நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் வரும் ஜூலை 21-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இந்தாண்டு முதல் இனிமேல் வரும் ஒவ்வொரு ஆண்டும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளன்று, அவருடைய குடும்பத்தினர் சார்பில், 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம் வழங்கவிருப்பதாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகனும், நடிகரும், தயாரிப்பாளருமான ராம்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து ராம்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரொனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் பரவத் துவங்கியுள்ளது. மக்கள், அனைவரும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டமாக கூடாதிருத்தல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
வரும் ஜூலை 21-ம் தேதி நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி, இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவக்கப்பட உள்ளது.
இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் யாவும் விரைவில் தெரிவிக்கப்படும். தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்ப்பார்க்கிறோம்…” என்று தெரிவித்துள்ளார்.