நாட்டாண்மை உட்பட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்டுத்தியவர் சரத்குமார். ஆனால் அவரையே ஒரு நடிகை, ‘நடிக்கவே தெரியவில்லையே’ என திட்டிய சம்பவமும் நடந்துள்ளது.
இதை அவரே சொல்லி இருக்கிறார்.
அவர், “1986 ஆம் ஆண்டு எனது நண்பர் ஒருவர் தெலுங்கில் “சமஜம்லோ ஸ்திரீ” என்ற திரைப்படத்தை தயாரித்து வந்தார். இதில் சுமன், விஜயசாந்தி ஆகியோருடன் நானும் நடித்தேன். ஆனால் அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது.
என்னுடன் விஜயசாந்தி நடிக்கும் ஒரு காட்சி. என்னால் சரளமாக தெலுங்கு பேசி நடிக்க முடியவில்லை. நான்கைந்து டேக்குகள் ஆகிவிட்டன. இதனால் டென்சன் ஆன விஜயசாந்தி, இயக்குநரிடம், ‘என்ன சார், நடிக்கத் தெரியாத ஆட்களை வச்சுகிட்டு டார்ச்சர் பண்றீங்களே’ என ஆத்திரத்துடன் கேட்டார். எனக்கு அவமானமாக இருந்தது.
பிறகு பல வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது நான், ‘ஒருமுறை நீங்கள் திட்டினீர்களே. நினைவிருக்கிறதா?” என கேட்டேன். அவருக்கு நினைவில் இல்லை.
பிறகு நான் அந்த சம்பவத்தைச் சொன்னேன்.
அவர், ‘அய்யோ, அது நீங்கதானா? அன்றைக்கு நான் வேறு ஒரு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய சூழல். அதான் சென்சனில் அப்படி நடந்து கொண்டேன். ஸாரி..’ என்றார்.
நான், ‘பரவாயில்ல.. உங்கள் நிலையில் நான் இருந்தாலும் டென்சன் ஆகித்தான் இருப்பேன்’ என்று சமாதானப்படுத்தினேன்” என மலரும் நினைவை பகிர்ந்துகொண்டார் சரத்.