தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவராக இப்போதும் இருந்து வருபவர் நடிகை பிரியாமணி. 2004-ம் ஆண்டு ‘கண்களால் கைது செய்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்த பிரியாமணி இயக்குநர் அமீரின் ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார்.
ஆனால் இதற்குப் பின்பும், தமிழில் மட்டும் அவருக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் இப்போதும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் 2017-ம் ஆண்டு முஸ்தபா என்பவரை நான்காண்டு காலமாக காதலித்து மணம் புரிந்து கொண்டார் பிரியாமணி. முஸ்லீமான முஸ்தபாவும், இந்துவான பிரியாமணியும் இப்போதுவரையிலும் அவரவர் மதத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
இது குறித்து பிரியாமணி பேசுகையில், “திருமணத்திற்கு முன்பேயே என் கணவர் முஸ்தபா என்னிடம் மதம் மாறுவது சம்பந்தமாக ஏதும் பேசவில்லை. கட்டாயப்படுத்தவும் இல்லை. ஒருவேளை என்னிடம் அப்படி மதம் மாறும்படி கேட்டிருந்தால், நிச்சயமாக நான் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கவே மாட்டேன்.
முஸ்தபா இப்போதுவரையிலும் என் சுதந்திரத்தை மதிக்கிறார். நாங்கள் இருவரும் அவரவர் மதங்களையும் மதிக்கிறோம். தீவிரமான காதலால் உருவான கல்யாணம் என்பதால் எங்களுக்குள் மதம் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இதுவரையிலும் எழவில்லை. இரண்டு மதம் சார்ந்த பண்டிகைகளையும் எங்களது வீட்டில் கொண்டாடுவோம்..” என்று சொல்லியிருக்கிறார்.