ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’, விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்.
இப்போது இந்த நிறுவனத்தின் 21-வது படைப்பாக புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.
பல வெற்றிப் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் சதீஷ், இப்படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கிஷோர் ராஜ்குமார், தயாரிப்பு நிறுவனம் – ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட், தயாரிப்பாளர்கள்: கல்பாதி எஸ்.அகோரம், கல்பாதி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாதி எஸ்.சுரேஷ், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாதி, ஒளிப்பதிவு – பிரவீன் பாலு, இசை – அஜீஷ் அஷோக், படத் தொகுப்பு – ராம் பாண்டியன், கலை இயக்கம் – எம்.ஜி.முருகன், சண்டை இயக்கம் – மைக்கேல், நிர்வாக தயாரிப்பு – எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், தயாரிப்பு நிர்வாகம் – டி.சரவணகுமார், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
பல குறும் படங்கள் மற்றும் விளம்பர படங்களை இயக்கி விருதுகளை வென்றுள்ளவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் பேசும்போது, “மிகவும் வித்தியாசமான இந்த படத்தின் கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரிய திரையில் கண்டு மகிழும் வகையிலான ஃபேண்டசி காமெடியாக இத்திரைப்படம் திகழும்,” என்கிறார்.
தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.