சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் திரையுலகத்தையும் தாண்டி தமிழ் சமூகப் பரப்பில் அரசியல் களத்தையும் சூடாக்கியிருக்கிறது.
ராஜராஜ சோழன் தமிழனா, இந்தியனா என்கிற சர்ச்சையை இயக்குநர் வெற்றி மாறன் ஆரம்பித்துவிட.. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நேரத்தில் “ராஜராஜ சோழன் இந்து இல்லை” என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குநருமான சீமான் ராஜராஜ சோழன் மற்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுத்தம்பி பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக தான் தயாரிக்கப் போவதாகவும், அந்தப் படங்களை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில், “தமிழர்களின் போற்றுதலுக்குரிய மூதாதை’, ‘எங்கள் பாட்டன்’, ‘அரசனுக்கரசன்’, அருள்மொழி சோழன் அவர்களின் உண்மையான வரலாற்றையும்,
இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி, எங்கள் அண்ணன், ‘தமிழ்த் தேசியத் தலைவர்’ மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச் சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத் தம்பி வெற்றி மாறன் இயக்குவார்.
‘வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள் தங்களுக்கான வரலாற்றை தாங்களே எழுதுவார்கள்’ என்ற ‘அறிவாசான் அண்ணல்’ அம்பேத்கர் அவர்களின் புரட்சி மொழிக்கேற்ப ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்குத் தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரிய வரும்..” என்று குறிப்பிட்டுள்ளார் சீமான்.