நடிகர் விவேக்கின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்து வந்த அத்தனை நட்சத்திரங்களும் அந்த இடத்தில் தேடிய முகம் ‘செல்’ முருகன்.
நடிகர் விவேக்கிடம் மேனேஜராகவும், உதவியாளராகவும், நடிகராகவும் பல ஆண்டுகளாக வலம் வந்தவர் ‘செல்’ முருகன். இவர் இல்லாமல் நடிகர் விவேக் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டார். தான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் தனக்குத் துணையாக ‘செல்’ முருகனும் வரும்படி திரைக்கதை அமைத்துவிடுவார்.
அந்த அளவுக்கு நெருக்கமானவர். உரிமையானவர். “கூடப் பொறந்த தம்பி மாதிரி ‘செல்’ முருகன் என்கூடவே இருக்கான்…” என்று பல மேடைகளில் கூறியிருக்கிறார் நடிகர் விவேக்.
அப்பேர்ப்பட்ட ‘செல்’ முருகன் விவேக்கின் இந்தத் திடீர் மரணத்தை எப்படி எதிர்கொண்டார்..? எப்படி தாங்கிக் கொண்டார்..? என்பது யாருக்கும் தெரியவில்லை.
அன்றைய தினம் முழுவதும் அழுது, அழுது வீங்கிய கண்களுடன் விவேக்கின் உடல் அருகேயே நின்று கொண்டிருந்தார் ‘செல்’ முருகன்.
இன்றைக்கு தனது குருவான விவேக்கின் மரணம் குறித்து தனது டீவிட்டர் பேஜில் ஒரு உருக்கமான செய்தியொன்றைப் பதிவிட்டிருக்கிறார் ‘செல்’ முருகன்.
அந்தப் பதிவில்…
“ஓர் மரணம் என்ன செய்யும்..?
சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள்.
சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள்.
சிலர் RIP-யுடன் கடந்து போவார்கள்.
சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள்.
சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள்.
ஆனால் அண்ணா…!?
உண்மையான ஜீவன்..
என் உயிர் தோழன்..
என் முருகனை விட்டுவிட்டு…
கடவுள் முருகனை காண
காற்றில் கரைந்து விட்டாயே..!
இங்கு எல்லாருமே முருகன்தான் துணை என்பார்கள்..!
இனி என் முருகனுக்கு யார் துணை..?
விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்..?
இனி அவனுக்கு
யார்..? துணை..
யார்..? துணை….
யார்..? துணை……”
இவ்வாறு செல் முருகன் உருக்கமாக தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.