அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான். அப்படியொரு அற்புதமான கதையில் உருவாகியுள்ள திரைப்படம்தான் அன்பிற்கினியாள்.
2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியையும், விருதுகளையும் பெற்ற திரைப்படம் ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்தத் திரைப்படம்.
இந்தப் படத்தில் அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் இருவரும் அப்பா-மகள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
திரைக்கதை, இயக்கம் – கோகுல், தயாரிப்பு – அருண் பாண்டியன், ஒளிப்பதிவாளர் – மகேஷ் முத்துசுவாமி, இசையமைப்பாளர் – ஜாவித் ரியாஸ், படத் தொகுப்பு – பிரதீப் ஈ.ராகவ், கலை இயக்குநர் – ஜெய்சங்கர், வசனம் – கோகுல், ஜான் மகேந்திரன், சண்டை இயக்குநர் – பிரபு, மக்கள் தொடர்பு – யுவராஜ்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கு ‘அன்பிற்கினியாள்’ என்று தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக் குழு. இதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக் குழு. இதில் ஹப் மற்றும் ப்ரீஸர் செட்கள் போடப்பட்டு சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
நிஜத்திலும் அப்பா-மகளான அருண் பாண்டியனும், கீர்த்தி பாண்டியனும் தோன்றுகள் காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது படக் குழு.
சில முக்கிய காட்சிகளில் கீர்த்தி பாண்டியன் தனது உடலசைவுகள் மற்றும் கண்கள் மூலமாகவே பேசியிருக்கிறார். மேலும், ப்ரீஸர் அரங்குகளில் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். அப்போது -11 டிகிரி, -12 டிகிரி குளிரிலும் அசராமல் நடித்துப் படக் குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
“நீண்ட வருடங்கள் கழித்து நடிப்பு உலகிற்கு திரும்பியுள்ள அருண் பாண்டியனின் நடிப்பும் பார்வையாளர்களைப் பேச வைக்கும்…” என்கிறது படக் குழு.