The post சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..! appeared first on Touring Talkies.
]]>அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல உதவி இயக்குநர்கள் அவரிடமிருந்து விலகி தனியாக படத்தை இயக்கி வந்த சூழ்நிலையில் என்னிடம் ஒரு நாள், “என்னுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறாயா..?” என்று கேட்டார் பாரதிராஜா.
அப்போது நான் ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே ஒரு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தேன். அது தவிர ஏராளமான படங்களுக்கு பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதற்காக பல இளைஞர்கள் கியூவில் காத்துக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் அவரே என்னை உதவி இயக்குநராக சேரும்படி அழைக்கிறார் என்றால் அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று முடிவு செய்து உடனடியாக அவருடன் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் அடையாளம் தந்த ஒரு படமாக அமைந்தது. கார்த்திக், ராதா, தியாகராஜன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமான அந்த படத்தில்தான் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பாளர் ஆக அறிமுகமானார்.
நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படமும் இதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான்.
இந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் கதாநாயகியாக ராதா தேர்வானதும் கதாநாயகனாக நடிப்பதற்கும் அந்தப் படத்திலே மிக முக்கிய வேடமாக அமைந்திருந்த கதாநாயகி மேரியின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கும் நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.
பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் அப்போது பாலிடார் என்ற இசைக் கம்பெனியின் சென்னைப் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆகவே இளையராஜா, கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர் ஆகியோரோடு அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது.
ஒரு நாள் பாஸ்கரோடு அவர் பாரதிராஜாவைப் பார்க்கப் போனபோது அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. “என்ன அவரையே பார்த்துக்கிட்டிருக்கே. அவரை படத்தில நடிக்க வைக்கப் போறியா..?” என்று இளையராஜாவின் அண்ணனும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான பாஸ்கர் கேட்க “அதைத்தான் யோசிக்கிறேன். மேரியின் அண்ணனாக இவரை நடிக்க வைத்தால் எப்படியிருக்கும்…?” என்றார் பாரதிராஜா. அப்படி சொன்னதையே செய்தார் பாரதிராஜா. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தியாகராஜனே தேர்வானார்.
அடுத்து கதாநாயகனுக்கான வேட்டை தொடங்கியது. பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரை என்று பல இடங்களில் தேடியும் அந்தக் கதைக்கேற்ற நாயகன் கிடைக்கவில்லை.
படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்தார் பாரதிராஜா.
அதையடுத்த இரண்டு நாட்களில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்தப் பள்ளிக்கு என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த பையனைக் காட்டினார் அவர். என்ன காரணத்தாலோ… என் மனதுக்கு அந்தப் பையன் ‘அலைகள் ஓய்வதில்லை’யின் விச்சுவின் பாத்திரத்திற்கு சரியாக இருப்பான் எனத் தோன்றவில்லை.
அதை நான் இயக்குநரிடம் சொன்னபோது, “ஷூட்டிங் எல்லாம் நிச்சயமாகி விட்டது. பரவாயில்லை விடு. இவனே இருக்கட்டும்…” என்றார்.
“இவ்வளவு நாள் பொறுத்துவிட்டோம். இன்று ஒரு நாள் மீண்டும் தேடிப் பார்ப்போம். பையன் சரியாக அமையவில்லை என்றால்… நாளை இவனையே கதாநாயகனாக முடிவு செய்துகொண்டு படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம்…” என்றேன் நான்.
ஒரு வருடம் ஓடிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் முழுக்க, முழுக்க புதுமுகங்களை நடிக்க வைத்து சாதனை புரிந்த பாரதிராஜா பெருந்தன்மையோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டார். அதுதான் அவரிடமுள்ள தனிக் குணம். சாதாரணமாக எல்லா இயக்குநர்களிடமும் பார்க்க முடியாத பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரர் அவர்.
மீண்டும் கதாநாயகன் வேட்டை தொடங்கியது. இந்த முறை எங்களுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தின் தயாரிப்பாளரான ஆர்.சி.பிரகாஷும் சேர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடி அலைந்து விட்டு மாலையில் எழும்பூரில் அமைந்துள்ள ஹாசன் மெமோரியல் பள்ளியின் வாசலுக்கு சென்ற நாங்கள் மூவரும் வகுப்புகள் விட்டு வெளியே வரும் மாணவர்களில் யாராவது தேறுவார்களா என்று பார்த்தோம். ஆனால், அதிலும் யாரும் தேறவில்லை.
பின்னர் காபி சாப்பிடுவதற்காக மூவரும் அட்லாண்டிக் ஹோட்டலுக்குப் போனபோது காரை ஓட்டியவர் பாரதிராஜா. அவர் அப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தார். அட்லாண்டிக் ஓட்டல் அருகே போனபோது சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஒரு பையன் மீது காரை மோதி விட்டார் பாரதிராஜா.
போயஸ் தோட்டத்தில் தன் வீட்டுக்கு அருகே தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருப்பதாக ஆர்.சி.பிரகாஷ் கூறவே அந்தப் பையனுக்கு முதலுதவி செய்வதற்காக அந்த டாக்டரின் இல்லத்துக்கு சென்றோம்.
அந்த டாக்டரின் வீடு கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ளது. சிகிச்சை முடிந்து அந்த பையனை அட்லாண்டிக் ஹோட்டல் அருகே இறக்குவதற்காக நாங்கள் காரில் சென்றபோது கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள நடிகர் முத்துராமனின் வீட்டுக்கு பக்கத்தில் நண்பர்களுடன் பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தார் பின்னாளில் ‘கார்த்திக்’ என்ற பெயரில் அறிமுகமான ‘முரளி’.
கார் அந்தப் பக்கம் சென்ற கண நேரத்தில் அவரைப் பார்த்த பாரதிராஜாவின் கண்களுக்கு… அந்த முரளிக்கு உள்ளே இருந்த நடிகன் எப்படித்தான் தெரிந்தானோ..? காரை கொஞ்சம் பின்னால் ஓட்டச் சொன்னார் “யார் அந்தப் பையன்?” என்று என்னிடம் கேட்டார்.
முத்துராமன் எனது நெருங்கிய நண்பர் என்பதால் முரளியை ஏற்கனவே எனக்குத் தெரியும். ஆகவே, “அது நடிகர் முத்துராமனின் மகன்” என்று அவருக்கு சொன்னேன். பின்னர் அந்த பையனை அழைக்கச் சொன்னார். நான் முரளியை அழைத்துப் பேசிக் கொண்டிருக்க… அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த முரளியின் முக பாவங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு “அப்பா வீட்டில் இருக்கிறாரா…?” என்று பாரதிராஜா முரளியிடம் கேட்டபோதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் முரளிதான் என்று எனக்குப் புரிந்துவிட்டது.
அப்பா சினிமாவிற்குப் போயிருப்பதாக முரளி சொன்னவுடன் ஆர்.சி.பிரகாஷ் வீட்டு டெலிபோன் நம்பரை எழுதி முரளியிடம் கொடுத்து முத்துராமன் வந்தவுடன் அந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
ஆர்.சி.பிரகாஷ் வீடு, கஸ்தூரி ரங்கன் சாலைக்கு மிக அருகில் போயஸ் தோட்டத்தில் அமைந்திருந்ததால் அவரது வீட்டில் முத்துராமனின் டெலிபோன் அழைப்பிற்காக காத்திருந்தோம். “மிகவும் வித்தியாசமான முகம். அது மட்டும் இல்லாமல் பையன் துருதுருவென்று இருக்கிறான். ‘அலைகள் ஓய்வதில்லை’ கதையின் நாயகன் விச்சுவிற்கு இவன் மிக பொருத்தமாக இருப்பான்…” என்றார் பாரதிராஜா.
இரவு பத்து மணியளவில் முத்துராமனிடமிருந்து போன் வந்தது. உடனேயே எங்களை வரச் சொன்னார். அவரது வீட்டுக்கு நாங்கள் சென்றவுடன் வழக்கம்போல உற்சாகமாக எங்களை வரவேற்றார் முத்துராமன். “முரளியை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்று அவரிடம் பாரதிராஜா சொன்னபோது முதலில் அவரால் அதை நம்பவே முடியவில்லை. “இவனையா” என்று திரும்பத் திரும்பக் கேட்டார் என்றாலும் பாரதிராஜா தனது மகனைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.
பின்னர் முரளியின் பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டையும் பாரதிராஜாவோடு பகிர்ந்து கொண்ட முத்துராமனும் அவரது மனைவியும் “பையனை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டோம். இனி அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு” என்று சொல்ல “இனி அவனைப் பற்றிய கவலையை நீங்கள் விட்டு விடுங்கள். அவனை ஹீரோவாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார் பாரதிராஜா.
படத்தில் நடிப்பதற்கு முரளி தனது தந்தையிடம் விதித்த ஒரே நிபந்தனை அவர் படப்பிடிப்பைப் பார்க்க வரக்கூடாது என்பது மட்டுமே. அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டார் முத்துராமன்.
‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தனது மனைவியுடன் நாகர்கோவிலுக்கு வந்த அவர் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு வரவேயில்லை. ஹோட்டலிலேயே ஒரு நாள் மகனுடன் தங்கிவிட்டு சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்.
கதாநாயகனாக முரளி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடுத்த நாள் காலையில் படப்பிடிப்பு ஏற்பாடுகளுக்காக பாரதிராஜா புறப்பட்டுவிட அதற்கு அடுத்த நாள் காலையில் நானும், முரளியும் விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டோம்.
நாகர்கோவிலுக்கு சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முட்டம் என்னும் கடற்கரை கிராமத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
பாரதிராஜாவால் ‘கார்த்திக்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருந்த முரளியை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் விச்சுவாக கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தார் பாரதிராஜா.
(தொடரும்)
The post சினிமா வரலாறு-31 கார் மோதியதால் கதாநாயகனான கார்த்திக்..! appeared first on Touring Talkies.
]]>The post “பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்.. appeared first on Touring Talkies.
]]>இந்த வாரம் அவர் பேசியபோது ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த அனுபவம் பற்றிப் பேசியிருக்கிறார்.
“மண்வாசனை’ திரைப்படத்தை முடித்து வெளியிட்டபோது அது நான் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. சென்னையில் அத்திரைப்படம் 250 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை படைத்தது.
இந்த நேரத்தில் எனக்கு மும்பையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அப்போது ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்த ராஜேந்திர குமார் என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.
அவர் சென்னைக்கு வந்தபோது சோழா ஓட்டலில் தங்கியிருந்தார். நானும் அங்கே சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர் தனக்காக ஹிந்தியில் ஒரு திரைப்படத்தை இயக்கித் தரும்படி கேட்டார். ஏற்கெனவே ‘16 வயதினிலே’ படத்தை ஹிந்தியில் இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு என்றாலும், ஹிந்தியில் அத்திரைப்படம் சரியாகப் போகவில்லை என்ற வருத்தமும் இருந்தது.
சரி.. இ்ப்போது ஒரு வாய்ப்பு வருகிறது.. பயன்படுத்திப் பார்ப்போம் என்று நினைத்து அதற்கு ஒத்துக் கொண்டேன். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தையே ஹிந்தியில் படமாக்க எண்ணினேன். இந்தப் படத்தில் தனது மகன் குமார் கவுரவ்வை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென ராஜேந்திரகுமார் கேட்டுக் கொண்டார்.
அப்போதே.. அங்கேயே.. ஒரு பெரிய தொகையை.. அதுவரையிலும் நான் யாரிடமும் வாங்காத.. நினைத்துக் கூடப் பார்க்காத தொகையை எனக்குச் சம்பளமாகக் கொடுத்தார். அதுவே எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இந்தப் படத்தை நான் ஒத்துக் கொண்டேன். படத்திற்கு ‘லவ்வர்ஸ்’ என்று பெயர் வைத்தேன். நாயகியாக பத்மினி கோலாப்பூரியை ஒப்பந்தம் செய்தோம். தமிழில் தியாகராஜன் செய்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் டேனி செய்தார். சில்க் ஸ்மிதா செய்த கதாபாத்திரத்தில் நடிகை கஜோலின் அம்மாவான தனுஜா நடித்தார்.
அப்போது பத்மினி பல படங்களில் நடித்து உச்சத்தில் இருந்த நேரம். அவருடைய கால்ஷீட் கிடைப்பதே கஷ்டமான சூழலாக இருந்தது. அந்தம்மாவின் கால்ஷீட்டுக்கு ஏற்றவாறு மற்றவர்களின் கால்ஷீட்டை பெற்று அதற்கேற்றவாறு ஷூட்டிங் ஷெட்யூலை ஏற்பாடு செய்தோம்.
ஷூட்டிங் முதல் கட்டமாக கோவாவிலும், மும்பையிலும் நடப்பதாக திட்டமிட்டிருந்தோம். அப்போதெல்லாம் அதிகமாக விமானங்கள் இல்லாததால் சென்னையில் இருந்து கோவாவுக்கு செல்வதற்கே சிரமமமாக இருந்தது. சென்னையில் இருந்து முதலில் பெங்களூருக்கு சென்று.. பின்பு அங்கேயிருந்து கோவாவுக்கு வேறொரு விமானத்தில் செல்ல வேண்டும்.
பலவித பிரச்சினைகள் இருந்ததால் பெங்களூரில் இருந்து காரிலேயே கோவாவுக்கு பயணமானோம். அங்கே நல்ல லொகோஷன்களில் பாடல் காட்சியை படமாக்கினோம். எனக்கு முழுமையான திருப்தியை அது தரவில்லை. மேற்கொண்டு பல காட்சிகளை எனது முட்டம் கடற்கரைக்கு வந்து எடுத்தோம்.
ராஜேந்திர குமார் பல நேரங்களில் நிறைய திருத்தங்கள் சொல்வார். அவர்தான் தயாரிப்பாளர். அவருடைய மகன்தான் ஹீரோ என்பதால் நானும் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு சரியென்று பட்டால் செய்வேன்.
முட்டத்திலும் அப்படித்தான் ஒரு நாள் அதிகாலை சூரிய உதயத்தின்போது சில காட்சிகளை வைத்திருந்தேன். அப்போது ராஜேந்திர குமார் என்னருகில் வந்து சில திருத்தங்களைச் சொன்னார். அப்படி செய்யணும்.. இப்படி செய்யணும் என்று ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்தார்.
எனக்கு முட்டம் பகுதி இன்னொரு வீடு மாதிரி. அங்கேயிருந்தவர்களெல்லாம் என்னுடைய உறவினர்களை போல. அனைவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். அவர்களெல்லாம் அன்றைக்கு ஷூட்டிங் பார்க்க வந்து நின்று கொண்டிருந்தார்கள்.
ராஜேந்திரகுமார் என்னிடத்தில் பேசப் பேச.. அவர் ஏதோ என்னிடத்தில் சண்டை போடுவதாக நினைத்து வேகமாக எங்களை வந்து சூழ்ந்து கொண்டார்கள். ‘என்ன விஷயம்.. என்ன சொல்றாரு இவரு.. என்ன பிரச்சினை ஸார்..?’ என்று அவரை மிரட்ட ஆரம்பித்தார்கள்.
நானும் பதறிப் போய்.. ‘ஐயா.. இவர்தான் தயாரிப்பாளர்.. ச்சும்மா சாதாரணமா பேசிக்கிட்டிருக்கோம்.. பிரச்சினை ஒண்ணும் இல்ல..’ என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன்.
அந்தப் படத்திற்கான பேட்ச் ஒர்க்கை மும்பையில் முடித்தேன். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் ஆர்.டி.பர்மன். வயதான நிலையிலும் ஒரு சுறுசுறுப்பான இளைஞரை போல அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வலம் வந்து கொண்டிருந்தார். திடீரென்று அப்படியே நடந்து போய் ஒரு சுவற்றில் ஏறி ரவுண்ட் அடித்து இறங்குவார். அப்படியொரு இளைஞராகத் திகழ்ந்தவர் ஆர்.டி.பர்மன். இந்தப் படத்திற்கு ஹிந்தியில் அழகான பாடல்களைப் போட்டுக் கொடுத்திருந்தார்.
இந்தப் படம் வெளியானபோது என்ன காரணம்ன்னு தெரியலை.. ஏதோ ஒண்ணு.. ஓஹோ என்று போகவில்லையென்றாலும், சுமாரான வெற்றியைத்தான் பெற்றது…” என்று சொல்லியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.
The post “பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்த ஹிந்தி தயாரிப்பாளர்” – இயக்குநர் பாரதிராஜாவின் அனுபவம்.. appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>அந்தப் படத்தின் கதைக் கருவைவிட அந்தப் படத்தின் இறுதிக் கட்டக் காட்சியை பாரதிராஜா கையாண்டிருந்தவிதம்தான் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர், கலைஞர் கருணாநிதி உட்பட பல அறிஞர் பெருமக்கள் அந்தப் படத்தைப் பாராட்டக் காரணமாக அமைந்தது.
அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு அரை மணி நேரத்துக்கும் மேலாக பாரதிராஜாவைப் பாராட்டிய ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்., ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளையும், தொழில் நுணுக்கக் கலைஞர்களையும் பாராட்டுவதற்காக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கத்திலே ஒரு விழாவினை எடுத்தார்.
அந்த விழாவிலே அந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் தனது ராசிக் கரங்களால் வெள்ளிக் கேடயங்கள் வழங்கினார் அவர்.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டப்பட்ட ஒரே திரைப்படம் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ மட்டுமே.
இப்படி மிகச் சிறந்த பாராட்டுக்களை அவருக்குப் பெற்றுத் தந்த அந்தப் படத்தை உருவாக்கும்போது பாரதிராஜா சந்தித்த விமர்சனங்கள் ஏராளம்.
அதற்குக் கரணம் என்ன…?
‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ என தொடர்ந்து ஐந்து வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர் பாரதிராஜா. அவருக்கு முன்பாக தொடர்ந்து அத்தனை வெற்றிப் படங்களை தமிழ்த் திரையுலகத்தில் எவரும் கொடுத்தது இல்லை.
அந்தத் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு பாரதிராஜாவுடன் அவரது முதல் படத்திலிருந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளரான நிவாசின் இயக்கத்திலே ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் ஒரு இயக்குநரின் கதாப்பாத்திரத்தில் நடித்தார் அவர். ஒரு கால கட்டத்தில் தெலுங்குப் பட உலகில் கோடி கட்டிப் பறந்த விஜயசாந்தியும், தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்த அருணாவும் அந்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்கள்தான். அந்தப் படம் வெற்றிப் படமாக அமையவில்லை.
அப்படத்தைத் தொடர்ந்து அவர் தனது சொந்தப் பட நிறுவனமான மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில்தான் மணிவண்ணனை கதை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார். ‘கல்லுக்குள் ஈரம்’ படத்துக்குப் பிறகு பாரதிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் நிவாஸ் பணியாற்றவில்லை.
‘எனது கண்கள்’ என்று இன்றுவரை பாரதிராஜா போற்றிக் கொண்டாடுகின்ற ஒலிப்பதிவுக் கலைஞரான பி.கண்ணன் அந்தப் படத்தில்தான் பாரதிராஜவோடு முதன்முதலாக இணைந்தார்.
‘16 வயதினிலே’ படம் முதல் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியர் பாக்யராஜ் ‘புதிய வார்ப்புகள்’ படம் முடிந்தவுடன் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருந்ததால் அவரும் ‘நிழல்கள்’ படத்தில் பணியாற்றவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிவாஸ், பாக்யராஜ் ஆகிய இருவருடைய பங்களிப்பும் இல்லாமல் வெளிவந்த ‘நிழல்கள்’ படம் பாராட்டுக்களைப் பெற்ற அளவிற்கு வசூலைப் பெறவில்லை.
பாரதிராஜாவின் தொடர் வெற்றிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் பாரதிராஜாவின் வெற்றிகளுக்குக் காரணமே நிவாசும், பாக்கியராஜூம்தான் என்றும் அவர்கள் இல்லாததால்தான் ‘நிழல்கள்’ படத்தை பாரதிராஜாவால் வெற்றிப் படமாக தர முடியவில்லை என்றும் ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.
அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்கின்றவிதமாக தனது அடுத்த படத்தைத் தரவேண்டிய கட்டாயத்திலிருந்தபோது பாரதிராஜா இயக்கிய படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை.’
பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான நாளிருந்தே தங்களுக்காக ஒரு படத்தை இயக்கித் தரும்படி இளையராவின் மூத்த சகோதரரான பாஸ்கர் கேட்டுக் கொண்டேயிருந்ததால், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை பாஸ்கரின் ‘பாவலர் பிரதர்ஸ்’ நிறுவனத்திற்காக இயக்க முடிவு செய்தார் பாரதிராஜா.
மணிவண்ணன் கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் கதை ஒரு இஸ்லாமியப் பெண்ணை, பிராமண இளைஞன் ஒருவன் காதலிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்திதான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அந்தப் படத்திலே இடம் பெற்ற ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே’ என்று தொடங்கும் பாடலின் பல்லவியில்கூட ‘இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை..’ என்று எழுதியிருந்தார் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து.
பின்னர் இஸ்லாமிய சமூகத்திலிருந்து எதிர்ப்புகள் எழுமோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் படத்தின் நாயகி பாத்திரம் மேரி என்ற கிருஸ்துவப் பெண்ணின் பாத்திரமாக மாற்றி அமைக்கப்பட்டது.
தனது இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் புதுமுகங்களை அறிமுகம் செய்தது போல ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தார் பாரதிராஜா.
புதுமுகத் தேர்வில் அவர் இருந்தபோது அவரைப் பார்க்க தனது தாயாரான சரசம்மாவோடு வந்தார் அம்பிகா. அப்போதே அம்பிகா நடித்து சில படங்கள் வெளிவந்திருந்ததால் அந்தப் படத்தில் அவரைப் பயன்படுத்த முடியாத நிலையில் “உனக்கு வேறு சகோதரிகள் இருக்கிறார்களா…?” என்று பாரதிராஜா அவரைப் பார்த்து கேட்டபோது, தனது கைப் பையிலிருந்து தங்கைகள் மல்லிகா, சந்திரிகா ஆகியோருடன் தானும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து நீட்டினார் அம்பிகா.
அதில் இருந்த சந்திரிகாவின் புகைப்படத்தை ஊடுருவிப் பார்த்த பாரதிராஜாவின் காமிரா கண்களுக்கு இந்தப் படத்திற்குக் கதாநாயகி ஆவதற்கு அவர்தான் சரியானவர் என்று அப்போதே தோன்றியிருக்க வேண்டும்.
அடுத்து “இந்தப் பெண் இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறாள்…?” என்று அம்பிகாவின் தாயாரிடம் பாரதிராஜா கேட்க, பத்தாவது படித்துக் கொண்டிருப்பதாக அவர் பதில் சொன்னார்.
அப்போது திருவனந்தபுரத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த கல்லரா என்ற கிராமத்தில்தான் தங்கி படித்துக் கொண்டிருந்தார் சந்திரிகா. அடுத்த வாரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் திருவனந்தபுரம் வர இருப்பதாகவும் அப்போது கல்லராவிற்கு வந்து சந்திரிகாவை நேரில் பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்றும் கூறினார் பாரதிராஜா.
அவர் கல்லரா செல்வதற்கு முன்னாலேயே தனது மகள் சந்திரிகாவிடம் ‘ஒரு பெரிய டைரக்டர் உன்னைப் பார்க்க கல்லரா வரப் போகிறார்’ என்ற செய்தியை சொல்லியிருந்தார் சரசம்மா. ஆனால் அப்போது சந்திரிகாவிற்கு நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை என்பதால் அவர் அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
சொன்னபடி ஒரு வாரம் சென்றவுடன் தனது ஒளிப்பதிவாளரான பி.கண்ணனுடன் கல்லராவுக்கு பாரதிராஜா சென்றபோது மாலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது. அந்த நேரத்தில் அங்கே கரண்ட் கட்டாகிவிடவே மெழுகுவர்த்தியின் விளக்கு வெளிச்சத்தில்தான் பாரதிராஜாவால் சந்திரிகாவைப் பார்க்க முடிந்தது.
அப்போது அவரது நடை, முகபாவம் இவற்றை எல்லாம் சரியாகப் பார்க்க முடியாமல் போனதாலோ என்பதாலோ என்னவோ தனக்கு அந்த வீட்டை சுற்றி காண்பிக்கச் சொன்னார் பாரதிராஜா.
ஒரு மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு பேய்ப் படங்களில் நடப்பது போல சந்திரிகா முன்னால் நடக்க அவரது முக பாவத்தை கூர்ந்து கவனித்தபடி அவருக்கு பின்னாலே சென்று கொண்டிருந்த பாரதிராஜா அந்த வீட்டை விட்டு கிளம்பும்போதே சந்திரிகாதான் நாயகி என்பதை முடிவு செய்துவிட்டார் பாரதிராஜா.
பின்னர் “அடுத்த வாரம் சென்னைக்கு கூட்டி வாருங்கள். மேக்கப் போட்டு கொஞ்சம் ஸ்டில்கள் எடுத்துப் பார்ப்போம்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் பாரதிராஜா.
அப்போது அம்பிகா சென்னையில் ரஞ்சித் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். அந்த ஹோட்டலிலேயே சந்திரிகாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, இளையராஜாவை சந்திக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு பாரதிராஜாவுடன் போனார் சந்திரிகா.
“இவர்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகப் போகும் கதாநாயகி…” என்று இளையராஜாவிடம் பாரதிராஜா சந்திரிகாவை அறிமுகப்படுத்தியதும் “ஓ… இவர்தான் அந்த கப்பக் கிழங்கா..?” என்று கேட்டார் இளையராஜா.
இளையராஜா அப்படிக் கேட்டதும் அவர் என் அப்படி அழைக்கிறார் என்று புரியாமல் முழித்தார் சந்திரிகா. இளையராஜா அப்படி அழைத்ததற்குக் காரணம் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பாட்டு. அந்தப் படத்தின் நாயகன் நாயகியை கேலி செய்யும்விதமாக ‘வாடி என் கப்பக் கிழங்கே…’ என்று தொடங்கும் பாடல், அந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததால்தான் அவரை அப்படி அழைத்தார் இளையராஜா.
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகமான ராதிகாவின் பெயர் ‘ஆர்’ என்று எழுத்தில் தொடங்கும் பெயராக அமைந்ததால்தான் பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ பட நாயகி ‘ரதி’யாகவும் ‘நிழல்கள்’ பட நாயகி ‘ரோகிணி’யாகவும் பெயர் மாற்றம் பெற்றனர். அந்த ‘ஆர்’ வரிசையில் ‘ராதா’ என்று பெயர் சூட்டப்பட்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான ராதா முதல் படத்திலேயே தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னியானார்.
அந்தப் படத்தில்தான் அவருக்கு ஜோடியாக கார்த்திக் அறிமுகமானார் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால், அந்தக் கதாப்பாத்திரத்திற்கு முதலில் தேர்வானவர் கார்த்திக் இல்லை.
அவர் யார் என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்..!
(தொடரும்)
The post சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>