The post சினிமா வரலாறு-67 – சிவாஜியின் கன்னத்தைப் பதம் பார்த்த பத்மினி appeared first on Touring Talkies.
]]>அந்த நாடகத்தில் நாரதர் வேடத்தில் நடனமாடிய பெண்ணின் முக பாவங்களையும், நடனத் திறமையையும் பார்த்து அசந்து போனார் கலைவாணர். நாடகம் முடிந்ததும் சிறப்பாக நடனமாடியவருக்கு பரிசளிப்பதற்காக பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று கலைவாணரிடம் வழங்கப்பட்டது.
அந்த வெள்ளிக் கோப்பையை நாரதர் வேடத்திலே நடனமாடிய அந்தப் பெண்ணுக்கு கொடுக்கக் கலைவாணர் காத்திருந்தபோது கிருஷ்ணர் வேடத்திலே நடனமாடியவருக்கு அந்த கோப்பையை பரிசளிக்கும்படி விழா அமைப்பாளர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டனர்.
“இந்த நடன நாடகத்தில் ரொம்ப சிறப்பாக நடித்ததும், நடனமாடியதும் நாரதர் வேடத்தில் நடித்த பெண்தான். ஆனால், இவங்க இந்த கோப்பையை கிருஷ்ணர் வேடத்திலே நடிச்சவருக்கு கொடுக்கச் சொல்வதால் நான் இந்தக் கோப்பையை அவருக்குக் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கோப்பையை அவரிடம் கொடுத்த கலைவாணர் நாரதர் வேடத்தில் நடித்த அந்தப் பெண்ணை அழைத்து “கலைத் துறையில் உனக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கும்மா” என்று வாழ்த்தினார்.
அந்த மேடையில் வாழ்த்தும்போது சொன்ன அந்த நல்லதொரு எதிர்காலத்தை அந்த பெண்ணிற்கு அவர்தான் உருவாக்கித் தரப் போகிறார் என்று அந்த பெண்ணிற்கு அப்போது தெரியாது. அந்தப் பெண்ணின் பெயர் பத்மினி.
திருவாங்கூர் சகோதரிகள் என்று பெயர் பெற்றிருந்த லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் நடுவரான நாட்டியப் பேரொளி பத்மினியை கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகம் செய்தவர் கலைவாணர்தான்.
பொதுவாக தென்னிந்திய நடிகைகள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுகமாகி அதன் பின்னர் இந்திப்பட உலகிற்கு செல்வார்கள். அவர்களில் இருந்து மாறுபட்டு இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ்ப்பட உலகிற்கு வந்தவர் பத்மினி.
பிரபல நடன மேதையும், பண்டிட் ரவிசங்கரின் சகோதரருமான உதயசங்கர்தான் ‘கல்பனா’ என்ற இந்திப் படத்தில் நடன நடிகையாக பத்மினியை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்.
‘கல்பனா’ படத்தில் பத்மினி ஆடியிருந்த அற்புதமான நடனத்தைப் பார்த்துவிட்டு ‘வேதாள உலகம்’ படத்தில் நடிக்க அவரை ஏவி.எம். அதிபரான மெய்யப்ப செட்டியார் அழைத்தபோது “படங்களில் நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாட்டியம் மட்டும் என்றால் ஆடுகிறோம்” என்றார் பத்மினி.
அதைத் தொடர்ந்து லலிதாவும் பத்மினியும் இணைந்து ஆடிய இரு நடனக் காட்சிகள் ‘வேதாள உலகம்’ படத்தில் இடம் பெற்றன. அந்த நடனக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து பல பட அதிபர்களிடமிருந்து பத்மினிக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
“நடிப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை” என்று ஆரம்பத்தில் சொன்ன அந்த திருவாங்கூர் சகோதரிகள் நடித்த முதல் படமாக ‘பிரசன்னா’ என்ற மலையாளப் படம் அமைந்தது. அதைத் தொடர்ந்து பட்சிராஜா நிறுவனம் தயாரித்த ‘ஏழை படும் பாடு’ படத்தில் லலிதாவுடன் இணைந்து நடித்த பத்மினியை கதாநாயகி ஆக்கிய பெருமை கலைவாணருக்கு சொந்தமானது.
கலைஞர் மு.கருணாநிதியின் கை வண்ணத்தில் கலைவாணர் தயாரித்து இயக்கிய ‘மணமகள்’ படத்தில்தான் முதன்முதலாகக் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அவர் நடித்த முதல் படமே மிகச் சிறந்த வெற்றிப் படமாக அமையவே ‘ராசியான கதாநாயகி’ என்ற பெயர் பத்மினிக்குக் கிடைத்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே ‘பணம்’ படத்தின் தயாரிப்பாளர்களான ஏ.எல்.சீனிவாசனும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் தங்களது படத்தின் நாயகனாக சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்தனர்.
‘பாரசக்தி’ திரைப்படத்தில் நடிக்க மாதத்திற்கு 250 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவாஜி ‘பணம்’ படத்திலே நடிக்க வாங்கிய சம்பளம் இருபத்தி ஐயாயிரம் ரூபாய்.
சிவாஜி கதாநாயகனாக அறிமுகமான முதல் படமான ‘பராசக்தி’க்கும், பத்மினி கதாநாயகியாக அறிமுகமான முதல் படமான ‘மணமகள்’ படத்திற்கும் வசனம் எழுதிய கலைஞர் மு.கருணாநிதியே அவர்கள் இருவரும் முதல்முதலாக இணைந்து நடித்த ‘பணம்’ படத்திற்கும் வசனம் எழுதினார்.
‘மணமகள்’ படப்படிப்பு தளத்தில் பத்மினியை முதல் முதலாக சந்தித்தபோது “பப்பிம்மா… நான் நாடக நடிகனாக இருந்தபோதே உங்கள் படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அதிலும் ‘மணமகள்’ படத்தில் உங்களது நடிப்பு ரொம்பப் பிரமாதமாக இருந்தது, அப்போதெல்லாம் உங்களை மாதிரி நடிகையோடு எல்லாம் சேர்ந்து நடிப்பேன் என்று நான் கனவுகூட கண்டதில்லை…” என்றார் சிவாஜி.
சிரித்தபடியே சிவாஜியின் பாராட்டுக்களை ஏற்றுக் கொண்ட பத்மினி “கணேஷ், இப்போது சினிமாவில் இளம் கதாநாயகர்களே இல்லை. அந்தக் குறையை போக்குகின்றவிதத்தில் நீங்கள் இப்போது வந்திருக்கிறீர்கள். இப்போது சினிமா உலகில் எல்லோரும் ‘பராசக்தி’ படத்தைப் பற்றிதான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் படத்தின் மூலம் நீங்கள் நிச்சயமாக மிகப் பெரிய புகழைப் பெறுவீர்கள்” என்று சிவாஜிக்கு தன்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
‘பணம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான் சிவாஜி கணேசனுக்கு சுவாமி மலையில் திருமணம் நடைபெற்றது. சிவாஜி, பத்மினி ஆகிய இருவருக்குமான திருமணக் காட்சியில் நடித்து முடித்து விட்டுத்தான் கமலா அம்மையாரை மணம் முடிக்க சுவாமி மலைக்கு பயணமானார் சிவாஜி.
அதேபோன்று பத்மினிக்கு குருவாயூரில் திருமணம் நடைபெற்ற போதும் ‘செந்தாமரை’ படத்திற்காக விடியற்காலை வரையில் சிவாஜியுடன் ந்டித்துவிட்டுத்தான் விமானம் ஏறினார் பத்மினி.
தமிழ்த் திரையுலகில் மிக நீண்ட காலம் இணைந்து பயணித்த அந்த ஜோடி நடித்த பல திரைப்படங்கள் தமிழ்த் திரையுலகிற்கு இன்றுவரை பெருமை சேர்த்து வருகின்ற படங்கள் என்பதை எவரால் மறுக்க இயலும்…?
சிவாஜியும் பத்மினியும் இணைந்து நடித்த படங்களில் மிகவும் வித்தியாச மான கதை அமைப்பு கொண்ட படம் ‘எதிர்பாராதது’. அந்தக் கதையின்படி கதாநாயகி எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் தன்னுடைய ஆருயிர் காதலனின் தந்தையை மணந்து கொள்ள நேரிடும்.
தன்னுடைய மகன்தான் தன்னுடைய மனைவியின் காதலி என்பதை உணர்ந்து கொள்ளும் தந்தை அந்த சோகத்திலேயே உயிரை விட்டுவிட… கதாநாயகியின் அண்ணனும், அவரது மனைவியும் காதலர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், அதை ஏற்க மறுத்து கதாநாயகி விதவைக் கோலம் பூணுகிறாள். ஸ்ரீதர் எழுதிய அந்த புரட்சிகரமான கதையில் கதானாயகனாக சிவாஜியும், கதாநாயகியாக பத்மினியும் நடித்தனர் .
நீண்ட நாட்களுக்குப் பிறகு காதலர்கள் இருவரும் சந்திக்கும் ஒரு தருணத்தில் நாயகனான சிவாஜி உணர்ச்சிவசப்பட வேறு ஒருவருக்கு மனைவியாக உள்ள நாயகி பத்மினி சிவாஜியை அடிப்பது போன்ற ஒரு காட்சியை ‘எதிர்பாராதது’ படத்துக்காக படமாக்க அதன் இயக்குநர் நாராயணமூர்த்தி திட்டமிட்டபோது அந்தக் காட்சியில் நடிக்க பத்மினி மறுத்தார்.
‘எதிர்பாராது’ படம் உருவான காலக்கட்டத்தில் சிவாஜிக்கென்று ஏராளமான ரசிகர்கள் உருவாகியிருந்ததுதான் அதற்கு முக்கியமான காரணம். “நான் சிவாஜியை அடிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தவிர தனிப்பட்ட முறையிலேயும் எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆகவே அவரை நான் அடிக்க மாட்டேன்…” என்றார் பத்மினி.
படத்தின் உயிர்நாடியே அந்தக் காட்சிதான் என்பதால் “இந்தக் காட்சி இல்லையென்றால் படத்தின் வெற்றியே கேள்விக் குறியாகிவிடும். நீங்கள் சொன்னால்தான் பத்மினி இந்தக் காட்சியில் நடிக்க ஒப்புக் கொள்வார். ஆகவே, நீங்கள்தான் பத்மினியிடம் பேசி இந்தக் காட்சியில் நடிக்க அவரை சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று சிவாஜியிடம் படத்தின் இயக்குநரான நாராயணமூர்த்தி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி பத்மினியிடம் எடுத்துச் சொல்லி அவரை அந்தக் காட்சியில் நடிக்க வைத்தார் சிவாஜி.
அந்தச் செய்கையின் மூலம் எவ்வளவு பெரிய விபரீதத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறோம் என்பதை சிவாஜி அப்போது அறியவில்லை. அந்தக் காட்சியின் படப்பிடிப்பு தொடங்கியது.
இயக்குநர் “ஆக்ஷன்” என்றவுடன் பத்மினியின் கையை சிவாஜி பிடித்தார். அடுத்த நொடி பத்மினிக்கு அந்த ஆவேசம் எங்கிருந்து வந்தது என்பது எவருக்கும் தெரியாது. சிவாஜியின் இரு கன்னங்களிலும் மாறி மாறி அடிக்கத் தொடங்கினார் அவர். அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி இறங்க சிவாஜியின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது.
காட்சி மிகச் சிறப்பாக அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் இயக்குநர் கட் சொல்ல மறந்து ரசித்துக் கொண்டு இருக்க பத்மினியின் அடியைத் தாங்க முடியாத சிவாஜி ‘கட் கட்’ என்று சத்தம் போட்டு படப்பிடிப்பை நிறுத்தினார்.
படப்பிடிப்பு முடிந்தும் பத்மினியின் ஆவேசம் அடங்கவில்லை. ஆகவே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். “பத்மினிக்கு ஊசி போடுவது, கை கால்களைத் தேய்த்துவிடுவது விடுவது என்று எல்லோரும் என்னை அடித்த பத்மினியை அக்கறையோடு கவனித்துக் கொண்டார்களே… தவிர அடிபட்ட என்னைப் பற்றி ஒருவரும் கவலைப்படவில்லை” என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி.
மிக அதிகமான படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த சிவாஜிக்கும், பத்மினிக்கும் இடையே இது போன்ற பல சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-67 – சிவாஜியின் கன்னத்தைப் பதம் பார்த்த பத்மினி appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-21 – ரஜினிக்கு கே.பாலசந்தர் சொன்ன அறிவுரை appeared first on Touring Talkies.
]]>‘அபூர்வ ராகங்கள்’ படத்திற்கான ஆரம்ப வேலைகளில் பாலச்சந்தர் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஒரு நடிப்புப் பயிற்சி பள்ளியை நடத்திக் கொண்டிருந்தது. அந்தப் பள்ளியில் பெங்களூரிலிருந்து வந்த ஒரு மாணவர் பயின்று கொண்டிருந்தார். அவர் பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட்.
இரண்டாண்டு பயிற்சி முடிந்ததும் அந்த பள்ளி மாணவர்களின் திறமையை எடை போட இரண்டு திரைப்பட இயக்குநர்கள் அந்த பயிற்சிப் பள்ளிக்கு வந்தார்கள். ஒருவர் சித்தலிங்கையா என்ற கன்னடப் பட இயக்குனர். அற்புதமான பல கன்னடத் திரைப்படங்களைத் தந்த அவருடைய மகன்தான் நடிகர் முரளி.
இன்னொருவர் எணணற்ற வித்தியாசமான படைப்புகளால் தமிழ்ப் படங்களின் போக்கையே மாற்றிய இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர்.
பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’, ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகிய இரண்டு படங்களும் சிவாஜிராவ் மனதிற்குள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய படங்கள்.
பாலச்சந்தரை எப்படியாவது ஒருமுறை சந்தித்துவிட வேண்டும் என்று அவர் துடித்துக் கொண்டிருந்தபோதுதான் அவரே தனது நடிப்புப் பள்ளிக்கு வரப் போகிறார் என்ற செய்தி சிவாஜிராவை எட்டியது.
பாலச்சந்தர் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், “பாலச்சந்தர் சார் இருபது நிமிடம்தான் உங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். நேரம் குறைவாக இருப்பதால் உருப்படியான கேள்விகளை மட்டும் அவரிடம் கேளுங்கள்…” என்றார் கல்லூரி முதல்வர் ராஜாராம்.
அந்தக் கேள்வி நேரத்தின்போது தன்னிடம் கேள்வி கேட்ட சிவாஜிராவோடு கை குலுக்க கையை நீட்டினார் கே.பாலச்சந்தர்.
அவர் கை நீட்டியது அவரோடு கை குலுக்க அல்ல – கை பிடித்து அவரைத் திரையுலகத்தில் வழி நடத்திச் செல்ல என்பது அன்று சிவாஜிராவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பாலச்சந்தரும், சிவாஜிராவும் கை குலுக்கிக் கொண்டிருக்கும்போது அந்த நடிப்புப் பயிற்சி பள்ளியின் ஆசிரியரும், சிவாஜிராவின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்ககறை கொண்டவருமான கோபாலி அங்கே வந்தார்.
“உங்களுடைய படம்னா இவன் உயிரை விடுவான் சார்” என்று பாலச்சந்தரிடம் சிவாஜிராவ் பற்றி அவர் சொன்னபோது “தமிழ் தெரியுமா..?” என்று சிவாஜிராவைப் பார்த்து கேட்டார் பாலச்சந்தர்.
“கொஞ்சம், கொஞ்சம் தெரியும்” என்று சிவாஜிராவ் சொல்ல “அது நீ தமிழ் பேசற அழகிலேயே தெரியுது…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் பாலச்சந்தர்.
அப்போது ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடிக்க ஒரு நடிகரைத் தேடிக் கொண்டிருந்தார் பாலசந்தர்.
அந்த நடிகர் தெரிந்த முகமாக இருந்தால் எடுபடாது. அதே சமயம் ஒரு சாதாரண நடிகரை ஸ்ரீவித்யாவிற்கு ஜோடியாகவும் போட முடியாது. அதனால் ஒரு புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று பாலச்சந்தர் சிந்தித்துக் கொண்டிருந்தபோது பிலிம் சேம்பர் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் பார்த்த சிவாஜிராவ் மின்னல் மாதிரி அவரது நினைவுக்கு வந்தார்.
உடனே தயாரிப்பு நிர்வாகி ராமுடுவை அழைத்து “அன்னிக்கு அந்த பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பார்த்த அந்த பையன் எங்கே இருக்கான்னு பாரு. அவனை தேடிப் பிடிச்சி உடனே கூட்டிக்கிட்டு வா..” என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் சிவாஜிராவைக் கண்டு பிடித்து பாலச்சந்தர் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார் ராமுடு.
“வாப்பா” என்று சிவாஜிராவை வரவேற்ற பாலச்சந்தர் “நான் இப்போ ‘அபூர்வ ராகங்கள்’ன்னு ஒரு படம் பண்ணப் போறேன். அதில் ஒரு ரோல் இருக்கு. நீ பண்றியா..?” என்று சிவாஜி ராவைப் பார்த்து கேட்டார். “பண்றேன் சார்” என்று அடுத்த நிமிடமே சொன்ன சிவாஜி ராவ் அத்தோடு நிற்கவில்லை. “கொஞ்சம் நடிச்சிக் காட்டவா?” என்று கேட்டார். சிவாஜிராவின் ஆர்வத்திற்குத் தடை போட விரும்பாமல், ”சரி.. நடித்துக் காட்டு” என்றார் பாலச்சந்தர்.
“வரி வட்டி, கிஸ்தி..
யாரைக் கேட்கிறாய் வரி..
எதற்கு கேட்கிறாய் வரி..
வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது.
உனக்கேன் கட்ட வேண்டும் வரி”
“வீரபாண்டிய கட்டபொம்மன்” படத்தில் சிவாஜி பேசிய வசனங்களை சிவாஜிராவ் முழங்கத் தொடங்கியபோது “போதும்” என்று கை காட்டினார் பாலச்சந்தர்.
“ஏன் அவர் மாதிரி நீ நடிக்கறே…? உனக்குன்னு ஒரு தனி பாணி இருக்கணும். அதுதான் உனக்கு அடையாளமா இருக்கணும்…” என்று அழுத்தம்திருத்தமாக சொல்லிவிட்டு “உன் பேர் என்னன்னு சொன்னே..?” என்று கேட்டார்.
“சிவாஜி, சிவாஜிராவ்” என்று வர்தா புயலைப்போல நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பதில் பறந்து வந்தது அவரிடமிருந்து.
“நீ வேகமாகப் பேசறது.. வேகமாக நடக்கிறது.. வேகமாக திரும்பறது எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனால், உன் தமிழ் உச்சரிப்புதான் கொஞ்சம் தடுமாறுது. அதில நீ கவனம் செலுத்தணும். நல்லா தமிழ் பேச கத்துக்க..” என்று சொன்ன அவர் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அவருடைய பாத்திரம் பற்றி விளக்கமாக சொன்னார்.
“இந்தப் படத்தில உன் ரோல் சின்ன ரோலாக இருந்தாலும் ரொம்ப முக்கியமான ரோல். படத்தில் நீதான் ஸ்ரீவித்யாவோட புருஷன். பொண்டாட்டியைக் கைவிட்டுட்டு ஓடிப் போய் அப்புறம் திரும்பி வருகின்ற ஒரு கணவனின் பாத்திரம். படத்தோட கிளைமாக்சே இந்தக் கேரக்டராலதான். சின்ன ரோல்ன்னு நினைக்காதே. என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் நல்ல ரோலாக தர்றேன். இதை அதுக்கு ஆரம்பமாக நினைச்சுக்க…” என்று பாலச்சந்தர் சொல்லச் சொல்ல சிவாஜி ராவின் முகத்திலே அப்படி ஒரு ஆனந்தம்.
அவருடைய படத்தில் ஒரே ஒரு காட்சி என்றாலும்கூட சிவாஜிராவுக்கு சம்மதம்தான். அப்படியிருக்க பாலச்சந்தர் ஒரு புதுமுகமான தன்னிடம் அப்படிப் பேசியதும், அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் சிவாஜி ராவ்.
தொடர்ந்து மூன்று படங்களுக்கு சிவாஜி ராவை ஒப்பந்தம் செய்தார் பாலச்சந்தர். ஒரே ஒரு சந்திப்பிலேயே சிவாஜி ராவின் திறமை மேல் பாலச்சந்தர் எந்த அளவு நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம்.
முதல் நாள் படப்பிடிப்பிற்காக சிவாஜி ராவை ஏற்றிக்கொண்டு சென்ற கார் நேராக கலாகேந்திரா நிறுவனத்துக்குச் சென்றது. இவர் அங்கே போன அடுத்த ஓரு மணி நேரத்தில் கமல்ஹாசன் அங்கே வந்தார்.
“எவ்வளவு அழகாக இருக்கிறார்” என்று கமல்ஹாசனைப் பார்த்து வியந்த சிவாஜி ராவ் “ஐயாம். சிவாஜி ராவ் பிரம் பெங்களூர் உங்களுடைய ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பார்த்தேன். பிரமாதம் அசத்திட்டீங்க…” என்று கமலஹாசனைப் பாராட்டினார். புன்னகையோடு சிவாஜி ராவின் பாராட்டை ஏற்றுக் கொண்டார் கமல்ஹாசன்.
லொகேஷனுக்குப் போனதும் “சார் நான் சிகரெட்டைத் தூக்கிப் போட்டு அப்படியே வாயில் கவ்விப் பிடிப்பேன். என் நண்பர்கள் எல்லோரும் அதை ரொம்ப ரசிப்பாங்க. அதைப் படத்தில் செய்யட்டுமா?” என்று பாலச்சந்தரிடம் கேட்ட சிவாஜி ராவ் அவரது பதிலுக்காகக் காத்திருக்கவில்லை.
ஒரு சிகரெட்டைத் தூக்கிப் போட்டார். ஸ்டைலாக அதை வாயில் கவ்வினார். அதைப் பார்த்துவிட்டு மொத்த யூனிட்டும் கை தட்டிப் பாராட்டியது. பாலச்சந்தரும் ரசித்தார்.
“இதில நீ நடிக்கப் போறது கேன்சர் பேஷன்ட் வேடம். அதுக்கு சிகரெட் பிடிப்பது எல்லாம் சரியா வராது. அதனால அடுத்த படத்தில் அதையெல்லாம் வைச்சிக்கலாம்…”என்றார்அவர்.
சிவாஜிராவுக்கு பாலசந்தர் யூனிட்டின் நிரந்தர ஒப்பனையாளரான சுந்தரமூர்த்தி மேக்கப் போட்டார். முகத்தில் தாடி ஒட்டப்பட்டது. ஒரு நைந்த கோட்டை மாட்டிவிட்டார்கள்.
‘சிவாஜி’ என்னும் பெயர் தமிழ் ரசிகர்கள் எல்லோரது உள்ளங்களிலும் ஏற்கனவே குடி கொண்டிருக்கும் பெயர் என்பதால் ‘சிவாஜி’ என்ற பெயரோ ‘சிவாஜி ராவ்’ என்ற பெயரோ அவருக்கு சரியாக அமையாது என்று முடிவெடுத்த பாலச்சந்தர், ‘ரஜினிகாந்த்’ என்று கம்பிரமான ஒரு பெயரை சிவாஜி ராவுக்கு சூட்டினார்.
அடுத்து ஸ்ரீவித்யாவின் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு ரஜினிகாந்த், அந்த வீட்டுக்கு உள்ளே வரும் காட்சி அவர் நடித்த முதல் காட்சியாகப் படமாக்கப்பட்டது.
அன்று படமாக்கப்பட்ட அந்தக் காட்சி அந்தத் திரைப்படத்திற்கான காட்சியாக மட்டுமின்றி, தமிழ்த் திரையுலகத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு ரஜினிகாந்த் என்னும் மாபெரும் கலைஞன் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் காட்சியாகவும்அமைந்தது.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபோது இந்தப் படத்துடன் முடிந்துவிடவில்லை. உன்னைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று ரஜினிகாந்தின் கைகளைப் பற்றியபடி உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார் பாலச்சந்தர்.
‘பேசும் படம்’ பத்திரிகை ‘அபூர்வ ராகங்கள்’ படத்தைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. அதற்காகத் தன் கைப்பட சில குறிப்புகளை எழுதித் தந்தார் பாலச்சந்தர்.
அந்த வரிகள் பாலச்சந்தர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை எடுத்துச் சொல்கின்ற வரிகள்.
ரஜினிகாந்த் ‘அபூர்வ ராகங்கள்” படத்தில் நடித்தக் காட்சிகள் மொத்தமாகச் சேர்த்து பத்து நிமிடம்கூட இருக்காது. அப்படி அந்தப் பத்து நிமிட காட்சிகளில் ‘பாண்டியன்’ என்ற பாத்திரத்தில் நடித்த ரஜினியைப் பற்றி ‘அவரிடம் நல்ல நடிப்பைப் பார்க்கலாம்’ என்று பாலசந்தர் எழுதியிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், ‘நல்ல எதிர்காலத்தைப் பார்க்கலாம்’ என்று அவர் எழுதினார் என்றால் அவர் மனதிற்குள் ‘ரஜனிகாந்த்’ என்ற நடிகரின் ஆற்றல் மீது எந்த அளவு நம்பிக்கை பிறந்திருக்க வேண்டும்…?
ஆலமரமாக விரிந்து திரையுலகில் தழைக்கப் போகும் ‘ரஜினிகாந்த்’ என்ற மாமனிதருக்கு வித்தாக ‘அபூர்வ ராகங்கள்’ அமையப் போகிறது என்பது தெரிந்துதான் அவர் கதவுகளைத் திறந்து கொண்டு வரும் முதல் காட்சியை பின்னால் பிரம்மாண்டமாக இருந்த ஆலமரத்துடன் சேர்த்து படமாக்கியிருந்தார் பாலச்சந்தர். அதுதான் அவரது தனித் திறன்.
The post சினிமா வரலாறு-21 – ரஜினிக்கு கே.பாலசந்தர் சொன்ன அறிவுரை appeared first on Touring Talkies.
]]>