நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வலிமை’.
“இந்தப் படத்தின் கதையும், கதாபாத்திரங்களின் தன்மையும் தான் தயாரித்து 2016-ம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ’ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 1 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகத் தர வேண்டும்..” என்று கேட்டு ‘மெட்ரோ’ படத்தின் தயாரிப்பாளரான ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், “நான் தயாரித்திருக்கும் ‘மெட்ரோ’ படத்தில் வசதியான வாழ்வுக்காக சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பி ஈடுபடுவதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போன்ற காட்சி உள்ளது.
தற்போது ‘மெட்ரோ’ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் ‘வலிமை’ படம் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், ‘வலிமை’ படத்தை சாட்டிலைட் சேனல், ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் எனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்…” என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வருகிற 17-ம் தேதிக்குள் இந்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.