‘மரப்பாச்சி’, ‘ஆண்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை தயாரித்த ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில், ‘வந்தியத்தேவன் மீது PCR வழக்கு’, ‘அக்னி பாதை’ என்ற இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது.
இதில், ‘வந்தியத்தேவன் மீது பி.சி.ஆர். வழக்கு’ படத்தை ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தை இயக்கிய ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார். மற்றொரு படமான ‘அக்னி பாதை’ படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் இயக்குகிறார்.
‘வந்தியத்தேவன் மீது பி.சி.ஆர். வழக்கு’ படத்தின் கதை, வசனத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் எழுதுவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். மற்றைய நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு – அருள், இசை – பாலபரணி, படத் தொகுப்பு – B.S.வாசு, கலை இயக்கம் – ஜனா, பத்திரிகை தொடர்பு – புவன்.
‘வந்தியத்தேவன் மீது பி.சி.ஆர். வழக்கு’ படம் பற்றி அப்படத்தின் இயக்குநரான ராஜ கிருஷ்ணா பேசும்போது, “கடந்த ஆட்சியில் ஒரு கல்வியாளன் ஒரு அரசியல்வாதியால் பந்தாடப்பட்ட உண்மை சம்பவம்தான் இது. உலகில் கல்வி என்பது ஒருவனுக்கு கிடைத்துவிட்டால் அது அவனது ஏழு தலைமுறையை காக்கும். ஆனால், அந்தக் கல்வியை காசுக்கு விற்கும் அரசியல்வாதிகள், கல்வியாளனாக மாறி நடத்தும் அநியாயங்கள் பற்றிய உண்மை சம்பவம்தான் இந்தப் படம்…” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 26-ம் தேதி தொடங்கி, ஒரே கட்ட படப்பிடிப்பில் முடித்து ஜனவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் ‘அக்னி பாதை’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.