18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 18.02.2021 அன்று சென்னை PVR சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது.
உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள் தேர்வாகி இருந்தது. அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட ‘அமலா’ திரைப்படமும் தேர்வாகி இருந்தது.
இயக்குநர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான ஸ்ரீகாந்த், ‘ஆட்டோ சங்கர்’ வெப் சீரிஸ் புகழ் அப்பாணி சரத், அனார்கலி மரிக்கர், இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை முஷினா நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார்.
வசனம் – ராம் பிரகாஷ், ஒளிப்பதிவு – அபிலாஷ் சங்கர், பாடல்கள் மோகன்ராஜன், சண்டை இயக்கம் – ‘பயர்’ கார்த்திக், கலை – சிஜி பட்டணம், மக்கள் தொடர்பு மணவை புவன், தயாரிப்பு – மஸ்காட் புரொடக்ஷன்ஸ் முஷினா நிஷாத் இப்ராஹிம்.
இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் ஒரு பூங்காவில் இறந்து கிடக்க, அது கொலையா..? தற்கொலையா..? என்று போலீசார் குழம்புகிறார்கள்.
அந்த சமயத்தில் உயர் அதிகாரியான நடிகர் ஸ்ரீகாந்த் இது கொலைதான் என்று அடித்துச் சொல்லி, துப்பு துலங்கும் நேரத்தில் நகரத்தில் அடுத்தும் ஒரு இளம் பெண் இறக்கும் தருவாயில் கண்டுபிடிக்கப்படுகிறாள்.
அவளைக் காப்பாற்றிய ஸ்ரீகாந்த், அவளிடம் விசாரிக்க, அவளோ ‘அமலா’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி இறந்து விடுகிறாள்.
புரியாத மர்மமாக இருக்கும் அந்த நேரத்தில், சீர்த்திருத்த பள்ளியிலிருந்து ஒருவன் தப்பித்து விட்டதாகத் தகவல் கிடைக்க, தப்பித்தவன் யார்..? அவனுக்கும், இந்தக் கொலைகளுக்கும் என்ன தொடர்பு..? தப்பித்தவன் பிடிபட்டானா.? என்று துப்பு துலங்குவதே இந்தப் படத்தின் கதை.
இந்த ‘அமலா’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
படம் தொடங்கிய சில நொடிகளிலேயே படம் தங்களின் ஆர்வத்தைப் பெரிதும் தூண்டியதாகவும், படம் முடியும் வரையிலும் நாற்காலி முனையில் அமர்ந்தபடியே படத்தை பார்த்து ரசித்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஸ்ரீகாந்த், அப்பணி சரத், அனார்கலி மரிக்கர் ஆகியோரின் நடிப்பு தங்களை வெகுவாக கவர்ந்ததாக ரசிகர்கள் இயக்குநரிடம் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் ‘அமலா’ படக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.