The post சினிமா வரலாறு – 82 – கலைவாணரின் கடைசி மாணவரான ‘குலதெய்வம்’ ராஜகோபால் appeared first on Touring Talkies.
]]>அந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதால் அதுவரையிலே ‘ராஜகோபாலாக’ இருந்த அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘குலதெய்வம்’ ராஜகோபால் ஆனார்.
சிறுவயது முதலே அவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மிகத் தீவிர ரசிகர். ராஜகோபால் நடித்த ‘எதிர்பாராதது’ என்ற நாடகம் நாகர்கோவிலில் நடைபெற்றபோது அந்த நாடகத்துக்கு தலைமை தாங்க வந்த என்.எஸ்.கிருஷ்ணன் ராஜகோபாலின் நடிப்பைப் பாராட்டியது மட்டுமின்றி “இந்த மாதிரி திறமையான கலைஞர்கள் எல்லாம் மேம்போக்காக நடித்துவிட்டுப் போகாமல் கலைத்துறையில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
“நான் யாருடைய ரசிகனாக இருந்தேனோ அவரே என்னை அப்படிப் பாராட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடைய வாழ்க்கையில் பல முக்கியமான திருப்பங்களுக்குக் காரணமானவர் கலைவாணர்தான். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த நான் திரைப்படங்களில் நடிக்கவும் அவர்தான் காரணமாக அமைந்தார். கலைவாணரது கடைசி மாணவன் நான்தான்” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ராஜகோபால், கலைவாணரைப் பற்றி பல அரிய தகவல்களை அந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“கலைவாணர் ஒரு அபூர்வப் பிறவி. அவரோடு சேர்ந்து நாடகங்களில் நடித்த போதும், சினிமாவில் நடித்தபோதும் எத்தனையோ இனிய அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன.
நாடகம் முடிந்து நாங்கள் வீடு திரும்பும்போது நாடகம் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தந்த சம்பளம் போக கலைவாணருடைய சம்பளப் பணம் என்னிடம்தான் இருக்கும். அந்த சமயத்தில் அவரிடம் உதவி கேட்டு வருபவர்கள் எல்லோருக்கும் அவர் அந்தப் பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கச் சொல்வார். பெரும்பாலான நாட்கள் வீடு திரும்பும்போது அவருடைய சம்பளப் பணம் முழுமையாக தீர்ந்து வெறும் கையுடன்தான் நாங்கள் வீடு திரும்புவோம். தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று எப்போதும் சொல்லாத வள்ளல் அவர்.
1954-ம் ஆண்டில் தந்தை பெரியார் புத்த மத மாநாடு ஒன்றை நடத்தினார். அந்த மாநாட்டில் புத்தரைப் பற்றி கலைவாணர் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன்.
அந்த நிகழ்ச்சியின் முடிவில் பேசிய தந்தை பெரியார் “எல்லோரும் என்னை பெரியார் என்று சொல்கிறீர்கள். ஆனால் எனக்கும் மேலே ஒரு பெரியார் இருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா?” என்று அந்த கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்து கேட்டார்.
பெரியார் அப்படி கேட்டதும் கூட்டத்தில் மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. “பெரியாருக்கு மேலே ஒரு பெரியாரா? யார் அவர்?” என்று அந்தக் கூட்டத்திலிருந்த எல்லோரும் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுக்கத் தொடங்கியபோது தன்னுடைய பேச்சுக்கான விளக்கத்தை தந்தை பெரியாரே சொல்லத் தொடங்கினார்.
“உங்களுக்கு எல்லாம் நான் பெரியார். எனக்குப் பெரியார் கலைவாணர்தான். ஏனென்றால் நான் மேடை ஏறி சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைச் சொன்னால் கல்லால் அடிக்கிறார்கள். நான் பேசுகின்ற அதே கருத்துக்களைத்தான் கலைவாணர் சினிமாவில் சொல்கிறார். ஆனால் அதைப் பார்க்கவும், கேட்கவும் காசு கொடுத்து போகிறார்கள். இப்போது சொல்லுங்கள். நான் சொன்னது நியாயம்தானே. அவர்தானே எனக்குப் பெரியார்” என்று தந்தை பெரியார் சொல்லி முடித்தபோது மக்களுடைய ஆரவாரம் அடங்க வெகு நேரம் ஆயிற்று.
கொடைத் தன்மை மட்டுமின்றி பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் கலைவாணர். அதனால்தான் கட்சி வேறுபாடு இன்றி எல்லா அரசியல் தலைவர்களாலும் விரும்பப்பட்ட கலைஞராக அவர் இருந்தார்.
திறமைசாலிகளைத் தேடிப் பிடித்து அவர்களுக்கான வாய்ப்புகளை பெற்றுத் தருவதில் கலைவாணருக்கு நிகராக யாரையும் சொல்ல முடியாது.
காத்தவராயன் கதையை ‘ஆர்யமாலா’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிட்ட பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு கலைவாணரைச் சந்தித்து ‘ஆர்யமாலா’ கதையைச் சொல்லிவிட்டு அந்தப் படத்தில் யாரை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என்று அவரிடம் யோசனை கேட்டார். “படம் சக்சஸ் ஆகணும்னா கதாநாயகனாக பி.யு.சின்னப்பாவையும், வில்லனாக பாலையாவையும் போடு” என்று கலைவாணர் சொன்னபோது ஸ்ரீராமுலு நாயுடு அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.
ஏனென்றால் அந்த கால கட்டத்தில் பி.யு.சின்னப்பா திரைப்பட மார்க்கெட்டை முற்றிலுமாக இழந்துவிட்டு ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்கப் போய்விட்டிருந்தார். டி.எஸ்.பாலையா அதற்கும் மேலே ஒரு படி சென்று சாமியாராக மாறிவிட்டிருந்தார். அவர் எங்கேயிருக்கிறார் என்பதைப் பற்றி அவரது குடும்பத்துக்கே அப்போது தெரியாமல் இருந்தது. ஆகவே, கலைவாணர் அவர்கள் இருவரது பெயரையும் சொன்னவுடன் ஸ்ரீராமுலு நாயுடு மிகப் பெரிய குழப்பத்துக்கு ஆளானார்.
ஸ்ரீராமுலுவின் முகத்தைப் பார்த்தே தான் சொன்ன யோசனையைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட கலைவாணர் “நீங்க எதையும் யோசிக்காதீங்க. நான் சொல்றதை கேளுங்க. இந்த படத்தில அவங்க ரெண்டு பெரும் நடிச்சாதான் நல்லா இருக்கும். நீங்க சரின்னு சொன்னா அவங்க எங்கே இருந்தாலும் அவங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது என் பொறுப்பு. என்ன சொல்றீங்க?” என்று ஸ்ரீராமுலு நாயுடுவிடம் கேட்டார். ஸ்ரீராமுலு நாயுடு, கலைவாணர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். ஆகவே அவர் சொன்னதை மறுத்துப் பேச முடியாமல் “சரி” என்று ஏற்றுக் கொண்டார்.
ஸ்ரீராமுலு நாயுடு ஒப்புக் கொண்டவுடன் பி.யு.சின்னப்பாவையும், பாலையாவையும் தேடிப் பிடித்து அழைத்து வந்து ‘ஆர்யமாலா’ படத்தில் அவர்கள் இருவரையும் நடிக்க வைத்தார் கலைவாணர். மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த அந்த படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரின் மார்க்கெட்டும் மீண்டும் சூடு பிடித்தது.
ஒரு முறை சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பத்திரிகைகளில் அறிக்கை விடத் தொடங்கியபோது கலைவாணர் அவர்களை சமாதானப்படுத்தியது மட்டுமின்றி இனி ஒற்றுமையாக இருப்போம் என்று தனக்கு முன்னால் அவர்களை சத்தியம் செய்ய வைத்தார். அவரது பெருமைகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கு நாட்கள் போதாது” என்று கலைவாணரது பெருமைகளை எடுத்துச் சொல்லியுள்ள ‘குலதெய்வம்’ ராஜகோபால் “நடிகனாக இருந்த என்னை வில்லுப்பாட்டுக் கலைஞராக ஆக்கியவரும் அவர்தான்” என்று கூறியுள்ளார்.
1957-ம் ஆண்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் கலைவாணர் உயிர் பிரிந்தது.1958-ம் ஆண்டு அவரது இல்லத்தில் கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப் பாட்டு நிகழ்ச்சியாக முதன்முதலில் நடத்திய ‘குலதெய்வம்’ ராஜகோபால் அதற்குப் பிறகு எண்ணற்ற மேடைகளில் கலைவாணரைப் பற்றி வில்லுப் பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.
“என் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்த அவருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த வருத்தத்தில் இருந்த என்னுடைய மனதிற்கு அவர் இறந்த பிறகு வில்லுப் பாட்டு நிகழ்ச்சியின் மூலம் அவரது வாழ்க்கையைச் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது என்று ‘குலதெய்வம்’ ராஜகோபால் குறிப்பிட்டிருக்கிறார்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு – 82 – கலைவாணரின் கடைசி மாணவரான ‘குலதெய்வம்’ ராஜகோபால் appeared first on Touring Talkies.
]]>The post தமிழ்ச் சினிமா வரலாறு – 46 – நாடக ஆசிரியரைப் பாராட்ட அவரது வீடு தேடி சென்ற கலைவாணர்..! appeared first on Touring Talkies.
]]>அந்தப் படத்தில் ஜெமினி கணேசன், முத்துராமன், நாகேஷ், விஜயநிர்மலா என்று பலரும் நடித்தார்கள் என்றாலும் துவக்க நாளன்று ‘தினத்தந்தி’யில் கொடுத்த இரண்டு பக்க விளம்பரத்தில் எம்.ஆர்.ராதாவுக்கும், பத்மினிக்கும்தான் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் அவர்.
அந்த விளம்பரம் அவ்வளவு பெரிய விமர்சனத்துக்கு உள்ளாகும் என்று கோபாலகிருஷ்ணன் எதிர்பார்க்கவில்லை.
“பத்மினியை ரசிகர்கள் மறந்தே போய்விட்டார்கள். எம் ஆர் ராதாவுக்கு மார்க்கெட்டே இல்லை அத்துடன் ஜோடிப் பொருத்தமும் சரி இல்லை. அதனால் இந்தப் படம் கே.எஸ்.ஜி.க்கு பெரிய தோல்விப் படமாகத்தான் அமையப் போகிறது” என்று பேசாத திரையுலகினரை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்ற நிலையே அன்றிருந்தது.
ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எம்.ஆர்.ராதாவை வைத்து அந்தப் படத்தை எடுத்து முடித்தார் என்றால் அதற்குக் காரணம், அவரது வாழ்க்கையில் நடந்த இரு முக்கியமான சம்பவங்கள்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை மிகவும் கவர்ந்த நடிகர் ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன். அவரைச் சந்திக்க பல முறை முயன்றும் கோபாலகிருஷ்ணனால் அவரைச் சந்திக்க முடியவில்லை. அப்படிப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாள் கே.எஸ். கோபாலகிருஷ்ணனை சந்திக்க அவருடைய வீட்டைத் தேடி வந்தார் என்றால் அதற்குக் காரணமாயிருந்தவர் எம்.ஆர்.ராதா.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘எழுத்தாளன்’ என்ற நாடகத்தை தனது ‘சக்தி நாடக குழு’வின் சார்பில் சென்னையில் நடத்த விருப்பப்படுவதாகச் சொல்லி அதற்கான அனுமதியை கோபாலகிருஷ்ணனிடம் கேட்டார் நடிகர் எஸ்.ஏ.நடராசன். அவர்தான் ‘மந்திரிகுமாரி’ திரைப்படத்தில் ‘வாராய் நீ வாராய்’ என்று பாடி நடித்தவர். அவரது வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்தார் கோபலகிருஷ்ணன்.
எம்.என்.கண்ணப்பா-ஜி.சகுந்தலா ஆகிய இருவரும் கதாநாயகனாகவும், நாயகியாகவும் நடிக்க எஸ்.ஏ.நடராஜன் வில்லனாக நடித்த அந்த நாடகம் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் நடைபெற்றபோது யாரும் எதிர்பாராதவிதமாக எம்.ஆர்.ராதா அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார்.
நாடகம் முடிகின்ற தருணத்தில் அவரை மேடைக்கு அழைத்து நாடகம் பற்றி அவருடைய கருத்து என்ன என்று பேசச் சொல்லலாமா, அதற்கு அவர் சம்மதிப்பாரா என்றெல்லாம் எஸ்.ஏ.நடராஜனும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் மேடைக்கு பின்னால் நின்று பேசிக் கொண்டிருந்தபோது… அங்கே வந்த எம்.ஆர்.ராதாவின் நாடகக் குழு நிர்வாகி, நாடகம் முடிந்தவுடன் எம்.ஆர்.ராதா பேச விரும்புவதாக நடராஜனிடமும், கோபாலகிருஷ்ணனிடமும் கூறினார். அதைக் கேட்டவுடன் அவர்கள் இருவரும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை என்றுதான் கூற வேண்டும்.
நாடகம் முழுவதையும் பார்த்துவிட்டு எம்.ஆர்.ராதா மேடை ஏறியபோது அவருடைய ஒரு கையில் பீடியும், இன்னொரு கையில் தீப்பெட்டியும் இருந்தது. அவை இரண்டையும் ரசிகர்கள் முன்பாகக் காட்டிய அவர் “நான் இந்த நாடகத்தைப் பற்றி என்ன சொல்லப் போறேன்னு தெரிஞ்சிக்க நீங்க எல்லோரும் ஆவலோடு இருக்கிறது எனக்குத் தெரியுது. என் கருத்தைச் சுருக்கமாக சொல்வதற்காகத்தான் இடது கையில் தீப்பெட்டியையும் வலது கையில் ஒரு பீடியையும் உங்ககிட்ட காட்டினேன்.
இந்த நாடகத்தின் முதல் காட்சி தொடங்கியபோது பீடி குடிக்க வேண்டும் என்று இந்த பீடியைக் கையில் எடுத்தேன். நாடகத்தின் விறுவிறுப்பையும் அதில் இடம் பெற்ற அற்புதமான காட்சிகளையும் புரட்சிகரமான கருத்துக்களையும் ரசித்துக் கொண்டிருந்த நான் நாடகம் முடியும் வரை பீடி பிடிக்கவே மறந்துவிட்டேன். இதற்கு மேலேயும் இந்த நாடகம் பற்றி நான் சொல்ல வேண்டுமா?” என்று அவர் சொல்லி முடித்தபோது அந்த நாடகக் கொட்டகையே அதிரும்படி ரசிகர்கள் கை தட்டினார்கள்.
எம்.ஆர்.ராதா அந்த அளவு மனம் விட்டுப் பாராட்டுவார் என்று கோபாலகிருஷ்ணன் எதிர்பார்க்கவேயில்லை. அதனால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார் அவர்.
அவருக்காக இன்னொரு ஆனந்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கும் விஷயம் அப்போது அவருக்குத் தெரியாது.
மறுநாள் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஒரு கதையைப் படித்துக் காட்டி அதைப் பற்றி விவாதித்துவிட்டு சாந்தோமில் இருந்த தனது அறைக்கு அவர் திரும்பியபோது அந்த அறையில் இருந்த அவருடைய நண்பர் “உங்களைப் பார்க்க கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வந்து இருந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டு இப்போதுதான் புறப்பட்டுச் சென்றார்” என்று கோபாலகிருஷ்ணனிடம் தெரிவித்தார்.
நண்பர் சொன்னதை கே.எஸ்.ஜி. முதலில் நம்பவில்லை. “பகல் கனவு ஏதாவது கண்டீர்களா..? என்னைப் பார்க்க கலைவாணர் வருவதாவது..? அவரைப் போல வேறு யாரையாவது பார்த்து இருப்பீர்கள்…” என்றார்.
கோபாலகிருஷ்ணன் அப்படிச் சொன்னவுடன் “எனக்கென்ன பைத்தியமா?” என்று ஆத்திரத்துடன் கேட்ட அந்த நண்பர் ” வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணனேதான். தன்னுடைய 5666 வாக்சால் காரில்தான் அவர் வந்தார். அறைக்குள்ள வந்து உட்கார்ந்து எங்களிடம் நீண்ட நேரம் சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருந்தார். பிறகு கிளம்பும்போது அவருடைய மாம்பலம் விட்டின் டெலிபோன் நம்பரை எழுதிக் கொடுத்த அவர் நீ வந்தவுடன் அந்த நம்பருக்கு போன் செய்தால் உன்னை அழைத்துப் போக கார் அனுப்பி வைப்பதாக சொல்லிவிட்டுப் போனார்…” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறவே கலைவாணர் இருந்த வெங்கட்ராமன் தெருவுக்கு உடனே கிளம்பினர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.
அவர் போனபோது கலைவாணர் விட்டின் காம்பவுண்ட் கேட் சாத்தப்பட்டிருந்தது. உள்ளே போகலாமா வேண்டாமா என்று கோபாலகிருஷ்ணன் யோசித்துக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள்ளிருந்து வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவியபடியே வெளியே வந்த என்.எஸ்.கிருஷ்ணன் வெளியே நின்று கொண்டிருந்த டிரைவரைப் பார்த்து “டேய் ராஜப்பா, நீ உடனே காரை எடுத்துக்கிட்டு சாந்தோமுக்குப் போய் அந்த கோபாலகிருஷ்ணனை அழைச்சிக்கிட்டு வா. அவன் வீட்டில் இல்லேன்னா அங்கேயே காத்திருந்து அவன் வந்ததும் அவனை இங்கே கூட்டிக்கிட்டு வா..” என்றார்.
அவர் அப்படிச் சொன்னவுடன் தைரியம் வரப் பெற்ற கோபாலகிருஷ்ணன் நேராக வீட்டுக்குள் சென்று “அண்ணே நான்தான் கோபாலகிருஷ்ணன்” என்றபடி என்.எஸ்.கே. முன்னால் போய் நின்றார்.
அவரை ஆச்சர்யமாக பார்த்த கலைவாணர் “நீதானா அந்த கோபாலகிருஷ்ணன்..? வா.. வா… உன்னுடைய ‘எழுத்தாளன்’ நாடகத்தைப் பார்த்த எம்.ஆர்.ராதா ராத்திரி பூரா அதைப் பத்தியே பேசிக்கிட்டு இருந்தாண்டா. அந்த அளவுக்கு வேற யாரைப் பத்தியும் ராதா இதுவரைக்கும் என்கிட்டே புகழ்ந்து பேசினதே கிடையாது. பொதுவாக எல்லோரையும் திட்டிப் பேசும் ராதா உன்னை தூக்கி வைச்சிப் பேசினது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. அதனால நீ எழுதின ‘எழுத்தாளன்’ நாடகத்தை நீயே படிக்கக் கேட்கணும் என்பதற்காகத்தான் உன்னைத் தேடி வந்தேன்…” என்றார்.
எம்.ஆர்.ராதா தன்னைப் பாராட்டிய சந்தோஷம், என்.எஸ்.கிருஷ்ணன் தன்னுடைய நாடகத்தைக் கேட்க ஆசைப்படுகின்ற சந்தோஷம் ஆகிய இரண்டும் ஒன்றாக சேர்ந்து கொள்ள அங்கேயே சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு பின்னர் அந்த நாடகத்தைப் படித்தார் கோபாலகிருஷ்ணன்.
நாடகத்தின் வசனங்களை முழுவதுமாகக் கேட்ட பிறகு “ராதா உன்னைப் பாராட்டியது நியாயம்தான். ரொம்பப் பிரமாதமாக எழுதி இருக்கே” என்ற கலைவாணர் “நீ ரொம்பப் பெரிய ஆளாக வருவாய்” என்று ஆசிர்வதித்தது மட்டுமின்றி “இனிமேல் என்னைப் பார்க்க வேண்டுமென்றால் நீ எப்போது வேண்டுமானால் இங்கே வரலாம். யாருடைய அனுமதியையும் பெறத் தேவையில்லை..” என்றார்.
கலைவாணர் நாடகத்தைப் பாராட்டியதைவிட எப்போது வேண்டுமானாலும் தன்னைப் பார்க்க வரலாம் என்று சொன்னதில் கோபாலகிருஷ்ணன் மிகுந்த ஆனந்தம் அடைந்தார்.
அப்படி கலைவாணரிடம் தன்னைப் பற்றி உயர்வாக கூறிய எம்.ஆர்.ராதா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த காரணத்தினால்தான் ‘சித்தி’ படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் அவரைப் போட்டு படம் எடுத்தபோது எழுந்த விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார் அவர்.
எல்லோரது விமர்சனங்ளையும் மீறி ‘சித்தி’ திரைப்படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. அது மட்டுமின்றி எம்.ஆர்.ராதாவைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாத்திரத்தை அவளவு சிறப்பாக செய்திருக்க முடியாது என்று பாராட்டையும் பெற்றது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பொறுத்தவரையில் படத்தின் வெற்றியைவிட எம்.ஆர்.ராதாவிற்கு கிடைத்த பாராட்டுக்கள்தான் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
கலைவாணரை சந்திக்கவும் அவரோடு பேசவும் தனக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த நடிகவேளுக்கு உரிய முறையில் தனது நன்றியினைத் தெரிவித்துவிட்ட ஆனந்தத்தோடு அதற்கடுத்து அடுத்தப் பட வேலைகளில் இறங்கினார் அவர்.
(தொடரும்)
The post தமிழ்ச் சினிமா வரலாறு – 46 – நாடக ஆசிரியரைப் பாராட்ட அவரது வீடு தேடி சென்ற கலைவாணர்..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-23 எம்.ஜி.ஆருக்கும், கே.ஏ.தங்கவேலுவிற்கும் இருந்த ஒற்றுமைகள்..! appeared first on Touring Talkies.
]]>எம்.ஜி.ஆர்., பிறந்த அதே 1917-ம் ஆண்டில், அவர் பிறந்த அதே ஜனவரி மாதத்தில் பிறந்தவர்தான் கே.ஏ.தங்கவேலு. எம்.ஜி.ஆர்., பிறந்தது ஜனவரி 17-ம் தேதி. கே.ஏ.தங்கவேலு பிறந்தது ஜனவரி 15-ம் தேதி. அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு இரண்டு நாட்கள் மூத்தவர் அவர்.
எம்.ஜி.ஆர்., அறிமுகமான ‘சதிலீலாவதி’ படத்தில்தான் தங்கவேலுவும் அறிமுகமானார்.
எம்.ஜி.ஆருக்கு திரைப்பட வாய்ப்பை பெற்றுத் தந்த எம்.கே.ராதாதான், தங்கவேலுவிற்கும் சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தார்.
அவர்கள் இருவருக்குமிடையே மிகவும் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் ‘சதிலீலாவதி’ படத்திற்குப் பிறகு எம். ஜி. ஆருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், தங்கவேலுவிற்கு அடுத்த சினிமா வாய்ப்பு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகே கிடைத்தது.
‘சதி லீலாவதி’ படத்திற்குப் பிறகு தங்கவேலு நடித்த படமாக ‘சிங்காரி’ என்ற படம் அமைந்தது. இந்த ‘சிங்காரி’ ஏற்கனவே நாடகமாக நடிக்கப்பட்ட கதை. நாடகத்தில் தான் ஏற்ற வேடத்தையே திரைப்படத்திலும் ஏற்றார் தங்கவேலு.
தங்கவேலுவின் பெயருடன் ‘டணால்’ என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது இந்த ‘சிங்காரி’ படத்தில்தான். அந்த படத்தில் பல இடங்களில் ‘டணால்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார் அவர். ‘சிங்காரி’ படத்திற்குப் பிறகு பல திரைப்படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்த தங்கவேலுவுக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்த படம் ‘பணம்’.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த இரண்டாவது படம் அது. அந்த படத்திலே சிவாஜிகணேசனுடன் நடிக்கத் தொடங்கிய தங்கவேலுவின் திரையுலகப் பயணம், சிவாஜியோடு மட்டும் இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது .
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான் தங்கவேலுவிற்கு ‘பணம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியவர். தங்கவேலுவின் திறமை மீது அவருக்கு அப்படி ஒரு அபார நம்பிக்கை இருந்தது. ‘பணம்’ படத்திலே நடிக்க ஒப்பந்தமானபோது தங்கவேலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது.
அந்தப் படத்திலே நடிப்பதற்காக ஆயிரம் ரூபாயை தங்கவேலுவிற்கு முன் பணமாகக் கொடுத்தார் கலைவாணர். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போன தங்கவேலு ‘பணம்’ படத்திலே நடிப்பதற்கு தன்னை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் படத்தில் நடிக்க சம்பளமாக ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் சொன்னபோது தங்கவேலுவின் பெரியப்பா மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக தங்கவேலுவைப் பார்த்து உரத்த குரலில் சத்தம் போட ஆரம்பித்தார்.
கலைவாணர் வீட்டிலிருந்து அவருக்குத் தெரியாமல் அந்த பணத்தை தங்கவேலு எடுத்துக் கொண்டு வந்து விட்டதாக அவரது பெரியப்பா எண்ணியதே அதற்குக் காரணம்.
அவர் அப்படி சந்தேகப்பட்டதிலும் தவறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில். அப்போது தங்கவேலு நாடகங்களில் நடிக்க ஒரு மாதத்திற்கு வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் வெறும் 10 ரூபாய்தான். அப்படி இருக்கும்போது படத்தில் நடிக்க அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்று சொன்னால் என்றால் யார் நம்புவார்கள்..?
“ஏன்தான் உன் புத்தி இப்படிப் போகுதோ தெரியவில்லையே. அவர் வீட்டிலேயே உனக்கு சோறு போட்டு அவரோட புள்ளை மாதிரி இல்லே கலைவாணர் உன்னை வளர்த்தார். அன்னமிட்ட வீட்டிலேயே கன்னம் இடலாமா..? அவர் வீட்டிலேயே இப்படி பணத்தைத் திருடி விட்டு வந்திருக்கிறாயே..?” என்று சொல்லியபடி கலைவாணரை அடிக்க ஆரம்பித்த அவர் தங்கவேலு சொன்ன எந்த விளக்கத்தையும் கேட்கத் தயாராக இல்லை.
வேறு வழியின்றி தனது பெரியப்பாவை நேராக கலைவாணர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் தங்கவேலு. அங்கு போன பிறகு “ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டான். இனிமேல் அப்படி எல்லாம் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவர் சொல்ல… கலைவாணருக்கு ஒன்றுமே புரியவில்லை.
அதற்குப் பிறகு தங்கவேலு நடந்த சம்பவத்தைப் பற்றி கலைவாணருக்கு விளக்கமாகச் சொல்ல “இதுக்காகவா தம்பியை தேவையில்லாம போட்டு அடிச்சிட்டீங்க…” என்று சொன்ன கலைவாணர் “அந்தப் பணம் என்னுடைய படத்தில் நடிப்பதற்காக நான் கொடுத்த முன் பணம்தான்…” என்று சொன்னவுடன்தான் அவரது பெரியப்பா சமாதானம் அடைந்தாராம்.
“என்னுடைய வாழ்க்கை கலைவாணர் எனக்கு போட்ட பிச்சை. ஆரம்பத்தில் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்தது மட்டுமின்றி… தொடர்ந்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கலைவாணர்தான்” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் தங்கவேலு.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று தங்கவேலு இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம்.
காமெடி நடிகர்களால் கதாநாயகனாகவும் நடிக்க முடியும் என்று நாகேஷ், தொடங்கி கவுண்டமணி, விவேக், சந்தானம், கருணாஸ், என்று பல பேர் இன்று நிரூபித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பெருமை தங்கவேலுவையே சேரும்.
சாதாரணமாக பெரிய, பெரிய கதாநாயகர்களே ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு பயப்பட்ட பானுமதியுடன் ‘ரம்பையின் காதல்’ படத்தில் நாயகனாக நடித்தார் தங்கவேலு.
தங்கவேலுவுடன் படங்களில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஜோடியான எம்.சரோஜாவுடன் தங்கவேலு நடித்த படங்களில் மறக்க முடியாத படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான ‘கல்யாணப் பரிசு.’
அந்தப் படத்திலே ‘தான்தான் எழுத்தாளர் பகீரதன்’ என்று தனது மனைவியான சரோஜாவிடம் பொய் சொல்லிவிட்டு ஒரு பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு தங்கவேலு வீடு திரும்பும் காட்சியை திரையில் பார்க்கும் எவராலும் சிரிப்பை அடக்க முடியாது.
திரையில் ஐந்து நிமிடங்கள் ஓடிய அந்தக் காட்சியை ஒரே டேக்கில் தங்கவேலுவும் சரோஜாவும் நடித்தபோது தனது சிரிப்பை அடக்க முடியாமல் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக் கொண்டாராம் இயக்குநர் ஸ்ரீதர். செட்டில் இருந்த பலரும் சிரிப்பை அடக்க முடியாமல் அந்த செட்டைவிட்டே ஓடிய சம்பவம் எல்லாம் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது நடந்திருக்கிறது.
‘கல்யாணப் பரிசு’ தங்கேலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம் அந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் என்பது மட்டுமல்ல. அந்தப் படத்தின் நூறாவது நாள் விழா மதுரையில் நடைபெற்ற போதுதான் மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றத்தில் எம்.சரோஜாவை திருமணம் செய்து கொண்டார் அவர்.
தமிழ்த் திரையுலகில் சரித்திர கால பாத்திரங்கள், புராண பாத்திரங்கள் என்று எல்லா பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக் கூடிய நாயகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் என மிகச் சிலரே. இந்த கதாநாயகர்களைப் போல எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடியவராக இருந்த ஒரே நகைச்சுவை நடிகர் தங்கவேலு.
நேரிலே பேசும்போதும், சரி படங்களில் நடிக்கும்போதும், அறச் சொற்களை பயன்படுத்துவதை அறவே தவிர்த்த கலைஞர் தங்கவேலு. அதுபோன்று தன் வாழ்நாள் முழுவதும் தனக்கென சில கொள்கைகளை வைத்துக் கொண்டு அதிலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கை நடத்தியவர் அவர்.
தமிழ் தவிர பிற மொழிப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்பதை இறுதி மூச்சுவரை கடைப்பிடித்தார் அவர்.
புரட்சித் தலைவர் அவர்களுடன் நடிக்கக் கூடிய வாய்ப்பு எண்ணற்ற கலைஞர்களுக்கு கிடைத்திருக்கலாம். ஆனால், அவரோடு சேர்ந்து நூற்றாண்டைக் கொண்டாடுகின்ற அரிய வாய்ப்பு, தங்கவேலு அவர்களுக்கு மட்டுமே அமைந்த ஒரு பெருமை.
The post சினிமா வரலாறு-23 எம்.ஜி.ஆருக்கும், கே.ஏ.தங்கவேலுவிற்கும் இருந்த ஒற்றுமைகள்..! appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-11 கலைவாணரின் 11 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.
]]>கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் இணைந்து பிரபல படத் தயாரிப்பாளரான ஏ..எல்..சீனிவாசன் தயாரித்த படம் ‘பணம்.’
அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. நாயகனாக சிவாஜி கணேசனும், நாயகியாக பத்மினியும் நடித்த அந்தப் படத்தை இயக்கியவர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் இயக்கிய இரண்டாவது படமான அந்தப் படத்திற்கு பல சிறப்புகள் உண்டு.
சிவாஜியும் பத்மினியும் இணைந்து நடித்த முதல் படம் அது. சிவாஜியும் என்.எஸ்.கிருஷ்ணனும் இணைந்த பணியாற்றிய முதல் படமும் அதுதான்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘ஜெனோவா’ திரைப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருந்தாலும் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து இசை அமைத்து வெளியான முதல் படமாக ‘பணம்’ படமே அமைந்தது. இந்தப் படத்தின் டைட்டிலில்தான் அவர்கள் இருவரின் பெயரும் முதன் முதலாக இடம் பெற்றது.
‘பணம்’ படம் உருவான காலக்கட்டத்தில் டி.பாலசுப்ரமணியம் என்ற நடிகரும், ‘அப்பா’ துரைசாமி என்ற நடிகரும் தந்தை வேடத்தில் நடிப்பதில் புகழ் பெற்றவர்களாக இருந்தனர். பெரும்பாலும் எல்லா படங்களிலும் அவர்கள்தான் தந்தை வேடத்தில் நடித்து வந்தனர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘பணம்’ படத்தில் இடம் பெற்றிருந்த மிகவும் முக்கியமான ஒரு அப்பா வேடத்தில் நடிக்க ஒல்லியாக இருந்த ஒரு இளைஞரை அழைத்துக் கொண்டு வந்த கலைவாணர் அந்த வேடத்தை அவருக்கே கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபோது ஏ.எல்.சீனிவாசனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
அவர் தயங்குவதைப் பார்த்த கலைவாணர் “யோசிக்காதப்பா.. இவன் அந்த பாத்திரத்தில அபாரமாக நடிப்பான்..” என்றார். அநியாயத்துக்கு ஒல்லியாக இருந்த அந்த இளைஞனால் அந்த வலுவான தந்தை பாத்திரத்தில் நடிக்க முடியுமா என்று சீனிவாசன் யோசித்துக் கொண்டிருந்தபோது “இவனுக்கு சம்பளமாக ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடு” என்று இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார் கலைவாணர்.
அவர் சொன்னதைக் கேட்டு ஏ.எல்.சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார் என்றால் அவரைப் போல இரு மடங்கு அதிர்ச்சி அடைந்தார் அந்த அப்பா நடிகர்.
ஏனென்றால் அந்த அப்பா நடிகர் அப்போது நாடகத்தில் நடிக்க வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் வெறும் பத்து ரூபாய். அதுவும் ஒரு நாளைக்கு அல்ல – ஒரு மாதத்துக்கு.
ஒரு மாதத்துக்கு பத்து ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவருக்கு ஒரு படத்தில் நடிக்க ஆயிரம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டால் அவர் அதிர்ச்சி அடையாமல் என்ன செய்வார்..?
வேறு வழியின்றி கலைவாணர் சொல்கிறாரே என்பதற்காக அந்த நடிகருக்கு ஆயிரம் ரூபாயை ஏ.எல்.எஸ்.கொடுத்தபோது “வாங்கிக்க… உன் நடிப்புத் திறமைக்கு இதெல்லாம் ஒரு சம்பளமேயில்லை…” என்றாராம் கலைவாணர்.
இப்படி கலைவாணரால் போற்றப்பட்ட நடிகர் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான நடிகர்தான். அவர் பெயர் கே.ஏ.தங்கவேலு.
“உன் நடிப்புத் திறமைக்கு இதெல்லாம் ஒரு சம்பளமேயில்லை” என்று கலைவாணர் சொன்னதை ‘பணம்’ திரைப் படத்திலே எல்லா காட்சிகளிலும் நிரூபித்திருந்தார் தங்கவேலு.
‘பணம்’ படத்தைத் தயாரித்த ஏ.எல்.சீனிவாசன் 1957-ம் ஆண்டு சிவாஜி – பானுமதி ஜோடியாக நடிக்க ‘அம்பிகாபதி’ என்ற படத்தைத் தயாரித்தார்.
ஏ..எல்.சீனிவாசன் எடுத்த முதல் திரைப்படமான ‘பணம்’ படத்தில் அவருடன் பங்குதாரராக இருந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ‘அம்பிகாபதி’ திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கலைவாணரை மன ரீதியாக பல பிரச்னைகள் பாதித்தன. அதற்கு அப்போது சினிமா உலகில் சிலர் நடந்து கொண்டவிதமும் முக்கியமான காரணமாக அமைந்தது.
தனது மன ஓட்டத்தை ஒரு பத்திரிகையில் கட்டுரையாக வடித்த அவர் “கலை உலகிற்கு உள்ளே வருகின்றவர்களின் மனம் எப்போது பணத்தை மட்டுமே நாடிச் செல்லத் தொடங்குகிறதோ… அப்போது கலை நிச்சயமாக பாதிக்கப்படும். அப்படித்தான் இப்போது தமிழ்ப் பட உலகம் பாதிக்கப் பட்டுவருகிறது.
கலை உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்களை ஒரே குடும்பத்தினராக எண்ணிப் பழக வேண்டும். அந்த நிலை இன்றைய தமிழ்ப் பட உலகில் இருக்கிறதா என்றால் இல்லை. ஒருவரையொருவர் பெரும்பாலும் உதட்டளவில்தான் நேசிக்கிறார்கள்.. உள்ளமெல்லாம் போட்டியும், பொறாமையும்தான் நிரம்பியிருக்கிறது…” என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.
இந்தக் கருத்துக்களை கலைவாணர் வெளியிட்டது 1957-ம் ஆண்டில். ஆனால், துரதிருஷ்டவசமாக இன்றுவரை கலையுலகில் அதே நிலை இருந்து வருவதுதான் மிகப் பெரிய சோகம்.
1957-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சங்கம் சுதந்திரத் திருநாளை கொண்டாடியபோது என்.டி. ராமாராவ் கலந்து கொண்ட கதம்ப நிகழ்ச்சி ஒன்றை இயக்கிய கலைவாணர், தனது மனைவி மதுரத்துடன் இணைந்து ஒரு நகைச்சுவை நாடகத்தையும் அந்த விழாவில் நடத்தினார். அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி விழா.
ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கபட்ட கலைவாணரின் உடல் நிலை ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு மிகவும் மோசமானது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 3௦-ம்தேதி பகல் 11 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
அந்த மரணச் செய்தி ஏ.எல்.சீனிவாசனை இடியெனத் தாக்கியது. செய்தி கேட்டு அப்படியே அதிர்ந்து போனார் அவர்.
ஏனெனில், ‘அம்பிகாபதி’ படத்தில் கலைவாணர் நடிக்க வேண்டிய பல காட்சிகள் இன்னும் எடுக்கப்படாமல் மீதம் இருந்தன. ஆனால் ஏ.எல்.எஸ். அதிர்ச்சி அடைந்தது அதற்காக அல்ல. கலைவாணர் என்ற நல்ல நண்பர் மறைந்துவிட்டாரே என்ற கவலைதான் அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மறைந்த கலைவாணருக்கு ஒரு சிலை அமைத்து அந்தச் சிலையை ஊர் மக்கள் வணங்குவது போல ஒரு காட்சியை அமைத்து ‘அம்பிகாபதி’ படத்திலே அந்தக் கதாப்பாத்திரத்திற்கு ஒரு முடிவைத் தந்த ஏ.எல்.எஸ்., ‘அம்பிகாபதி’ படத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு காணிக்கையாக்கியிருந்தார்.
அதற்குப் பிறகு ஏ.எல்.சீனிவாசன் செய்த ஒரு செயல் அவர் எவ்வளவு சிறந்த மனிதாபிமானி என்பதை கலை உலகிற்கு உணர்த்தியது.
‘பணம்’ திரைப்படத்தை ஏ.எல்.சீனிவாசனுடன் இணைந்து தயாரித்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஏறக்குறைய மூன்று லட்சம் ரூபாயை ஏ.எல்.சீனிவாசனுக்குக்குத் தர வேண்டி இருந்தது.
கலைவாணரின் மறைவுக்குப் பிறகு ஏ.எல்.சீனிவாசனுக்கு அவர் தர வேண்டிய அந்தப் பணத்தை தள்ளுபடி செய்து உதவும்படி தென்னிந்திய நடிகர் நடிகர் சங்கம் ஏ.எல்.சீனிவாசனுக்கு 1957-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியது.
அந்தக் கடிதம் கிடைத்த அடுத்த நாளே தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கீழ்க்கண்ட கடிதத்தை எழுதினார் ஏ.எல்.சீனிவாசன்.
அன்புடையீர்,
வணக்கம்.
27-ம் தேதியிட்ட தங்கள் அன்புமிக்க கடிதம் கிடைக்கப் பெற்றோம் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
காலஞ்சென்ற திரு என் எஸ்.கிருஷ்ணன் அவர்களிடமிருந்து எங்களுக்கு வர வேண்டிய தொகை ரூபாய் 3,70,337-5_2 (மூன்று லட்சத்து எழுபதாயிரத்து முன்னூற்று முப்பத்தேழு ரூபாய் ஐந்தனா இரண்டு பைசா)வையும் தள்ளுபடி செய்து கணக்கை நேர் செய்துவிட்டோம் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறோம்.
தங்கள் உண்மையுள்ள
ஏ.எல்.சீனிவாசன்
மதராஸ் பிக்சர்ஸ் உரிமையாளர்.
என்று அந்தக் கடிதத்திலே எழுதியிருந்தார் ஏ.எல்.எஸ்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக அப்போது வெளிவந்து கொண்டிருந்த ‘நடிகன் குரல்’ இதழ் கலைவாணர் இறந்த பிறகு அவருக்கு நினைவு மலர் ஒன்றை வெளியிட்டபோது அந்த இதழிலே ஏ.எல்.எஸ்., நடிகர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தை அப்படியே பிரசுரித்தது. அது மட்டுமின்றி,
“கலைவாணர் திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்பால் தமிழகம் செலுத்தும் அளவில்லாத மதிப்புக்கும் அன்புக்கும் எடுத்துக்காட்டாக மதராஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் திரு ஏ.எல்.எஸ்., அவர்கள் ஒப்புயர்வற்றதோர் அரும்பெரும் தியாகப் பணி ஆற்றியிருக்கிறார்.
திரு என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களிடமிருந்து தனக்கு சேர வேண்டியிருந்த ஒரு பெருந் தொகையை, ஏறக்குறைய மூணே முக்கால் லட்சம் ரூபாய்களைத் தியாகம் செய்திருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கருணையுடன் இந்த மகத்தான தியாகம் புரிய முன் வந்த திரு.ஏ.எல்.எஸ்., அவர்களுக்கு சங்கம் தனது இதயம் கனிந்த பெரு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது..”
என்று ஏ.எல்.எஸ்., அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு செய்தியையும், அந்த இதழிலே வெளியிட்டிருந்தது நடிகர் சங்கம்.
அன்று ஏ.எல்.எஸ்., அவர்கள் தள்ளுபடி செய்த தொகையின் இன்றைய மதிப்பு ஏறக்குறைய பதினோரு கோடி ரூபாயைத் தாண்டும்.
மூணே முக்கால் லட்சம் ரூபாய்களைத் தள்ளுபடி செய்தபோது ஏ. எல். எஸ் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய லட்சாதிபதி இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு உதவுகின்ற மனதைப் பொருத்தவரையில் அவர் கோடீஸ்வரராக இருந்தார். அதனால்தான் ஒரு நொடிகூட யோசிக்காமல் நடிகர் சங்கத்திலிருந்து கடிதம் வந்த மறுநாளே அந்தத் தொகையை ரத்து செய்து கடிதம் அனுப்ப அவரால் முடிந்தது.
இது போன்ற பெருந்தன்மையான அவரது நடவடிக்கைகள்தான் தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து தயாரிப்பாளர்களின் தலைவர் என்ற நிலைக்கு அவரை உயர்த்தியது. இல்லையென்றால் பட உலகில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்த எட்டு ஆண்டுகளில் அவரால் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு தலைவராக ஆகியிருக்க முடியுமா…?
The post சினிமா வரலாறு-11 கலைவாணரின் 11 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த தயாரிப்பாளர் appeared first on Touring Talkies.
]]>