The post சினிமா வரலாறு-74 – திசை மாறிப் போக இருந்த எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்திய நண்பர் appeared first on Touring Talkies.
]]>பத்தாண்டு காலத்திற்கு எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜானகியின் கார்டியனாக உள்ள அவரது மாமா சொல்லுகின்ற படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், அவர்கள் இருவரும் படங்களில் நடிப்பதற்கு படத் தயாரிப்பாளர்கள் ஜானகியின் மாமாவிடம் மட்டுமே ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், ஜானகி படங்களில் தொடர்ந்து நடிக்க எம்.ஜி.ஆர் எந்த மறுப்பும் சொல்லக் கூடாது என்றும் பல நிபந்தனைகளை அந்த ஒப்பந்தத்தில் விதித்திருந்தார் அவரது மாமா.
திருமணம் செய்து கொள்வது பற்றி ஜானகியிடம் முதல் முறையாகப் பேசியபோதே “திருமணத்திற்குப் பிறகு நடிப்புத் தொழிலில் இருந்து முழுமையாக விலகிவிட வேண்டும்” என்று எம்ஜிஆர் அவரிடம் சொல்லியிருந்தார்.
ஜானகியும், ”திருமணத்திற்குப் பிறகு கூடையில் மண் சுமக்கும் வேலை செய்தாலும் செய்வேனே தவிர நடிப்புத் தொழிலில் இருக்க மாட்டேன்” என்று எம்.ஜிஆரிடம் உறுதியாக சொல்லியிருந்தார்.
அந்த உடன்படிக்கைக்கும் அந்த ஒப்பந்தத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் இருந்ததால்தான் அந்த ஒப்பந்தத்தைப் படித்தவுடன் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு ஆத்திரம் ஏற்பட்டது.
இதனிடையே ஆத்திரமாகப் பேச வேண்டாம் என்று ஜானகி அவரிடம் சைகை காட்டியதில் எம்ஜிஆரின் கோபம் இன்னும் அதிகமாகியது.
ஆனால் இந்த போராட்டங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ”ஜானகியோட பணத்துக்கு நீங்க ஆசைப்படலேன்னா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து கேட்ட ஜானகியின் மாமா “அவளை உங்க இஷ்டத்துக்கு பயன்படுத்தி அவள் சம்பாதிக்கும் பணத்தை நீங்க அனுபவிக்கலாம்னு நினைச்சா நான் அதைப் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டேன்” என்றார்.
”ஜானகி சம்பாதிக்கும் பணத்தில் நான் வாழ விரும்புவதாக நீங்கள் சந்தேகப்பட்டால் திருமணத்திற்குப் பிறகு ஜானகியை எக்காலத்திலும் நடிக்க வைக்க மாட்டேன் என்று நான் எழுதித் தருகிறேன்… போதுமா?” என்று எம்.ஜி.ஆர் கேட்டதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாத அவர் சர்வநிதானத்துடன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையை நன்கு இழுத்து வெளியேவிட்டார்.
அதன் பிறகு, ”நோயில் படுத்திருக்கும் உங்க மனைவி, உங்க தாயார், உங்க அண்ணன் குடும்பம் என்று உங்கள் குடும்பம் ரொம்பப் பெரிசு. ஜானகிக்கும் அவரது தாயார், பிள்ளை, நான் என்று இத்தனை பேர் இருக்கிறோம். இவ்வளவு பேரும் வாழ்க்கை நடத்த உங்களது சம்பளம் எப்படிப் போதுமானதாக இருக்கும்? நீங்கள் இன்னும் முழு கதாநாயகனாக ஆகவில்லை. அது மட்டுமில்லாமல் இன்றுவரையில் ஜானகி வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தில் பாதியைத்தான் நீங்கள் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் குடும்பத்தையும், இவளது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இவள் நடித்தே ஆக வேண்டும். அப்படி இவள் நடித்து வரக் கூடிய வருமானத்தை அவளது குடும்பத்திற்கு பயன்படுத்தத்தான் நான் அனுமதிப்பேன். வேறு யாரும் அந்தப் பணத்திற்கு சொந்தம் கொண்டாடுவதையோ அந்தப் பணத்தை அனுபவிப்பதையோ என்னால் அனுமதிக்க முடியாது…” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் அவர்.
தனது மாமாவின் அந்த விஷமத்தனமான பேச்சைக் கேட்டு எம்.ஜி.ஆர். ஆத்திரத்தில் ஏதாவது பேசிவிட்டால் அது திருமணத்திற்குத் தடையாக அமைந்து விடுமே என்று அச்சப்பட்ட ஜானகி “இப்போதைக்கு சரி என்று சொல்லுங்கள். பிறகு பேசிக் கொள்ளலாம்” என்று எம்.ஜி.ஆருக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார். ஆனால், ஜானகியின் மாமா பேசிய எகத்தாளமான பேச்சினால் காயமடைந்திருந்த எம்.ஜி.ஆரை ஜானகியின் அந்த பேச்சு இன்னும் ஆத்திரம் அடையச் செய்தது.
“ஒரு பெண் சம்பாதிக்கும் பணத்தில் வாழ விரும்புகின்ற ஒரு கேவலமான பிறவி என்று அவள் முன்னாலேயே என்னை அவளது மாமா குற்றம் சாட்டும்போது அதை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர் சொல்வதற்கெல்லாம் என்னை சம்மதிக்கச் கொள்கிறாள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்னைவிட அதிகமாக சம்பளம் வாங்குவதால் அவளது இஷ்டத்திற்கு நான் ஆட வேண்டும் என்று நினைக்கிறாளா?” என்று ஜானகி மீது பெரும் கோபம் கொண்டார் எம்ஜிஆர்.
கல்யாணத்தைப் பற்றி பேசி முடிவெடுத்து திருமணத்திற்கு நாள் குறிக்கலாம் என்று அழைத்துவிட்டு இப்படி ஒரு அடிமை சாசனத்தில் தன்னை கையெழுத்து போடச் கொள்கிறார்கள் என்றால் அவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..?
ஜானகி மீது நான் வைத்திருக்கும் அன்பை விலை பேச இவர்கள் முயற்சிக்கிறார்களா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் எம்.ஜி.ஆரின் மனதிற்குள் ஓடின.
எந்த நிபந்தனையும் விதிக்காமல் என்னை மனிதனாக மதித்து என்னோடு வாழ விரும்புகின்ற ஒரு பெண் இந்த உலகத்தில் எனக்கு கிடைக்கவே மாட்டாளா என்று எண்ணியபடியே தான் உட்கார்ந்து கொண்டிருந்த நாற்காலியிலிருந்து எழுந்தார் எம்.ஜி.ஆர்.
“ஜானகிக்கு கணவனாக இருக்க விரும்பித்தான் இங்கே வந்தேனே தவிர, ஒரு அடிமையாக இருக்க விரும்பி நான் இங்கே வரவில்லை. வருகிறேன்…” என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் அங்கிருந்து கோபமாக கிளம்பிய போதுதான் நினைத்ததை சாதித்துவிட்ட பெருமிதத்துடன் இன்னொரு சிகரெட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்தார் ஜானகியின் கார்டியனான மாமா.
நிலைமை எல்லை மீறிப் போவதைக் கண்டு எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்த ஓடோடி வந்த ஜானகி ”அவசரப்படாதீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. அவர் நீட்டின ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்து போட்டாலும் நான் நடிக்கவில்லை என்றால் அவரால் என்ன செய்ய முடியம்? அதனால் தயவு செய்து அவரிடம் சரி என்று சொல்லிவிட்டுப் போங்கள்” என்று எம்.ஜி.ஆரிடம் மன்றாடினார்.
ஆனால் ஜானகியின் மீதும் எம்.ஜி.ஆர். அளவிட முடியாத அளவிற்கு கோபம் கொண்டிருந்ததால் ஜானகி சொன்ன வார்த்தைகள் அவரை ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
“அவர் கூப்பிட்ட உடன் வந்தது என் தப்பு. அதனால் எனக்கு இந்த அவமானம் வேண்டும்தான். என் பணத்தையோ, புகழையோ பார்க்காமல் என் உள்ளத்தை மட்டும் மதித்து என்னோடு வாழ்க்கைத் துணைவியாக வாழக் கூடிய ஒரு பெண் எனக்குக் கிடைக்காமலா போய்விடுவாள்“ என்று உரக்கச் சொல்லியபடியே அங்கிருந்து படிகளில் இறங்கிய எம்.ஜி.ஆர். அந்த இடத்தை விட்டுக் கிளம்பியபோது மழை தூறத் தொடங்கியிருந்தது.
ஜானகியின் மாமாவைப் பார்க்க எம்.ஜி.ஆர். சென்றபோது அவருடன் அவரது நண்பர் ஒருவரும் சென்றிருந்தார். ஜானகியின் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே வந்த எம்.ஜி.ஆரின் முகத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பார்த்து கலக்கமடைந்த அந்த நண்பர் அடுத்து எம்ஜிஆர் எங்கே சென்று கொண்டிருக்கிறார் என்பதை அறிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
ஜானகி தங்கியிருந்த வீட்டிலிருந்து புறப்பட்ட எம்.ஜி.ஆர். ‘மருத நாட்டு இளவரசி’ படத்தை எடுத்துக் கொண்டிருந்த அந்த படக் கம்பெனி இருந்த பாதையில் போகாமல் வேறு பாதையில் போவதைப் பார்த்துவிட்டு “நாம் போக வேண்டிய பாதை அந்தப் பக்கம் இருக்கிறது” என்று எம்ஜிஆருக்கு அவரது நண்பர் சுட்டிக் காட்டியபோது “அது எனக்கும் தெரியும். இஷ்டம் இருந்தால் நீங்கள் என்கூட வாங்க. இல்லையென்றால் நீங்களும் போகலாம்…” என்று சற்று கோபமாக அந்த நண்பரைப் பார்த்து சொன்னார் எம்.ஜி.ஆர்.
அவர் அப்படி சொன்னவுடன் எம்.ஜி.ஆர் எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கிறார் என்பதை ஓரளவிற்கு புரிந்து கொண்ட அவரது நண்பர் எதுவும் பேசாமல் அவரைப் பின் தொடர்ந்தார்.
“என்னை அடிமையாக வைச்சிருக்கணும்னு ஆசைப்படறாங்க போல இருக்கு. சுருக்கமாகச் சொல்வதென்றால் சினிமா உலகில் சொல்வாங்களே ‘கூஜா’ என்று! அது மாதிரி நான் இருக்கணும்னு ஆசைப்படறாங்க. இந்த உலகத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ள வேறு பெண்ணே கிடைக்காதுன்னு முடிவு பண்ணிட்டாங்கபோல இருக்கு” என்றெல்லாம் புலம்பியபடி எம்ஜிஆர் நடந்து செல்ல ”அவங்களுக்கு நாம் நல்ல படம் புகட்டலாம் அண்ணே. நீங்க ஒண்ணும் கவலைப்படாதிங்க” என்று எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் கூறிய அந்த நண்பர் “அதெல்லாம் சரி… இந்த மழையில் இப்போ எங்கே போறீங்க?” என்று கேட்டார்.
“பல மாதங்களாக என்னை வேண்டி வேண்டி அழைக்கிறாளே ஒருத்தி… அவளைத்தான் பார்க்கப் போகிறேன்” என்றார் எம்ஜி.ஆர்.
அவர் சொன்னதில் இருந்து ‘மருத நாட்டு இளவரசி’ படம் ‘காளிதாசி’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட காலத்திலிருந்து எம்.ஜி.ஆரை அடைய தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும் பெண்ணைப் பார்க்கத்தான் எம்ஜிஆர் செல்கிறார் என்று அவரது நண்பருக்கு தெளிவாகப் புரிந்தது.
விபரீதமான ஒரு முடிவை எடுத்துள்ள எம்.ஜி.ஆரை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தவித்தார் அந்த நண்பர்.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-74 – திசை மாறிப் போக இருந்த எம்.ஜி.ஆரை தடுத்து நிறுத்திய நண்பர் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-25 – நடிகை பானுமதியின் காதல் கதை appeared first on Touring Talkies.
]]>எழுத்தாளர், பாடகி, இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, என்று தமிழ், தெலுங்கு சினிமாக்களின் பல தளங்களில் வெற்றிகரமாகத் திகழ்ந்த பானுமதி ‘நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை’ என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.
படங்களில் நடிக்கும்போது காட்சிக்காகக்கூட பானுமதியைத் தொட்டுப் பேச அவரது கதாநாயகர்கள் தயங்குவார்களாம். பல கதாநாயகர்கள், ‘இந்தக் காட்சியில் இந்த வசனத்தைப் பேசும்போது உங்களது கையைத் தொடுவேன்’ என்று அவரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டுதான் அவரது கையைத் தொடுவார்களாம்.
‘தவறு’ என்று மனதுக்குப் பட்டுவிட்டால் அதைத் தட்டிக் கேட்கத் தயங்காத கண்ணியமிக்க ஒரு நடிகையாகத் திகழ்ந்தவர் பானுமதி .
எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்க பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தயங்கிய காலக்கட்டத்தில் ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என்று உரிமையோடு அவரை அழைத்த ஒரே நடிகை பானுமதி மட்டுமே. எம்.ஜி.ஆரிடம் எந்த அளவு பானுமதிக்கு உரிமை இருந்தது என்பதை விளக்க அவருடன் ஒரு திரைப்படத்தில் பானுமதி நடித்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வாள் சண்டை போட்டு நம்பியாரிடம் இருந்து பானுமதியை எம்.ஜி.ஆர்., மீட்பது போல ஒரு காட்சி அன்று படமாக்கப்பட்டது. அந்தச் சண்டை நடக்கும்போது பானுமதி அடிக்கடி தனது பயத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்தக் காட்சி ஒரு முறை அல்ல.. இரு முறை அல்ல. பல முறை படமாக்கப்பட்டும் சரியாக அமையவில்லை.
இதனால் பயந்த மாதிரி திரும்பத் திரும்ப நடித்த பானுமதி சற்றுக் கோபத்துடன் எம்.ஜி.ஆரை அழைத்தார். “மிஸ்டர் ராமச்சந்திரன் அந்த வாளை என்னிடம் கொடுங்கள். நானே சண்டை போட்டு என்னை மீட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இப்படி பேசக் கூடிய துணிச்சல் யாருக்கு வரும்…?
இப்படி படப்பிடிப்பு தளங்களில் இரும்பாக இருந்த பானுமதி காதல் வசப்பட்டபோது அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகளிலோ, சினிமாவிலோகூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பானுமதியின் காதல் கதை, ஒரு அழுத்தமான காதல் கதை.
பானுமதியின் தந்தையான பொம்மராஜூ வெங்கட சுப்பையாவை ஒரு இசைப் பிரியர் என்று சொல்வதைவிட இசைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னுடைய மகளான பானுமதியின் குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருந்த அவர் சிறுவயது முதலே பானுமதிக்கு கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக் கொடுத்தார்.
அவருடைய நெருங்கிய நண்பரான இயக்குநர் பி.புல்லையா அவர்களின் இயக்கத்தில் உருவான ‘வர விக்ரயம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க பானுமதியை அவர் அனுமதித்ததற்குக்கூட முக்கியமான காரணம் அவரது இசை ஆர்வம்தான்.
தன் மகள் ஒரு பாட்டுக் கச்சேரியில் பாடினால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள்தான் அவரது பாட்டைக் கேட்க முடியும். ஆனால், சினிமாவில் பாடினால் லட்சக்கணக்கானவர் ஒரே நேரத்தில் தனது மகளின் குரலைக் கேட்க முடியுமே என்ற எண்ணத்தில்தான் பானுமதியை படத்தில் நடிக்க வைத்தார் அவரது தந்தை.
இருப்பினும் பானுமதியுடன் படத்தில் நடிக்கின்ற ஆண் நடிகர்கள் அவரைத் தொட்டுப் பேசுவது போலவோ, நெருக்கமாக நின்று நடிப்பது போலவோ எந்தக் காட்சிகளும் இருக்கக் கூடாது என்பது உட்பட அவர் விதித்த பல நிபந்தனைகளுக்கு படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்ட பிறகே அந்தப் படத்தில் பானுமதி நடிக்க அவர் தனது ஒப்புதலைத் தந்தார்.
அத்தனை நிபந்தனைகள் விதித்தாலும் அந்த சினிமாதான் தனது மகளைத் தன்னிடமிருந்து ஒரு காலக்கட்டத்தில் பிரிக்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது.
பானுமதி நடித்த முதல் படமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த பானுமதி 1943-ம் ஆண்டில் ‘கிருஷ்ண பிரேமா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.
அந்தப் படத்தை ‘கிருஷ்ண பிரேமா’ என்று சொல்வதற்குப் பதில் ‘ராமகிருஷ்ண பிரேமம்’ என்று சொல்லலாம் என்று பானுமதி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதற்குக் காரணம் இருக்கிறது.
தனது காதல் கணவரான ராமகிருஷ்ணாவை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் முதன்முதலாக சந்தித்தார் பானுமதி.
முதல் சந்திப்பிலேயே பானுமதியின் கவனத்தை ஈர்த்தார் ராமகிருஷ்ணா. படப்பிடிப்பு தளத்தில் ஓடி, ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்த சுறுசுறுப்பான, அழகான வாலிபன் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்ட அவர் படப்பிடிப்பு இடைவேளைகளில் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கினார்.
அந்தப் படத்தைவிட பானுமதிக்கு ராமகிருஷ்ணா மேல் இருந்த காதல் வேகமாக வளர்ந்தது. இதில் மிகப் பெரிய வேடிக்கை என்வென்றால் படத்தின் நாயகியான பானுமதி தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி அந்த ராமகிருஷ்ணாவுக்குக் கொஞ்சம்கூட தெரியாது.
அப்போது பானுமதி பருவ வயதிலிருந்ததால் அவரது தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். இனியும் தனது காதலைப் பற்றி வீட்டில் சொல்லாமல் இருப்பது சரியல்ல என்று எண்ணிய பானுமதி தனது மூத்த சகோதரியிடம் தான் ராமகிருஷ்ணா என்ற உதவி இயக்குநரைக் காதலிக்கின்ற விவரத்தைக் கூறினார்.
பானுமதியின் காதல் விவகாரம் தெரிந்ததும் எல்லா அப்பாக்களையும் போல பானுமதியின் அப்பாவான வெங்கட சுப்பையாவும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது என்றார். சினிமாவில் பணிபுரியும் ஒருவருக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுப்பதில் அவருக்கு ஒரு சதவிகிதம்கூட உடன்பாடில்லை.
ஆனால் பானுமதி தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றதால் வேறு வழியின்றி திருமணம் பற்றி பேச ராமகிருஷ்ணாவை தனது வீட்டுக்கு அழைத்தார் பானுமதியின் தந்தை.
அளவில்லாத நடிப்புத் திறனும், அழகும் கொண்ட பானுமதி என்ற கதாநாயகி தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் உதவி இயக்குநரான ராமகிருஷ்ணவுக்கு அப்போதுதான் தெரிந்தது.
பானுமதி எப்படிப்பட்ட பண்பான நடிகை என்பதை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அவர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே அவர் தன்னைக் காதலிக்கிறார் என்பது தெரிந்ததும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பானுமதியை மனைவியாக ஏற்றுக் கொள்ள அவர் பெரிதும் விரும்பினார் என்றாலும் அதற்கு சில நிபந்தனைகளை விதித்தார்.
“நான் அடிப்படையில் ஒரு ஏழை. அப்படிப்பட்ட நான் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகியான பானுமதியை திருமணம் செய்து கொண்ட பிறகு நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் என்னுடைய சில நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
முதலில் என்னுடைய நிபந்தனைகள் என்னென்ன என்பதை உங்களுக்குச் சொல்கிறேன் . அவை எல்லாம் உங்களுக்கு ஒத்து வருமா என்று பாருங்கள்..” என்று சொல்லிவிட்டு தனது நிபந்தனைகளைப் பட்டியலிடத் தொடங்கினார் அவர்.
அவரது முதல் நிபந்தனையே இடி மாதிரி வேங்கட சுப்பையாவின் தலையில் இறங்கியது.
“என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகு உங்களது பெண் கச்சேரிகளில் பாடவோ, சினிமாவில் நடிக்கவோ கூடாது. இவை எல்லாவற்றிற்கும் அறவே முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டும்..” என்று அவர் சொன்னவுடன் பானுமதியின் தந்தையான வெங்கட சுப்பையாவிற்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. பல்லைக் கடித்தார். பின்னர் அந்த அறையை விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.
அவரது உறவினர்களில் சிலர் வெங்கடசுப்பையாவை சமாதானப்படுத்தினர். “சினிமாவில் பானுமதி நடிப்பதைத்தான் அவர் விரும்ப மாட்டார். ஆனால், பானுமதி கச்சேரிகளில் பாடக் கூடாது என்ற முடிவில் அவர் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே பாடுவதற்கு மட்டும் அவரிடம் அனுமதி கேட்டு வாங்கிக் கொள்ளலாம் வாருங்கள்..” என்று கூறி அவரை மீண்டும் வீட்டுக்குள் அவர்கள் அழைத்து வந்தார்கள்.
“நீங்கள் சொன்னபடி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடச் சொல்கிறேன் . அவர் மிகப் பெரிய பாடகியாக வர வேண்டும் என்பது எனது வாழ்நாள் லட்சியம் என்பதால் குறைந்தபட்சம் அவர் பாட்டுக் கச்சேரி நடத்துவதற்காகவது நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ராமகிருஷ்ணாவை வேண்டிக் கேட்டுக் கொண்டார் பானுமதியின் தந்தை.
அதற்கு ராமகிருஷ்ணா என்ன பதில் சொன்னார்…?
பதில் அடுத்தப் பதிவில்..!!!
The post சினிமா வரலாறு-25 – நடிகை பானுமதியின் காதல் கதை appeared first on Touring Talkies.
]]>