விஜய் ‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு அடுத்து உருவாகி வரும் படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 65-வது படம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் படத்தை 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். கொரோனா படப்பிடிப்பை முடக்கி உள்ளதால் ரிலீசை, தமிழ் புத்தாண்டுக்கு தள்ளி வைக்க ஆலோசிக்கிறார்கள்.
இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் நேரடியாக தயாராக உள்ளதாகவும் யூகமான தகவல்கள் பரவி வந்தன.
இயக்குநர் வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த ‘தோழா’ படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த ‘எவடு’, ஜூனியர் என்.டி.ஆரின் ‘பிருந்தாவனம்’, பிரபாஸ் நடித்த ‘முன்னா’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
அந்த வதந்தியை இயக்குநர் வம்சி தற்போது உறுதிப்படுத்தி உள்ளார். அவர் இது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.
அதில், ‘’நான் விஜய் படத்தை இயக்க இருப்பது உண்மைதான். இதனை எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். படத்தைத் தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ தயாரிக்கிறார். நான் இதுவரை எடுத்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த விஜய் படம் தயாராகிறது…’’ என்று சொல்லியிருக்கிறார்.
முன்னதாக விஜய்யின் 66-வது படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு செய்து தருவதாக விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். இதற்காக தேனாண்டாள் பிலிம்ஸும் தயாராகிக் கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் திடீரென்று இடையில் நுழைந்த தெலுங்கு தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ தனக்கு ஒரு படம் செய்து தரும்படி விஜய்யிடம் கேட்க.. பெரிய தயாரிப்பாளர்.. நினைத்த நேரத்தில் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளும் சக்தி படைத்தவர்.. பணப் பிரச்சினை வரவே வராது என்றெல்லாம் கணக்குப் போட்ட விஜய், இதற்குத் தலையாட்டிவிட்டார்.
மேலும் விஜய்யின் தெலுங்கு மார்க்கெட்டும் அங்கேயுள்ள தெலுங்கு நடிகர்களுக்கு சமமாகவே இருந்து வருகிறது. இதனால் நேரடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்தால்தான் என்ன என்ற எண்ணம் விஜய்க்கு ரொம்ப வருடங்களாகவே இருந்து வருகிறது. இந்த நேரத்தில் தானாகவே கிடைத்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்பதால்தான் இந்த பிராஜெக்ட்டுக்கு விஜய் ஒத்துக் கொண்டதாகத் தகவல்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தான் மேலே எழும்புவதற்கு தற்போதைக்கு விஜய்யை மட்டுமே நம்பியிருப்பதால் இன்னும் கொஞ்ச மாதங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும். ஒருவேளை விஜய் தனது 67-வது திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸுக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம்..!