“தாங்கள் தயாரித்து வரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும்..” என்று லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது நாம் அறிந்ததே.
இந்த வழக்கில் கோர்ட்டுக்கு வெளியே சமாதானம் பேசிக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் சொன்னதால் ஷங்கரும், லைகா நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மீண்டும் நீதிமன்றத்தை நாடியது லைகா நிறுவனம்.
இந்த வழக்கில் மேல் விசாரணை இன்னமும் துவங்காமல் இருந்த நிலையில் இந்த வழக்கிலேயே மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது லைகா நிறுவனம்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே லைகா நிறுவனம் ஹைதராபாத் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
கூடவே தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கை தள்ளிவைக்க லைகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், “தனி நீதிபதி விசாரிக்கும் வழக்கில் தீர்வு கண்ட பின், மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்கலாம்…” என கூறி இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.