The post சினிமா வரலாறு-75 – எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகிக்கு எழுதிய கடிதம் appeared first on Touring Talkies.
]]>“இரவு பதினொரு மணிக்குத்தானே நான் அவமானப்படுத்தப்பட்டேன். வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டேன்” என்று எம்.ஜிஆர் சொன்னதும் தாள முடியாத மன வேதனையில் இருப்பதால்தான் அவர் அப்படிப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அவரது நண்பர் சிறிது நேரம் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார்.
பின்னர் மெல்ல “கண்டிப்பாக அந்த விட்டுக்கு போய்த்தான் ஆக வேண்டுமா?” என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டார். “என் மானத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? எந்த நிபந்தனையும் இல்லாமல் என்னையும் ஒருத்தி விரும்புகிறாள் என்று அவங்க இரண்டு பேருக்கும் நான் காட்ட வேண்டாமா? அப்போதுதானே என் மனது ஆறும்?” என்றார் எம்.ஜி.ஆர்.
“உண்மையில் உங்களை அவர்கள் இரண்டு பேரும் அவமானப்படுத்தி இருந்தாலும் அது இப்போது உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். ஆனால் இப்போது நீங்கள் செய்யப் போகின்ற காரியத்தால் அது ஊர் உலகத்துக்கெல்லாம் தெரிந்துவிடும்.
உங்களைப் பற்றி எல்லோரும் எந்த அளவு உயர்ந்த அபிப்ராயம் வச்சிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அதனால்தான் ராத்திரி, பகல்னு நீங்க எப்போது எங்கே போனாலும் உங்கள் மீது உங்கள் அண்ணன் உட்பட யாரும் சந்தேகப்படுவதில்லை. இன்றைக்கு யார் மீதோ உங்களுக்கு உள்ள ஆத்திரத்தில் நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அதுக்குப் பிறகு உங்களை யாராவது நம்புவார்களா?” என்று அவரது நண்பர் கேட்ட கேள்விகளில் நியாயம் இருந்தபோதிலும் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் எம்.ஜி.ஆரின் கோபம் அவர் கண்ணை மறைத்தது.
”அப்படீன்னா என்னைத் தூக்கி எறிந்தவர்கள் காலில் போய் விழச் சொல்றீங்களா?” என்று தனது நண்பரைப் பார்த்து கேட்டார் எம்.ஜி.ஆர்.
அந்த நண்பர் கொஞ்சம் விவரமானவர். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வது விவாதத்தைத்தான் வளர்க்குமே தவிர பிரச்னைக்குத் தீர்வைத் தராது என்பதை புரிந்து கொண்டிருந்த அவர் மீண்டும் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்.
அவர் அப்படி மவுனமாக இருந்ததால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர் “இனிமேல் நான் என் கல்யாணத்தைப் பற்றி யாரிடமும் பேசக் கூடாது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கல்யாணத்தைப் பற்றியே நான் இனி நினைக்கக் கூடாது அப்படித்தானே“ என்று நண்பரிடம் கேட்டபோது ”யார் உங்களைத் திருமணம் பற்றி நினைக்க வேண்டாம் என்று சொன்னது? உங்களை விரும்புவதாக நீங்கள் சொன்ன அந்த பெண்ணின் தந்தையையும், தாயையும் நாளை காலையில் கம்பெனி விட்டுக்கு வரச் சொல்லி பேசுங்கள். அப்படிப் பேச உங்களுக்கு சங்கடமாக இருந்தால் உங்களது அண்ணனை விட்டுப் பேசச் சொல்லுங்கள்” என்றார் அந்த நண்பர்.
அவர் அப்படி சொன்னவுடன் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு போகின்ற திட்டத்தை கை விட்டுவிட்டு கம்பெனி வீட்டுக்குத் திரும்பினார் எம்.ஜிஆர்.
காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக அந்தப் பெண்ணின் வீட்டுக்கு ஆளை அனுப்பி அவர்களை வரச் சொல்ல வேண்டும் என்ற சிந்தனையிலே இரவு முழுவதும் படுக்கையிலே புரண்டு கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.எப்போது தூங்கினார் என்பது அவருக்கே தெரியாது.
காலையில் கண் விழித்தபோது வேலைக்காரப் பையன் ஒரு கடிதத்தை அவருக்கு முன்னே நீட்டியவாறு நின்று கொண்டிருந்தான்.
“இது யார் கொடுத்து அனுப்பிய கடிதம்?” என்று எம்.ஜி.ஆர் கேட்க “ஜானகியம்மா கொடுத்து அனுப்பினாங்க” என்று அந்தப் பையன் பதில் சொன்னவுடன் “இந்தக் கடிதத்தை அவங்க கொடுத்து அனுப்பும்போது அந்தம்மாவின் மாமா அவர்கூட இருந்தாரா..?” என்று அந்தப் பையனிடம் கேட்டார் எம்ஜிஆர்.
“அவரும் பக்கத்தில்தான் இருந்தார். இந்தக் கடிதத்தை உங்களுக்கு ஜானகியம்மா கொடுத்து அனுப்பியது அவருக்கும் தெரியும்” என்று அவருடைய சந்தேகத்தை தீர்க்கின்ற வகையிலே தெளிவாக பதில் சொன்னான் அந்தப் பையன்.
அதற்குப் பிறகு அந்தக் கடிதத்தை அவன் கையிலிருந்து வாங்கிய எம்.ஜி.ஆர் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார்.
ஜானகி வீட்டிலிருந்து எம்.ஜி.ஆர். கிளம்பிய பிறகு ஜானகியும், அவரது மாமாவும் மேற்கொண்டு இந்த விஷயத்தைப் பற்றிப் பேசி என்ன முடிவெடுத்தார்கள் என்பதைப் பற்றி அந்த கடிதத்தில் விளக்கமாக எழுதியிருந்தார் ஜானகி.
‘மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிந்துவிடும். அப்படி அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும், முடிவடையவில்லை என்றாலும் மூன்று மாதங்களுக்கு எம்.ஜி.ஆரும், நீயும் உங்களது திருமண விஷயத்தைப் பற்றி பேசக் கூடாது. அப்படி நீங்கள் இருவரும் பேசாமல் இருந்து விட்டால் மூன்று மாதங்களுக்குப் பிறகு நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள நான் நிச்சயமாக தடையாக இருக்க மாட்டேன் என்று எனது மாமா சொன்னார். அவர் அப்படிச் சொன்னவுடன் ‘அப்படி நாங்கள் இருவரும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றால் அந்த மூன்று மாதங்களில் நான் நடிப்பதற்கான எந்தப் புதிய பட ஒப்பந்தத்திலும் நீங்கள் கையெழுத்து போடக் கூடாது’ என்று நான் அவருக்கு எதிர் நிபந்தனை ஒன்றை விதித்தேன். அதை மாமா ஏற்றுக் கொண்டுவிட்டார்” என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார் ஜானகி.
அந்தக் கடிதம் எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய மன ஆறுதலைக் கொடுத்தது. கடிதத்தை திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தார் எம்.ஜி.ஆர். அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள எந்தத் தடையும் இருக்காது என்ற நம்பிக்கை எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.
அதையடுத்து முதல் வேலையாக தனது நண்பரை அழைத்த எம்.ஜி.ஆர். ஜானகியின் கடிதத்தை அவருக்குப் படித்துக் காட்டி விட்டு “நேற்று இரவு நான் சொன்ன அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு எந்தத் தகவலும் சொல்லி அனுப்ப வேண்டாம்” என்று அவரிடம் சொன்னார்.
“இன்னொரு முக்கியமான விஷயம். என் அண்ணனுக்கு நேற்று நடந்த எந்த விஷயமும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று எம்.ஜி.ஆர். அந்த நண்பரிடம் சொன்னபோது அந்த நண்பரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவர் அப்படி சிரிப்பதைப் பார்த்து எதற்காக அவர் அப்படி சிரிக்கிறார் என்பது போல எம்.ஜி.ஆர் அவரைப் பார்த்தபோது “நான் நேற்று இரவு உங்களோடு வந்ததே, உங்கள் அண்ணன் சொல்லித்தான்…” என்று உண்மையை உடைத்தார் அந்த நண்பர்.
“அந்த கார்டியன் ஏதாவது தப்பா பேச இவன் அவர்கிட்ட முரட்டுத்தனமாக நடந்து கொண்டான் என்றால் நன்றாக இருக்காது. அதனால் நீங்கள் கூடப் போய் ஆத்திரத்தில் அவன் எதுவும் செய்துவிடாமல் சமாதானப்படுத்தி அவனைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்று அவர்தான் என்னை அனுப்பி வைத்தார்” என்று அந்த நண்பர் சொன்னவுடன் “இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு தான் போக முடிவு செய்ததும் அண்ணனுக்குத் தெரிந்திருக்குமோ” என்ற அச்சத்தில் அதைப் பற்றி எம்.ஜி.ஆர். அந்த நண்பரிடம் கேட்க “அதைப் பற்றி எல்லாம் நான் அவரிடம் ஒன்றும் சொல்லவில்லை” என்று சொல்லி எம்.ஜி.ஆர். மனதில் நிம்மதியை ஏற்படுத்தினார் அந்த நண்பர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ‘மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பில் ஜானகி அவர்களின் மாமாவைப் பார்க்கும்போதெல்லாம் அவரை ஜெயித்துவிட்ட ஒருவித பெருமிதத்துடன் எம்.ஜி.ஆர். நடை போட்டாலும் ஜானகியின் மாமா அதை எல்லாம் பொருட்படுத்தவேயில்லை.
ஜானகியுடன் தனது திருமணம் நடைபெற்றுவிடும் என்று எம்.ஜி.ஆர். உறுதியாக நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது நம்பிக்கையை அடியோடு தகர்க்கின்ற ஒரு செய்தி அவரை வந்தடைந்தது.
பலதார தடைச் சட்டம் அடுத்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்படவிருக்கின்றது என்பதுதான் அந்தச் செய்தி.
ஏற்கனவே தான் மணமுடித்திருக்கும் சதானந்தவதி நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சட்டம் அமுலுக்கு வருமானால் தன்னால் ஜானகியைத் திருமணம் செய்து கொள்ள முடியாதே என்று அதிர்ச்சி அடைந்தார் எம்.ஜி.ஆர்.
அப்படி ஒரு சட்டம் இரண்டு மாதத்தில் வரப் போகிறது என்று தெரிந்துதான் தங்களது திருமணத்திற்கு ஜானகியின் மாமா ஒப்புதல் தெரிவித்திருப்பாரோ என்ற சந்தேகமும் அவர் மனதிற்குள் தோன்றியது.
அப்படி ஒரு சட்டம் வரவிருப்பது பற்றியும், அவர்களது திருமணத்திற்கு ஜானகியின் மாமா சம்மதித்ததில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்குமா என்பது பற்றியும் ஜானகியோடு கலந்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர்.
ஆனால், படத்தில் நடிக்கும்போதுகூட படத்திற்கான வசனங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளக் கூடாது என்று ஜானகியின் மாமா போட்டிருந்த நிபந்தனையை அவர்கள் இருவருமே ஏற்றுக்கொண்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகப் பெரிய குழப்பத்துக்கு ஆளானார் அவர்.
அதையும் மீறி ஒருமுறை ஜானகியோடு அவர் பேச முற்பட்டபோது மாமாவிடம் அவர்கள் இருவரும் செய்து கொடுத்திருக்கும் சத்தியத்தை மீண்டும் ஒருமுறை அவருக்கு நினைவுபடுத்திவிட்டு அவருடன் பேசாமலேயே சென்றுவிட்டார் ஜானகி .
எப்படியாவது அந்த விவரங்கள் எல்லாவற்றையும் அவருக்குத் தெரிவித்தே ஆக வேண்டும் என்பதால் ஜானகிக்கு ஒரு கடிதம் எழுதிய எம்.ஜி.ஆர். அந்தக் கடிதத்தை வேலைக்காரப் பையனிடம் கொடுத்து அனுப்பினார்.
முதலில் அந்தக் கடிதத்தை வாங்கவே மறுத்த ஜானகி “மறுக்காமல் இதை வாங்கிப் படிக்க வேண்டும் என்று நான் சொன்னதாக ஜானகியிடம் சொல்…” என்று அந்த பையனிடம் எம்.ஜி.ஆர். சொல்லி அனுப்பியிருந்தது தெரிந்ததும் கடிதத்தை கையில் வாங்கிக் கொண்டார்.
ஆனாலும் உடனே அந்தக் கடிதத்தை அவர் படிக்கவில்லை. தான் மாமாவுக்கு கொடுத்திருந்த வாக்குக்கு கட்டுப்பட்டு அவர் வந்தவுடன் எம்.ஜி.ஆரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருப்பதாக அவரிடம் சொன்ன ஜானகி அந்தக் கடிதத்தை படிக்கச் சொல்லி மாமா அனுமதி கொடுத்ததற்குப் பிறகே அந்த கடிதத்தைப் படித்துப் பார்த்தார்.
அந்த கடிதத்தில் எம்.ஜி.ஆர். என்ன எழுதியிருந்தார்…?
(தொடரும்)
The post சினிமா வரலாறு-75 – எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகிக்கு எழுதிய கடிதம் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-73 – ஜானகியை மணக்க எம்.ஜி.ஆருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் appeared first on Touring Talkies.
]]>அந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தவறாமல் சினிமா பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். ஒரு நாள் ‘தியாகி’ என்ற படத்தைப் பார்த்தார். அந்த படத்தைப் பார்த்தபோது அந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்தவரின் முகம் அவருக்கு மிகவும் தெரிந்த முகமாக இருந்தது. அவரை எங்கோ பார்த்திருக்கிறோம் என்று அவருக்கு நன்றாக தெரிந்தது. ஆனால் எங்கு பார்த்திருக்கிறோம் என்று அவ்வளவு எளிதாக அவரால் முடிவுக்கு வர முடியவில்லை.
படம் பார்த்த அன்று இரவு முழுவதும் அந்த நாயகியின் கண்களும், அவரது அழகான தோற்றமும் அவர் மனக் கண்ணுக்குள் சுற்றிச் சுற்றி வந்தன.
இப்படி இரவு முழுவதும் யோசித்துக் கொண்டே இருந்தபோதுதான் அந்தக் கதாநாயகிக்கும், தனது முதல் மனைவியான தங்கமணிக்கும் இருந்த உருவ ஒற்றுமை அவருக்கு புரிந்தது.
தன்னுடைய முதல் மனைவியின் அதே உயரம், அதே கண்கள். அதே உடல் அமைப்பு கொண்ட அந்த நடிகையை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று அந்த நொடி முதல் துடிக்க ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.
‘தியாகி’ படத்தில் ஒரு தலித் பெண்ணின் வேடத்தில் நடித்திருந்த அந்த நடிகையின் பெயர் வி.என் ஜானகி.
இதற்கிடையில் லஷ்மிகாந்தனின் கொலை வழக்கிலிருந்து விடுதலையான எம்.கே.தியாகராஜ பாகவதர் ‘ராஜமுக்தி’ என்ற பெயரில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்திலே தியாகராஜ பாகவதரின் அண்டை நாட்டை ஆண்ட மகேந்திரவர்மன் என்னும் மன்னனின் பாத்திரத்திலே நடிக்க எம்.ஜி.ஆரை அவர் ஒப்பந்தம் செய்தார்.
தியாகராஜா பாகவதர் சிறைவாசம் முடிந்து அப்போதுதான் வெளியே வந்திருந்தார் என்பதால் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த அவர் விரும்பவில்லை. ஆறு மாத காலம் பூனாவில் தங்கி மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டுத் திரும்பும் திட்டத்துடன் புறப்பட்ட அவருடன் எம்.ஜி.ஆரும் பூனாவிற்குக் கிளம்பினார்.
‘தியாகி’ படத்தைப் பார்த்த நாளிலிருந்து தனது முதல் மனைவியின் தோற்றத்தில் இருந்த அந்தப் பட நாயகியை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த எம்,ஜி,ஆரி-ன் ஆசையை அந்த பயணம் நிறைவேற்றி வைக்கப் போகிறது என்று பூனாவிற்கு போய் சேர்கின்றவரை எம்.ஜி.ஆருக்குத் தெரியாது.
தியாகராஜ பாகவதரின் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன் அவர்களின் தம்பியான ராஜகோபாலனின் மகளான வி.என்.ஜானகியை பூனாவில் நடைபெற்ற ‘ராஜமுக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் முதல்முறையாக நேரில் பார்த்த எம்.ஜி.ஆர்., அப்படியே அசந்து போய் நின்றுவிட்டார்.
அதற்குக் காரணம் அவரது முதல் மனைவியான பார்கவி என்கிற தங்கமணிக்கும் ஜானகிக்கும் இருந்த உருவ ஒற்றுமை. ஆண்டவனின் படைப்பில் இப்படி ஒரு அதிசயமா என்று ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனார் எம்.ஜி.ஆர்.
ஜானகி மீது அவருக்கு அளவில்லாத அன்பும், பாசமும் தோன்ற அந்த தோற்ற ஒற்றுமை முதல் காரணமாக அமைந்தது. ‘ராஜமுக்தி’ படத்தைத் தொடர்ந்து ‘மோகினி’ திரைப்படத்திலும் ‘மருத நாட்டு இளவரசி’ படத்திலும் ஜானகியுடன் ஜோடியாக நடித்தபோது அந்த அன்பு காதலாக மாறியது.
ஆனால் அந்தக் காதல் நிறைவேறுவதற்குள் எண்ணற்ற போராட்டங்களையும் பிரச்னைகளையும் சந்தித்தார் எம்.ஜி.ஆர்.
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘மோகினி’ திரைப்படம்தான் எம்.ஜிஆர்-ஜானகி இருவரும் ஜோடியாக நடித்து வெளிவந்த முதல் படம். அந்தப் படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆரைவிட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் வி.என்.ஜானகி. ஆனால், அந்த வித்தியாசங்களை எல்லாம் மீறி அவர்களுக்கிடையே காதல் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.
‘மோகினி’ திரைப்படத்தைத் தொடர்ந்து ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்திருந்தார்கள் என்றாலும் அந்த படம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை.
முதலில் அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தவர் தஞ்சையைச் சேர்ந்த பிரபல பாடகியான அனுராதா. அப்போது அந்தப் படத்திற்கு சூட்டப்பட்டிருந்த பெயர் ‘காளிதாசி’.
‘மருத நாட்டு இளவரசி’ படம் ஆரம்பிக்கப்பட்டபோது அந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியவர் அந்தப் பட நிறுவனத்தில் பங்குதாராராக இருந்த டி.வி.சாரி. அவர்தான் எம்.ஜி.ஆரை அந்தப் படத்தின் கதாநாயகன் வேடத்துக்கு சிபாரிசு செய்தவர்.
கழுத்தில் துளசி மாலையுடன், கதர் ஆடை அணிந்திருந்த எம்.ஜிஆரை பார்த்துடேனேயே அந்தப் படத்தின் தயாரிப்பாளரான முத்துசாமிக்கு பிடித்துவிட்டது. ஆகவே, நான்காயிரம் ரூபாய் சம்பளத்தில் அந்தப் படத்தின் நாயகனாக எம்.ஜி.ஆரை அவர் ஒப்பந்தம் செய்தார்.
அந்த நிறுவனத்துக்கு மூளையாக செயல்பட்ட அவரது யோசனைப்படி மைசூர் நவ ஜோதி ஸ்டுடியோவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தனர். இந்த நவ ஜோதி ஸ்டுடியோதான் பின்னர் பிரிமியர் ஸ்டுடியோ என்று பெயர் மாற்றம் பெற்றது.
படத்திற்கான கதை, வசனத்தை முழுமையாக எழுதித் தராமல் இழுத்தடித்தது மட்டுமின்றி “முழுக் கதையும் என் மனதிலே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதை எழுதித் தருகிறேன்” என்று அவர் சொன்ன பதிலால் ஆத்திரம் அடைந்த தயாரிப்பாளர் முத்துசாமியின் அண்ணன் அவரை வெளியே போகச் சொல்லி விடவே அந்த கம்பெனி கலைக்கப்பட்டது.
அதன் பிறகு கோவிந்தன் கம்பெனி என்ற பட நிறுவனத்தினர் ‘காளிதாசி’ படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த பாடல்களையும், சில காட்சிகளையும் அப்படியே வைத்துக் கொண்டு அந்தப் படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
படத்திற்கு கதை, வசனம் எழுத புதிய கதாசிரியர் ஒருவரை அவர்கள் தேடியபோது ‘ராஜகுமாரி’, ‘அபிமன்யு’ ஆகிய திரைப்படங்களில் உணர்ச்சிப்பூர்வமான வசனங்களை எழுதியிருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் வசனம் எழுதும் ஆற்றலைப் பற்றி எடுத்துச் சொல்லி அவரது பெயரை சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் சிபாரிசை அப்போது தயாரிப்பு பொறுப்பை ஏற்றிருந்த முத்துசாமி ஏற்றுக் கொள்ளவே உடனே புறப்பட்டு வரச் சொல்லி கலைஞருக்கு ஒரு தந்தி அடித்தார் எம்.ஜி.ஆர். அவர் புறப்பட்டு வருவதற்குள் முத்துசாமி ஊருக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதால் கலைஞருக்கு முன் பணம்கூட கொடுக்கப்படவில்லை. ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாடார் மேன்ஷனில் தங்கிக் கொண்டு தினமும் இரவெல்லாம் கதையை எழுதத் தொடங்கினார் அவர்.
முதலில் அந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கதாசிரியர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியாக எழுதித் தந்த நிலையில் படத்திற்கான மொத்த வசனத்தையும் ஒரே வாரத்தில் கலைஞர் எழுதி முடித்து விட்டார்.
அந்தப் படத்திற்கு கதை, வசனகர்த்தாவை மட்டுமின்றி கதாநாயகியையும் பரிந்துரைத்தவர் எம்.ஜி.ஆர்.தான். அவருக்கும் வி.என்.ஜானகிக்கும் இடையே பூத்திருந்த காதல்கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். அந்தப் படத்திற்கு பின்னர் வாழ்க்கையிலும் ஒன்றாக இணைந்த அவர்கள் இருவரது பெயரும் திரையில் இணைந்து இடம் பெற்ற படமாக ‘மருத நாட்டு இளவரசி’ படம் அமைந்தது.
‘மருத நாட்டு இளவரசி’ படம் ‘காளிதாசி’ என்ற பெயரிலே தயாரிக்கப்பட்டபோது அந்த படத்தில் பணியாற்றிய ஒரு பெண் எம்.ஜி.ஆர்., மீது தீவிரமாகக் காதல் கொண்டிருந்தாள். “நீங்கள் சரி என்று சொன்னால் உங்களை மணந்து கொண்டு உங்களுடன் வாழ்க்கை நடத்தத் தயாராக இருக்கிறேன்” என்று வெளிப்படையாக சொன்ன அந்தப் பெண்ணிடம் “உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னை மன்னித்துக் கொள் ” என்று அப்போதே கூறிவிட்டார் எம் ஜி ஆர்.
ஆனால் எம்.ஜி.ஆர். மனதில் வி.என்.ஜானகி இடம் பிடித்த பின்னரும் மனம் தளராது முயற்சி செய்து கொண்டிருந்த அந்தப் பெண் ‘மருத நாட்டு இளவரசி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நவஜோதி ஸ்டுடியோவிற்கு மிக அருகிலேயே குடி இருந்ததால் எம்ஜிஆரின் நடவடிக்கைகள் அனைத்தையும் பக்கத்தில் இருந்து கவனித்தபடி இருந்தார்.
நாள் தவறாமல் தனது வீட்டுக்கு வரும்படி எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண் சில சமயங்களில் எம்.ஜி.ஆர் மனதை உருக்கும் அளவிற்கு கடிதங்கள் எழுதி அவருக்கு அனுப்புவதையும் வழக்கமாக வைத்திருந்தாள்.
இப்படிப்பட்ட பிரச்சினையில் எம்.ஜி.ஆர். சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது ஜானகியை எம்.ஜி.ஆர். திருமணம் செய்து கொள்வதை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த ஜானகியின் தாய் மாமனான நாராயணன் என்பவர் ஜானகியை எம்.ஜி.ஆர். திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் என்னென்ன நிபந்தனைகளுக்கு அவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசுவதற்காக எம்.ஜி.ஆரை நேராக வரச் சொன்னார்.
எம்.ஜி.ஆர் ஜானகியை காதலிப்பது அப்போது ஜானகியிடம் இருந்த பணத்திற்காகவும், எதிர்காலத்தில் ஜானகி சம்பாதிக்கக் கூடிய பணத்திற்காகவும்தான் என்பது அவரது தாய் மாமாவின் எண்ணமாக இருந்தது.
இரவு ஏழு மணியளவில் அவரை சந்திக்க எம்.ஜி.ஆர் போனதும் ஏற்கனவே டைப் அடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு ஒப்பந்த்ததை எடுத்து எம்ஜிஆரிடம் நீட்டினார் அவர்.
அதைப் படிக்கப் படிக்க எம்ஜிஆரின் சிவந்த முகம் மேலும் சிவந்தது.
“என்னை அடிமை வியாபாரியா ஆக்கலாம்னு நினைக்கறீங்களா?” என்று அவரைப் பார்த்து ஆத்திரத்துடன் எம்.ஜி.ஆர் கேட்க கதவுக்குப் பக்கத்திலே கண்ணீருடன் நின்று கொண்டிருந்த வி.என்.ஜானகி, ‘அப்படியெல்லாம் பேச வேண்டாம்’ என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து சைகை செய்தார்.
எம்.ஜி.ஆர். அப்படி ஆத்திரம் கொள்கின்ற அளவிற்கு அந்த ஒப்பந்தத்தில் அப்படி என்ன எழுதப்பட்டிருந்தது…?
(தொடரும்)
The post சினிமா வரலாறு-73 – ஜானகியை மணக்க எம்.ஜி.ஆருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் appeared first on Touring Talkies.
]]>