ஒளிப்பதிவாளர்களும், படத் தொகுப்பாளர்களும் இயக்குநர்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வதால் அவர்களுக்குள்ளும் ஒரு இயக்குநர் ஒளிந்து கொண்டிருப்பார்.
அப்படியிருப்பவர்கள் என்றேனும் ஒரு நாள் இயக்குநர் பணிக்கு நேரடியாக வந்து சேர்வார்கள். இதுபோல பல ஒளிப்பதிவாளர்களும், படத் தொகுப்பாளர்களும் தமிழ்ச் சினிமாவில் இயக்குநர்களாகியிருக்கிறார்கள்.
இந்த வரிசையில் அடுத்து வந்து சேர்ந்திருப்பவர் தமிழ்ச் சினிமாவின் புகழ் பெற்ற படத் தொகுப்பாளரான கோபி கிருஷ்ணா.
2012-ம் ஆண்டில் வெளியான பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18/9’ படம்தான் இவர் படத் தொகுப்பு செய்த முதல் திரைப்படம்.
இதன் பிறகு ‘மனம் கொத்திப் பறவை’, ‘ராட்டினம்’, ‘குட்டிப் புலி’, ’தேசிங்கு ராஜா’, ‘தனி ஒருவன்’, ‘தில்லுக்கு துட்டு’, ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘என்னோடு விளையாடு’, ‘போங்கு’, ‘இவன் யாரென்று தெரிகிறதா’, ‘மன்னர் வகையறா’, ‘ஒரு குப்பைக் கதை’, ‘மணியார் குடும்பம்’, ‘செய்’, ‘கழுகு-2’, ‘நீயா-2’, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’, ‘மாயநதி’ உள்ளிட்ட பல புகழ் பெற்ற படங்களுக்கு படத் தொகுப்பு செய்துள்ளார்.
இவர் 2021-ம் ஆண்டில் ‘நாயே பேயே’ என்ற படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.
தற்போது பிரபல தயாரிப்பாளரான அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் P.பிள்ளையின் தயாரிப்பில் உருவாகும் ‘சில்க்’ என்ற படத்தை கோபி கிருஷ்ணா இயக்கம் செய்யவிருக்கிறார்.
தமிழில் பிரபுதேவா நடிக்கும் ‘மை டியர் பூதம்’, ‘ஜல்சா’, ‘பிளாஷ்பேக்’, ‘ரவுடி பேபி’, மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கும் ‘ராம்’, கன்னடத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் நடிக்கும் ஒரு பெயரிடப்படாத ஒரு திரைப்படம் என்று மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படங்களைத் தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை.
இவர் தற்போது 5-வது தமிழ்ப் படமாக தயாரிக்கப் போகும் படம்தான் இந்த சில்க். 1980-களில் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த சில்க் ஸ்மிதாவின் 25-வது நினைவு நாளான நேற்று இந்தப் படத்தை முறைப்படி துவக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக முன்னணி கதாநாயகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே நேரம் படத்தின் நான்கு நாயகிகளாம். அவர்களையும் வலை வீசி தேடி வருகிறது தயாரிப்பு தரப்பு.
‘சில்க்’ என்ற பெயரிடப்பட்டிருந்தாலும் இது ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகப் போகிறதாம்.