பழம்பெரும் கதாசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான கலைஞானம் தயாரித்த திரைப்படங்களில் ஒன்று ‘இளம் ஜோடிகள்’.
இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது இந்தப் படத்தில் ஒரு நாயகியாக நடிக்க வந்தவர் விஜயசாந்தி.
அவர் எப்படி இந்தப் படத்தில் ஒப்பந்தமானார் என்ற கதையை கலைஞானம் இப்போது சொல்லியிருக்கிறார்.
இது பற்றி கலைஞானம் பேசும்போது, “இளம் ஜோடிகள்’ படத்தில் ராதாவும், கார்த்திக்கும் ஒரு ஜோடியாக ஒப்பந்தமான பின்பு இன்னொரு ஜோடியை புக் செய்ய வேண்டியிருந்தது.
அப்போது என்னைப் பார்க்க நளினி தன் தாயுடன் வந்தார். நளினியிடம் இருந்த சிறப்பு என்னவெனில் அவர் சிரித்தால் கன்னத்தில் குழி விழும். அது அழகாக இருந்தது. இந்த அழகுக்காகவே நளினியையே இந்தப் படத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து நாளைக்கு வாங்க. அக்ரிமெண்ட் போட்டு அட்வான்ஸ் பணம் தர்றேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
அவர்கள் தலை மறைவதற்குள் விஜயசாந்தியின் அப்பா சீனிவாசன் விஜயசாந்தியுடன் என் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் என்னுடைய நீண்ட நாள் நண்பர். ஆனால், விஜயசாந்தியை அப்போதுதான் நான் முதல்முறையாகப் பார்க்கிறேன்.
என்னப்பா என்றேன் சீனிவாசனிடம். “இவதான் என் பொண்ணு விஜயசாந்தி. கல்லுக்குள் ஈரம் படத்துக்கப்புறம் நாலு வருஷமா படமே இல்லை. நீதான் இந்தப் படத்துல இவ நடிக்க சான்ஸ் தரணும்..” என்றார்.
“அட.. நேத்தே வந்திருக்கக் கூடாதா.. இப்பத்தான் நளினின்ற பொண்ணை புக் பண்ணி அனுப்பினேன்..” என்றேன்.
உடனேயே என் கையைப் பிடித்து வீட்டுக்குள் உள்ளே அழைத்து வந்த சீனிவாசன் என் கைகளைப் பிடித்தபடியே கண்ணீர் விட்டு அழுதார்.
“இந்தப் பிள்ளை அந்த வீட்ல இருக்கிறதே எனக்குப் பெரிய பயமா இருக்கு. அங்க நிறைய தப்பெல்லாம் நடக்குது. அது எனக்கு சரியாப் படலை. இந்தப் பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போயிரும்ன்னு நினைக்கிறேன். நீதான் எப்படியாவது என் பொண்ணுக்கு ஒரு வாழ்க்கைக் கொடுக்கணும்ன்னு..” கண்ணீர் விட்டு அழுதார்.
என்னால அதைத் தட்ட முடியலை. அதுனால நளினியை நடிக்க வைக்க இருந்த முடிவை மாத்திக்கிட்டு விஜயசாந்தியை அந்தப் படத்துல நடிக்க வைச்சேன்.
அந்தப் படத்தில் நடித்த கார்த்திக், ராதா, சுரேஷ், விஜயசாந்தி இந்த நால்வருக்குமே இந்த ‘இளம் ஜோடிகள்’ திரைப்படம்தான் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது..” என்றார் கலைஞானம்.