’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ‘இன்பக் கனவு’ நாடகத்தில் நடிப்பதற்காக சீர்காழி சென்ற எம்.ஜி.ஆர் அந்த நாடகத்திலே நடித்தபோது ஒரு விபத்தை சந்திக்க வேண்டி வந்தது. அதன் காரணமாக கால் ஒடிந்து படுத்த படுக்கையாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அவரை தினமும் போய் பார்த்து பேசிவிட்டு வந்தார் சின்ன அண்ணாமலை.
ஒரு நாள் அப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது “என் கால் குணமாகி நான் படப்பிடிப்பிற்கு வர எவ்வளவு நாள் ஆகுமென்று தெரியவில்லை. அதுவரையில் நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு வீண் சிரமம் ஏற்படும். படத்தின் மீது நீங்கள் வாங்கியிருக்கும் கடன்களுக்கும் வட்டி அதிகமாக ஏறிக் கொண்டே போகும். அதனால் படத்தை ஏ.எல்.எஸ்.ஸிடமே கொடுத்து விடுங்கள். அவரிடம் உங்களுக்கு லாபமாக ஒரு நல்ல தொகையை தரச் சொல்லுகிறேன்…” என்றார் எம்.ஜி.ஆர்.
அதன் பின்னர் ‘திருடாதே’ படம் ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்து மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்துக்கு வித்திட்டவரும் ‘சரோஜா தேவி’ என்ற தேவதையை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவரும் சின்ன அண்ணாமலைதான் என்ற உண்மை பலருக்கு தெரியாமல் போனாலும் சரோஜா தேவிக்கு அவைகள் எல்லாம் தெரியும் என்பதால் `திருடாதே’ படத்தின் நூறாவது நாள் அன்று நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப் பழங்களுடன் சின்ன அண்ணாமலையைப் பார்க்க வந்த அவர் அவர் காலில் விழுந்து வணங்கி அவரது ஆசியைப் பெற்றுச் சென்றார்.
மீடியாக்களின் முழு வெளிச்சமும் படாமல் இப்படி எத்தனையோ சாதனையாளர்கள் திரையுலகில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான ஒருவர்தான் சின்ன அண்ணாமலை.
The post சினிமா வரலாறு-16 – சரோஜாதேவியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த சின்ன அண்ணாமலை appeared first on Touring Talkies.
]]>