பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தான் இயக்கும் புதிய தெலுங்கு படத்திற்கு இசையமைப்பாளர் தமனை இசையமைக்க புக் செய்திருக்கிறார். இது ஷங்கரின் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ‘ஜென்டில்மேன்’ முதல் ‘நண்பன்’ தவிர்த்த மற்றைய அனைத்துப் படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையில் அப்படியொரு நட்பு இருந்தது.
‘நண்பன்’ படத்தின்போது அதன் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு ரஹ்மான் வேண்டாம் என்ற தயாரிப்பாளரின் கருத்துக்கு மதிப்பளித்து ஹாரிஸ் ஜெயராஜை இசையமைக்க வைத்தார் ஷங்கர்.
அதன் பின்பு தற்போது கடைசியாக அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘இந்தியன்-2’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரனை இசையமைப்பாளராக புக் செய்தார் இயக்குநர் ஷங்கர்.
“தான் ஆங்கிலப் படம் மற்றும் தனது சொந்தப் பட பிராஜெக்ட்டில் இருப்பதால் ‘இந்தியன்-2’-வில் பணியாற்றுவது கடினம்” என்று ரஹ்மான் கூறியதால்தான் அனிருத்தை ஒப்பந்தம் செய்ததாக ஷங்கர் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூவின் தயாரிப்பில் ராம் சரணை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு ரஹ்மானையே புக் செய்வார் என்று அனைவரும் காத்திருந்த நேரத்தில் இசையமைப்பாளர் தமனை ஒப்பந்தம் செய்து அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறார் ஷங்கர்.
இசையமைப்பாளர் தமன், ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் நாயகர்களில் ஒருவனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.