தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் 250 படங்களில் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக பணியாற்றியவர் வி.சி.குகநாதன்.
இவர் தற்போது எழுதியிருக்கும் புதிய கதையில் நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளார். இந்தப் புதிய படத்திற்கு ‘தேன் நிலவில் மனைவியை காணோம்’ என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தை மனோன்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆரூரான் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் மலையாள நடிகையொருவர் நாயகியாக நடிக்கவிருக்கிறார். மேலும், புதுமுகம் அமன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிவசங்கர், பிரியங்கா, ரிஷா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
புகழ்மணி வசனத்தையும், சினேகன் மற்றும் ஹிருதயா இருவரும் பாடல்களையும் எழுத தேவா இசையமைக்கிறார். கணேசன் ஒளிப்பதிவையும், சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும், பி.என்.சுவாமிநாதன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சினிமா பயிற்சி பெற்ற கயல் கதிர்காமர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.