The post ‘சர்தார்’ இயக்குநர் மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசளித்தார் நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P.S.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.
‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சர்தாரின்’ இந்த பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.
The post ‘சர்தார்’ இயக்குநர் மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசளித்தார் நடிகர் கார்த்தி appeared first on Touring Talkies.
]]>The post “சர்தார் படத்தின் 2-ம் பாகம் நிச்சயமாக உருவாகும்” – நடிகர் கார்த்தி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>சர்தார் படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி நேற்று மாலை தி.நகர் ஜி.ஆர்.டி. கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “தனிப்பட்ட நபர் முன்னேற வேண்டும் என்றில்லாமல் ஒரு குழுவாக பணியாற்றிய அனுபவம் எனக்கு அனைத்து படங்களிலும் கிடைத்தது. நானும், தயாரிப்பாளர் லக்ஷ்மனும் எல்.கே.ஜி.-யில் இருந்து நண்பர்கள். அனைத்து அழுத்தத்தையும் தாங்கிக் கொண்டு சிரித்துக் கொண்டே இருப்பார்.
இப்படத்தின் கதையை சாதாரணமாக கூறிவிடலாம். ஆனால், காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். ஒவ்வொரு காட்சியும் மென்மேலும் சிறப்பாக வருவதற்கு அனைவரும் குழுவாக இருந்து பணியாற்றினார்கள்.
இயக்குநர் மித்ரன் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார். உதாரணத்திற்கு பாகிஸ்தான் ராணுவ தளத்தை அமைப்பது எளிதல்ல. பார்க்கும்போதே பயம் வர வேண்டும்.
சமீப காலமாக தியாகம் என்பதை கேள்விப்படவில்லை. ஆனால், நாட்டிற்காக தியாகம் செய்தவர் வெளியே தெரியாமல் இருக்கிறார். அதை ஒரு படத்திலேயே அடக்கி, தீவிரமாக கொடுத்த மித்ரனுக்கு நன்றி. மித்ரனும், ரூபனும் பெரிய மேஜிக் செய்திருக்கிறார்கள்.
மேலும், ஒவ்வொரு வேடத்திற்கு மேக்கப் போடும் போது சிரமமாக இருக்கும். அதை கலைக்கும்போது முகம் எரியும். இதைவிட பெரிய ஜாம்பவான்கள் அதிகமாக கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று என் கோபத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வேன்.
எனக்காவது 6 மணி நேரம் தூக்கம் கிடைக்கும். ஆனால், ஜார்ஜ்க்கு அதுகூட இருக்காது. அனைவரின் குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அனைவரின் உழைப்பை வெளியேத் தெரியும்படி செய்த மித்ரனுக்கு நன்றி.
படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதிகமாக கோபப்பட்டேன். அதுவும், மேக்கப் போட்டால் ஹல்க் மாதிரி கோபம் வரும். ஆனால், அது எல்லாமே படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான்.
ஜிவியின் இசை தத்ரூபமாக இருந்தது. லைலா மேடம் மிகவும் சந்தோஷப்பட்டார். ரஜிஷா மற்றும் ராஷியும் மகிழ்ச்சியடைந்தார்கள். குட்டி பையன் ரித்துவை அனைவரும் பாராட்டுகிறார்கள். முனீஷ்காந்த் அருமையான நடிகர். அவரால் எந்த சந்திப்பிலும் கலந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் கேட்டதற்காக ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்த மைனாவிற்கு நன்றி. நிச்சயமாக இந்தப் படத்தின் 2-ம் பாகம் தயாராகும்..” என்றார்.
The post “சர்தார் படத்தின் 2-ம் பாகம் நிச்சயமாக உருவாகும்” – நடிகர் கார்த்தி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post சர்தார் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>ஏனெனில் இந்த உலகத்தின் புவியியல் அமைப்பியல் அப்படித்தான் உள்ளது. ஒரு நாட்டில் உருவாகும் நதி பாய்ந்தோடி பல நாடுகளை வளம் செழிக்க வைக்கிறது. அந்த நதியை ஒரே நாட்டிலேயே அடைத்து வைக்கப் பார்த்தால் போர் வெடிக்காதா..? அப்படியொரு சூழல் வரத்தான் போகிறது என்று எச்சரிக்கிறார் இந்த ‘சர்தார்’ படத்தின் இயக்குநரான மித்ரன்.
‘விஜயபிரகாஷ்’ என்னும் கார்த்தி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். நேர்மையாகவும், துடிப்பாகவும், விழிப்பாகவும் இருக்கும் ஒரு இளைஞர். அதே நேரம் கொஞ்சம் விளம்பர விரும்பி. தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவதை விரும்புவர்.
அப்படியொரு வேலையில் இருக்கும்போது ஒரு பெண் சம்பந்தப்பட்ட தேசத் துரோக வழக்கினை கையில் எடுக்கிறார். விசாரணையில் அந்தப் பெண் மீது எந்தத் தவறும் இல்லை. சுகாதாரமான நீருக்காக அந்தப் பெண் தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு என்று அனைவரையும் தனி மனுஷியாக எதிர்த்து வருவதை அறிகிறார் கார்த்தி.
இதன் தொடர்ச்சியாய் நாட்டில் இருக்கும் நீர் வளத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அதன் மூலம் கோடி, கோடியாய் கொள்ளையடிக்க ஒரு கும்பல் ஆளாய் பறப்பதை அறிகிறார் கார்த்தி. இதன் பின்னணியில் மத்திய உளவுத்துறையும், பக்கத்து நாடுகளும் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார் கார்த்தி.
கூடவே இந்தப் பிரச்சினையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு உளவாளி இருப்பதையும் அறிகிறார் கார்த்தி. அந்த உளவாளி யார் என்பதை அவர் அறிய முற்படும்போது அதிலிருந்து மீளவே முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் கார்த்தி.
அந்தத் தண்ணீர் மாஃபியா கும்பலுடன் சம்பந்தப்பட்டிருக்கும் வில்லனுக்கும், அந்த உளவாளிக்கும் என்ன சம்பந்தம் என்பது உட்பல பல கிளைக் கதைகளுடன் இந்தப் படம் நகர்ந்து இறுதியில் அனைத்திற்கும் விளக்கம் சொல்கிறது திரைக்கதை.
‘சர்தார்’ என்னும் சந்திரபோஸ், காவல் ஆய்வாளர் விஜய பிரகாஷ் என்று இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. இன்ஸ்பெக்டரைவிடவும் ‘சர்தார்’தான் நம்மைக் கவர்ந்திழுக்கிறார். அவருடைய தேசப் பற்றுக்கு நாம் ஒரு சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயமும் படத்தைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.
அந்த முதிர்ச்சியான வயதுக்குரிய கை நடுக்கம், சற்றே தளர்ந்த உடல் மொழி, ஆனாலும் அதே வேகத்துடன் சண்டையிடும் சாகசம்.. ஒரு உளவாளிக்கு உள்ள சமயோசிதப் புத்தி.. என்று பலதையும் தன் நடிப்பில் காண்பித்திருக்கிறார் ‘சர்தார்’ கார்த்தி.
கூத்து நடனத்திலும், ரஜிஷா விஜயனுடனான காதல் காட்சிகளும் இன்ஸ்பெக்டர் கார்த்தி அல்லாமல் வேறொரு இளைஞரை கண் முன்னே காண்பித்திருக்கிறார் கார்த்தி.
வில்லனாக பாலிவுட்டின் சங்கி பாண்டேவை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அந்த முகத் தோற்றமும், உடல் மொழியும் வில்லனாகக் காண்பித்தாலும் டப்பிங் குரலும், ஒத்துப் போகாத தன்மையும் கொஞ்சம் கண்ணிலும், காதிலும் படுகிறது.
ஒரு நாயகியான ராஷி கண்ணா திரைக்கதையை நகர்த்துவதற்காகவே வந்திருக்கிறார். ரஜிஷா விஜயன் பிளாஷ்பேக் காட்சிகளில் நம் மனதைத் தொட்டுவிடுகிறார். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தலையைக் கொடுத்திருக்கும் லைலாவின் கதாப்பாத்திரம்தான் கதையின் மையப் புள்ளி. பெரிதாக நடிப்பென்று இல்லையென்றாலும் கண்களைக் கவர்ந்திருக்கிறார்.
லைலாவின் மகனாக வரும் சிறுவன் ரித்விக்கின் காட்சிகளையும், இன்ஸ்பெக்டர் கார்த்தியின் பிளாஷ்பேக் காட்சிகளையும் இணைத்துக் காட்டும் அந்த சிறிய காட்சி சிறப்பு. ஆனால் சிறுவன் ரித்விக் பேசும் பல வசனங்கள் அவனது வயதுக்கு மீறியவை என்பதையும் நாம் சொல்லித்தான் தீர வேண்டும்.
குடும்பத்துக்கே தெரியாமல் ராணுவ உளவாளியாகப் பணியாற்றுபவன், சொந்த அப்பாவாலேயே வீட்டில் ஒதுக்கப்படுவது போன்ற காட்சியமைப்புகள், நாம் பெரிதும் அறிந்திராத இது போன்ற உளவுத் தொழில் செய்பவர்களின் வாழ்க்கைப் பிரச்னையை எடுத்துக் காட்டுகின்றன.
ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகளில் அதிரடியாகக் கோணங்களை மாற்றி, மாற்றி காட்டி அசத்துகிறது. ‘சர்தார்’ கார்த்தியின் சண்டைக் காட்சிகளை அதிகம் ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார் சண்டை இயக்குநர். குறிப்பாக பங்களாதேஷ் ஜெயில் சண்டை மற்றும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் மிக சிறப்பு.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘ஏறு மயிலேறி’ பாடலும், நடனமும் நம்மை ஈர்க்கவே செய்திருக்கிறது. பின்னணி இசையிலும் அடித்து ஆடியிருக்கிறார்.
உளவாளிகளின் நிலையில்லாத வாழ்க்கை ஒரு புறம், நாட்டில் ஓடும் தண்ணீர் மொத்ததையும் கையகப்படுத்த நினைக்கும் உலகளாவிய மாபியா கும்பல் இன்னொரு புறம் என்று இரண்டு விஷயங்களைப் பற்றி இந்தப் படத்தில் பேசியிருக்கிறார் இயக்குநர் மித்ரன். நாட்டில் நடந்துவரும் தண்ணீர் அரசியல் குறித்து ஆராய்ச்சி செய்து கண்டறியாமல் வெறுமனே செய்தித் தாள்களை மட்டுமே வைத்து காட்சிகளையும், வசனங்களையும் எழுதியிருக்கிறார் இயக்குநர்.
பிரச்சினை தண்ணீர் வளத்தை சுரண்டுவது பற்றியதா.. அல்லது நல்ல குடிதண்ணீர் வேண்டும் என்பதா என்ற குழப்பத்தையும் உண்டு பண்ணியிருக்கிறார் இயக்குநர். இரண்டுக்குமே சம அளவில் காட்சிகளை வைத்திருப்பதால் நாம் இரண்டையுமே கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
குடும்பம், மனைவி, குழந்தையையெல்லாம் விட்டுவிட்டு நாட்டுக்காக தேசப் பற்றோடு தன் பெயரைக்கூட வெளியிடாமல் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பது கொடுமையான திரைக்கதை. இந்த ‘சர்தார்’ இந்த அளவுக்கான தேசபிமானி என்றால் நாம் ஆச்சரியப்படத்தான் வேண்டும்.
மற்றபடி விறுவிறுப்பான திரைக்கதையும், கார்த்தியின் அலுப்பில்லாத நடிப்பும் இந்த ‘சர்தாரை’ பார்த்தே தீர வேண்டிய பட லிஸ்ட்டில் சேர்த்துள்ளன.
RATING : 3.5 / 5
The post சர்தார் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.
]]>The post “மேடம்ன்னு என்னைக் கூப்பிட கூடாது” – இயக்குநரிடம் நடிகை லைலா போட்ட கண்டிஷன் appeared first on Touring Talkies.
]]>‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “இந்தப் படத்துக்காக லைலா மேடத்துடன் நான் முதன்முதலில் தொலைபேசியில் பேசியபோது, என்னை “மேடம் என்று அழைக்காதீர்கள். ‘லைலா’ என்றே அழையுங்கள்” என்றார். “உங்களை என்னால் அப்படி அழைக்க முடியாது, நான் உங்களை ‘மேடம்’ என்றுதான் அழைப்பேன்” என்றேன். ஆனால், அவர் படம் வெளியான பின்பு என்னை “மேடம்” என்று அழைக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். நானும் இந்தப் படம் வெளியான பின்பு அவரை “மேடம்” என்று அழைக்கப் போவதில்லை.
அவர் ஒரு அற்புதமான நடிகை. நான் சிறு வயதில் ‘கண்ணாலே மியா மியா’ பாடலைத்தான் கேட்டு ரசிப்பேன். முதல்முறையாக அவரை பார்த்தபோதும் அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. இப்படத்தில் லைலா மேடம் நடித்தது எனக்குப் பெருமையாகவுள்ளது..” என்றார் இயக்குநர் மித்ரன்
The post “மேடம்ன்னு என்னைக் கூப்பிட கூடாது” – இயக்குநரிடம் நடிகை லைலா போட்ட கண்டிஷன் appeared first on Touring Talkies.
]]>The post “லைலா இப்போதும் ‘பிதாமகனில்’ பார்த்தது போலத்தான் இருக்கிறார்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி போரம் மாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இந்தப் படத்திற்காக இயக்குநர் மித்ரன் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு அனைவருமே மிகவும் பொருந்தினார்கள். குறிப்பாக பெண்கள் சரியாகப் பொருந்தினார்கள். லைலா கதாபாத்திரத்திற்கு புதிதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் வேண்டும் என்று மித்ரன் கூறினார். அப்போது லைலாவிடம் பேசினேன். அவர் ‘பிதாமகனி’ல் பார்த்தது போலவேதான் இன்னமும் அப்படியே இருக்கிறார். அவர் உடனே ஒப்புக் கொண்டு வந்தது படத்திற்கு பெரிய பலம் சேர்த்தது.
பிறகு ராஷி கன்னா வந்தார். அவர் வந்ததும் இப்படத்தை கமர்சியல் என்று சொல்லிவிடக் கூடாது என்ற பயம் வந்தது. ராஷி நம்ம ஊர் பெண்ணாக மாறுவதற்கு கடின முயற்சி எடுத்தார். அவரது கதாபாத்திரத்தை புரிந்துகொண்டு சௌகார்பேட்டை பெண்ணாக கதையோடு ஒன்றி மாறினார்.
ரெஜிஷா முதல் நாள் படப்பிடிப்பிலேயே அவருடைய பாத்திரத்தைப் புரிந்துகொண்டு கதாபாத்திரமாகவே வந்தார். “என்னம்மா.. 100 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது போல, முதல் நாளிலேயே வந்திருக்க?” என்று கேட்கும்படி அழகாக உள்ளே வந்தார்.
முனீஸ்காந்த் சார் அருமையான நடிகர். அவர் அருகில் இருந்து அவரை ரசித்துக் கொண்டே இருந்தேன். வி.கே.ராமசாமி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எது பேசினாலும் அழகாக இருக்கும். சும்மா நின்று கொண்டிருந்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். அவரை மாதிரிதான் முனீஸ்காந்த் சாரையும் பார்த்தேன்.
படத்தில் என்னுடைய சித்தப்பாவாக நடித்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களை அவர் செய்வதே அழகாக இருக்கும். அவருடன் பணியாற்றியதில் உற்சாகமாக இருந்தேன்.
வில்லனாக நடித்த சங்கி சாருக்கு நன்றி. மித்ரன், “முதலில் வில்லன் கதாபாத்திரம் எழுதிவிட்டுத்தான் மற்ற பாத்திரங்களை எழுதுவேன்..” என்றார். வில்லன் பாத்திரம் எப்படி சிந்திப்பான்.. அவனுடைய சித்தாந்தம் என்ன என்பதை கூர்ந்து எழுதியிருக்கிறார். “எனக்கு இரட்டை வேடம் ஆகையால், வில்லனைவிட என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்” என்று மித்ரனிடம் கூறினேன்.
திலீப் மாஸ்டருடன் நிறைய ஒத்திகை பார்த்தோம். இறுதியாக படம் பார்க்கும்போது நன்றாக வர வேண்டும் என்பதற்காக அனைவருமே கடினமாக உழைத்தார்கள்.
இப்படம் நன்றாக வருவதற்கு ஜி.வி.யும் முக்கிய காரணம். அவர் அமைத்துக் கொடுத்த தீம் இசை இப்படத்திற்கு ஒரு தரத்தைக் கொடுத்தது. படப்பிடிப்பிலும் அவருடைய இசையை கேட்டுத்தான் காட்சிகள் அமைத்தோம்.
ஒவ்வொரு வேடம் போடுவதற்கும் இரவு, பகலாக என்னுடன் பணியாற்றிய பிரவினுக்கு நன்றி. அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. பல பேருக்கு இரவு பகல் பாராது உழைத்ததில் உடல் நலம் சரியில்லாமல்போய் பெரிதும் அவதிப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி.
இது உளவாளி படம் என்பதால் ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிகினியும், சிக்ஸ் பேக்கும் இருக்குமா? என்று கேட்காதீர்கள். இது இந்தியன் ஸ்பை த்ரில்லராக இருக்கும். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம்…” என்றார்.
The post “லைலா இப்போதும் ‘பிதாமகனில்’ பார்த்தது போலத்தான் இருக்கிறார்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு..! appeared first on Touring Talkies.
]]>The post ஹாட்ரிக் ஹிட் அடிக்கப் போகும் கார்த்தியின் ‘சர்தார்’ appeared first on Touring Talkies.
]]>‘இரும்புதிரை’, ‘ஹீரோ’ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குர் பி.எஸ்.மித்ரன்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “சர்தார்’ என்றால் பெர்சிய மொழியில் ‘படைத் தலைவன்’ என்று பொருள். இந்த ‘சர்தார்’ படம் ஒரு ஸ்பை த்ரில்லர் கதையைக் கொண்டது.
உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடப்பதுதான். ஆனால், நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்துகூட அதை ஆரம்பிக்கலாம்.
ரொம்ப சிம்பிளான இடத்திலிருந்து தொடங்கி மிகப் பெரிய இடம் நோக்கி இன்டர்நேஷனல்வரைக்கும் உளவு போகுது. இதில் உலக அரசியலும் உள்ளது. இது சாமானியனை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய கதைதான் இது.
நம் அடையாளம். நாம் செய்யும் செயல்கள்தான். உளவாளிகளும் அப்படித்தான். அலெக்ஸாண்டர், ஹிட்லர் உட்பட பெரும்பாலானோர் வரலாற்றின் முக்கியமான சாதனைகளுக்கு பின்னாடி முக்கிய காரணமாக இருப்பது உளவாளிகள்தான்.
கார்த்தி, ‘சிறுத்தை’யில் ரத்னவேல் பாண்டியனாக விரைப்பும், ஜாலியாக இரண்டிலும் வந்தார். இதில் ஜாலியான போலீஸ்காரன். அலப்பறையாக இருக்கும். வயதான அப்பாவாக கார்த்தி கன கச்சிதம். இளமை, வயதானவர் இருவருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.
அந்த மேக்கப்பை போடுவதற்கே மூன்று மணி நேரமாகும். மேக்கப்பை போட்டு டயலாக் பேசி நடிப்பதே கஷ்டம். இதில், கூடவே ஆக்ஷன் வேறு இருக்கும். அதுவும் ரொம்ப கஷ்டம். இப்படி மெனக்கிட்டு நடித்து கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார் கார்த்தி.
ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்னு இரண்டு பேருக்கும் முக்கிய கதாபாத்திரம். மற்றொரு முக்கிய கேரக்டரில் லைலா நடிச்சிருக்காங்க.
கார்த்தியின் படங்களிலேயே பெரும் பொருட் செலவில் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.லட்சுமண்குமார். வரும் தீபாவளியன்று இப்படம் வெளியாகிறது…” என்றார்.
நடிகர் கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்-1’ படங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த ‘சர்தார்’ படமும் வெற்றியடைந்து ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
The post ஹாட்ரிக் ஹிட் அடிக்கப் போகும் கார்த்தியின் ‘சர்தார்’ appeared first on Touring Talkies.
]]>The post ‘இரும்புத்திரை’ மித்ரனின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில்தான் கார்த்தியின் நடிப்பில் ‘சுல்தான்’ என்ற படம் வெளியானது. இதற்கடுத்து கார்த்தி தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அதன் படப்பிடிப்பு கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்காக கார்த்தி தனது முடியை நீளமாக வளர்த்து வைத்திருக்கிறார். இந்தக் கெட்டப் இந்தப் படம் முடியும்வரையிலும் இருக்க வேண்டும் என்பதால் ‘பொன்னியின் செல்வனை’ முடிக்காமல் கார்த்தியால் அடுத்தப் படத்தின் படப்பிடிப்புக்குப் போக முடியாத சூழல் தற்போது இருந்து வருகிறது.
இந்த நிலையில் தனது அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை இன்றைக்கு கார்த்தி வெளியிட்டுள்ளார். ‘சர்தார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்தப் படத்தை பிரின்ஸ் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் கார்த்தியுடன் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் கார்த்தியுடன் ஜோடி சேர்வது இதுவே முதல்முறையாகும்.
மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டே (Chunky Panday) முதல் முறையாக இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், கலை இயக்கம் – கே.கதிர், படத் தொகுப்பு – ரூபன், வசனம் – பொன்.பார்த்திபன், பிபின் ரகு, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், வி.எஃப்.எக்ஸ் – ஹரிஹரசுதன், உடைகள் வடிவமைப்பு – டி.பிரவீன் ராஜா, சிறப்பு ஒப்பனை – பட்டணம் ரஷீத், கேஸ்டிங் இயக்குநர் – வர்ஷா வரதராஜன், தயாரிப்பு நிர்வாகம் – பால்பாண்டி, தயாரிப்பு மேலாளர் – ஜெ.கிரிநாதன், புகைப்படங்கள் – ஜி.ஆனந்த்குமார், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், விளம்பர வடிவமைப்பு – எஸ்.சிவக்குமார், சிவா டிஜிட்டல் ஆர்ட், இணை தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி.
இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ‘சர்தார்’ என்ற பாரசீக சொல்லுக்கு ‘தலைவன்’ அல்லது ‘படைத் தளபதி’ என்று அர்த்தமாம்.
படத்தின் மோஸன் போஸ்டர் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்தால் இதில் கார்த்தி, இந்திய தேச உளவாளி போல் தெரிகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் மூன்று நாடுகளை உள்ளடக்கிய கதையாகவும் இருக்கிறது.
‘இரும்புத்திரை’ போன்ற மக்கள் அறிந்திருக்காத விஷயங்களை உள்ளடக்கிய கதை, திரைக்கதையில் படமெடுத்து வெற்றிப் படமாக்கியவர் இந்தப் படத்தின் இயக்குநர் மித்ரன்தான் என்பதால், இந்த ‘சர்தார்’ படத்தின் கதையும் அதேபோல் சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
படத்தின் கதை வெவ்வேறுவிதமான இடங்களில் பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன் நடப்பதால், தென்காசி தொடங்கி சென்னை மற்றும் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பினை நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றனர்.
The post ‘இரும்புத்திரை’ மித்ரனின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.
]]>