Saturday, April 13, 2024

“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு சில திரைப் பாடல்களை இன்றைக்கும் கேட்கும்போது மனதுக்குள் ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், காதலையும், தாபத்தையும் ஏற்படுத்தும்.

அப்படியொரு பாடல்தான் 1977-ம் ஆண்டு வெளிவந்த ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல்.

இந்தப் பாடலை எழுதியவர் ‘கவிஞர் முத்துலிங்கம்’. இந்தப் பாடல் எப்படி உருவானது என்பது பற்றி ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கம் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

அது இங்கே :

“1977-ம் வருடத்தில் ஒரு நாளில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்யா ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே மீனவ நண்பன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், ‘இந்தப் படத்தில் நீ எந்தப் பாட்டு எழுதியிருக்க..?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘நான் எந்தப் பாட்டையும் எழுதலை’ என்றேன். எம்.ஜி.ஆர். அதிர்ச்சியாக ‘ஏன்?’ என்றார். ‘என்னை யாரும் பாட்டு எழுத கூப்பிடலை..’ என்றேன்.

உடனே அங்கேயிருந்த படத்தின் புரொடக்ஷன் மானேஜர் ராஜாராமை அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘முத்துலிங்கத்தை வைத்துப் பாட்டு எழுதச் சொன்னேனே…! ஏன் செய்யலை?’’ என்று கோபத்துடன் கேட்டார். ‘நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை’ என்றார் ராஜாராம். உடனே என் பக்கம் திரும்பி ‘நீங்க எங்க போனீங்க..?’ என்றார் எம்.ஜி.ஆர். ‘ஒரு அவசர வேலையா ஊருக்குப் போயிருந்தேன். உடனேயே கிளம்பிட்டதால யார்கி்டடேயும் சொல்லிட்டுப் போக முடியலை’ என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர்., ராஜாராமிடம் ‘அதான் இப்போ வந்துட்டார்ல்ல..? இவரை வைச்சு ஒரு கனவு பாட்டு எழுதி வாங்குங்க..’ என்றார். படம் முடிஞ்சிருச்சே..’ என்றார் ராஜாராம். உடனேயே, படத்தின் இயக்குநர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

அவர்கள் வந்ததும், ‘இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைச்சு ஒரு கனவுக் காட்சி பாடலை ரெடி பண்ணுங்க. அதற்குப் பிறகு படப்பிடிப்பு நடத்திக்கலாம்’ என்றார். அவர்களும் ராஜாராம் சொன்ன மாதிரியே ‘அதற்கான சிச்சுவேஷன் படத்துல இல்லையே’ என்றார்கள்.

‘கனவுப் பாட்டுக்கு என்ன சிச்சுவேஷன் வேணும்..? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வர்றதுதானே கனவுப் பாட்டு.. அதற்குத் தனியா என்ன சிச்சுவேஷன் வேணும்..? உங்க ‘உரிமைக் குரல்’ படத்துல ‘விழியே கதை எழுது’ பாட்டுக்கு எப்படி சிச்சுவேஷன் வந்துச்சு..? அது மாதிரி இதை ரெடி பண்ணுங்க.. அப்புறமா ஷூட்டிங்கை வைச்சுக்கலாம்’ன்னு ஸ்ரீதரிடம் கண்டிப்பா சொல்லிவிட்டுப் போனார் எம்.ஜி.ஆர்.

அப்புறம் அந்த கனவுப் பாடலா நான் எழுதியதுதான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலா அமைஞ்ச தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல்.

இந்தப் பாட்டும் முதல்ல ரொம்ப எளிதா அமையலை. இந்தப் பாடலுக்கு முதல்ல நான் எழுதியிருந்த பல்லவி…

‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் – உன்

அங்கங்களே மன்மதனின் படைக்களம்

இரவினிலே தீபமாகும் உன் முகம் – நீ

இன்பத் தமிழ்க் கவிதைகளின் இருப்பிடம்’

என்று எழுதியிருந்தேன்.

இந்தப் பாடலில் ‘படைக்களம்’ என்ற வார்த்தையில் இயக்குநர் ஸ்ரீதருக்கு ஏதோ சந்தேகம் வந்தது. ‘படைக்கலன் என்றுதானே இருக்க வேண்டும்’ என்று கேட்டார். ‘படைக்கலன்’ என்றால் அது ‘ஆயுத’மாகிவிடும். ‘படைக்களம் என்றால் அது போர்க்களமா’கிவிடும் என்று அவருக்கு உணர்த்தினேன். ஆனாலும், அவருக்குத் திருப்தியில்லாததால் அதை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

இந்த நேரத்தில் எம்.எஸ்.வி.க்கும் ஒரு மிகப் பெரிய சந்தேகம். ‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்’ என்றிருந்த வரியில் ‘அடைக்கலம்’ என்ற வார்த்தைக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘இதை அப்படியே விட்டுட்டா நாளைக்கு யாராவது ‘அடைக்கலம்’ என்ற பெயர் வைச்சிருக்கிறவன் கோர்ட்ல கேஸ் போட்டு நம்மளை கோர்ட்டுக்கு இழுப்பான். அதெல்லாம் வேண்டாம்.. அதையும் மாத்து’ன்னு சொல்லிட்டார்.

அப்புறம் அந்த பல்லவி மொத்தத்தையும் மாற்றி  

‘தங்கத்தில் முகமெடுத்து

சந்தனத்தில் உடலெடுத்து

மங்கையென்று வந்திருக்கும் மலரோ –

நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ’

என்று எழுதினேன்.

இதை தயாரிப்பாளர், இயக்குநர், எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்…” என்று சொல்லியிருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.

- Advertisement -

Read more

Local News