The post சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>அந்தப் படத்தின் கதைக் கருவைவிட அந்தப் படத்தின் இறுதிக் கட்டக் காட்சியை பாரதிராஜா கையாண்டிருந்தவிதம்தான் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர், கலைஞர் கருணாநிதி உட்பட பல அறிஞர் பெருமக்கள் அந்தப் படத்தைப் பாராட்டக் காரணமாக அமைந்தது.
அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு அரை மணி நேரத்துக்கும் மேலாக பாரதிராஜாவைப் பாராட்டிய ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்., ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளையும், தொழில் நுணுக்கக் கலைஞர்களையும் பாராட்டுவதற்காக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைவாணர் அரங்கத்திலே ஒரு விழாவினை எடுத்தார்.
அந்த விழாவிலே அந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் தனது ராசிக் கரங்களால் வெள்ளிக் கேடயங்கள் வழங்கினார் அவர்.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டப்பட்ட ஒரே திரைப்படம் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ மட்டுமே.
இப்படி மிகச் சிறந்த பாராட்டுக்களை அவருக்குப் பெற்றுத் தந்த அந்தப் படத்தை உருவாக்கும்போது பாரதிராஜா சந்தித்த விமர்சனங்கள் ஏராளம்.
அதற்குக் கரணம் என்ன…?
‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ என தொடர்ந்து ஐந்து வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர் பாரதிராஜா. அவருக்கு முன்பாக தொடர்ந்து அத்தனை வெற்றிப் படங்களை தமிழ்த் திரையுலகத்தில் எவரும் கொடுத்தது இல்லை.
அந்தத் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு பாரதிராஜாவுடன் அவரது முதல் படத்திலிருந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளரான நிவாசின் இயக்கத்திலே ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் ஒரு இயக்குநரின் கதாப்பாத்திரத்தில் நடித்தார் அவர். ஒரு கால கட்டத்தில் தெலுங்குப் பட உலகில் கோடி கட்டிப் பறந்த விஜயசாந்தியும், தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்த அருணாவும் அந்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர்கள்தான். அந்தப் படம் வெற்றிப் படமாக அமையவில்லை.
அப்படத்தைத் தொடர்ந்து அவர் தனது சொந்தப் பட நிறுவனமான மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கிய ‘நிழல்கள்’ படத்தில்தான் மணிவண்ணனை கதை வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார். ‘கல்லுக்குள் ஈரம்’ படத்துக்குப் பிறகு பாரதிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் நிவாஸ் பணியாற்றவில்லை.
‘எனது கண்கள்’ என்று இன்றுவரை பாரதிராஜா போற்றிக் கொண்டாடுகின்ற ஒலிப்பதிவுக் கலைஞரான பி.கண்ணன் அந்தப் படத்தில்தான் பாரதிராஜவோடு முதன்முதலாக இணைந்தார்.
‘16 வயதினிலே’ படம் முதல் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியர் பாக்யராஜ் ‘புதிய வார்ப்புகள்’ படம் முடிந்தவுடன் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருந்ததால் அவரும் ‘நிழல்கள்’ படத்தில் பணியாற்றவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிவாஸ், பாக்யராஜ் ஆகிய இருவருடைய பங்களிப்பும் இல்லாமல் வெளிவந்த ‘நிழல்கள்’ படம் பாராட்டுக்களைப் பெற்ற அளவிற்கு வசூலைப் பெறவில்லை.
பாரதிராஜாவின் தொடர் வெற்றிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாத சிலர் பாரதிராஜாவின் வெற்றிகளுக்குக் காரணமே நிவாசும், பாக்கியராஜூம்தான் என்றும் அவர்கள் இல்லாததால்தான் ‘நிழல்கள்’ படத்தை பாரதிராஜாவால் வெற்றிப் படமாக தர முடியவில்லை என்றும் ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள்.
அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்கின்றவிதமாக தனது அடுத்த படத்தைத் தரவேண்டிய கட்டாயத்திலிருந்தபோது பாரதிராஜா இயக்கிய படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை.’
பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான நாளிருந்தே தங்களுக்காக ஒரு படத்தை இயக்கித் தரும்படி இளையராவின் மூத்த சகோதரரான பாஸ்கர் கேட்டுக் கொண்டேயிருந்ததால், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தை பாஸ்கரின் ‘பாவலர் பிரதர்ஸ்’ நிறுவனத்திற்காக இயக்க முடிவு செய்தார் பாரதிராஜா.
மணிவண்ணன் கதை, வசனம் எழுதிய அந்தப் படத்தின் கதை ஒரு இஸ்லாமியப் பெண்ணை, பிராமண இளைஞன் ஒருவன் காதலிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்திதான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் அந்தப் படத்திலே இடம் பெற்ற ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே’ என்று தொடங்கும் பாடலின் பல்லவியில்கூட ‘இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை கோவிலில் காதல் தொழுகை..’ என்று எழுதியிருந்தார் அப்பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து.
பின்னர் இஸ்லாமிய சமூகத்திலிருந்து எதிர்ப்புகள் எழுமோ என்ற சந்தேகத்தில்தான் அந்தப் படத்தின் நாயகி பாத்திரம் மேரி என்ற கிருஸ்துவப் பெண்ணின் பாத்திரமாக மாற்றி அமைக்கப்பட்டது.
தனது இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் எல்லா பாத்திரங்களுக்கும் புதுமுகங்களை அறிமுகம் செய்தது போல ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களை அறிமுகம் செய்வது என்று முடிவெடுத்தார் பாரதிராஜா.
புதுமுகத் தேர்வில் அவர் இருந்தபோது அவரைப் பார்க்க தனது தாயாரான சரசம்மாவோடு வந்தார் அம்பிகா. அப்போதே அம்பிகா நடித்து சில படங்கள் வெளிவந்திருந்ததால் அந்தப் படத்தில் அவரைப் பயன்படுத்த முடியாத நிலையில் “உனக்கு வேறு சகோதரிகள் இருக்கிறார்களா…?” என்று பாரதிராஜா அவரைப் பார்த்து கேட்டபோது, தனது கைப் பையிலிருந்து தங்கைகள் மல்லிகா, சந்திரிகா ஆகியோருடன் தானும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து நீட்டினார் அம்பிகா.
அதில் இருந்த சந்திரிகாவின் புகைப்படத்தை ஊடுருவிப் பார்த்த பாரதிராஜாவின் காமிரா கண்களுக்கு இந்தப் படத்திற்குக் கதாநாயகி ஆவதற்கு அவர்தான் சரியானவர் என்று அப்போதே தோன்றியிருக்க வேண்டும்.
அடுத்து “இந்தப் பெண் இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறாள்…?” என்று அம்பிகாவின் தாயாரிடம் பாரதிராஜா கேட்க, பத்தாவது படித்துக் கொண்டிருப்பதாக அவர் பதில் சொன்னார்.
அப்போது திருவனந்தபுரத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்த கல்லரா என்ற கிராமத்தில்தான் தங்கி படித்துக் கொண்டிருந்தார் சந்திரிகா. அடுத்த வாரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் திருவனந்தபுரம் வர இருப்பதாகவும் அப்போது கல்லராவிற்கு வந்து சந்திரிகாவை நேரில் பார்த்து விட்டு முடிவு செய்யலாம் என்றும் கூறினார் பாரதிராஜா.
அவர் கல்லரா செல்வதற்கு முன்னாலேயே தனது மகள் சந்திரிகாவிடம் ‘ஒரு பெரிய டைரக்டர் உன்னைப் பார்க்க கல்லரா வரப் போகிறார்’ என்ற செய்தியை சொல்லியிருந்தார் சரசம்மா. ஆனால் அப்போது சந்திரிகாவிற்கு நடிப்பதில் பெரிய ஆர்வம் இல்லை என்பதால் அவர் அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
சொன்னபடி ஒரு வாரம் சென்றவுடன் தனது ஒளிப்பதிவாளரான பி.கண்ணனுடன் கல்லராவுக்கு பாரதிராஜா சென்றபோது மாலை ஆறு மணிக்கு மேலாகி விட்டது. அந்த நேரத்தில் அங்கே கரண்ட் கட்டாகிவிடவே மெழுகுவர்த்தியின் விளக்கு வெளிச்சத்தில்தான் பாரதிராஜாவால் சந்திரிகாவைப் பார்க்க முடிந்தது.
அப்போது அவரது நடை, முகபாவம் இவற்றை எல்லாம் சரியாகப் பார்க்க முடியாமல் போனதாலோ என்பதாலோ என்னவோ தனக்கு அந்த வீட்டை சுற்றி காண்பிக்கச் சொன்னார் பாரதிராஜா.
ஒரு மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்துக் கொண்டு பேய்ப் படங்களில் நடப்பது போல சந்திரிகா முன்னால் நடக்க அவரது முக பாவத்தை கூர்ந்து கவனித்தபடி அவருக்கு பின்னாலே சென்று கொண்டிருந்த பாரதிராஜா அந்த வீட்டை விட்டு கிளம்பும்போதே சந்திரிகாதான் நாயகி என்பதை முடிவு செய்துவிட்டார் பாரதிராஜா.
பின்னர் “அடுத்த வாரம் சென்னைக்கு கூட்டி வாருங்கள். மேக்கப் போட்டு கொஞ்சம் ஸ்டில்கள் எடுத்துப் பார்ப்போம்…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் பாரதிராஜா.
அப்போது அம்பிகா சென்னையில் ரஞ்சித் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். அந்த ஹோட்டலிலேயே சந்திரிகாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, இளையராஜாவை சந்திக்க பிரசாத் ஸ்டுடியோவிற்கு பாரதிராஜாவுடன் போனார் சந்திரிகா.
“இவர்தான் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகப் போகும் கதாநாயகி…” என்று இளையராஜாவிடம் பாரதிராஜா சந்திரிகாவை அறிமுகப்படுத்தியதும் “ஓ… இவர்தான் அந்த கப்பக் கிழங்கா..?” என்று கேட்டார் இளையராஜா.
இளையராஜா அப்படிக் கேட்டதும் அவர் என் அப்படி அழைக்கிறார் என்று புரியாமல் முழித்தார் சந்திரிகா. இளையராஜா அப்படி அழைத்ததற்குக் காரணம் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பாட்டு. அந்தப் படத்தின் நாயகன் நாயகியை கேலி செய்யும்விதமாக ‘வாடி என் கப்பக் கிழங்கே…’ என்று தொடங்கும் பாடல், அந்தப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததால்தான் அவரை அப்படி அழைத்தார் இளையராஜா.
‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகமான ராதிகாவின் பெயர் ‘ஆர்’ என்று எழுத்தில் தொடங்கும் பெயராக அமைந்ததால்தான் பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ பட நாயகி ‘ரதி’யாகவும் ‘நிழல்கள்’ பட நாயகி ‘ரோகிணி’யாகவும் பெயர் மாற்றம் பெற்றனர். அந்த ‘ஆர்’ வரிசையில் ‘ராதா’ என்று பெயர் சூட்டப்பட்டு ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான ராதா முதல் படத்திலேயே தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கனவுக் கன்னியானார்.
அந்தப் படத்தில்தான் அவருக்கு ஜோடியாக கார்த்திக் அறிமுகமானார் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால், அந்தக் கதாப்பாத்திரத்திற்கு முதலில் தேர்வானவர் கார்த்திக் இல்லை.
அவர் யார் என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம்..!
(தொடரும்)
The post சினிமா வரலாறு-30 கலைஞரும், புரட்சித் தலைவரும் சேர்ந்து பாராட்டிய பாரதிராஜாவின் திரைப்படம் appeared first on Touring Talkies.
]]>The post சினிமா வரலாறு-12 கலைஞரைக் காதலித்த கவியரசர் கண்ணதாசன்..! appeared first on Touring Talkies.
]]>சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திக் கொண்டிருந்த ‘சண்ட மாருதம்’ என்ற பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றச் சென்றபோதுதான், அந்த நிறுவனத்தோடு கவிஞர் கண்ணதாசனுக்கு முதல் முதலாக தொடர்பு ஏற்பட்டது.
சேலத்திலே தங்கி இருந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்ட ஒரு பொதுக் கூட்டத்திற்குப் போனார் கண்ணதாசன். நாவலர் பேசிய பேச்சு அவரைப் பெரிதும் கவர்ந்தது.
அதற்குப் பிறகு நேரடியாக இல்லை என்றாலும் ஒரு விதத்தில் ‘சண்ட மாருதம்’ பத்திரிகையில் கண்ணதாசன் தனது வேலையை இழப்பதற்கும், பின்னர் அந்தப் பத்திரிகையே மூடப்படுவதற்கும் நெடுஞ்செழியனே காரணமாக அமைந்தார்.
நாவலர் நெடுஞ்செழியன் எழுதி ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்த கட்டுரை கண்ணதாசனை மிகவும் கவர்ந்ததால் அதை ‘சண்ட மாருதம்’ பத்திரிகையில் மறுபிரசுரம் செய்ய விரும்பிய அவர் அச்சுக் கோப்பவரிடம் அந்த கட்டுரையை வெட்டிக் கொடுத்து அச்சு கோர்க்கச் சொன்னார்.
‘சண்ட மாருதம்’ பத்திரிகையின் நிர்வாகியாக இருந்தவருக்கு நாவலரின் அந்த கட்டுரையை ‘சண்ட மாருதம்’ பத்திரிகையில் பிரசுரிப்பதில் உடன்பாடில்லை. ஆகவே அந்தக் கட்டுரையை பிரசுரிக்கக் கூடாது என்றார் அவர். பத்திரிகையின் ஆசிரியராக இருந்த கண்ணதாசனுக்கு தனது உரிமையில் தேவையில்லாமல் அந்த நிர்வாகி மூக்கை நுழைப்பதாகத் தோன்றியது.
ஆகவே, அதற்கு மேலும் அந்த பத்திரிகையில் நீடிக்க விரும்பாத அவர் உடனடியாக ஒரு ராஜினாமா கடித்ததை எழுதி மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளரான டி.ஆர்.சுந்தரத்தின் மேஜை மீது வைத்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகத்தைப் பொருத்தவரைக்கும் யார் ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்தாலும் அவர்களை அழைத்து “ஏன் ராஜினாமா செய்கிறீர்கள்?” என்று கேட்கும் பழக்கமோ அல்லது வெளியே போகிறேன் என்று கூறுபவர்களை சமாதானப்படுத்தி அங்கேயே தொடர்ந்து இருக்கச் செய்யும் பழக்கமோ மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளியான டி.ஆர்.சுந்தரத்துக்கு எப்போதுமே இருந்தததில்லை.
ராஜினாமா கடிதம் தரப்பட்டால் உடனே அதை வாங்கிக் கொண்டு கணக்கைத் தீர்த்து அனுப்பச் சொல்வதுதான் டி.ஆர்.சுந்தரத்தின் வழக்கம். ஆனால், கண்ணதாசன் விஷயத்தில் டி. ஆர்.சுந்தரம் அப்படி நடந்து கொள்ளவில்லை.
என்ன காரணத்தாலோ முதல் சந்திப்பிலேயே கண்ணதாசனை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால்தான் ராஜினாமா கடிதம் கொடுத்த அவரை கணக்குத் தீர்த்து அனுப்பாமல் தன்னை சந்திக்க வரும்படி அவருக்கு சொல்லி அனுப்பினார் அவர்.
கண்ணதாசன் அவரைச் சந்தித்தபோது “போகத்தான் போகிறாயா?” என்று அவர் கேட்டதும் கண்ணதாசனால் “ஆமாம்” என்று உடனே பதில் சொல்ல முடியவில்லை. அவர் மீது டி,ஆர்.சுந்தரம் காட்டிய அன்பும், பாசமும்தான் அப்படி பதில் சொல்லவிடாமல் கண்ணதாசனை கட்டிப் போட்டது. ஒரு விதமான தயக்கத்துடன் மவுனமாக நின்று கொண்டிருந்தார் அவர்,
“உனக்குப் பத்திரிகை வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் விடு. பத்திரிகையை மூடி விடுவோம். நீ நமது சினிமா கதை இலாகாவிலே சேர்ந்துவிடு…” என்றார் டி.ஆர்.எஸ்.
அவர் அப்படி சொன்னதைக் கேட்டதும கண்ணதாசன் அடைந்த நிம்மதிக்கு அளவேயில்லை. மகிழ்ச்சியோடு அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனடியாக ‘சண்ட மாருதம்’ பத்திரிக்கை நிறுத்தப்பட்டது.
கண்ணதாசன் கதை இலாகாவில் சேர்ந்தார். அவரது சம்பளமும் முப்பது ரூபாய் உயர்ந்தது. திரைக்கதைக்கான தொழில் நுணுக்க வார்த்தைகள் பலவற்றை அங்கேதான் கண்ணதாசன் கற்றுக் கொண்டார்.
திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத கண்ணதாசனுக்கு பயிற்சிக் களம் அமைத்துத் தந்த மாடர்ன் தியேட்டர்ஸ்தான். எம்.ஜி.ஆர்., கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.சக்ரபாணி, ஜி.ஆர்.நாதன் என்று பல நண்பர்களை கண்ணதாசனுக்கு பெற்றுத் தந்தது.
அந்த நண்பர்கள் பட்டியலில் கண்ணதாசனுக்கு முதலில் அறிமுகமானவர் எம்.ஜி.சக்ரபாணிதான். அவர் அப்போது மாடர்ன் தியேட்டர்ஸில் மாதச் சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
மாடர்ன் தியேட்டர்சில் நிரந்தர நடிகராக இருந்த எம்.ஜி.சக்ரபாணி அப்போது கோயம்பத்தூர் லாட்ஜ் என்ற உணவு விடுதியில் தங்கியிருந்தார். அவரோடு இரவு வெகு நேரம்வரை பேசிக் கொண்டிருப்பது கண்ணதாசனின் வழக்கம். அப்படி அவரோடு பேசிக் கொண்டிருந்தபோதுதான் கருணாநிதி என்ற பெயர் கண்ணதாசனுக்கு அறிமுகமாயிற்று. கருணாநிதியின் வசனம் எழுதும் ஆற்றல் பற்றி அடிக்கடி கண்ணதாசனிடம் சொல்வார் சக்ரபாணி.
கருணாநிதி வசனம் எழுதிய ‘அபிமன்யு’ படம் சேலத்திலே உள்ள அம்பிகா தியேட்டரில் வெளியானபோது அந்தப் படத்தைப் பார்க்க கண்ணதாசனை அழைத்துச் சென்றவர் சக்கரபாணிதான்.
அந்தப் படத்தில் கலைஞர் கருணாநிதி எழுதியிருந்த வசனங்களைக் கேட்டு மிரண்டு போனார் கண்ணதாசன். “அப்படி ஒரு சொல்லாட்சியை அதுவரை எந்தத் திரைப்படத்திலும் தான் கண்டதில்லை” என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்’
‘ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்’
‘அண்ணன் செய்த முடிவை கண்ணன் மாற்றுவதற்கில்லை’
‘அர்ச்சுனனால் கூடத் துளைக்க முடியாத சக்ர வியூகத்தை அபிமன்யூ துளைத்து விட்டானென்றால் அங்கேதானிருக்கிறது ஆச்சாரியரின் விபீஷண வேலை’
போன்ற அந்த படத்தின் வசனங்கள் கண்ணதாசனின் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தன.
தொடர்ந்து ஆறு நாட்கள் அந்தப் படத்தைப் பார்த்தார் கண்ணதாசன். அதற்கு முன்னரும் சரி.. பின்னரும் சரி.. கண்ணதாசன் அப்படி எந்தத் திரைப்படத்தையும் திரும்பத் திரும்ப பார்த்ததேயில்லை.
கருணாநிதியின் வசனங்கள் மீது அவருக்கு ஏற்பட்ட காதல் காரணமாக நாளடைவில் ‘கருணாநிதி’ என்ற பெயரையே காதலிக்கத் தொடங்கினார் கண்ணதாசன். அதைத் தொடர்ந்து கருணாநிதியை எப்படியாவது சந்திக்க வேண்டும், அவரோடு பேச வேண்டும் என்ற ஆவல் அவருக்குப் பிறந்தது.
அவருடைய அந்த ஆசை நிறைவேறுகின்ற சூழல் ‘மந்திரி குமாரி’ நாடகம் மூலம் வந்தது.
‘குண்டலகேசி’ காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு ‘மந்திரி குமாரி’ என்ற நாடகத்தை எழுதினார் கலைஞர். கும்பகோணத்திலே அரங்கேற்றப்பட்ட அந்த நாடகம் ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல நாட்கள் கும்பகோணத்தில் நடத்தப்பட்ட அந்த நாடகத்தைப் பற்றி கவிஞர் கா.மு.செரீப், மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர்.சுந்தரத்திடம் கூற டி.ஆர்.சுந்தரம், இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் ஆகிய இருவரும் கும்பகோணம் சென்று அந்த நாடகத்தைப் பார்த்தனர். நாடகம் அவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது.
அதைத் தொடர்ந்து கலைஞரை சந்தித்து அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமைகளை வாங்கி வருவதற்காக கா.மு.செரீப்பை திருவாரூருக்கு அனுப்பி வைத்தார் டி. ஆர். எஸ்.
மாடர்ன் தியேட்டர்ஸில் பணியாற்ற வந்த கலைஞரை கோயம்பத்தூர் லாட்ஜில்தான் முதன்முதலில் சந்தித்தார் கண்ணதாசன். எம்.ஜி.சக்கரபாணி கலைஞரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது தனது காதலியைப் பார்ப்பது போல ஒரு பரவசத்துடன் அவரைப் பார்த்தார் கண்ணதாசன்.
அந்த முதல் சந்திப்பு அனுபவம் குறித்து தனது ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் முதல் பாகத்தில் கலைஞர் கருணாநிதி பதிவு செய்துள்ளார்.
“மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் 1949-ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளனாக அமர்ந்தேன். அங்கே செரீபுடன் மருதகாசி என்ற நண்பரும் பாட்டு எழுதிக் கொண்டிருந்தார்.
அந்தப் பட நிலையத்திற்கு ஒத்திகைக் கூடம் என்றொரு இடம் உண்டு.அங்கே சில கதாசிரியர்களும், பாடலாசிரியர்களும் இசைத் துறையினரும், நடிகர்களும் தங்கியிருந்தனர். நான் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். ஒத்திகைக் கூடத்தில்தான் கதை பற்றிய விவாதங்கள், பாட்டமைத்தல், இசையமைப்பு இவையாவும் நடைபெறும்.
எம்.ஜி.சக்ரபாணியும், கா.மு.செரீப்பும் ஒரு நாள் அங்கே ஒரு நண்பரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். வளர்ந்த உருவம், நெற்றி முழுவதும் திருநீற்றுப் பூச்சு. அவரைப் பார்த்த உடனேயே அவர் முகத்தில் ‘இவர் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்’ என்று கொட்டை எழுத்தில் எழுதி இருந்ததை நான் புரிந்து கொண்டேன். அந்த நண்பர்தான் மிகுந்த கவித்திறன் பெற்றவராக விளங்கும் கண்ணதாசன்” என்று அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கலைஞர்.
சந்தித்த கணம் முதல் கலைஞரை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கிய கண்ணதாசன் ‘ஒரு நாளாவது ஒருவரை ஒருவர் காணாமலிருந்தால் எதையோ பறி கொடுத்தது போலிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த இரு நண்பர்களிடையே ரகசியம் என்பதே இல்லாமலிருந்தது. ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்துத் தூங்குகின்ற அளவுக்கு பாசத்தை வளர்த்துக் கொண்ட அவர்கள் இருவருக்கும் நடுவே எத்தனையோ முறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தாலும், அதை எல்லாம் தாண்டிய ஒரு பிணைப்பு அவர்கள் இருவருக்குமிடையே இருந்தது என்றால்.. அதற்குக் காரணம் அவர்கள் நட்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தூய நட்பாக இருந்ததுதான்.
The post சினிமா வரலாறு-12 கலைஞரைக் காதலித்த கவியரசர் கண்ணதாசன்..! appeared first on Touring Talkies.
]]>