The post சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>பின்னர் படப்பிடிப்பு ஒழுங்காக நடைபெறுகிறதா என்று தெரிந்து கொள்ள ஸ்டுடியோவிற்கு அவர் தொடர்பு கொண்டபோது சந்திரபாபுவிற்காகத்தான் எல்லோரும் காத்திருப்பதாகவும் அவர் இன்னமும் வரவில்லை என்றும் அவர்கள் சொன்னதைக் கேட்டவுடன், சிறிது நேரம் கவிஞருக்கு பேச்சே வரவில்லை.
சந்திரபாபு படப்பிடிப்பிற்கு வராததைவிட அவர் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் பின் வாசல் வழியாக வெளியேறியது அவர் மனதை மிகவும் பாதித்தது.
தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அவமானமாக அந்த சம்பவத்தைக் கருதினார் கண்ணதாசன். படம் என்ன ஆகுமோ என்ற பயமும் கடன்காரர்களுக்கு என்ன பதிலைச் சொல்வது என்ற கவலையும் அவரை சூழ்ந்து கொண்டது.
அங்கிருந்து ஸ்டுடியோவிற்குப் போன அவர் தனது துயரத்தை எல்லாம் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா அவர்களிடம் சொல்லி அழுதார். சந்திரபாபுவிற்காக அவர் வீட்டில் காத்திருந்ததைப் பற்றியும் அவரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் சந்திரபாபு பின் வாசல் வழியாக சென்றதைப் பற்றியும் ‘எனது சுய சரிதம்’ என்ற புத்தகத்தில் அப்படியே பகிர்ந்து கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.
“எந்த வீட்டிலும் போய் நாற்காலியில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் எனக்கு வந்தது கிடையாது. மந்திரிகளில் முதன் மந்திரியாக இருந்த என் நண்பர் கருணாநிதியின் விட்டுக்கு மட்டும்தான் போவேன். இன்ன நேரத்தில் சந்திப்பதென்று நேரத்தை முன் கூட்டியே முடிவு செய்து கொண்டுதான் போவேன்.
சந்திரபாபு வீட்டில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்த பிறகு சினிமா நடிகர்களைப் பற்றி எனக்கு ஒரு கெட்ட அபிப்ராயமே ஏற்பட்டது. அளப்பரிய திறமை இருந்தாலும் ஆணவம் ஒரு மனிதனை அழித்துவிடும்.
சந்திரபாபு அளப்பரிய திறமையுடையவர் என்று சொல்ல முடியாது ஆனால் அவருக்கு எல்லையில்லா ஆணவம் இருந்தது. ஆணவத்தால் அழிந்து போனவர்கள் பல பேரை என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஆணவத்தால் தொழிலை அலட்சியப்படுத்தியவர்கள் பல பேர் இன்று சோற்றுக்கு அலைகிறார்கள்.
சுமார் இருபத்தி ஐந்தாண்டு காலமாக இந்த பட உலகில் சிலரை வளமாகவும் நிரந்தரமாகவும் ஆண்டவன் வைத்திருக்கிறான்.
தம்பி விஸ்வநாதன், மாமா கே.வி.மகாதேவன், டி.எம்.சவுந்திரராஜன், பி.சுசீலா, நான் ஆகியோர் எங்கள் தொழிலில் காட்டுகின்ற ஆர்வம், பயம், பணிவு ஆகியவைகள்தான் கால் நூற்றாண்டு காலமாக எங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு பாட்டிற்கு இசையமைக்கும்போது தயாரிப்பாளருக்கோ, இயக்குநருக்கோ ஒரு மெட்டு பிடிக்கவில்லை என்றால் தம்பி விஸ்வநாதன் பத்து மெட்டுக்கள் போடுவான். டைரக்டர்களுக்கு பிடித்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும், மீண்டும் போட்டுக் கொண்டே இருப்பான்.
மாமா மகாதேவனும் அதே மாதிரிதான். நானும் மற்றவர்களுக்கு திருப்தி ஏற்படுகின்றவரை மாற்றி மாற்றி எழுதிக் கொண்டே இருப்பேன். சுசிலாவும், சவுந்திரராஜனும் பாட்டு நன்றாக அமையும்வரை அலுப்படையாமல் பாடல்கள் பாடுவார்கள்.
எங்களது வெற்றியின் ரகசியம் எங்கள் திறமையில் மட்டும் இல்லை. தொழிலில் உள்ள பொறுப்பு, பயம், ஒவ்வொரு பாட்டும் ரசிக்கப்பட வேண்டும் என்ற ஆசை. இந்தத் தொழில் நம்மை கைவிட்டு விடக்கூடாது என்ற கவலை ஆகிய எல்லாமே அதற்குக் காரணம்.
இவற்றை எல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம் தொழிலை தெய்வமாக மதித்து பொறுப்பாகச் செய்கின்ற எவனையும் இந்தத் தொழில் கைவிடாது. ஆணவம் பிடித்து மற்றவர்களை அலட்சியப்படுத்தினால் ஒரு நாளைக்கு அவர்களுடைய படிக்கட்டிலேயே ஏறி ஐம்பது ரூபாய் யாசகம் கேட்க வேண்டி வரும்.
பண விஷயத்தில் நான் பிடிவாதம் பிடித்தது இல்லை, பேரம் பேசியதில்லை, ரேட்டை திடீர். திடீரென்று உயர்த்தியதில்லை. கஷ்டப்பட்டு ஒருவர் படம் எடுத்தால் அவர் கொடுப்பதை வாங்கிக் கொள்வேன்.வெற்றிகரமான தயாரிப்பாளர்கள் அவர்களாகவே நான் கேட்பதை கொடுத்துவிடுவார்கள்.
அவர்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் நான் இலவசமாகக்கூட ஒத்துழைப்பேன். அதனால்தான் எனக்குக் கஷ்டம் வரும்போது எல்லோருமே உதவி செய்கிறார்கள்.
ஆணவக்காரர்கள் மட்டுமே தொழிலின்றி அலைகிறார்கள், அவர்களில் சந்திரபாபுவும் ஒருவர் என்பதைச் சொல்ல வேண்டியது எனது கடமையாகிறது” என்று அந்த நூலிலே குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன்
தனது வாழ்நாளில் கவிஞர் யாரையும் அந்த அளவு கடுமையாக விமர்சித்ததே இல்லை. ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திலே ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’ பாடல் உட்பட மிகச் சிறந்த பாடல்கள் பெற்றிருந்தன. ஆனால், அந்தப் பாடல்களாலும் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
முன்பின் தொடர்பில்லாத குழப்பமான கதை, கதாநாயகனாக நடித்த சந்திரபாபுவின் அலட்சியப் போக்கு ஆகிய எல்லாமாகச் சேர்ந்து அந்தப் படத்தை மிகப் பெரிய தோல்விப் படமாக ஆக்கியது. அந்தப் படம் வெளியானபோது ஐந்து லட்சத்து தொண்ணூறு ரூபாய் கடனாளியாகி இருந்தார் கண்ணதாசன்.
அப்போது கண்ணதாசனின் பட நிறுவனத்தில் பதினோரு கார்கள் இருந்தன. அத்தனை கார்களிலும் ஒரே ஒரு பியட் காரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற கார்கள் அனைத்தையும் அந்த கார்களின் மீது யார் யார் கடன் கொடுத்திருந்தார்களோ அவர்களது வீட்டில் கொண்டுபோய் விடச் சொன்னார் கண்ணதாசன்.
அடுத்து கம்பெனி இருந்த அலுவலகத்தை காலி செய்தார். அங்கிருந்த சாமான்கள அனைத்தையும் அள்ளிக் கொண்டு போய் வீட்டிலே போட சொன்னார்.
அந்தப் படத்திற்குப் பிறகு பாடல்கள் எழுதி அவர் சம்பாதித்த பணம் முழுவதும் கடன்காரர்களுக்கு வட்டித் தொகை செலுத்தவே சரியாக இருந்தது.
சேலம் மாடர்ன் தியேட்டர்சில் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சேலம் டவுனில் டாக்டர் செரியன் என்று ஒரு பல் டாக்டர் இருந்தார். அந்த டாக்டருக்கு கைரேகை பார்த்து பலன் சொல்வது என்றால் மிகவும் இஷ்டம்.
அவருடன் ஒரு முறை கண்ணதாசன் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணதாசனின் கையைப் பார்த்துவிட்டு “இந்தக் கை லட்சம் லட்சமாக சம்பாதிக்கும். ஆனால் பணம் வருவதற்கு முன்பே கடன் வந்து விடும். ஐம்பது வயதிற்கு மேல் ஐம்பத்தி ஆறாவது வயதிற்குள் நீ சந்நியாசியாகவோ ஏகாந்தத்தை நாடுகிறவனாகவோ ஆகி விடுவாய்’ என்று அவரிடம் கூறினாராம்.
‘கவலை இல்லாத மனிதன்’ பட தோல்விக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலையைப் பார்த்தவுடன் கண்ணதாசனுக்கு அவர் நினைவுதான் வந்தது
‘கவலை இல்லாத மனிதன்’ என்று படத்திற்கு பெயர் வைத்ததினாலேயே கடவுள் என்னைத் தண்டித்து விட்டார். மனிதன் எப்படி கவலை இல்லாமல் இருக்க முடியும் என்று கடவுள் என்னிடம் சவால் விட்டதாகவே நான் உணர்ந்தேன் என்று ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தை எடுத்த அனுபவம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் கண்ணதாசன்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-36-படம் எடுத்து பத்து காரை விற்ற கவிஞர் கண்ணதாசன் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-25 – நடிகை பானுமதியின் காதல் கதை appeared first on Touring Talkies.
]]>எழுத்தாளர், பாடகி, இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, என்று தமிழ், தெலுங்கு சினிமாக்களின் பல தளங்களில் வெற்றிகரமாகத் திகழ்ந்த பானுமதி ‘நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை’ என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.
படங்களில் நடிக்கும்போது காட்சிக்காகக்கூட பானுமதியைத் தொட்டுப் பேச அவரது கதாநாயகர்கள் தயங்குவார்களாம். பல கதாநாயகர்கள், ‘இந்தக் காட்சியில் இந்த வசனத்தைப் பேசும்போது உங்களது கையைத் தொடுவேன்’ என்று அவரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டுதான் அவரது கையைத் தொடுவார்களாம்.
‘தவறு’ என்று மனதுக்குப் பட்டுவிட்டால் அதைத் தட்டிக் கேட்கத் தயங்காத கண்ணியமிக்க ஒரு நடிகையாகத் திகழ்ந்தவர் பானுமதி .
எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்க பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயங்கிய காலக்கட்டத்தில் ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என்று உரிமையோடு அவரை அழைத்த ஒரே நடிகை பானுமதி மட்டுமே. எம்.ஜி.ஆரிடம் எந்த அளவு பானுமதிக்கு உரிமை இருந்தது என்பதை விளக்க அவருடன் ஒரு திரைப்படத்தில் பானுமதி நடித்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வாள் சண்டை போட்டு நம்பியாரிடம் இருந்து பானுமதியை எம்.ஜி.ஆர்., மீட்பது போல ஒரு காட்சி அன்று படமாக்கப்பட்டது. அந்தச் சண்டை நடக்கும்போது பானுமதி அடிக்கடி தனது பயத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்தக் காட்சி ஒரு முறை அல்ல.. இரு முறை அல்ல. பல முறை படமாக்கப்பட்டும் சரியாக அமையவில்லை.
இதனால் பயந்த மாதிரி திரும்பத் திரும்ப நடித்த பானுமதி சற்றுக் கோபத்துடன் எம்.ஜி.ஆரை அழைத்தார். “மிஸ்டர் ராமச்சந்திரன் அந்த வாளை என்னிடம் கொடுங்கள். நானே சண்டை போட்டு என்னை மீட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இப்படி பேசக் கூடிய துணிச்சல் யாருக்கு வரும்…?
இப்படி படப்பிடிப்பு தளங்களில் இரும்பாக இருந்த பானுமதி காதல் வசப்பட்டபோது அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகளிலோ, சினிமாவிலோகூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பானுமதியின் காதல் கதை, ஒரு அழுத்தமான காதல் கதை.
பானுமதியின் தந்தையான பொம்மராஜூ வெங்கட சுப்பையாவை ஒரு இசைப் பிரியர் என்று சொல்வதைவிட இசைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னுடைய மகளான பானுமதியின் குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருந்த அவர் சிறுவயது முதலே பானுமதிக்கு கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக் கொடுத்தார்.
அவருடைய நெருங்கிய நண்பரான இயக்குநர் பி.புல்லையா அவர்களின் இயக்கத்தில் உருவான ‘வர விக்ரயம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க பானுமதியை அவர் அனுமதித்ததற்குக்கூட முக்கியமான காரணம் அவரது இசை ஆர்வம்தான்.
தன் மகள் ஒரு பாட்டுக் கச்சேரியில் பாடினால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள்தான் அவரது பாட்டைக் கேட்க முடியும். ஆனால், சினிமாவில் பாடினால் லட்சக்கணக்கானவர் ஒரே நேரத்தில் தனது மகளின் குரலைக் கேட்க முடியுமே என்ற எண்ணத்தில்தான் பானுமதியை படத்தில் நடிக்க வைத்தார் அவரது தந்தை.
இருப்பினும் பானுமதியுடன் படத்தில் நடிக்கின்ற ஆண் நடிகர்கள் அவரைத் தொட்டுப் பேசுவது போலவோ, நெருக்கமாக நின்று நடிப்பது போலவோ எந்தக் காட்சிகளும் இருக்கக் கூடாது என்பது உட்பட அவர் விதித்த பல நிபந்தனைகளுக்கு படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்ட பிறகே அந்தப் படத்தில் பானுமதி நடிக்க அவர் தனது ஒப்புதலைத் தந்தார்.
அத்தனை நிபந்தனைகள் விதித்தாலும் அந்த சினிமாதான் தனது மகளைத் தன்னிடமிருந்து ஒரு காலக்கட்டத்தில் பிரிக்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது.
பானுமதி நடித்த முதல் படமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த பானுமதி 1943-ம் ஆண்டில் ‘கிருஷ்ண பிரேமா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.
அந்தப் படத்தை ‘கிருஷ்ண பிரேமா’ என்று சொல்வதற்குப் பதில் ‘ராமகிருஷ்ண பிரேமம்’ என்று சொல்லலாம் என்று பானுமதி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதற்குக் காரணம் இருக்கிறது.
தனது காதல் கணவரான ராமகிருஷ்ணாவை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் முதன்முதலாக சந்தித்தார் பானுமதி.
முதல் சந்திப்பிலேயே பானுமதியின் கவனத்தை ஈர்த்தார் ராமகிருஷ்ணா. படப்பிடிப்பு தளத்தில் ஓடி, ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்த சுறுசுறுப்பான, அழகான வாலிபன் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்ட அவர் படப்பிடிப்பு இடைவேளைகளில் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கினார்.
அந்தப் படத்தைவிட பானுமதிக்கு ராமகிருஷ்ணா மேல் இருந்த காதல் வேகமாக வளர்ந்தது. இதில் மிகப் பெரிய வேடிக்கை என்வென்றால் படத்தின் நாயகியான பானுமதி தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி அந்த ராமகிருஷ்ணாவுக்குக் கொஞ்சம்கூட தெரியாது.
அப்போது பானுமதி பருவ வயதிலிருந்ததால் அவரது தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். இனியும் தனது காதலைப் பற்றி வீட்டில் சொல்லாமல் இருப்பது சரியல்ல என்று எண்ணிய பானுமதி தனது மூத்த சகோதரியிடம் தான் ராமகிருஷ்ணா என்ற உதவி இயக்குநரைக் காதலிக்கின்ற விவரத்தைக் கூறினார்.
பானுமதியின் காதல் விவகாரம் தெரிந்ததும் எல்லா அப்பாக்களையும் போல பானுமதியின் அப்பாவான வெங்கட சுப்பையாவும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது என்றார். சினிமாவில் பணிபுரியும் ஒருவருக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுப்பதில் அவருக்கு ஒரு சதவிகிதம்கூட உடன்பாடில்லை.
ஆனால் பானுமதி தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றதால் வேறு வழியின்றி திருமணம் பற்றி பேச ராமகிருஷ்ணாவை தனது வீட்டுக்கு அழைத்தார் பானுமதியின் தந்தை.
அளவில்லாத நடிப்புத் திறனும், அழகும் கொண்ட பானுமதி என்ற கதாநாயகி தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் உதவி இயக்குநரான ராமகிருஷ்ணவுக்கு அப்போதுதான் தெரிந்தது.
பானுமதி எப்படிப்பட்ட பண்பான நடிகை என்பதை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அவர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே அவர் தன்னைக் காதலிக்கிறார் என்பது தெரிந்ததும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பானுமதியை மனைவியாக ஏற்றுக் கொள்ள அவர் பெரிதும் விரும்பினார் என்றாலும் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தார்.
“நான் அடிப்படையில் ஒரு ஏழை. அப்படிப்பட்ட நான் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகியான பானுமதியை திருமணம் செய்து கொண்ட பிறகு நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் என்னுடைய சில நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
முதலில் என்னுடைய நிபந்தனைகள் என்னென்ன என்பதை உங்களுக்குச் சொல்கிறேன் . அவை எல்லாம் உங்களுக்கு ஒத்து வருமா என்று பாருங்கள்..” என்று சொல்லிவிட்டு தனது நிபந்தனைகளைப் பட்டியலிடத் தொடங்கினார் அவர்.
அவரது முதல் நிபந்தனையே இடி மாதிரி வேங்கட சுப்பையாவின் தலையில் இறங்கியது.
“என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகு உங்களது பெண் கச்சேரிகளில் பாடவோ, சினிமாவில் நடிக்கவோ கூடாது. இவை எல்லாவற்றிற்கும் அறவே முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டும்..” என்று அவர் சொன்னவுடன் பானுமதியின் தந்தையான வெங்கட சுப்பையாவிற்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. பல்லைக் கடித்தார். பின்னர் அந்த அறையை விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.
அவரது உறவினர்களில் சிலர் வெங்கடசுப்பையாவை சமாதானப்படுத்தினர். “சினிமாவில் பானுமதி நடிப்பதைத்தான் அவர் விரும்ப மாட்டார். ஆனால், பானுமதி கச்சேரிகளில் பாடக் கூடாது என்ற முடிவில் அவர் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே பாடுவதற்கு மட்டும் அவரிடம் அனுமதி கேட்டு வாங்கிக் கொள்ளலாம் வாருங்கள்..” என்று கூறி அவரை மீண்டும் வீட்டுக்குள் அவர்கள் அழைத்து வந்தார்கள்.
“நீங்கள் சொன்னபடி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடச் சொல்கிறேன் . அவர் மிகப் பெரிய பாடகியாக வர வேண்டும் என்பது எனது வாழ்நாள் லட்சியம் என்பதால் குறைந்தபட்சம் அவர் பாட்டுக் கச்சேரி நடத்துவதற்காகவது நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ராமகிருஷ்ணாவை வேண்டிக் கேட்டுக் கொண்டார் பானுமதியின் தந்தை.
அதற்கு ராமகிருஷ்ணா என்ன பதில் சொன்னார்…?
பதில் அடுத்தப் பதிவில்..!!!
The post சினிமா வரலாறு-25 – நடிகை பானுமதியின் காதல் கதை appeared first on Touring Talkies.
]]>