Friday, April 12, 2024

கள்ளன் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் கரு.பழனியப்பன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜா, நிகிதா, மாயா, வேலா ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள்- எம்.எஸ்.பிரபு, கோபி ஜெகதீஸ்வரன்,  இசை – கே,  படத் தொகுப்பு – எஸ்.பி.அகமது. மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

தெரிந்த தொழிலை செய்ய முடியாததால், தெரியாத தொழிலை செய்து மாட்டிக் கொண்டு அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கை போராட்டமே இந்தப் படம்.

தேனி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வரும் கரு.பழனியப்பனின் தந்தை ஒரு வேட்டைக்காரர். சிறு வயதிலேயே அம்மாவை இழந்து அப்பாவின் அரவணைப்பில் வாழ்ந்தவர் பழனி. அவருடைய அப்பா அடிக்கடி மகனுக்கு சொன்ன அறிவுரை “பசிக்காக மட்டும்தான் வேட்டையாட வேண்டும்…” என்பது..!

அப்பாவின் மரணத்திற்குப் பின்பும் வேட்டையாடி வந்த பழனிக்கு மாநில அரசு வேட்டையாடுதலை தடை செய்த பின்பு வேலையில்லாமல் போகிறது. எங்கேனும் வேலைக்குப் போய் சம்பாதிக்கலாம் என்று நினைக்கவே முடியாத குணமுடையவர் அவர். இதனால் அவருடைய நண்பர்களின் தூண்டுதலில் கள்ளத் துப்பாக்கி தயாரித்து விற்கிறார். இதிலும் சிக்கல்கள் வர.. அடுத்து திருட்டுத் தொழிலில் இறங்குகிறார்.

திருடப் போன இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு கொலை விழுகிறது. இதனால் கூட்டாளிகளுடன் தப்பிக்க முடியாமல் தவிக்கிறார் பழனி. போலீஸ் இவர்களைக் குறி வைத்துப் பிடிக்க வருகிறது.

தப்பித்து ஓடி ஒளியும்போது வளர்ப்புத் தந்தையால் பாலியல் தொல்லைக்குள்ளாகும் ஹீரோயின் நிகிதாவைக் காப்பாற்றுகிறார் பழனி. ஆனால் நிகிதாவோ பழனியை பாலோ செய்து அவருடனேயே பயணம் செய்கிறார்.

போலீஸாரிடமிருந்து தப்பித்து கேரளாவுக்கு வந்த பழனி, நிகிதாவோடு ஒரே வீட்டில் தங்கி ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார். கூடவே கள்ளத் துப்பாக்கியும் செய்து தருகிறார். நிகிதாவைத் திருமணமும் செய்து கொள்கிறார்.

தமிழ்நாட்டில் தப்பித்த பழனி, கேரளாவில் கள்ளத் துப்பாக்கியால் சிக்கிக் கொள்கிறார். ஏற்கெனவே இருந்த வழக்கிற்காக தேனி ஜெயிலில் அடைக்கப்படுகிறார். இங்கே சிறைக்குள் தனியாக சாம்ராஜ்யம் நடத்தி வரும் நமோ நாராயணனுடன் நட்பாகிறார் பழனி.

தனது மனைவி நிகிதாவை மறுபடியும் அவளுடைய வளர்ப்புத் தந்தை அழைத்துச் சென்றதை பார்த்து கோபமாகும் பழனி.. சிறையில் இருந்து தப்பிச் சென்றாவது மனைவியைக் காப்பாற்ற நினைக்கிறார். இதற்காக பக்காவாக பிளான் செய்து தப்பிச் சென்று தனது மனைவியைக் காப்பாற்றுகிறார்.

தனது மனைவியுடனும், நண்பர்களுடன் நமோ நாராயணனின் மனைவி இருக்கும் கொடைக்கானலுக்கு வருகிறார் பழனி. இப்போது கடைசி முயற்சியாக ஒரேயொரு பெரிய கொள்ளையை நடத்திவிட்டு நமது ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள் அனைவரும்.

இதற்காக ஆந்திரா பார்டரில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியைக் குறி வைக்கிறார்கள். இந்தக் கிளப்பில் கொள்ளையடித்து கிடைக்கும் பணத்தை அனைவரும் ஷேர் செய்து கொண்டு செட்டில் ஆவோம் என்ற எண்ணத்துடன் கிளம்புகிறார்கள்.

அவர்களின் இந்த எண்ணம் பலித்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தக் ‘கள்ளன்’ படத்தின் சுவையான திரைக்கதை.

அதிகம் படிப்பறிவில்லாத.. வெளியுலகம் அறிந்திராமல்.. உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் அற்றவராக திருடுவதிலும் ஒரு பாவமில்லை என்று நினைக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு கரு.பழனியப்பனின் முகம் ஒத்துப் போகியிருப்பதால் அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் போலும்..!

அவருக்கும் அதிகமான நடிப்பில்லை. வெரைட்டியான நடிப்பையும் காண்பிக்கவில்லை. சண்டை காட்சிகளில் மட்டுமே கடுமையாக உழைத்திருக்கிறார். காதலைக் காண்பிக்கவும், சோகத்தைத் தொடரவும், கடுமையைக் காட்டவும் அதீதமான காட்சிகள் இல்லாததால் அந்த நாயகனை நம்மால் இதில் காண முடியவில்லை. என்றாலும் வசனம் மற்றும் உடல் மொழியால்தான் ஓரளவுக்குச் சமாளித்திருக்கிறார்.

இவரது தந்தையாக வேலா ராமமூர்த்தி சில காட்சிகளே என்றாலும் மனதில் நிற்கிறார். மகனுக்கு இவர் சொல்லும் அந்த அறிவுரை அனைத்துவித உயிரினங்களுக்கும் பொருந்தும்தான்..!

பொம்பளையில்லாத வீடு என்பதால் அவர் பாகத்தையும் கொடுத்தால் சமைத்துத் தருகிறேன் என்று சொல்லும் பெண்ணிடம் “எம் புள்ளைக்கு சமைச்சுக் கொடுக்க எனக்குத் தெரியும்..” என்று வேலா சொல்லுமிடத்தில் பல கதைகள் உண்டு.

நாயகியான நிகிதாவுக்கு படம் முழுவதும் சோகத்தை முகத்தில் அப்பிக் கொண்டிருக்கும் கேரக்டர். அவரது கண்களை வைத்தே பல கதைகளைச் சொல்லலாம் போலிருக்கிறது. ஆனால் இதில் அதற்கான ஸ்கோப் இல்லை.

திருமணத்திற்குத் தயார் என்று சொல்லும் ஒரு காட்சியில் மட்டுமே மிளர்கிறார். மீதமான சோகத்தை சிறைச்சாலையில் கணவரைப் பார்க்க வரும்போதும்,  இறுதியில் கணவருக்காகக் காத்திருக்கும் காட்சியிலும் காட்டி, பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

இவர்கள் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் நமோ நாராயணனின் மனைவியாக நடித்திருக்கும் மாயா. வில்லி கதாபாத்திரம்தான் என்றாலும் அதை செவ்வனே செய்திருக்கிறார். கிளைமாக்ஸில் இவரது உருட்டல், புரட்டலில் நமோ நாராயணன் சிக்கிச் சின்னாபின்னமாவது சுவையான காட்சிகள்.

நமோ நாராயணனுக்கு பல படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் அழுத்தமான கேரக்டர். நல்லவரா.. கெட்டவரா.. என்பதையே யூகிக்க முடியாத அளவுக்கு அவர் பேசும் பேச்சு இருப்பதுதான் இவருடைய மிகப் பெரிய பலம்.

இவரின் தம்பியாக சௌந்தர்ராஜா இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர்கள் எம்.எஸ்.பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் இருவரின் ஒளிப்பதிவில் குறையில்லை. கொள்ளையடிக்கப் போன இடத்தில் நடைபெறும் சண்டை காட்சியையும், இரவு நேர துரத்துதல் காட்சிகளின்போதும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் நிஜத்துடன் நெருங்கியதாக இருந்தது. சண்டை இயக்குநர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.

இசையமைப்பாளர் கே-வின் இசையில் பாடல் வரிகள் தெளிவாகக் கேட்பதுபோல இசைத்திருப்பது பாராட்டுக்குரியது.

பெண் இயக்குநர் என்பதால் குத்துப் பாடல் இருக்காது என்கிற நம்பிக்கையை உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் சந்திரா. அந்தக் குத்துப் பாடலில் ஆடும் நடிகையின் தேர்வு, நடன அமைப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவு அனைத்துமே வித்தியாசமாக இருந்தது பாராட்டுக்குரியது.

நட்பு, காதல், பகை, சூழ்ச்சி, வீழ்ச்சி என்று பல வித்தியாசமான கோணங்களில் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார் சந்திரா. இந்தப் படத்தின் கதை 1980-களில் நடைபெறுகிறது என்பதை சில காட்சிகளின் மூலமாகத்தான் அறிய முடிகிறது. இதுவும் ஒரு குழப்பத்துடனேயே இந்தப் படத்தை நாம் அணுகியதற்குக் காரணமாக அமைந்துவிட்டது.

படத்தின் கடைசி 20 நிமிடக் காட்சிகளில் மாயா மூலமாக ஏற்படும் டிவிஸ்ட்டுகள் எதிர்பாராதது என்றாலும் அதற்காக நிறையவே உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்தப் பரபரப்பை படம் முழுவதும் வரும்படி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

படம் இடைவேளைக்குப் பின்பு எதிர்பார்ப்புடன் நகர்ந்தாலும், இயக்கத்தில் ஒரு போதாமை இருக்கிறது என்பதுதான் உண்மை.

பல முக்கியமான காட்சிகளில் வைத்திருக்கப்பட வேண்டிய கேமிரா கோணங்களும், நடிகர், நடிகைகளின் முக பாவனைகளும் இங்கே அழுத்தமாகப் பதிவு செய்யப்படவில்லை. அனைவருமே மிகச் சாதாரணமாக நடித்திருப்பது போலவும், திரைக்கதையில் சுவாரஸ்யமே இல்லாத தன்மையே படம் முழுவதும் நீடித்திருக்கிறது. முக்கியமான சில வசனங்கள் மிக எளிமையாகப் பேசப்பட்டிருக்க… அதற்கான முக்கியத்துவம் கிடைக்காமல் படம் நகர்ந்திருக்கிறது.

இருந்தாலும், தனது முதல் படத்திலேயே அனைவராலும் பேசப்பட வைப்பதுபோல் ஒரு களத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் சந்திரா தங்கராஜூக்கு நமது வாழ்த்துகள்..!

RATING : 3 / 5

- Advertisement -

Read more

Local News