The post தமிழ்ச் சினிமா வரலாறு-45 – கலைஞருக்கும் கவிஞருக்கும் இடையே இருந்த பிரிக்க முடியாத நட்பு..! appeared first on Touring Talkies.
]]>ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக “என்னுடைய கட்சிப் பணிகளுக்கு இடையூறாக இல்லாமலிருந்தால் திரைப்படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொள்கிறேன்” என்ற நிபந்தனையுடன் தன்னுடைய முதல் பட வாய்ப்பை ஒப்புக் கொண்டவர்தான் கலைஞர் மு.கருணாநிதி.
இத்தனைக்கும் வருமானம் வரக் கூடிய எந்த வாய்ப்பாக இருந்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு ஒப்புக் கொள்ள வேண்டிய வறுமை சூழ்ந்த நிலையில் அவர் இருந்த நேரம் அது.
தனது பதினான்காவது வயதில் அரசியலின்பால் ஈர்க்கப்பட்ட கலைஞர் தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட போராட்டங்களும், சந்தித்த சவால்களும் எண்ணிலடங்காதவை.
1957 ஆம் ஆண்டு குளித்தலையில் முதல் தேர்தலைச் சந்தித்த கலைஞர் அந்த நாள் முதல் தனது வாழ்வின் கடைசிவரையிலும் தான் சந்தித்தத் தேர்தல்கள் எதிலும் வெற்றியைத் தவிர வேறெதையும் பார்த்திராதவர். வைர விழா கண்ட தமிழக சட்டமன்றத்தின் ஒரே கதாநாயகர் அவர் மட்டுமே.
தன் வாழ்வில் எண்பதாண்டுகளாக பொது வாழ்க்கையிலே ஈடுபட்டிருந்த கலைஞர். மு.கருணாநிதி அவர்களின் நண்பர்கள் பட்டியல் மிகவும் நீளமானது. அந்த நண்பர்கள் பட்டியலில் தனியிடம் பெற்றவர் கவிஞர் கண்ணதாசன்.
அவரோடு கலைஞருக்கு பல சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. பல நாட்கள் அவர்கள் இருவரும் பேசாமல்கூட இருந்தது உண்டு. ஆனால், அவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஒருவரை ஒருவர் உளமார நேசித்தனர்.
பத்திரிகைகளில் பத்து கவிதைகளும், சினிமாவில் ஐந்து பாடல்களும் மட்டுமே எழுதியிருந்த நிலையில் கண்ணதாசனை ‘கவிஞர்’ என்ற அடை மொழியுடன் அழைத்து பெருமைப்படுத்தியவர் கலைஞர். அவரோடு கடுமையான கருத்து வேறுபாடு இருந்த காலக்கட்டத்தில்கூட அதை மறக்காமல் பல பத்திரிகைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.
“கலைஞர் கருணாநிதியும் நானும் எழுதத் தொடங்கியது ஏறக்குறைய ஒரே காலக்கட்டத்தில்தான். அவரது எழுத்தைத்தான் நான் முதலில் காதலித்தேன். அவருடைய எழுத்துக்களில் எனக்குள்ள ஈடுபாடு போல என்னுடைய எழுத்துக்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு.
எழுத்துத் துறையில் கலைஞரை மிஞ்சக் கூடியவர் எவரும் இல்லை. பதவிகள் போய்விட்டாலும் அவரது எழுத்துக்களில் அவர் எப்போதும் நிலைத்து நிற்பார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முதல்முதலாக பேச வைத்து என்னை ஒரு பேச்சாளனாக கருணாநிதி அறிமுகப்படுத்தினார். பேசவே தெரியாத நான் பேசப் பழகிக் கொண்டேன். அவரோடு பல சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நான் பேச மாட்டேன். அப்படி நான் மிகக் குறைந்த நேரம் பேசுவதைப் பற்றி கேலி செய்தாலும் அதற்கடுத்த கூட்டத்திலும் என்னைக் கட்டாயமாக அவர் பேச வைப்பார்.
அப்படி வற்புறுத்தி பேச வைத்து ஒரு மணி நேரம் தயங்காமல் பேசக் கூடிய கழகப் பேச்சாளனாக என்னை வளர்த்தவர் அவர்தான். நான் அரசியலுக்கு வந்தது, பேச்சாளரானது இதெல்லாம் பாவமோ புண்ணியமோ – அது எதுவாக இருந்தாலும் அது கலைஞரைத்தான் சேரும் “என்று பல காலக்கட்டங்களில் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்.
கவிஞர் கண்ணதாசனின் அந்த திறந்த மனதை கலைஞரும் பலமுறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.
“எனக்கும் அவருக்கும் ஆயிரம் மன வேறுபாடுகள் இருந்த காலக்கட்டத்தில்கூட அவரை முதன்முறையாக ‘கவிஞர்’ என்ற அடைமொழியிட்டு நான்தான் அழைத்தேன் என்பதைச் சொல்ல அவர் மறந்ததேயில்லை. பல பேர் நன்றியை மறந்து விடுவார்கள். அதுவும் என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான நன்றி மறந்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அந்த அனைவரிடமிருந்தும் மாறுபட்டவர்” என்று சொல்லி பல முறை கலைஞர் பரவசப்பட்டிருக்கிறார்.
நட்புக்கு இலக்கணமாக இருந்த கலைஞருக்கும், கவிஞருக்கும் இடையே முதல் முறையாக பிரிவு ஏற்பட்டது மாடர்ன் தியேட்டர்சின் ‘இல்லற ஜோதி’ படத்திற்கு கண்ணதாசன் வசனம் எழுதியபோதுதான்.
எதை எழுதினாலும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று கவிஞரும் கலைஞரும் வைத்துக் கொண்டிருந்த எழுதப்படாத ஓப்பந்தத்தின்படி “இல்லற ஜோதி”யின் கதை, வசனப் பிரதியை எடுத்துக் கொண்டு திருச்சிக்குப் போனார் கண்ணதாசன்.
அப்போது ‘டால்மியாபுரம்’ என்ற பெயரை ‘கல்லக்குடி’ என்று மாற்ற வேண்டும் என்பதற்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட கலைஞர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தனக்குத் தெரிந்த ஒரு ஜெயில் வார்டன் மூலம் ‘இல்லற ஜோதி’ வசனப் பிரதியை சிறைச் சாலைக்கு கொடுத்தனுப்பினார் கண்ணதாசன். அதற்கு முன்னதாகவே “நீங்கள் சிறையில் இருப்பதால் கண்ணதாசன் வசனம் எழுத ஆரம்பித்துவிட்டார்” என்று சில ‘நல்ல’ நண்பர்கள் கலைஞரின் மனதிலே விஷ விதையை விதைத்திருந்ததால் கண்ணதாசன் கொடுத்து அனுப்பியிருந்த வசனங்களைப் படிக்காமல் மறுநாளே திருப்பி அனுப்பி விட்டார் கலைஞர்.
அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தொடர்ந்து கலைஞரை மிகக் கடுமையாக கண்ணதாசன் விமர்சிக்கவே, அந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் கலைஞர்.
“உண்மையில் கருணாநிதி அந்தப் பிரச்னையில் இருந்து ஒதுங்கி விடத்தான் விரும்பினார். அந்த நேரத்தில் நான்தான் தவறு செய்தேன். அதனால்தான் பதிலுக்கு பதில் அவரும் எழுத வேண்டியதாயிற்று” என்று தனக்கும் கலைஞருக்குமிடையே தோன்றிய முதல் வேறுபாடு பற்றி குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.
கலைஞர் மட்டுமின்றி பெருந்ததலைவர் காமராஜர், இந்திரா காந்தி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று பலரும் கவிஞரால் போற்றப்பட்டும், தாக்கப்பட்டும் இருக்கிறார்கள் என்றாலும் கவிஞரால் அதிகமாகத் தாக்கப்பட்டவர்கள் பட்டியலில் கலைஞருக்கே முதலிடம்.
ஆனால், அப்படி அவர் திட்டியபோதிலும் கவிஞரின் தமிழ் நடையின் மீது தீராத காதல் கொண்டிருந்தார் கலைஞர். அதைப் பற்றி கவிஞரிடமே அவர் வெளிப்படையாக சொன்ன ஒரு சம்பவம் திரைப்படங்களில் இடம் பெறுகின்ற சம்பவத்தைவிட பல மடங்கு சுவையானது.
அந்த சம்பவம் பற்றி ஒரு கட்டுரையில் கலைஞரே பகிர்ந்து கொண்டுள்ளார்.
“சென்னையில் ஒரு ஓட்டலில் அமர்ந்து ஒரு திரைப்படத்திற்கான வசனங்களை எழுதிக் கொண்டிருந்தேன். மேடை ஏறினால் என்னைப் பற்றி தாக்கிப் பேசாமல் இறங்குவதில்லை என்கிற அளவிற்கு கண்ணதாசன் என்னைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த கால கட்டம் அது.
நேரில் சந்தித்தால் பேசிக் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்கின்ற அளவிற்கு எங்களுக்கிடையே அப்போது பகை வளர்ந்திருந்தது.
தகவல் ஒன்றைச் சொல்வதற்காக எனது பட நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஓட்டலில் இருந்து நான் போன் செய்தபோது என்னோடு பேசிய அந்த நண்பரின் குரலோடு இன்னொரு பழக்கமான குரலும் இடையில் எனக்குக் கேட்டது.
உடனே அந்த நபருடன் பேசுவதை நிறுத்திவிட்டு குறுக்கே இடம் பெற்ற அந்தக் குரலை உன்னிப்பாகக் கேட்டேன். அது கண்ணதாசனின் குரல். நான் போன் பேசிய நேரத்தில் அவர் யாருடனோ பேச முயல இரண்டு இணைப்பும் ஒன்றாகக் கலந்துவிட்டது.
அதற்குள்ளே என்னுடைய குரலைக் கண்டு பிடித்துவிட்ட அவர் ”என்னய்யா” என்று என்னைக் கேட்க ”யாரையா கண்ணதாசனா? நீர் எப்படி இந்த போனுக்கு வந்தீர்?” என்று நான் கேட்க “நான் யாருக்கோ போன் செய்தேன்” என்று அவர் சொல்ல “பரவாயில்லை போனிலாவது பேசிக் கொள்வோம்” என்று நான் சொன்னேன்.
பகை உணர்ச்சியின் உச்சத்தில் இருந்த நாங்கள் இருவரும் அதையெல்லாம் மறந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
அப்போது ”நான் உன்னைத் தாக்கிப் பேசுகிற பேச்சை எல்லாம் பத்திரிகையில் படிக்கிறாயே.. என்ன உணர்கிறாய்?” என்று அவர் என்னைக் கேட்டார். “என்னை நன்றாகத் திட்டுகின்றீர். நீர் தமிழிலே திட்டுகின்ற காரணத்தால், அதுவும் இனிமையான தமிழிலே திட்டுகின்ற காரணத்தால், அதை நான் ரசித்துக் கொண்டிருக்கிறேனே அல்லாமல் அதற்காக நான் வருத்தப்படவில்லை…” என்று கண்ணதாசனிடம் கூறினேன்” என்று கலைஞர் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“கண்ணதாசா,
என் எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா
கவிதை மலர் தோட்டம் நீ – உன்னைக்
காலமென்னும் பூகம்பம் தகர்த்துத்
தரை மட்டம் ஆக்கிவிட்டதே
கை நீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ
கல்லறைப் பெண்ணின் மடியினிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கிவிட
இயக்க இசைபாடி களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை
திட்டுவதும் தமிழில் நீ திட்டுவதால்
சுவைப்பிட்டு என்று ஏற்றுக் கொண்ட என்னை
தித்திக்கும் கவித் தமிழா, பிரிவின்
மத்தியிலே என் விட்டுச் சென்றுவிட்டாய் “
என்று கவிஞர் கண்ணதாசன் மறைந்தபோது கலங்கிய கண்களுடன் கலைஞர் எழுதிய இரங்கற்பா அவர்கள் இருவருக்குமிடையே இடையே இருந்த நட்புக்கு இன்றும் சாட்சியாக விளங்குகிறது.
(தொடரும்)
The post தமிழ்ச் சினிமா வரலாறு-45 – கலைஞருக்கும் கவிஞருக்கும் இடையே இருந்த பிரிக்க முடியாத நட்பு..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>பின்னர் படப்பிடிப்பு ஒழுங்காக நடைபெறுகிறதா என்று தெரிந்து கொள்ள ஸ்டுடியோவிற்கு அவர் தொடர்பு கொண்டபோது சந்திரபாபுவிற்காகத்தான் எல்லோரும் காத்திருப்பதாகவும் அவர் இன்னமும் வரவில்லை என்றும் அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன், சிறிது நேரம் கவிஞருக்கு பேச்சே வரவில்லை.
சந்திரபாபு படப்பிடிப்பிற்கு வராததைவிட அவர் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் பின் வாசல் வழியாக வெளியேறியது அவர் மனதை மிகவும் பாதித்தது.
தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அவமானமாக அந்த சம்பவத்தைக் கருதினார் கண்ணதாசன். படம் என்ன ஆகுமோ என்ற பயமும் கடன்காரர்களுக்கு என்ன பதிலைச் சொல்வது என்ற கவலையும் அவரை சூழ்ந்து கொண்டது.
அங்கிருந்து ஸ்டுடியோவிற்குப் போன அவர் தனது துயரத்தை எல்லாம் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதார். சந்திரபாபுவிற்காக அவர் வீட்டில் காத்திருந்ததைப் பற்றியும் அவரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் சந்திரபாபு பின் வாசல் வழியாக சென்றதைப் பற்றியும் ‘எனது சுய சரிதம்’ என்ற புத்தகத்தில் அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.
“எந்த வீட்டிலும் போய் நாற்காலியில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு வந்தது கிடையாது. மந்திரிகளில் முதன் மந்திரியாக இருந்த என் நண்பர் கருணாநிதியின் விட்டுக்கு மட்டும்தான் போவேன். இன்ன நேரத்தில் சந்திப்பதென்று நேரத்தை முன் கூட்டியே முடிவு செய்து கொண்டுதான் போவேன்.
சந்திரபாபு வீட்டில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்த பிறகு சினிமா நடிகர்களைப் பற்றி எனக்கு ஒரு கெட்ட அபிப்ராயமே ஏற்பட்டது. அளப்பரிய திறமை இருந்தாலும் ஆணவம் ஒரு மனிதனை அழித்துவிடும்.
சந்திரபாபு அளப்பரிய திறமையுடையவர் என்று சொல்ல முடியாது ஆனால் அவருக்கு எல்லையில்லா ஆணவம் இருந்தது. ஆணவத்தால் அழிந்து போனவர்கள் பல பேரை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஆணவத்தால் தொழிலை அலட்சியப்படுத்தியவர்கள் பல பேர் இன்று சோற்றுக்கு அலைகிறார்கள்.
சுமார் இருபத்தி ஐந்தாண்டு காலமாக இந்த பட உலகில் சிலரை வளமாகவும் நிரந்தரமாகவும் ஆண்டவன் வைத்திருக்கிறான்.
தம்பி விஸ்வநாதன், மாமா கே.வி.மகாதேவன், டி.எம்.சவுந்திரராஜன், பி.சுசீலா, நான் ஆகியோர் எங்கள் தொழிலில் காட்டுகின்ற ஆர்வம், பயம், பணிவு ஆகியவைகள்தான் கால் நூற்றாண்டு காலமாக எங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு பாட்டிற்கு இசையமைக்கும்போது தயாரிப்பாளருக்கோ, இயக்குநருக்கோ ஒரு மெட்டு பிடிக்கவில்லை என்றால் தம்பி விஸ்வநாதன் பத்து மெட்டுக்கள் போடுவான். டைரக்டர்களுக்கு பிடித்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும், மீண்டும் போட்டுக் கொண்டே இருப்பான்.
மாமா மகாதேவனும் அதே மாதிரிதான். நானும் மற்றவர்களுக்கு திருப்தி ஏற்படுகின்றவரை மாற்றி மாற்றி எழுதிக் கொண்டே இருப்பேன். சுசிலாவும், சவுந்திரராஜனும் பாட்டு நன்றாக அமையும்வரை அலுப்படையாமல் பாடல்கள் பாடுவார்கள்.
எங்களது வெற்றியின் ரகசியம் எங்கள் திறமையில் மட்டும் இல்லை. தொழிலில் உள்ள பொறுப்பு, பயம், ஒவ்வொரு பாட்டும் ரசிக்கப்பட வேண்டும் என்ற ஆசை. இந்தத் தொழில் நம்மை கைவிட்டு விடக்கூடாது என்ற கவலை ஆகிய எல்லாமே அதற்குக் காரணம்.
இவற்றை எல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம் தொழிலை தெய்வமாக மதித்து பொறுப்பாகச் செய்கின்ற எவனையும் இந்தத் தொழில் கைவிடாது. ஆணவம் பிடித்து மற்றவர்களை அலட்சியப்படுத்தினால் ஒரு நாளைக்கு அவர்களுடைய படிக்கட்டிலேயே ஏறி ஐம்பது ரூபாய் யாசகம் கேட்க வேண்டி வரும்.
பண விஷயத்தில் நான் பிடிவாதம் பிடித்தது இல்லை, பேரம் பேசியதில்லை, ரேட்டை திடீர். திடீரென்று உயர்த்தியதில்லை. கஷ்டப்பட்டு ஒருவர் படம் எடுத்தால் அவர் கொடுப்பதை வாங்கிக் கொள்வேன்.வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் அவர்களாகவே நான் கேட்பதை கொடுத்துவிடுவார்கள்.
அவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் நான் இலவசமாகக்கூட ஒத்துழைப்பேன். அதனால்தான் எனக்குக் கஷ்டம் வரும்போது எல்லோருமே உதவி செய்கிறார்கள்.
ஆணவக்காரர்கள் மட்டுமே தொழிலின்றி அலைகிறார்கள், அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர் என்பதைச் சொல்ல வேண்டியது எனது கடமையாகிறது” என்று அந்த நூலிலே குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்
தனது வாழ்நாளில் கவிஞர் யாரையும் அந்த அளவு கடுமையாக விமர்சித்ததே இல்லை. ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திலே ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’ பாடல் உட்பட மிகச் சிறந்த பாடல்கள் பெற்றிருந்தன. ஆனால், அந்தப் பாடல்களாலும் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
முன்பின் தொடர்பில்லாத குழப்பமான கதை, கதாநாயகனாக நடித்த சந்திரபாபுவின் அலட்சியப் போக்கு ஆகிய எல்லாமாகச் சேர்ந்து அந்தப் படத்தை மிகப் பெரிய தோல்விப் படமாக ஆக்கியது. அந்தப் படம் வெளியானபோது ஐந்து லட்சத்து தொண்ணூறு ரூபாய் கடனாளியாகி இருந்தார் கண்ணதாசன்.
அப்போது கண்ணதாசனின் பட நிறுவனத்தில் பதினோரு கார்கள் இருந்தன. அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற கார்கள் அனைத்தையும் அந்த கார்களின் மீது யார் யார் கடன் கொடுத்திருந்தார்களோ அவர்களது வீட்டில் கொண்டுபோய் விடச் சொன்னார் கண்ணதாசன்.
அடுத்து கம்பெனி இருந்த அலுவலகத்தை காலி செய்தார். அங்கிருந்த சாமான்கள அனைத்தையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டிலே போட சொன்னார்.
அந்தப் படத்திற்குப் பிறகு பாடல்கள் எழுதி அவர் சம்பாதித்த பணம் முழுவதும் கடன்காரர்களுக்கு வட்டித் தொகை செலுத்தவே சரியாக இருந்தது.
சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சேலம் டவுனில் டாக்டர் செரியன் என்று ஒரு பல் டாக்டர் இருந்தார். அந்த டாக்டருக்கு கைரேகை பார்த்து பலன் சொல்வது என்றால் மிகவும் இஷ்டம்.
அவருடன் ஒரு முறை கண்ணதாசன் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணதாசனின் கையைப் பார்த்துவிட்டு “இந்தக் கை லட்சம் லட்சமாக சம்பாதிக்கும். ஆனால் பணம் வருவதற்கு முன்பே கடன் வந்து விடும். ஐம்பது வயதிற்கு மேல் ஐம்பத்தி ஆறாவது வயதிற்குள் நீ சந்நியாசியாகவோ ஏகாந்தத்தை நாடுகிறவனாகவோ ஆகி விடுவாய்’ என்று அவரிடம் கூறினாராம்.
‘கவலை இல்லாத மனிதன்’ பட தோல்விக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலையைப் பார்த்தவுடன் கண்ணதாசனுக்கு அவர் நினைவுதான் வந்தது
‘கவலை இல்லாத மனிதன்’ என்று படத்திற்கு பெயர் வைத்ததினாலேயே கடவுள் என்னைத் தண்டித்து விட்டார். மனிதன் எப்படி கவலை இல்லாமல் இருக்க முடியும் என்று கடவுள் என்னிடம் சவால் விட்டதாகவே நான் உணர்ந்தேன் என்று ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தை எடுத்த அனுபவம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் கண்ணதாசன்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>