மறைந்த நடிகை மனோரமா, எவ்வளவு சிறந்த கலைஞர் என்பது அனைவருக்கும் தெரியும். நடிப்பு குறித்து அவர் சில குறிப்புகளை பல காலம் முன்பே எழுதி இருக்கிறார். அவை, சரியாக படப்பிடிப்புக்கு வராத நடிகர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
அந்த குறிப்புகளில் மனோரமா எழுதி உள்ளவை:
“ஒரு படத்திலோ அல்லது ஒரு நாடகத்திலோ நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு நான் தோன்றுகின்ற முதல் காட்சியிலேயே நான் ஏற்கின்ற அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தி விடுவதில் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தை கொண்டும் அடுத்தடுத்த காட்சிகளில் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் இருந்ததே இல்லை. எனது கதாபாத்திரத்தைப் புரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் நான் ஜாக்கிரதையாக இருப்பேன்.
ஒரு நடிகை அல்லது நடிகர் கலை உலகில் நீடித்து இருப்பதற்கு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல படவுலகமும் – ரசிகர்களும் இருவருமே அவசியம். இதில் எந்தப் பக்கம் இல்லாவிட்டாலும் நட்சத்திர வாழ்க்கை என்பது செல்லாத நாணயத்தைப்போல் ஆகிவிடும்.
‘எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த சினிமாக்காரர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்களால் என்னை என்ன செய்து விடமுடியும்’ என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் இருந்த பல நட்சத்திரங்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.
ஆகவே, கலைஞர்கள் எப்போதும் ரசிகர்கள் – தயாரிப்பாளர்கள் ஆகிய இருவரையும் மதித்து நடக்க வேண்டும்.
இன்னொரு விசயம்.. எனது பிரச்சினைகள் எதையும் படப்பிடிப்பில் காண்பிக்க மாட்டேன். ஷூட்டிங்கிற்கு புறப்பட காரில் ஏறி கார் கதவைத் திறந்து உள்ளே உட்காரும்போது நான் அன்று நடிக்கப் போகும் கதாபாத்திரமாகவே உட்காருவேன். கார் வீட்டை விட்டு புறப்பட்ட மறுகணம் வீட்டை மறந்து விடுவேன்” என்று கூறியிருக்கிறார் மனோரமா.