The post “பிகில்’ படத்தில் நான் நடித்த பல காட்சிகளை நீக்கிவிட்டார் அட்லி…” – வருத்தப்படும் ஆனந்த்ராஜ்…! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைக் கூறியுள்ளார்.
“ஒரு நடிகருக்கு ஒரு திரைப்படத்தில் அறிமுகக் காட்சி என்பது மிக, மிக முக்கியமானது. அது இல்லையென்றால் அந்தக் கேரக்டர் ரசிகர்களைக் கவராது.
ஆனால், ‘பிகில்’ படத்தில் எனது அறிமுகக் காட்சியை கட் செய்திருந்தார்கள். இத்தனைக்கும் அந்த அறிமுக காட்சியை படமாக்கினோம். அதில் விஜய் தம்பியும் நடித்திருந்தார். எங்களுடன் பலரும் நடித்திருந்தார்கள். இத்தனை பேர் நடித்திருந்தும் அந்தக் காட்சியை நீக்கியிருந்தார்கள்.
அதோடு மேலும் நான் நடித்திருந்த பல காட்சிகள் அந்தப் படத்தில் இல்லை. இதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. என்னுடைய 35 ஆண்டு கால சினிமா வரலாற்றில் எனக்கு இதுபோல் நடந்ததில்லை.
அந்தப் படத்தை முதல் காட்சியில் பார்த்துவிட்டு பலரும் எனக்கு போன் செய்து.. “என்ன ஸார்.. உங்களோட போர்ஷன் ரொம்பக் கம்மியா இருக்கு”ன்னு வருத்தப்பட்டாங்க. எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாவும் இருந்துச்சு.
இது பற்றி நான் யாரிடமும் புகார் சொல்லவில்லை. விஜய்யிடம்கூட சொல்லவில்லை. விஜய் இந்தப் படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்தார். அந்த அப்பா கேரக்டருக்காக மிகப் பிரயத்தனம் செய்தார். நிறைய ஹோம்வொர்க் செய்தார். டயலாக் மாடுலேஷனுக்காக நிறைய பயிற்சியெடுத்தார். அதையெல்லாம் பக்கத்துல இருந்து பார்த்தேன்.
என்னுடைய அறிமுகக் காட்சியில் விஜய்யும்தான் நடித்திருந்தார். அதையே படத்துல வைக்கலைன்னா எப்படி..? அதுல எவ்வளவு மேன் பவர் வேஸ்ட்டாயிருக்கு. என்னோட பங்கு மட்டுமில்லை.. விஜய்யோட விலை மதிப்பில்லாத நேரமும் வீணாகியிருக்கு.. அந்தப் படம் பத்தி எனக்குள்ள இருக்குற பெரிய வருத்தம் இதுதான்..!” என்று வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.
The post “பிகில்’ படத்தில் நான் நடித்த பல காட்சிகளை நீக்கிவிட்டார் அட்லி…” – வருத்தப்படும் ஆனந்த்ராஜ்…! appeared first on Touring Talkies.
]]>The post “இயக்குநர் விசு என்னால் ஜெயலலிதாவிடம் திட்டு வாங்கினார்” – நடிகர் ஆனந்த்ராஜ் சொல்லும் ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து பேசும்போது, “ஜெயலலிதாம்மா முதலமைச்சரா இருக்கும்போது தமிழக அரசு தயாரித்த பல குறும் படங்கள்ல என்னை நடிக்க வைச்சாங்க. அப்போவெல்லாம் ‘நான்தான் நடிக்கணும்’னு சொல்லி என்னைக் கூப்பிடச் சொல்லுவாங்க.
அந்த நேரத்துல குடிப் பழக்கத்தை விட்டொழிக்கணும்ன்னு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வரணும்ன்னு நினைச்சு, ‘நீங்க நல்லா இருக்கணும்’ன்னு ஒரு படம் தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டது.
தமிழக அரசுக்காக அந்தப் படத்தைத் தயாரித்தவர் ஜீ.வி. கதை, வசனம் எழுதி இயக்கியவர் விசு. அந்தப் படம் பத்தி விசுகிட்ட பேசும்போது “ஆனந்த்ராஜை நடிக்க வைக்கலாம்” என்று ஜெயலலிதாம்மா சொல்லியிருக்காங்க. இதை விசு காதுல வாங்கினாலும், அதைப் பெரிசா எடுத்துக்காமல் விட்டுட்டாரு.
அப்போ அந்தப் படத்தோட துவக்க விழா வாஹினில நடந்துச்சு. எனக்கும் அழைப்பிதழ் வந்திருந்துச்சு. நானும் போயிருந்தேன். அம்மாவும் வந்தாங்க.. ஆனால், படத்துல ‘நிழல்கள்’ ரவிதான் நடிச்சாரு. எனக்கு வேஷம் எதுவுமில்லை.
படம் எல்லாம் முடிஞ்சு அம்மா பிரிவியூ தியேட்டர்ல படத்தைப் பார்த்துட்டு வெளில வந்தவுடனே முதல்ல விசுவைத் தேடிருக்காங்க.. விசுவைப் பார்த்துட்டு “மிஸ்டர் விசு, யுவர் ஆர்ட்டிஸ்ட் ராங் செலக்சன்..” அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்களாம்.
அதுக்கு அவங்க சொன்ன காரணம்.. “நிழல்கள்’ ரவி.. ஹீரோவா நடிச்சவர்.. நல்ல, நல்ல குணச்சித்திர வேடங்கள்ல எல்லாம் நடிச்சவரு. அதுனால அவரை எல்லாரும் நல்லவராத்தான் பார்ப்பாங்க. ஆனந்த்ராஜ் வில்லன் கேரக்டர்லேயே நடிச்சவர். அவரைப் போட்டிருந்தா கடைசீல ஒரு கெட்டவனை திருத்தி நல்லவனாக்கிட்டாங்கன்னு மக்கள் நம்பியிருப்பாங்க..” என்று சொன்னாங்களாம்.
ரொம்ப நாள் கழித்து விசு என்கிட்ட, “உன்னால நான் அம்மாகிட்ட திட்டு வாங்கினேன்”னு இதைப் பத்திச் சொன்னாரு..!” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.
The post “இயக்குநர் விசு என்னால் ஜெயலலிதாவிடம் திட்டு வாங்கினார்” – நடிகர் ஆனந்த்ராஜ் சொல்லும் ரகசியம்..! appeared first on Touring Talkies.
]]>The post மணிரத்னம் படத்தில் ஆனந்த்ராஜூக்கு வாய்ப்புக் கிடைக்காத காரணம்..! appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இதைக் கூறியிருக்கிறார்.
அவர் இது பற்றிப் பேசும்போது, “நான் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்தபோது, என்னுடைய நடிப்பு கோர்ஸ் டிபார்ட்மெண்ட்டில் நான்தான் முதலிடம் பெற்றேன்.. இதற்காக அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் இருந்து தங்கப் பதக்கத்தினையும் பரிசாகப் பெற்றேன்.
ஆனால், அப்போதே பலரும் “இங்கே தங்கப் பதக்கம் வாங்கியவர்கள் சினிமாவில் முன்னுக்கு வந்ததே இல்லை…” என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அப்போதே எனக்கு திக்கென்றாகிவிட்டது. சரி.. எப்படியாவது நாம் முன்னேறி அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று முடிவு செய்து வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன்.
அப்போது ஆர்.எம்.வீரப்பன் ஸாரின் மகன் தமிழழகன் எனக்கு நண்பர். அவர் சொல்லி மணிரத்னத்தைப் பார்க்கப் போனேன். அப்போ அவர் பகல் நிலவு படத்தை இயக்குறதா இருந்தார்.
அதைக் கேள்விப்பட்டு பயங்கர சந்தோஷத்துடன் இயக்குநர் மணிரத்னத்தைப் பார்க்க ராயப்பேட்டேயில் இருந்த சத்யஜோதி பிலிம்ஸ் அலுவலகத்திற்குச் சென்றேன். நான் சென்ற பின்புதான் மணிரத்னம் தன்னுடைய ஜாவா பைக்கில் ஆபீஸுக்கு வந்தார்.
வந்த வேகத்தில் ஆபீஸில் இருந்த டேப்ரிக்கார்டரில் அந்தப் படத்தின் பாடல்களைத் திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டேயிருந்தார். அதை முடித்துவிட்டு ப்ரீயானவுடன் நான் அவரைச் சந்திக்கச் சென்றேன்.
தமிழழகன் மணிரத்னத்துகிட்ட “என்னைக் காட்டி முரளிக்கு பிரெண்ட் கேரக்டரு்ககு நடிக்க வைக்கலாமே..” என்றார். என்னைப் பார்த்ததும் மணிரத்னம், “முரளிக்கு பிரெண்ட் கேரக்டராச்சே.. இவரை எப்படி..?” என்று யோசித்தார். பின்பு, “கேமிராமேனை கூப்பிடுங்க…” என்றார். அவர் வந்து என்னைப் பார்த்துவிட்டு.. “முரளி கருப்பு.. இவர் இவ்ளோ சிகப்பா இருக்காரு. எப்படி லைட்டிங் செய்யறது..” என்று கேட்டார். அன்றைக்குத்தான் எனக்கு என் மேலயே கோபம் வந்தது. ‘ஏண்டா இப்படி சிகப்பா பொறந்தோம்’ன்னு..!!!
இதுனாலேயே எனக்கு அந்த வாய்ப்பு பறி போனது. இருந்தாலும் அதே படத்துல ‘ஒரு போலீஸ் கேரக்டர் இருக்கு பண்றீங்களா..?’ன்னு கேட்டாங்க. ஏற்கெனவே பல பேர் சொல்லியிருந்தாங்க.. ‘முதல் படத்துலேயே போலீஸ் வேஷம் போட்ட.. அப்புறம் கடைசிவரைக்கும் போலீஸ் டிரெஸ்ஸுதான்’னு சொல்லியிருந்ததால.. ‘அது வேண்டாம்’ன்னு சொல்லிட்டேன்.
இப்படி நானே அந்தப் படத்துல மறுத்ததாலயோ என்னவோ… இப்போவரைக்கும் மணிரத்னம் ஸார் படத்துல நான் நடிக்கவே முடியலை..” என்றார் ஆனந்த்ராஜ்.
The post மணிரத்னம் படத்தில் ஆனந்த்ராஜூக்கு வாய்ப்புக் கிடைக்காத காரணம்..! appeared first on Touring Talkies.
]]>The post “ராவணனால் கெடுக்க முடியாத சீதையை ஆனந்த்ராஜ் கெடுத்தார்” – வில்லத்தனத்துக்கு ஒரு விளம்பரம்…! appeared first on Touring Talkies.
]]>தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் ரேப் செய்யும் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருந்ததால் ‘ரேப் ஸ்பெஷலிஸ்ட்’ என்றே பெயர் எடுத்திருந்தார் ஆனந்த்ராஜ். ஆனால், அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதுதான் தனக்கு மிகவும் சிரமமாக இருந்ததாகச் சொல்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழச்சிக்கு பேட்டியளிக்கும்போது இது தொடர்பான சில சுவாரஸ்யமான சம்பவங்களைச் சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “என்கிட்ட எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. பாண்டிச்சேரில பொறந்து, வளர்ந்து வந்திருந்தாலும் சிகரெட், மது என்ற பழக்கமே என்னிடம் இல்லை. திடீர்ன்னு வில்லனாக்கி நடிக்க வைச்சதால் இந்த ரேப் சீன்ல நடிக்கும்போது மட்டும் நமக்கு கை, காலெல்லாம் டான்ஸ் ஆடும்.
1990-ல் ‘பெரிய இடத்துப் பிள்ளை’ன்னு ஒரு படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல தூர்தர்ஷன்ல வந்த ‘ராமாயணம்’ தொடரில் சீதையாக நடித்த தீபிகாவும் ஒரு ஹீரோயினா நடிச்சாங்க.
கதைப்படி நான் அவங்களோட கணவன். அவங்களை கற்பழிச்சிட்டு பிள்ளையைக் கொடுத்திட்டு ஓடிருப்பேன். அந்தப் பிள்ளையை அர்ஜூன் எடுத்து வளர்ப்பார். இதுதான் கதை.
இந்தப் படத்துல நான் நடிச்ச ரேப் சீனுக்கு அப்போது தினத்தந்தில ஒரு விளம்பரம் கொடுத்தாங்க. அதுல “ராவணனால் கெடுக்க முடியாத சீதையை ஆனந்த்ராஜ் கெடுத்தார்” என்று எழுதியிருந்தார்கள். இப்படியொரு கொடூரமான விளம்பரத்தை அதுக்கப்புறம் நான் பார்த்ததே இல்லை.
இதேமாதிரி ‘என் தங்கச்சி படிச்சவ’ படத்துல ஒரு சீன் இருக்கும். மாட்டு வண்டில ரூபிணியோட அண்ணனை கட்டிப் போட்டிருப்பாங்க. அந்த வண்டியோட முன் பக்கமா நின்னு ரூபிணி கடிவாளத்தைப் பிடிச்சிட்டிருப்பாங்க. அப்போ நான் வில்லத்தனமா பேசிக்கிட்டே அவங்க வயித்தைத் தடவணும். அப்போ அவங்க கையை விட்டுட்டாங்கன்னு அவங்க அண்ணன் செத்துருவான்.. இப்படியொரு சீன் வைச்சிருந்தார் வாசு ஸார்.
எனக்கு அதுல நடிக்க முதல்ல பயம். “வேண்டாமே ஸார்”ன்னு சொல்லி பார்த்தேன். வாசு சார் கேக்கலை. “சீன் வைச்சாச்சு நடி”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. “ஸ்டார்ட் கேமிரா ஆக்சன்”னு சொல்லிட்டாரு. எனக்குக் கையெல்லாம் நடுங்குது. கை போகவே மாட்டேங்குது.
கேமிராமேன் தயாளன் ஓடி வந்து என்னைத் திட்டினாரு.. “பிலிமை வேஸ்ட் பண்ணாத.. ச்சும்மா வைச்சுத் தடவிரு”ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. எனக்கு தயக்கமோ தயக்கம். அப்படியே என்னமோ செஞ்சேன்.. அதையே குளோஸப் ஷாட்.. லாங் ஷாட்டுன்னு மாத்தி, மாத்தி எடுத்தாங்க.. ரூபிணியைவிட நான்தான் அந்த சீனப்போ டயர்டாயிட்டேன்.
இதே படத்தை தெலுங்குல எடுத்தப்ப அங்கேயும் நான்தான் வில்லன். அங்க விஜயசாந்தி. அப்பவும் எனக்கு கை வர மாட்டேங்குது. டைரக்டர் திட்டுறாரு.. விஜயசாந்தி என்கிட்ட “ஒரே ஷாட்ல நடிச்சிருங்க ஸார்”ன்னு சொல்றாங்க. எனக்கு கை நடுங்குது. முடியல.. நடுங்கிக்கிட்டே கையை அப்படி, இப்படி வைச்சுட்டேன்.. விஜயசாந்தி சிரிச்சுக்கிட்டே ஓடிட்டாங்க..
அப்புறம் ‘ஜல்லிக்கட்டுக் காளை’ படத்துல கனகாவை ரேப் பண்ற மாதிரி சீன். அப்போதான் ஸ்டெடி கேமிரா புதுசா வந்த சமயம். அதைக் கையில வைச்சுக்கிட்டு கனகா பின்னாடியே அவரை விரட்டிட்டுப் போய் பெட்டுல தள்ளிவிடுறதுதான் காட்சி. அதுக்கப்புறம் ரேப் பண்ணணும். பெட்ல தள்ளிவிட்டு வசனத்தை பேசிட்டு “தள்ளிப் படும்மா”ன்னு சொல்லிட்டேன். கனகாவும் தள்ளிருச்சு.. டைரக்டர் மணிவாசகம் ஸார் தலைல அடிச்சுக்கிட்டாரு. மொத்த யுனிட்டும் சிரிச்சிருச்சு. இப்படித்தான் நம்ம வில்லத்தனம் காமெடில முடிஞ்சிருக்கு..
இயக்குநர் பில்லா கிருஷ்ணமூர்த்தி ஸார் டைரக்டர் செஞ்ச “தாய்ப் பாசம்” படத்துல ஒரு சீன். ரூபிணியை ரேப் பண்ற மாதிரியிருக்கும். அதுல பாவாடையை கிழிக்கணும்ன்னு சொன்னாங்க. நான் ரூபிணிகிட்ட “பாவாடையைக் கிழிக்கிறதுக்குப் பதிலா லேசா பாவாடையே கீழே இழுக்குறேன். நீ கப்புன்னு பிடிச்சுக்க…” என்று சொன்னேன். ஸோ ஸ்வீட்டுன்னு சொன்னாங்க. ரேப் பண்றவன்ல “ஸோ ஸ்வீட்டு”ன்னு பேர் வாங்கினது நானாத்தான் இருப்பேன்.
கட்டக் கடைசீல ஒரு நாள் சென்சார் போர்டுலேயே கற்பழிப்பு காட்சிகளுக்கு தடை போட்ட பின்னாடிதான் ‘அப்பாடா பொழைச்சோம்டா சாமி’ன்னு நான் மூச்சுவிட்டேன்..” என்று சொல்லிச் சிரிக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.
The post “ராவணனால் கெடுக்க முடியாத சீதையை ஆனந்த்ராஜ் கெடுத்தார்” – வில்லத்தனத்துக்கு ஒரு விளம்பரம்…! appeared first on Touring Talkies.
]]>The post “டேய்’ போட்டுக் கூப்பிட தயங்கியபோது உற்சாகப்படுத்திய ரஜினி” – சொல்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ் appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் பேட்டியளித்தபோது நடிகர் ஆனந்த்ராஜ் இதைச் சொல்லியிருக்கிறார்.
ஆனந்த்ராஜ் இது பற்றிப் பேசும்போது, “எனக்கு சின்ன வயசுல இருந்தே ரஜினி ஸாரை ரொம்பவும் புடிக்கும். நான் சின்ன வயசுல ‘காயத்ரி’ படம் பார்த்தேன். அதுல ஒரு கொடூரமான கணவன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். அதுக்கப்புறம் ரஜினி ஸாரோட கேரியர் எங்கயோ போய் அன்னிக்கு சூப்பர் ஸ்டாராகவே ஆயிட்டார்.
அப்பத்தான் யோசிச்சேன். இப்படியொரு கெட்டவனா நடிச்சவரே பெரிய ஸ்டார் ஆயிட்டார்ன்னா நாமளும் எந்தக் கேரக்டர்ல நடிச்சாலும் தப்பில்லை என்ற எண்ணம் எனக்குள் வந்தது.
நானும் ரஜினி ஸார் கூட நடிச்ச முதல் படம் ‘ராஜாதிராஜா’தான். அந்தப் படத்தோட இயக்குநரான ஆர்.சுந்தர்ராஜனை எனக்கு முன்னாடியே தெரியும். என்னுடைய நல்ல நண்பர் அவர். இந்தப் படத்துக்கு கேரக்டர் பேசும்போது “ஆனந்த்ராஜ் இதைப் பண்ணட்டும்”ன்னு சொல்லிட்டார்.
அந்தப் படத்துல எனக்கு வைத்த முதல் ஷாட்டே நான் ரஜினி ஸாரை ‘டேய் சின்ராசு’ன்னு கூப்பிடுறதுதான். அதைக் கேட்டுட்டு ரஜினி அங்கேயிருந்து ஓடி வந்து.. “அண்ணே.. சொல்லுங்கண்ணே”ன்னு சொல்லணும். இதுதான் ஷாட்.
சுந்தர்ராஜன் ஸார் இதைச் சொன்னதும் எனக்கு திக்குன்னு ஆயிருச்சு. “ஸார்.. அவர் பெரிய ஸ்டார். சூப்பர் ஸ்டார் வேற. என்னோட முதல் ஷாட்டையே இப்படி வைச்சால் எப்படி ஸார்..? அவரோட ரசிகர்கள் கல்லால அடிப்பாங்க ஸார்..” என்றேன். சுந்தர்ராஜனோ.. “இதுதான் சீன்.. அதுதான் டயலாக்.. ச்சும்மா பேசுங்க” என்றார்.
நான் தயக்கத்துடன் நிற்பதையும், இயக்குநருடன் பேசுவதையும் கவனித்த ரஜினி பக்கத்தில் வந்து “ச்சும்மா கூப்பிடுங்க.. ஒண்ணும் தப்பில்லை. சினிமாவுக்காகத்தானே.. ஜாலியா கூப்பிடுங்க..” என்று சொன்னார். அந்த டயலாக் பேசி முடிப்பதற்குள் எனக்கு வியர்த்துவிட்டது.. இது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியுடன் எனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத ஒரு அனுபவம்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.
The post “டேய்’ போட்டுக் கூப்பிட தயங்கியபோது உற்சாகப்படுத்திய ரஜினி” – சொல்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ் appeared first on Touring Talkies.
]]>The post நடிகர் ஆனந்த்ராஜின் திரையுலக வளர்ச்சிக்கு உதவிய நடிகர் சத்யராஜ்..! appeared first on Touring Talkies.
]]>ஆனந்த்ராஜ் முதன்முதலாக ‘ஒருவர் வாழும் ஆலயம்’ திரைப்படம் மூலமாகத்தான் தமிழ்த் திரையுலகத்தில் நடிகராக அறிமுகமானார்.
அந்த அறிமுக வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
“நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்து வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய பேட்ச்சில் பிராசசிஸிங் பிரிவில் படித்த ராஜனுக்கு இயக்குநராகவும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் படம்தான் நடிகர் கார்த்திக்கையும், ராகினியையும் இணைத்து வைத்த ‘சோலைக்குயில்’ திரைப்படம். தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
அந்தப் படத்தின் துவக்க வேலைகளிலேயே நான் ராஜனுடன் பணியாற்றினேன். முழு கதையும், திரைக்கதையும் எனக்குத் தெரியும். எனக்கும் அந்தப் படத்தில் ஒரு வேடம் கொடுத்திருந்தார் ராஜன்.
மனம் முழுக்க கனவுடன் படப்பிடிப்புக்காக நான் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது. ஊட்டிக்கு படக் குழுவினருடன் போய் சேர்ந்தோம். ஹோட்டலில் தங்கினோம். மறுநாள் காலையில் நான் மேக்கப்பெல்லாம் போட்டுத் தயாராக அமர்ந்திருந்தேன்.
அந்த நேரம்தான் எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய வேடத்தில் தன்னுடைய நண்பரான ஒரு நடிகர்தான் நடிக்க வேண்டும் என்று நாயகன் கார்த்திக் விருப்பப்பட்டாராம். இதனால் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
மேக்கப்பை கலைக்காமலேயே அப்படியே ஷூட்டிங் ஸ்பாட்டின் அருகேயுள்ள ஒரு பிள்ளையார் கோவிலுக்குப் போய் அமர்ந்து வாய்விட்டு கதறி அழுதேன். இப்படியொரு வாய்ப்பு கிடைத்தும்.. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விட்டதே எண்றெண்ணி அழுதேன்.
ஆனால், இதனால் கார்த்திக் மீது இப்போதுவரையிலும் எனக்குக் கோபமில்லை. அவர், அவரது நண்பருக்கு உதவி செய்திருக்கிறார். அவ்வளவுதான்.. இதற்குப் பிறகு நானும் கார்த்திக்கும், பல படங்களில் சேர்ந்து நடித்துவிட்டோம். கார்த்திக் இப்போதும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்.
அந்தப் படம் கை நழுவிய பிறகு பல இயக்குநர்களிடத்தில் ஸ்கிரிப்ட் வேலையில் உதவியாக இருந்தேன். அப்போது தமிழ்த் திரையுலகத்தின் முக்கால்வாசி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பாம்குரோவ் ஹோட்டலில்தான் ரூம் போட்டிருப்பார்கள். அங்கேதான் நானும் இருந்தேன்.
அந்தச் சந்தர்ப்பத்தில்தான் இயக்குநரும், கதை, வசனகர்த்தாவுமான சண்முகப்பிரியனை அந்த ஹோட்டலில் சந்தித்தேன். அவர் அப்போதுதான் ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படத்தைத் துவக்கியிருந்தார். ‘இந்தப் படத்துல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க பண்றீங்களா..?’ன்னு கேட்டார். அப்படி, அவர் மூலமாகத்தான் அந்தப் படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் அறிமுகமானேன்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் அருகே ‘மணப்பாடு’ என்னும் ஊரில் நடந்தது. அப்போதும்கூட அந்தக் காட்சி எடுக்கப்படும்வரையிலும் நான் அதை நம்பாமல்.. ‘கடவுளே.. வேற யாரும் எனக்குப் பதிலா வந்திரக் கூடாது’ன்னு வேண்டிக்கிட்டிருந்தேன். நல்லவேளையா நானே நடித்து தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிவிட்டேன்.
இந்தப் படத்துக்குப் பிறகு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் உருவான ‘உறுதி மொழி’ படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் பிரபு-கார்த்திக் இருவரும் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களுமே சக்ஸஸாக ஓடியதால்.. என்னை அனைவரும் கவனித்தார்கள். இதன் பின்புதான் எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
ஆனாலும், என்னுடைய நடிப்பு கேரியரின் துவக்கத்திற்கு மிக முக்கியமான மறைமுகக் காரணமாக இருந்தவர் நடிகர் சத்யராஜ் ஸார்தான். அவர் அப்போதுதான் வில்லன் கதாபாத்திரங்களில் இருந்து நாயகனாக மாறினார்.
இதனால் வில்லன் கதாபாத்திரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில் நான் உள்ளே நுழைய எனக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன. இதற்காக சத்யராஜ் ஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..” என்று சிரித்தபடியே சொன்னார் நடிகர் ஆனந்த்ராஜ்.
The post நடிகர் ஆனந்த்ராஜின் திரையுலக வளர்ச்சிக்கு உதவிய நடிகர் சத்யராஜ்..! appeared first on Touring Talkies.
]]>